வாழ்வியல் கேள்விகள்

கட்டாயமாக செயல்பட உந்தும் மன மற்றும் உணர்ச்சி படிமங்களில் இருந்து எவ்வாறு வெளிவருவது?

ஏதோ ஒரு உணர்ச்சிமயமான பள்ளத்தில் சிக்கி, அதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் இருக்கிறீர்களா? உங்கள் வாழ்வில் கட்டாயமாக செயல்பட உந்தும் படிமங்கள் குறித்த உங்களின் புரிதலை ஆழமாக்கிக் கொள்ளுங்கள். நம்மை அடிமைப்படுத்திவிடுமோ என அச்சுறுத்தும் சுழற்சிகள் குறித்த அத்தனை விஷயங்களை பற்றியும் சத்குரு விளக்குகிறார்.

அதே பழைய சுழற்சிகள், காட்சிப்புலம் மட்டுமே மாறுகிறது

கேள்வியாளர்: பிரதி எடுத்தது போல் ஒரே விதமான உணர்ச்சிகரமான சூழல்கள் எனக்கு மீண்டும் மீண்டும்  நிகழ்கின்றன. அவற்றிலிருந்து நான் எவ்வாறு வெளிவருவது?

சத்குரு: குறைந்தபட்சம், ஒரே விதமான சூழல்களே உங்களுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் என்பதே நல்ல விஷயம் தான். பெரும்பாலானவர்களால் அதை பார்க்கக்கூட முடிவதில்லை. அவர்கள் அதே சுழற்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு காட்சி பின்புலங்களில் நிகழ்த்துகிறார்கள். அதோடு, அவர்கள் சரியாக இருப்பதாகவும் நினைக்கிறார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் காட்சி பின்புலன்கள் மாறக்கூடும். நீங்கள் பள்ளியில் இருந்தபோது தேவையற்ற ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அது மறுமுறை நிகழ்ந்த போது நீங்கள் கல்லூரியில் இருந்திருப்பீர்கள். எனவே காட்சியின் பின்புலம் மாறுபட்டதாக இருந்திருக்கும். மற்றொரு சமயம், நீங்கள் ஏதோ ஒரு பணியில் சேர்ந்திருப்பீர்கள். அடுத்த முறை நிகழும் போது உங்களுக்கு திருமணமாகியிருக்கும். ஆனால் உங்கள் வாழ்வை கூர்ந்து கவனித்தால் ஒரே மாதிரியான விஷயங்கள் தான் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டிருக்கும். இதற்கு அர்த்தம் நீங்கள் வட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான்.

நீங்கள் மனித வாழ்வை வெறுமே உடலளவில் பார்த்தால், அது கல்லறைக்கு தான் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே வெறும் ஒரு உடல்ரீதியான பொருளாக மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்தால், வாழ்க்கை முதலில் ஒரு நாடகம் போல இருக்கும். பின்னர் அது இன்பமானதாக மாறும். அதற்குப் பிறகு மேலும் பல விஷயங்களாக மாறும். அதன் பின்னர் ஒவ்வொரு மூட்டும் வலிக்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் அனைத்தும் முடிவுக்கு வருகிறதே என்ற அச்சம் மேலோங்கும். இதுவே உடல் ரீதியான வாழ்க்கையின் வளர்ச்சி. ஆனால் நமது அதிர்ஷ்டம் என்னவென்றால் நாம் வெறும் உடல் ரீதியானவர்கள் அல்ல - நமக்கு மற்றும் பல பரிமாணங்கள் உள்ளன.

நமது அதிர்ஷ்டம் என்னவென்றால் நாம் வெறும் உடல் ரீதியானவர்கள் அல்ல - நமக்கு மற்றும் பல பரிமாணங்கள் உள்ளன.

உங்கள் மன மற்றும் உணர்ச்சி நிலை என்பது, மேம்பட்டு கொண்டே இருக்க முடியும், அல்லது வட்டப்பாதையில் செல்லமுடியும். பிற பரிமாணங்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கலாம், ஆனால் அங்கும் கூட நீங்கள் தொடர்ந்து சுழற்சிகளில் செல்லக்கூடும் அல்லது மேம்பட்டு வேறு நிலைக்கு செல்ல முடியும், "என் வாழ்க்கை சுழற்சிகளில் சென்று கொண்டிருக்கிறது" என்று நீங்கள் கூறும் போது அடிப்படையில்,‌ நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள சூழல்களைப் பற்றி கூறுகிறீர்கள், அதற்கும் மேலாக உங்களது சொந்த மனநிலைகள் மற்றும் உணர்ச்சி நிலைகள் பற்றி கூறுகிறீர்கள்.

