சிறப்புக் கட்டுரை

வெப்பத்தின் தீவிரம் தொடங்கிவிட்டது. வரவிருக்கும் ஆண்டுகளில், நமது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது?

பெருந்தொற்று, போர், பொருளாதார சீர்குலைவு, மண் அழிவு - உலகெங்கும் நம்மில் பலரும் திடீரென்று, முன்னர் எப்போதும் சம்பவித்திராத அளவுக்கான நிச்சயமற்றத் தன்மையை எதிர்கொள்கிறோம். பூமிக்கிரகத்தின் மீது ஒரு மிகப்பெரிய சீர்குலைக்கும் தாக்கத்தைக் குறிப்பிடும் சத்குரு, நமது எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் எப்படி அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.


கேள்வி: நமஸ்காரம் சத்குரு. எனது கேள்வி, தெய்வீகத் தலையீடு என்பது என்ன, அது எப்படி செயல்படுகிறது?

சத்குரு: இன்றைய தினத்தில் எத்தனை நிமிடங்களாக அல்லது எத்தனை மணி நேரங்களாக சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? முழு நேரமும் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால், தெய்வீகத் தலையீடு எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அது என்னவென்றால், உங்களுக்கு சாதகமாக அது செயல்பட வேண்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில், சூரிய மண்டலத்தில் சூரிய எரிப்பு செயல்பாடு குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்துள்ளது என்பதுடன், அது மேலும் அதிகரிக்கப்போகிறது. சூரிய எரிப்பு அதிகரிக்கும்பொழுது, பூமியின் காந்தப்புலன் மீதும் மற்றும் கதிர்வீச்சின் அளவின் மீதும் அதற்கு ஒரு குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கிறது. பூமிக்கிரகத்தின் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கம் இருக்கும்பொழுது, எல்லா உயிர்களும் தாக்கத்துக்கு உள்ளாகிறது.

இந்த சூரிய எரிப்பு, உங்களது தற்சார்பு நரம்பு மண்டலம், உங்களது செரிமான மண்டலம் மற்றும் உறிஞ்சுத்தன்மை, உங்களது நுரையீரல் மண்டலம் மற்றும் சுவாசம் என்று எல்லாவற்றின் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைக்கு உலகில் நாம் இந்த ஒரு கட்டத்தை எட்டியுள்ளோம். அதாவது, உங்களுக்குப் புரிந்துவிட்டதாக நீங்கள் நம்பினால்தவிர, உங்களால் எதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இது மிகவும் பாதிக்கக்கூடிய, துரதிருஷ்டவசமான நிலைமை. “உங்களுக்குப் புரிவதை நீங்கள் நம்புகிறீர்கள்” என்று நான் கூறும்பொழுது, இந்த பூமி எப்படிச் சுழல்கிறது, அது சூரியனை எப்படிச் சுற்றிவருகிறது, அவைகள் எப்படிச் செயல்படுகின்றன, மற்றும் அது உங்கள் உடலின் மீது எப்படித் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதெல்லாம் உண்மையிலேயே உங்களுக்குப் புரிகிறதா? மேலும் நீங்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள், உங்கள் மூச்சு எப்படி நிகழ்ந்துகொண்டிருக்கிறது - இவைகள் உண்மையாகவே உங்களுக்குப் புரிகிறதா? ஒரு சில முதன்மை விஞ்ஞானிகளைத் தவிர்த்து, பெரும்பாலான மக்களுக்கு, விஞ்ஞானம் என்பது ஒரு மதம் போன்றது - அவர்கள் அதை அப்படியே நம்புகின்றனர்.

இந்த சூரிய எரிப்பு, உங்களது தற்சார்பு நரம்பு மண்டலம், உங்களது செரிமான மண்டலம் மற்றும் உறிஞ்சுத்தன்மை, உங்களது நுரையீரல் மண்டலம் மற்றும் சுவாசம் என்று எல்லாவற்றின் மீதும் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 1755ல் பதிவுசெய்ய ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை நாம் கண்டிராத விதத்தில் அடுத்த சில வருடங்களில் மிக அதிகமான சூரிய எரிப்புகள் இருக்கும்.

