மண் காப்போம்

உலகளாவிய மண் அழிவுக்கு, சத்குரு அவர்களால் முன்வைக்கப்பட்ட 3 கட்ட நடைமுறைத் தீர்வு

அபிட்ஜான், ஐவரி கோஸ்ட்டில், ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதலைத் தடுக்கும் COP15 மாநாட்டின் 15வது அமர்வில், மண்ணைக் காப்பதற்கு, ஒருமுனைப்பான கவனம் வழங்கவேண்டியதன் அவசியத்தை சத்குரு வலியுறுத்தினார். விவசாய மண்ணின் கரிமப் பொருளை அதிகரிப்பதன் மூலம் அதனை மீட்டெடுப்பதற்கான, நடைமுறைப்படுத்தக்கூடிய மும்முனை வழிமுறைகளை அவர் பரிந்துரைத்தார்.

சத்குரு: உலக நாடுகள் அனைத்தும் குழுமியுள்ள ஐவரி கோஸ்டில் நிகழும் COP15 மாநாடு, உலகெங்கும் விவசாய நிலத்தின் அழிவைத் தடுத்து, மீட்கும் நோக்கம் கொண்டதுடன், அதற்கான அரசாங்கக் கொள்கை முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கான முதன்மை வாய்ப்பாகவும் இருக்கிறது. இந்த செயல்பாடுகள், முழுமையாக மண் அழிந்து போகக்கூடிய விளிம்பு நிலையில் இருந்து மனிதகுலத்தை மீட்டெடுக்கும் சாத்தியம் கொண்டது.

மண் காக்கும் செயல் மகத்தான அளவில் நிகழ்வதற்கு, ஆழமாக வேரூன்றிய ஒரு மக்கள் இயக்கத்தை நாம் வடிவமைக்க வேண்டியுள்ளது. நம்மை எதிர்நோக்கியிருக்கும் சூழலியல் பிரச்சனையின் சிக்கலான தன்மையை தடுக்க இயலாத ஒரு நிலையில், சுருக்கமாகவும், எளிமையான வழியிலும் எடுத்துரைக்கும் நிவாரண செயல்பாட்டை ஒருமுனைப்பட்ட முயற்சியாக முன்னிலைப்படுத்த முடிந்தால் மட்டுமே, ஒரு வெற்றிகரமான மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும். நமது சூழலியல் முயற்சியின் வரலாறு மிகச் சில சந்தேகமற்ற வெற்றிகளையே காட்டுகிறது. இதற்குக் காரணம் சிக்கலான அறிவியல்பூர்வமான விவாதங்களை எளிதில் புரியக்கூடிய செயல்பாடுகளாக மாற்றுவதற்கு, பெரும்பாலும் நாம் தவறிவிட்டோம். இன்றுவரை, 1987ன் மான்ட்ரியல் புரோட்டோகால் மட்டுமே மிக வெற்றிகரமான ஒரே சர்வதேச உடன்படிக்கையாகக் கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலம் குறைவதைத் தடுக்கும் ஒரு விஷயத்தை மட்டும் செயல்படுத்துவதில் முனைப்பான முயற்சி இருந்த காரணத்தால் அது நிகழ்ந்தது.

ஓசோன் படலத்தை சிதைக்கும் பொருட்களின் மீதான மான்ட்ரியல் கோட்பாடு என்பது, ஓசோன் படலத்தை சிதைக்கும் வகையில் மனிதனால் உருவாக்கப்பட்ட கிட்டத்தட்ட 100 இரசாயனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுகளை ஒழுங்குபடுத்தும் முக்கிய சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். இதுவரை 198 ஐ.நா உறுப்பு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஐ.நா ஒப்பந்தம் இது.