பெண்ணாய் இருப்பதன் ஆசிர்வாதம்

ஆண்களைக் காட்டிலும் சில பெண்களால் இதை நன்றாக கவனித்திருக்க முடியும். ஏனெனில் அவர்களின் மன மற்றும் உணர்ச்சி சுழற்சிகள் குறுகியதாக இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தருணத்தில், பெண்களில் பலரும், மீண்டும் மீண்டும் ஒரேவிதமான மன மற்றும் உணர்ச்சி நிலைகளுக்கு ஆளாகிறார்கள். உடலில் நிகழும் ஒரு சூழல், மனதளவில் ஒரு சூழலை உருவாக்குகிறது. இதை அவர்களால் தெளிவாக கவனிக்க முடியும்.

துரதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு மாதவிடாய் சுழற்சிகள் இல்லை. நான் "துரதிஷ்டவசமாக" என்று கூறுவது ஏனெனில், அத்தகைய ஒரு வலுவான நினைவூட்டல் இருந்திருந்தால் அவர்கள் அதை தவற விட்டிருக்கமாட்டார்கள். ஆண்களின் சுழற்சிகள் வேறு வகையைச் சார்ந்தவை. எனவே அவர்கள் அதை கவனிக்காமலேயே, அவற்றை பற்றிய கவனம் கொள்ளாமலே தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். பெண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் அவர்களால் அதை தவறவிட முடியாது. ஆண்கள் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். பெண்களின் உடலில் இருக்கும்  இந்த வலுவான நினைவூட்டல் ஒரு சாபமல்ல - அதை எவ்வாறு உபயோகிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் அது ஒரு வரம்.

எந்த ஒரு கொந்தளிப்பான சூழலும் மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பதான். கட்டமைக்கப்பட்ட ஒரு வழிமுறை இருந்தால் அதை அவ்வளவு எளிதாக உங்களால் மாற்ற முடியாது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளியில்  அமைப்பிலேயே ஸ்திரமற்ற சூழல் ஏற்படும் போது, அங்கு மாற்றத்துக்கான பெரும் வாய்ப்பு உள்ளது.

சுழற்சிமுறையில் நிகழும் இருப்பின் தன்மையை புரிந்து கொள்வது

அனைத்துமே சுழற்சி முறையிலேயே இருக்கின்றன. பூமி ஒரு சுழற்சியில் இருக்கிறது; சந்திரனும் சுழற்சியில் சென்று கொண்டிருக்கிறது. இங்கு மிக அதிக காலம் எடுத்துக்கொள்ளும் சுழற்சி‌ என்பது 144 வருடங்கள். ஒவ்வொரு 144 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் நிகழ்கின்றன. அதற்காகவே நாம் மகா கும்பமேளா என்ற ஒன்றை நிறுவியுள்ளோம். அதற்கு அடுத்தபடியான சுழற்சி பன்னிரெண்டேகால் வருடங்கள், மற்றவை மிகக்குறுகிய கால சுழற்சிகளாக இருக்கின்றன. மூன்றாண்டு, பதினெட்டு மாத, பதினாறு மாத சுழற்சிகளும் இருக்கின்றன. நீங்கள் எவ்வளவு அறியாமையில், சமநிலையற்று, கவனமில்லாமல் இருக்கிறீர்களோ, அதை பொருத்து அந்த சுழற்சிகளுக்கு நீங்கள் ஆட்படுவீர்கள்.

இந்த சுழற்சிகள் உங்களை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதை  விவரிக்க ஜோதிடம் முயல்கிறது. இந்த சுழற்சிகளில் இருந்து உங்களை நீங்கள் எவ்வாறு விடுவித்துக்கொள்ள முடியும் என்பதை ஆன்மீக செயல்முறைகள் விவரிக்கிறது.

