
ஈஷா யோக மையம், பெங்களூருவில், 16,000 க்கும் அதிகமான மக்கள் சத்குருவுடன் நாகப் பிரதிஷ்டையை உணரும் ஒரு வாழ்நாள் வாய்ப்பில் மூழ்கித் திளைத்தனர். 2022 அக்டோபர் 9ம் நாள் அஷ்வின் பௌர்ணமி தினத்தன்று இரவில் பிரதிஷ்டை நடைபெற்றது.
மலைப்பாங்கான நந்தி மலைகள் சூழ, பரந்த வானவெளியில், கொட்டிக்கிடக்கும் இயற்கை வனப்பின் மடியில், நீண்ட காலக் காத்திருப்பின் விளைவான நாகப் பிரதிஷ்டைக்காக, வெண்ணுடை தரித்த பல்லாயிரம் மக்களை ஈர்த்தவாறு, பெங்களூருவின் ஈஷா யோக மையம், நிறைந்த புகழுடன் பெருமையுடன் நின்றிருந்தது.
பங்கேற்பாளர்கள் வளாகத்தினுள் நுழைந்ததும், கம்பீரமான 112 அடி ஆதியோகி கண்களுக்குத் தென்பட்டதுடன், நாகாவின் வாழிடம் ஆதியோகிக்கு முன்பாக ஜொலித்தது. சந்நிதியானது, “நாக நாக நாகேந்திராய” என்று கன்னடத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய கருப்பு நிறத் துணியால் மூடப்பட்டிருந்தது. புதிராகவும், தன்வயப்படுத்துவதாகவும் தோன்றிய ஏதோ ஒன்றினால், அனைவரும் தாங்கொணா ஈர்ப்புக்கு ஆளாகினர்.
எதிர்பார்ப்பின் அடர்த்தி காற்றில் நிறைந்திருந்தாலும், மக்கள் தங்களது உணவுக்காக கூடிய இடத்தில் எழுந்த மெல்லிய பேச்சொலியினால் அவ்வப்போது அது தடைப்பட்டது. காற்றுவெளியில் பரவிய நாகா உச்சாடணை, இந்த எதிர்பார்ப்புக்கு அடி நாதமாக சுருதி சேர்த்தது. கடிகாரமுள் மணி மூன்று என்று சுட்டியதும், பங்கேற்பாளர்களும் உச்சாடணையில் இணைந்து, பிரதிஷ்டையில் பங்கேற்கும் ஆர்வத்தின் உச்சத்தில் அங்கு அரங்கேறிய செயல்முறைக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர்.
அடுத்து சில மணி நேரங்கள் சுழலெனக் கடக்கும் முன், ஒவ்வொருவரும் அவரது பகுதிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்ட சால்வைகளைப் போர்த்தியவாறு அமர்ந்திருந்தனர். தனது ஒவ்வொரு அசைவிலும் அதிதீவிர உறுதிப்பாடு கொண்ட சத்குரு, ரச தண்டம் ஏந்தியவராக நாகா சந்நிதி நோக்கி நடந்தார். சக்தியூட்டப்பட்ட பாதரச உருள்கம்பியாகிய இந்த ரச தண்டம்தான் நாகப் பிரதிஷ்டையில் மையப் பாத்திரமாக பங்கேற்கப்போகிறது. மேற்கொண்டு முன்னுரை எதுவுமின்றி, அவர் பிரதிஷ்டையைத் தொடங்கினார்.
குறிப்பிட்ட பீஜ மந்திரங்களை உச்சாடணம் செய்தவாறு, அதற்குரிய சக்கரங்கள் மீது கவனம் குவிப்பது உள்ளிட்ட ஜாக்கிரதையுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறைக்குள் சத்குரு, பங்கேற்பாளர்களை வழி நடத்தினார். இதற்கிடையில், நாகாவின் மீது வெண்ணெய், அதன் பிறகு மஞ்சள், குங்குமம் மற்றும் அஸ்தியை பிரம்மச்சாரிகள் படிப்படியாக சாற்ற, அதன் ஒவ்வொன்றின் இறுதியிலும் சத்குரு ஆரத்தி எடுத்தார்.
திடீரென்று, இயற்கை அன்னை ஒரு மழைப்பொழிவால் கூட்டத்தினரை நனைக்க முடிவுசெய்துவிட்டாள். பங்கேற்பாளர்கள் இதனை எதிர்பாராததால், மழையிலிருந்து தங்கள் உடைமைகளைப் பாதுகாக்கும் முனைப்பில் சில கணங்கள் அவர்களிடையே சலசலப்பு தொடர்ந்தது. சிலர் மட்டும் குளிர்ந்த மழைப்பொழிவையும் பொருட்படுத்தாமல், அவர்கள் மீது தெறித்த ஒவ்வொரு துளியுடனும், அங்கு நிறைந்திருந்த தெய்வீக சூழலின் உள்வாங்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு அனுமதித்தனர்.