அதேவிதமாக, வித்தியாசமான மண் நிலவரங்கள், பல்வேறு சீதோஷ்ணங்களின் விவசாய நிலங்கள் மற்றும் வேறுபட்ட பண்பாட்டு மற்றும் பொருளாதார கலாச்சாரங்களின் அடிப்படையில், மண் அழிவு பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதில் விஞ்ஞானபூர்வமான பல மாறுபாடுகள் உள்ளன. இருப்பினும் விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிமப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரே ஒரு மிக முக்கியமான நோக்கத்தை முன்னிறுத்துவது சாத்தியமே. இது உலகெங்கும் உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும் நமது மண்ணுக்கு வீர்யத்துடன் உயிரூட்டி, நீடித்த வளம் கொழிக்கச் செய்யும்.

  1. ஆரம்பத்தில், நாம் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 3-6% கரிமப்பொருள் அதிகரிப்பை இலக்கு நிர்ணயம் செய்து, இந்த ஆரம்ப நிலையை அடைவதற்கு கவர்ச்சிகரமான ஊக்கத்தொகைகள் அளிப்பது அவசியம். இப்படிப்பட்ட ஊக்கத்தொகைகள் விவசாயிகளிடையே இலக்கு நோக்கிய ஒரு பந்தயத்தை உருவாக்கும். வருடக்கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டமாக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது, முதல் கட்டத்தில் ஊக்கம் தரவேண்டும், இரண்டாவது கட்டத்தில் அதனைச் செயல்படுத்தியமைக்காக ஊக்கத்தொகை அளிக்கவேண்டும், இறுதியாக சில பொருத்தமான ஊக்கத்தொகை மறுப்புகளைக் கையாள்வது அவசியம்.
  2. விவசாயிகள், கரிம வரவு ஊக்கத்தொகைகள் ஈட்டுவதற்கு நாம் வழிவகுக்க வேண்டும். கரிம வரவு பலன்கள் பெறுவதில் உள்ள தற்போதைய வழிமுறைகள் மிகவும் சிக்கலானதாக உள்ளன, அதனால் அவைகள் எளிமையாக்கப்படுவது அவசியமாக இருக்கிறது.
  3. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி 3-6% கரிம உள்ளடக்க அளவுடைய மண்ணிலிருந்து விளைந்த உணவுப் பொருட்களுக்கு உயர்தர உணவுக் குறியீடு வழங்குவதை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை செய்யும்போதே, இத்தகைய உணவுகளை உண்பதனால் விளையக்கூடிய பல்வேறு ஆரோக்கிய நலன்கள், ஊட்டச்சத்துப் பலன்கள் மற்றும் வருமுன் காக்கும் தன்மைகளை தெளிவாக புரியக்கூடிய வகையில் தெரிவிக்கவேண்டும். இந்த முயற்சியின் விளைவாக, மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும், அதிக திறனுடனும், அதிக இலகுவாகவும் இருப்பதால் மனித நாட்கள் பயனுடையதாகவும், ஆரோக்கிய மேம்பாட்டு அமைப்புகள் குறைந்த அழுத்தத்துடனும் இருப்பதற்கு வழிசெய்கிறது. தற்போது, “கரிமச்சத்து” உடைய ஒரு உணவு மற்றும் “கரிமச்சத்து இல்லாத” ஒரு உணவு இவற்றுக்கு இடையில் மட்டும் வேறுபடுத்திக் காண்பிக்க முயற்சிக்கும் இன்றைய முறையைக் காட்டிலும், அப்படிப்பட்ட உயர்தர உணவுக் குறியீடு வழங்குவது அதிக அர்த்தமுடையதாக இருக்கும்.

காலம் கடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தகுந்த அரசாங்கக் கொள்கைகளின் விரிவாக்கத்துடன், காலக் கடிகாரத்தில் நம்மால் மண் அழிவின் முட்களைத் திருத்தி அமைத்துவிட முடியும். உலகமெங்கும் அரசாங்கக் கொள்கை விரிவாக்கத்துக்கான இந்தத் துரிதமான பணியை முடுக்கிவிடுவதற்காக, 193 தேசங்கள் ஒவ்வொன்றுக்கும் பரிந்துரைக் கையேடு ஒன்றை, மண் காப்போம் இயக்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அதிகமான விபரங்களை, Savesoil.org என்ற இயக்கத்தின் வலைதளத்தில் பெறமுடியும்.

நாம் இதனை நிகழச் செய்வோம்!