நீங்கள் முற்றிலுமாக சிதறடிக்கப்பட்டு இருந்தால் மிகக் குறுகிய கால சுழற்சிக்கு கூட நீங்கள் ஆட்படுவீர்கள். நீங்கள் சிறிதளவு கவனம் கொண்டிருந்தால் இன்னும் சிறிது நீண்ட கால சுழற்சிகளுக்கு ஆட்படுவீர்கள். ஆனால் ஒவ்வொருவரும் இத்தகைய சுழற்சிக்கு ஆட்பட்டவர்களே. ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வோடு, உத்வேகத்தோடு, எங்கோ ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற முனைப்போடு நீங்கள் எழுந்து‌‌ நிற்காவிட்டால், இந்த சுழற்சிகளின் ஒருபகுதியாக நீங்கள் இயல்பாகவே மாறிவிடுவீர்கள். இந்த சுழற்சிகள் ஒன்று அடிமைத்தனத்தை குறிக்கலாம், அல்லது கடந்து செல்வதை குறிக்கலாம். அது நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை பொறுத்து இருக்கிறது.

ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இருக்கும் வேற்றுமை இதுதான்: ஜோதிடம் இந்த சுழற்சிகள் உங்களை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதை விவரிக்க முயல்கிறது. ஆன்மீக செயல்முறைகள் இந்த சுழற்சிகளில் இருந்து உங்களை நீங்கள்  எவ்வாறு விடுவித்துக்கொள்ள முடியும் என்பதை விவரிக்கிறது. நாம் சுழற்சிகளை மறுக்கவில்லை. இந்த சுழற்சிகள் நிச்சயமாக இருக்கின்றன, ஆனால் இந்த சுழற்சிகளில் இருந்து எவ்வாறு நீங்கள் நழுவ முடியும் என்று நாம் பார்க்கிறோம். நீங்கள் சுழற்சிகளின் படியே, அந்தச் சுழற்சிகள் பற்றிய விழிப்புணர்வோடு  வாழ்ந்து வந்திருந்தால், உங்கள் வாழ்வில் குறிப்பிட்ட சமநிலை, வெற்றி,  நல்வாழ்வு மற்றும் செழிப்பும் இருக்கும். நீங்கள் எப்போதும் இந்த சுழற்சிகளில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்று தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தால், நீங்கள் உங்கள் முக்தியை குறித்து தேடுகிறீர்கள். நீங்கள் வெறும் நல்வாழ்வை விரும்புகிறீர்களா? அல்லது முக்தியை தேடுகிறீர்களா? அதுவே கேள்வி. அதற்க்கேற்ப நீங்கள் வாழவேண்டும்.

சுழற்சிகளின் மீது பயணிக்க கற்றுக் கொள்வது

உங்கள் வாழ்க்கை சுழற்சிகளின் படியே நிகழ்ந்தால், நீங்கள் எங்கேயும் சென்றடையப் போவதில்லை. அத்தகைய சுழற்சி படிமங்களை மாற்றுவதற்கான தருணம் இதுதான். அவை மாதம்தோறும் நிகழ்கின்றனவா, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றனவா, ஒன்பது மாதங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றனவா, 16 முதல் 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றனவா, ஒவ்வொரு மூன்று முதல் மூன்றேகால் வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கின்றனவா, அல்லது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நிகழ்கின்றனவா என்பதை பற்றி நீங்கள் கவனம் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் அவற்றை கவனிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் அவை நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை உங்கள் மன மற்றும் உணர்ச்சி சூழல்களில் மட்டுமே நிகழ்வதில்லை; மிக வினோதமான முறையில் உங்களை சுற்றியுள்ள உடல்சார்ந்த சூழல்களும் கூட மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்துகின்றன.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அது வெளிப்பட்டால், அதை ஒன்பது மாதங்களுக்கு என நாம் தள்ளி வைக்க முடியும், ஒவ்வொரு 9 மாதங்களுக்கு ஒருமுறை அது வெளிப்பட்டால், அதை பதினெட்டு மாதங்களுக்கு ஒருமுறை என்று தள்ளி வைக்க முடியும்; அதையே நாம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை, 12 வருடங்களுக்கு ஒருமுறை அல்லது 144 வருடங்களுக்கு ஒரு முறை என்று தள்ளி வைக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சுழற்சிகளுக்கு போக்கு காட்டுவதைவிடவும் இந்த சுழற்சிகளை பயன்படுத்திக் கொண்டு நாம் பயணிக்க முடியும்.