வாழ்க்கையின் ரசம்

மாம்பழத்தின் மீதான மோகம்: விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடத்தை இந்த இனிப்பான பழங்கள் உங்களுக்கு கற்பிக்கும்

சத்குரு, மாங்கனிகள் மீதான தனது வாழ்நாள் காதல் குறித்து பகிர்ந்துகொள்கிறார் – மாம்பழத்துடன் தொடர்புடைய அவரது குழந்தைப்பருவ நிகழ்வுகளில் இருந்து, அப்போதும், இப்போதும் மா சாகுபடி குறித்து அவர் கவனித்தவை வரை, அத்துடன் இந்தியக் கலாச்சாரத்தில் அந்தக் கனிகளுக்கு இருக்கும் அசைக்க முடியாத இடம். மாம்பழத்தின் வளர்ச்சி எப்படி வாழ்க்கையின் அடிப்படையான கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்பதுடன், அதிலிருந்து நமது சாதனாவுக்கு நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

சத்குரு: சிறிது காலத்திற்கு முன், அமெரிக்காவில் ஒருவர் என்னிடம் வந்து, ஒரு ஞானமடைந்த மனிதர் எப்படி மாம்பழம் சாப்பிடுகிறார் என்று கேட்டார். அது ஒரு அற்பமான கேள்வியாக உங்களுக்குத் தோன்றினால் – மாம்பழங்கள் சலிப்பான சாதாரண விஷயம் அல்ல. நான் குழந்தையாக இருந்தபோது, வருடத்தின் நான்கு மாதங்களுக்கு, மாம்பழம் தான் இந்தியாவில் மதமாக இருந்தது. மாம்பழ சீஸனில், மாம்பழத்தை மட்டுமே நான் உணவாகக் கொள்வது வழக்கம். மாம்பழத்தைத் தவிர வேறு எதுவும் எங்கள் வயிற்றில் இருக்காது. மாம்பழ பித்து எடுக்கும்போது, முகங்களெங்கும் மாம்பழம், ஆடைகளில் மாம்பழம்; எங்கள் மீது மாம்பழ மணம் வீசியது, வீடே மாம்பழ வாசனையில் இருந்தது – எல்லாமே மாம்பழம்தான்.

மாம்பழங்களைப் பற்றி படிப்பதில் மும்முரமாக இருந்ததால், நான் தேர்வுகளைக்கூட தவறவிட்டேன். மைசூரு நகரைச் சுற்றிலும், நிறைய வகையான மாமரங்களும், மாந்தோப்புகளும் இருந்தன. மாம்பழம் கிடைக்கும் இடங்களையும், அதன் வகைகளையும் தேடுதலில் ஏறக்குறைய 5-6 வருடங்களைக் கழித்தேன். மாமரங்கள் இருக்கும் எல்லாப் பகுதிகளையும் என் மனதில் வரைபடமாக வைத்திருந்தேன். மார்ச்சில் இருந்து ஜூலை இறுதிவரை மாம்பழங்கள் வெவ்வேறு சுவைகளில் இருப்பதுடன், அவைகளின் நிறமும், அவற்றை நீங்கள் ருசிக்கும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது.

நான் பியூசி படித்துக்கொண்டிருந்தபொழுது இது நிகழ்ந்தது. இது மிகவும் முக்கியமான கட்டம், ஏனென்றால் பியூசியில் ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பெண்கள்தான் அதன் பிறகு வரும் அவரது எதிர்கால கல்விப் பாதையை முடிவு செய்யும். கல்லூரி பருவ நாட்கள் முடிந்துவிட்டாலும், நாங்கள் அதிகபட்ச மதிப்பெண்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக கடினமாக படிக்கவேண்டிய கட்டாயம். எங்களது வெளி நடமாட்டத்தை குடும்பம் கட்டுப்படுத்தும் காலகட்டமாக இருந்த நிலையில், அது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத மிகக் கடினமான விஷயமாக இருந்தது. நான் வீட்டைவிட்டு வெளியறுவதற்கு, கல்லூரியின் சிறப்பு வகுப்புகள் வாய்ப்பளித்தன.

நான் குழந்தையாக இருந்தபோது, வருடத்தின் நான்கு மாதங்களுக்கு, மாம்பழம் தான் இந்தியாவில் மதமாக இருந்தது.

அது மாம்பழங்களின் ஆரம்ப சீஸன். எனது நண்பர்களும், நானும் கல்லூரியில் ஒன்றுகூடினோம். எந்த வகை மாம்பழங்கள் எங்கு கிடைக்கும் என்பதற்கு நான் ஆலோசகராக இருந்தேன். நாங்கள் எங்கு செல்வது என்று விவாதித்துவிட்டு, அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாகும்பொழுது, கல்லூரி முதல்வர் வந்து எங்களுக்கு அறிவுரை கூற அழைத்துச் சென்றார். முதல் மாடியில், நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு மேலே அவரது அலுவலகம் இருந்தது. அவர் மேலிருந்து குனிந்து பார்த்து, எங்கள் விவாதத்தைக் கேட்டிருக்கவேண்டும். அவர், “என்ன இது? தேர்வுகளுக்கு அடுத்த இருபது தினங்கள் தான் இருக்கும்போது, நீங்கள் மாம்பழங்களைத் தேடிச் செல்கிறீர்களே?” என்றார். அதற்கு நான், “தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை வருகிறது. மாம்பழங்கள் ஆண்டுக்கு ஒரு முறைதான் வருகிறது”, என்றேன்.