அழிவா அல்லது மாற்றமா?

ஒரு பெருந்தொற்று ஏற்படும் என்பதாக நான் கணிக்கவில்லை, ஆனால் மக்களுக்கு சிறிது குழப்பம் நிகழக்கூடும் என்பது எனக்குத் தெரியும். சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த சூரிய எரிப்புகளின் செயல்பாடு அதிகமாகி வருவதுடன், மேலும் சில வருடங்களுக்கு அது அதிகமாகிக்கொண்டே செல்லலாம். இந்த நேரத்தில், நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வதா அல்லது உணர்தல் மற்றும் மாற்றம் அடைவதா என்பது மனிதர்களாகிய நம் கைகளில் உள்ளது.

இந்த நேரத்தில், நமக்கு நாமே அழிவைத் தேடிக்கொள்வதா அல்லது உணர்தல் மற்றும் மாற்றம் அடைவதா என்பது மனிதர்களாகிய நம் கைகளில் உள்ளது.

இந்திய மரபுகளிலும், வேதங்களிலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அதாவது சூரிய செயல்பாடு அதிகரிக்கும்போது, அதிகமான மரணங்கள், வியாதி, போர்கள் மற்றும் மனரீதியான சமநிலையின்மைகள் ஏற்படக்கூடும். மனித வாழ்விலும் மற்றும் கிரகத்தின் ஒவ்வொரு உயிரினத்திலும் நிறைய குழப்பம் இருக்கக்கூடும். சூரிய எரிப்புகள் நமக்குத் தீங்கிழைக்கின்றனவா? இல்லை, ஆனால் அது இதைப் போன்றது: நீங்கள் ஒரு விமானத்தைச் செலுத்த விரும்புவதாக வைத்துக்கொள்வோம். காற்று முன்னால் இருக்க அதற்குள் எதிர்த்துக்கொண்டு நீங்கள் சென்றால், அதிக முயற்சி அல்லது எரிபொருள் இல்லாமல், நீங்கள் உயரே எழும்பிவிடுவீர்கள். ஆனால் காற்று பின்னாலிருக்க அதனுடன் நீங்கள் செல்ல முயன்றால், உங்களது விமானம் தரையில் மோதிவிடும். ஆகவே காற்றைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு வரம், ஆனால் அதைப் பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கு அது ஒரு சாபம். சூரிய எரிப்பு உள்ளிட்ட, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சக்திக்கும் இது பொருந்துகிறது.

சூரிய எரிப்பு உங்களது இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கத்தை மாற்றியமைக்கிறது. நிகழவிருக்கும் புவி காந்தப்புல மாறுபாடு உங்கள் சக்தியை அதிகரிக்க முடியும் அல்லது குழப்பமடையச் செய்யலாம். நீங்கள் விழிப்பாக இருந்தால், இது ஒரு அற்புதமான நேரம். கோடைக்காலத்தில், சூரியன் வெப்பமாக இருக்கும்பொழுது, தாவரங்கள் உண்மையாகவே வெடித்துக் கிளம்புகின்றன. சூரியனின் சக்தியை எப்படிப் பயன்படுத்துவது என்பது அவைகளுக்குத் தெரியும். தமது சக்தியை மாற்றத்துக்கு உள்ளாக்க விரும்பும் ஒரு ஆன்மீக சாதகருக்கு, இந்த சூரிய எரிப்புகள் எல்லாவற்றையும் உண்மையாகவே நன்றாகப் பக்குவப்படுத்தும் நேரங்களாக இருக்கின்றன. சூரியன் என்னுடன் இருக்கும் காரணத்தால், அடுத்த மூன்றரை வருடங்களுக்குள் நான் செய்ய விரும்பும் எல்லா பிரதிஷ்டைகளும் பூர்த்தியடைவதை உறுதி செய்துகொள்ள விரும்புகிறேன்.

[1] காற்றுக்கு எதிராக மேல் எழும்பும்போது, விமானத்தின் இறக்கைக்கு கீழ் காற்று வேகமாக செல்வதால் விமானம் இன்னும் மேலே உயரும்

வாழ்வில் உங்களுடைய உச்சபட்ச இலக்குகள் என்ன?