ஈஷா அறக்கட்டளையின் இசைக்குழுவாகிய சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரால், தனிச்சிறப்புடன் இயற்றப்பட்ட “நாக நாகம் ஆஷ்ரயேஹம்” பாடல், உச்சாடணைகள் மற்றும் தாளமிட வைத்த முரசறைகள் இணைந்து அந்தச் சூழலுக்கு உயிரூட்டியது. சில பங்கேற்பாளர்கள் பிரதிஷ்டை செயல்முறையை தீவிரமாக உற்றுக் கவனித்தபடி இருக்க, மற்றவர்கள் கண்கள் மூடிய நிலையில் பேரானந்தத்தில் திளைத்துக்கொண்டு, ஆற்றல் பெருகிய சக்திகளில் நனைந்திருந்தனர்.
3½ மணி நேர முழுமையான தீவிரத்திற்குப் பிறகு, பிரதிஷ்டை செயல்முறை இறுதி கட்டத்தை நிறைவு செய்தது. அனைத்தும் திட்டமிட்டவாறு சென்று கொண்டிருந்ததை சத்குரு குறிப்பிட்டவராக, “மிகச் சரியான அளவு மழையும்கூட” என்பதை பூடகமான தொனியில் உறுதிப்படுத்தி அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் அவர் பங்கேற்பாளர்களை நாகாவுக்கு சமீபமாக வருமாறு அழைப்பு விடுத்து, அதைத் தொட்டு, பிரசாதத்தை எடுத்து அவர்களது முன் நெற்றி மற்றும் தொண்டைக்குழியில் இட்டுகொள்ளுமாறு பணித்தார்.
இரண்டாவது அமர்வின்போது, சத்குரு அவரது கைகளில் தவழ்ந்துகொண்டிருந்த ஒரு அழையா விருந்தாளியுடன் வந்தார். கூட்டத்தினரிடம் உரை நிகழ்த்திக்கொண்டே, கரங்களில் நெளிந்த சர்ப்பத்தை மென்மையாகக் கையாண்டதை அனைவரும் வியந்து கவனித்தனர். பல காலங்களாக சர்ப்பங்கள் எப்படி தவறாக இழிவுபடுத்தப்பட்டன என்று பேசியவர், இந்தப் புரிதலை மாற்றுவது நமது பொறுப்பு என்றார். ஒரு விஷத்தன்மையான உயிரினமும்கூட, சரிவரக் கையாளப்பட்டால், ஒரு தெய்வீக சாத்தியமாக மாறுகிறது என்று கூறினார்.
மிகப் பரவலாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பொருளாக இருக்கும் பாதரசத்தின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு விளக்கமளித்தார். பிரதிஷ்டைக்கு முன்பாக பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட தாமிர சர்ப்பம் குறித்துப் பேசும்போது, அதனை நாகாவுக்கு அர்ப்பணிப்பது வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வழி என்பதால், அந்த வளாகத்தை விட்டுச் செல்லும் முன்பு அதை அர்ப்பணிப்பு செய்வதற்கு அனைவருக்கும் வழிகாட்டினார்.
15 ஜனவரி 2023 ல் யோகேஷ்வர லிங்கம் தொடங்கி, ஈஷா யோக மையம், பெங்களூருவில் அடுத்து வரவிருக்கும் பிரதிஷ்டைகளை சத்குரு அறிவித்தபொழுது எழுந்த ஆரவாரமான உற்சாகக்குரல்கள் விண்ணை எட்டின. மையத்திற்கான எதிர்காலத் திட்டங்களில் ஆதியோகி ஆலயம், லிங்கபைரவி திருத்தலம், அதனுடன் எட்டு நிகழ்ச்சிக் கூடங்கள் அடங்கியுள்ளதாக அவர் வெளிப்படுத்தினார். விரைவில் அடுத்த வருடத்தின் ஜூன் மாதத்தில் பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிகள் தொடங்குவது எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
பெங்களூரு தன்னார்வலர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் 4½ மாதங்களுக்குள் 112 அடி ஆதியோகி முழுமையடைவதற்கு பகலும், இரவுமாக வேலை செய்துகொண்டிருந்த கட்டிடக் குழுவினருக்கு சத்குரு பாராட்டு தெரிவித்தார். எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில்கொண்டு, பெங்களூரு மையத்திற்கான விஷயங்களை நிகழச் செய்வதற்காக, இயன்ற அளவுக்கு சிறப்பாக செயல்படுவதற்கு சத்குரு அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுத்தார், ஏனென்றால், “உங்களிடமிருக்கும் அனைத்தும் - உங்களது மூளைகள், உங்கள் உடல், உங்கள் கரங்கள், உங்கள் பண வசதி, உங்கள் எல்லாமும்”, அதற்குத் தேவைப்படுகிறது.