தென்னிந்தியாவில் 300க்கும் அதிகமான மாம்பழ இரகங்கள் உள்ளன. பெரும்பாலானவை காட்டு மரங்கள், சில பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அப்போது இருந்த பல இரகங்கள் இன்றைக்கு மறைந்துவிட்டன. மாம்பழங்கள் பெரிய பண்ணைகளில் அதிகமாக வளர்க்கப்படுவதால், அதன் இரகங்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கக்கூடியவை போன்ற வியாபார அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. இது மாம்பழ ரகங்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை – நாம் குழந்தைகளாக இருந்தபொழுது, நம் இந்தியாவில் கிடைத்த எண்ணற்ற பழங்களும், காய்களும் இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அவை சர்வதேச விவசாயக் கூட்டமைப்புகளால் துடைத்து எறியப்பட்டுவிட்டன. அவர்களது விதைகள் இன்று விவசாயத்தை ஆக்கிரமிப்பு செய்து, இந்த பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தை அழிக்கக்கூடியதாக இருக்கின்றன.

மாம்பழங்கள் எப்போதும் இந்தக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளன. கடவுள்கள்கூட மாம்பழங்கள் உண்பதாக விவரிக்கப்பட்டனர். ஆதியோகி மற்றும் பார்வதியின் குழந்தைகளான கணபதியும், கார்த்திகேயனும் இனிய, அதிமதுரமான ஒரு மாங்கனிக்காக போட்டியிடும் பிரபலமான கதை அனேகமாக உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். எனக்கு, மாம்பழங்கள் என்ற பெயரில் வேறு எங்கும் பரிமாறப்படுவது, உண்மையில் மாம்பழங்கள் அல்ல.

மாம்பழம் சாப்பிடுவதற்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது.

உங்களுக்கு உலகின் பிற பகுதிகளில் விளையும் மாம்பழங்களை ஏற்கனவே பிடிக்கும் என்றால், நீங்கள் இந்தியாவிற்கு வந்து இந்திய மாம்பழங்களை ருசிப்பதற்கு மாம்பழ சீஸனில் சில காலம் தங்கவேண்டும். நீங்கள் செல்லவேண்டிய இடம் எது, எந்த ரக மாம்பழங்களைச் சாப்பிடுவது மற்றும் எப்படி அவற்றைச் சாப்பிடுவது என்று என்னால் துல்லியமாக கூறமுடியும். மாம்பழம் சாப்பிடுவதற்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது. எந்த மாம்பழத்தை எந்த விதத்தில் கடிப்பது என்பதை கட்டாயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போதெல்லாம், இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு இது தெரிவதில்லை, ஏனெனில் அனைவருமே மாம்பழங்களை வெட்டி, துண்டுகளாக்கி சாப்பிடுகின்றனர்.

ஒரு மாமரத்தை நீங்கள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் பார்த்தால், பசுமையான இலைகள் தவிர வேறெதுவும் இருக்காது. பிறகு, சிறிய தீங்கற்ற தோற்றம் கொண்ட பூக்கள் மலரும். திடீரென்று, ஒரு நாள் காலையில், மரமெங்கும் பிஞ்சு மாங்காய்கள் நிறைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அப்போது முதல், அவை நாளுக்கு நாள் சாறும் இனிப்பும் நிறைந்த மாம்பழமாகும் வரை பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால் ஒரு மாமரம் முதன்முதலில் பழம் தருவதற்கு நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். முதல் 4-5 வருடங்களுக்கு, எதுவும் நிகழ்வதில்லை. இரண்டு வருடங்களிலேயே, “எதுவும் நிகழவில்லை, ஆகவே மரத்தை நான் வெட்டி எறியப்போகிறேன்”, என்று எண்ணுவது முட்டாள்தனமாக இருக்கும்.

படைப்பின் மூலம் வெளிப்பாடு கண்டால், நீங்கள் முற்றிலும் அழகானதொரு படைப்பாக மாறுகின்றீர்கள்.

இப்படித்தான் வாழ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது: முதலில் நீங்கள் ஒரு உறுதியான அடித்தளத்தை கட்டமைக்க வேண்டும். இதற்கு சில காலம் தேவைப்படுகிறது. உங்கள் சாதனாவுக்கும் இதுவே பொருந்துகிறது. விதை சிறப்பானது; அதற்குள் படைப்பின் மூலமே இருக்கிறது. படைப்பின் மூலம் வெளிப்பாடு கண்டால், நீங்கள் முற்றிலும் அழகானதொரு படைப்பாக மாறுகின்றீர்கள்

ஒருமுறை விதை ஊன்றப்பட்டது என்றால், சிறிது காலத்துக்குப் பிறகு, அது முளைத்து வருகிறதா என்பதைப் பார்க்க அதைத் தோண்டிப் பார்க்காதீர்கள். தினமும் நீர் பாய்ச்சினால் போதுமானது. பழங்கள் வரவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு, மாமரத்திற்கு முன்பு காத்திருக்காதீர்கள். மேலும், முதிர்வதற்கு முன்பு மாங்காயைப் பறிக்க முயற்சிக்காதீர்கள். அதற்கான நேரம் வரும்போது, விரைவில் பழுக்கும். ஒருநாள், மாம்பழம் உங்கள் தலைமீது விழும்.

யோக-ஸ்தாகுருகர்மானி என்பதன் பொருள் இதுதான். யோகாவில் உங்களை உறுதிப்படுத்துங்கள் – பிறகு செயல்படுங்கள். அழகான விஷயங்கள் வெளிப்படும்.