உங்களுடைய ஆரோக்கியம், செல்வம், அதிகாரம், அமைதி, பாலுறவு இவைகளை மட்டும் மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது வாழ்வு மற்றும் மரணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆனந்தமாக கடந்து செல்வதற்கான உண்மை மற்றும் ஆற்றலின் உணர்தலை விரும்புகிறீர்களா? நீங்கள் தியானத்தன்மையை அடைவதற்கு விரும்பினால், குறிப்பிட்ட வேறுசில விஷயங்கள் நிறைவடைய வேண்டும். மனிதர்கள் இயற்கையாகவே ஏன் தியானத்தன்மை அடையவில்லை என்பதற்கு, அவர்கள் தளர்வு நிலையில் இல்லாமல் இருப்பதுதான் ஒரே காரணம். எப்போதும் அவர்கள் ஏதோ ஒருவிதமான இறுக்கத்தில் உள்ளனர். இது பிழைத்திருப்பதற்கான உந்துதல். பிழைத்தலுக்கான உந்துதல் இருக்கும்வரை, நீங்கள் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திலும், இறுக்கத்திலும் இருக்கிறீர்கள். நீங்கள் முழுமையான பித்து நிலைக்கு செல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயம் நீங்கள் தளர்வு நிலையில் இல்லை.

நீங்கள் தெளிவான அறிவு பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், அடுத்த சில வருடங்கள் இந்த பூமி மீது ஒரு சக்தியூட்டப்பட்ட காலம் செயல்பாட்டில் இருக்கப்போகிறது.

அநேகமாக, 2025ம் ஆண்டின் மத்தியில், இந்த சூரிய செயல்பாடு அதன் உச்சத்துக்கு அதிகரிக்கும். அந்த நேரத்தில், நாம் உலகத்துக்கு உணர்தலைக் கொண்டுவருவோமா அல்லது அழிவுகளைக் கொண்டுவருவோமா? தேசங்கள் ஒன்றை ஒன்று நோக்கி சுட்டு வீழ்த்தத் தொடங்குமா? நான் நேர்மறையான, அற்புதமான நிகழ்வுகளைக் காண்பதற்கே விரும்புவேன். ஆனால் நான் ஒற்றை மனிதன்தான். பண்டைய காலங்களில், சில யோகிகள் சஹஸ்ரங்கா என்று விவரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஆயிரம் கரங்களுடன் ஒரு யோகி. யாரோ ஒருவர் எனக்கு ஒரு “சேனை” இருப்பதாகக் கூறினார். ஒரு சேனையானது உத்தரவுகளை ஏற்கிறது. உங்களிடமிருந்து ஒரு “yes, sir” எனக்கு வேண்டாம், ஆனால் நீங்கள் தெளிவான அறிவு பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், அடுத்த சில வருடங்கள் இந்த பூமி மீது ஒரு சக்தியூட்டப்பட்ட காலம் செயல்பாட்டில் இருக்கப்போகிறது.

இந்த சக்தியை நாம் மாற்றமடையவும், உணர்தலுக்கும் பயன்படுத்தப்போகிறோமா, அல்லது நமது உடலில் ஏதோ ஒரு தூண்டல் நிகழ்ந்துகொண்டிருப்பதால் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறோமா? நமக்கு சமநிலை இல்லையென்றால், நாம் ஒருவருக்கொருவர் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்வோம். இப்போது இந்த இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இந்த சூரிய எரிப்புகள் கடந்த காலத்தில் யோக நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் சூரிய எரிப்புகள் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை எட்டுகிறதோ, அப்போது அந்தக் கலாச்சாரத்தில் மகத்தான யோகிகள் உச்சமடைந்தனர். அதே நேரத்தில், போர்கள், பேரழிவு நிகழ்வுகள், சில நேரங்களில் பூகம்பங்கள் நிகழ்ந்தன, ஏனென்றால் பூமியின் காந்த சக்திகள் மற்றும் பூமிக்கோளத்தின் மையத்தில் இருக்கும் வெப்ப சக்திகள் அனைத்தின் மீதும் சூரிய எரிப்புகள் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றுவது

ஒரு எரிமலை முழுவதுமாக வெடித்தெழுவதை நீங்கள் கேலரியில் இருந்து காணும் பார்வையில் கண்டால், அது என்ன ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்! அதை நீங்கள் தவறவிட விரும்பமாட்டீர்கள். ஆனால் நீங்கள் எரிமலையின் அடிவாரத்தில் இருந்துகொண்டு, எரிமலைக் குழம்பின் ஒரு பகுதியாக மாறவிருந்தால், அப்போது அது ஒரு நல்ல விஷயம் அல்ல. உலகத்தில் ஒவ்வொரு சக்தியும் இதைப் போன்றதுதான். ஆகவே, இதைப்போன்ற ஏதோ ஒன்று நிகழும்போது, சரியான இடத்தைச் சென்றடைவதற்கான புத்திசாலித்தனத்தை மனித ஜனத்திரள் கொண்டிருக்கவேண்டும். அதன் விளைவாக, இந்த பூமி மீது செலுத்தப்படும் கூடுதல் சக்தி நமக்கு சாதகமாக செயல்படமுடியும்.

இதனால்தான் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பிடுவது அதிமுக்கியமானது. இல்லையென்றால், வலி, மரணம் மற்றும் பல பிரச்சனைகளும் எழும். ஆனால் ஒட்டுமொத்த உலகத்தையும் மாற்றுவதுகூட, இன்றைக்கு இருக்கும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பங்களால் சாத்தியமாகவே உள்ளது. தொழில்நுட்பங்களையும், சூரிய எரிப்புகளையும் பயன்படுத்தி, அடுத்த மூன்றரை வருடங்களை மனிதகுலத்திற்கான பிரம்மாண்டமான நேரமாக நாம் உருவாக்கமுடியும். அதைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் உயரமுடியும். அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு அது எப்படி செயல்படும் என்பது நமக்குத் தெரியவில்லை.

தொழில்நுட்பங்களையும், சூரிய எரிப்புகளையும் பயன்படுத்தி, அடுத்த மூன்றரை வருடங்களை மனிதகுலத்திற்கான பிரம்மாண்டமான நேரமாக நாம் உருவாக்கமுடியும்.

அது, பூகம்பம் அல்லது வெள்ளம் நிகழும் என்பதைப் போன்ற இயற்கைப் பேரழிவு அல்ல. ஆனால் இந்த பூமி மீது செயல்படும் எல்லா சக்திகள், புவிசார் காந்த சக்திகள், அணுக்கதிர் வீச்சுகள், பூமியைத் தொடரும் காந்தசக்தி மீதும், மற்றும் பூமியுடன் சந்திரன் தொடர்புகொள்ளும் விதத்திலும், சூரிய எரிப்பு சக்திகளை பூமியை நோக்கி எப்படித் திருப்பிவிடுகிறது என்பதிலும் ஒரு கூடுதல் தூண்டல் இருக்கிறது.

கூடுதலான தூண்டல் நிகழும்போது, தேவையான ஆற்றல் இல்லாமல் உங்களால் செய்யமுடியாத விஷயங்களை, இப்போது எளிதாக நீங்கள் செய்யலாம். தற்போது, பூமியின் மீது இந்த கூடுதல் தூண்டல் இருக்கிறது, மற்றும் அடுத்த மூன்று வருடங்களில் அது அதிகமாகப்போகிறது. அது நிகழும்போது, நமது எலும்புகளை நாம் உடைத்துக்கொள்ள முடியும் அல்லது நாம் உயரமுடியும். அனைவரும் உயரவேண்டும் என்பதே என் விருப்பம். நாம் செய்யக்கூடியது என்னவாக இருப்பினும், மனிதகுலம் எழுச்சியடையும் வகையில் நாம் செய்யவேண்டும், ஏனென்றால் நமக்கு நாமே உற்பத்தி செய்வதற்கு மிகக் கடினமான ஒரு இயற்கை சக்தி இருப்பதுடன், ஒட்டுமொத்த பூமி மீதும் அது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.

உங்களையே தடையற்றவராக உருவாக்குங்கள்

பலரிடமும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் தேவையான கவனத்துடன் இருந்தால், உங்கள் சக்திகளை பல வழிகளில் நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களது ஞாபகமும், கற்பனையும் ஒன்றாகப் பிணைந்திருப்பதுதான் பிரச்சனை. எப்போது அவர்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றனர், எப்போது அவர்கள் நிகழ்காலத்தை உணர்கின்றனர், மற்றும் எப்போது அவர்கள் எதிர்காலத்தை கற்பனை செய்கின்றனர் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. கடந்த காலம் நினைவில் மட்டுமே இருக்கமுடியும். நிகழ்காலம் மட்டுமே உணர்வதற்கானது. எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டியது.

மக்கள் இப்போது கடந்த காலத்தினால் துன்பம் அடைந்துகொண்டு, நிகழ்காலத்தை முற்றிலுமாக தவறவிடுகின்றனர். ஒரு உயிர்ப்புமிக்க, செயலூக்கமான, வளர்ச்சி பெறும் வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் வடிவமைக்க வேண்டும். நீங்கள் அதனை உருவாக்குவதற்கு, கடந்தகாலம் நினைவில் மட்டுமே இருக்கமுடியும் - அது வாழமுடியாதது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிகழ்காலத்தை அனுபவிக்கத்தான் முடியும் - அது குறித்து நீங்கள் எதுவும் செய்யமுடியாது. எதிர்காலத்தை உங்களால் உருவாக்கமு டியும்.

ஒரு உயிர்ப்புமிக்க, செயலூக்கமான, வளர்ச்சி பெறும் வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் வடிவமைக்க வேண்டும்.

உங்கள் எதிர்காலத்தை நீங்கள் வடிவமைக்கவேண்டும் என்றால், அதை அடைவதற்கான வழி ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. அது சமூக வழிமுறையாக இருக்கலாம், பணம் சார்ந்த வழிமுறையாக இருக்கலாம், அரசியல் வழிமுறையாக இருக்கலாம் அல்லது சக்திநிலையின் வழிமுறையாக இருக்கலாம். நிச்சயமாக உங்களுக்கு வழிமுறை தேவை. வழிமுறை இல்லையென்றால், உங்களிடம் கார் இருந்தும், எரிபொருள் இல்லாததைப் போன்றது அது. உங்களுக்குள் இடையறாமல் செயல்படும் இரண்டு அடிப்படையான உந்துசக்திகள் இருக்கின்றன. ஒன்று, சுய பாதுகாப்புக்கான உங்களது உள்ளுணர்வு, இது உங்களது உடல்ரீதியான தற்காப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது. மற்றொன்று, விரிவடைவதற்கான பேராவல். விரிவடைவதற்கான இந்தப் பேராவல் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது ஏனென்றால், சுய பாதுகாப்புக்கான உள்ளுணர்வு பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

உங்கள் வாழ்க்கையில் ஒரு சில வலிமிகுந்த அனுபவங்கள் உங்களுக்கு இருப்பதால், விரிவடைவதற்கான உங்கள் பேராவலைவிட உங்களது சுய பாதுகாப்பு பெரிதாகிவிடுகிறது. அது ஆன்மீகம் குறித்ததாக மட்டும் இல்லாமல், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் குறித்தது. இது ஏன் செயல்படவில்லை? என்று பல தருணங்களில் நீங்கள் திகைத்து நிற்பதுண்டு. இதற்குக் காரணம், விரிவடையும் ஆவலைவிட சுய பாதுகாப்புக்கான உங்கள் உள்ளுணர்வு வலிமையாக உள்ளது. இந்தக் காரணத்தால், புதிதாக எதுவும் நிகழாது. நீங்கள் சுய பாதுகாப்பை அல்லது விரிவடைதலை விரும்பக்கூடும், ஆனால் அது நிகழாது. ஏனென்றால் நீங்கள் சுவர் ஒன்றைக் கட்டிவிட்டு, பிறகு வெளியே செல்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இது, அந்த மாதிரி வேலை செய்யாது. சுய பாதுகாப்பின் உள்ளுணர்வை நீங்கள் கடந்திருந்தால், அப்போது உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் தளர்வுநிலைக்கு வரும்.