பகிர்வுகள்

காயந்த ஸ்தானம்: கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பிலும் மதிப்பு மற்றும் கண்ணியத்தை வழங்குகிறது ஈஷா.

ஈஷா அறக்கட்டளையின் தகன சேவைகளை ஸ்வாமி அபிபாதா பொறுப்பேற்றுள்ளார். இந்த தகன சேவை அர்ப்பணிப்புகள், கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு எவ்வாறு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இயல்பான நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்து கொள்கிறார்.

தங்களின் அன்பிற்கு உகந்தவர்களை இழந்தவர்களின் வலியும், வேதனையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. இருந்தாலும், நாம் சில நேர்மறையான பங்களிப்பைக் கொடுக்க முடியும். இந்த பெருந்தொற்று காலகட்டத்தில் ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள் பல்வேறு சமூக தொண்டுகளை செய்து கொண்டிருந்தாலும், எல்லாவற்றிலும் மேலோங்கி நிற்பது ‘இறப்பில் கண்ணியம் மற்றும் மதிப்பு' கொடுப்பதுதான். ஈஷா அறக்கட்டளையானது தமிழகத்தில் 18 மயானங்களை பராமரித்து வருகிறது. தெய்வீகத் தன்மையுடன் கூடிய சுற்றுச்சூழலில், குறைந்த கட்டணத்தில் இங்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகிறது. இந்த காயந்த ஸ்தானங்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்வாமி அபிபாதாவின் மேற்பார்வையில் நடக்கிறது. இந்த பெருந்தொற்று காலக்கட்டத்தில், இந்நடவடிக்கைகள் உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை ஸ்வாமி அபிபாதா  நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

உயிருடன் இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்குமான சத்குருவின் தொலைநோக்குப் பார்வை

ஸ்வாமி அபிபாதா: ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள் கடந்த 10 வருடங்களாக கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பல மயானங்களை நடத்தி வருகிறார்கள். சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களையும் சேர்த்து மொத்தம் 18 மயானங்களை நாம் நடத்தி வருகிறோம். கோவிட்-19ன் இரண்டாம் அலை இந்தியாவைத் தாக்கியபோது, நாங்கள் சத்குருவை சந்தித்து பேசினோம். அப்பொழுது அவர், கோவிட்-19ல் இறக்கும் மனிதர்களுக்கு, அவர்களது இறப்பில் ஒரு கண்ணியத்தை வழங்குவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இவர்கள் ஒரு நல்ல சூழ்நிலையில் வழியனுப்பப்படுவதே இறந்தவர்களுக்கும் அவர்களது அன்பிற்குரியவர்களுக்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாகும்” என்று சத்குரு கூறினார்.”

சத்குருவின் தொலைநோக்குப் பார்வையை எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக பாவித்து, நாங்கள் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கோயம்புத்தூரிலுள்ள 12 காயந்த ஸ்தானங்களில் (ஈஷாவால் நடத்தப்படும் மாநகராட்சி மயானங்கள்) ஈமச் சடங்குகளை செய்யத் துவங்கினோம். ‘காயா’ என்றால் உடல், ‘அந்தா’ என்றால் இறுதி, ‘ஸ்தானம்’ என்றால் இடம். ‘காயந்த ஸ்தானம்’ என்றால் உடல் இறுதியாக முடிவடையும் இடம். எங்களுக்கு இது வெறும் சமூக சேவை அல்ல. சத்குரு சொல்வது போல, மரணம் என்பது ஒரு மனிதருக்கு நடக்கும் இறுதியான ஒன்று, அதுவும் இது ஒரே ஒரு தடவை தான் ஒருவருக்கு நடக்கும், அதனால் இதனை நாம் சரியான வழியில் கையாள உறுதி கொண்டுள்ளோம்.

பெருந்தொற்றுடன், உடன் வந்த பிரத்யேகமான சவால்கள்

ஸ்வாமி அபிபாதா: இறந்தவர்களின் உடல்கள், அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மயானங்களை வந்தடையும். நாங்கள் மூன்று மயானங்களை கோவிட் அல்லாத இறந்த உடல்களை தகனம் செய்வதற்கும், மற்ற மயானங்களை, கோவிட்-19ல் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்காகவும் பிரத்யேகமாக அர்ப்பணம் செய்துள்ளோம். நாங்கள் தினந்தோறும் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து கொண்டு, தொடர்ந்து கிருமிநாசினி பயன்படுத்தி எங்களை சுத்தம் செய்து கொள்கிறோம். இங்கு, இறந்தவர்களின் உடலுடன் உடன் வருபவர்களை கையாள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் மிகுந்த உணர்ச்சிகரமாக, எளிதில் உடைந்துவிடும் மனநிலையில் உள்ளார்கள். ஆனால் அதே சமயம், கோவிட்-19 விதிகளை அவர்களை கடைப்பிடிக்க வைப்பதில் நாங்கள் உறுதியுடனும் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நுட்பமான சூழ்நிலையை கையாள்வதற்காகவும், அனைவரும் பாதுகாப்புடன் இருக்கவும், நாங்கள் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்களுக்காக ஒரு பிரத்யேகமான வழிகாட்டல்‌ குறிப்பு வழங்கும் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, இறந்த உடல்கள் ‘காலபைரவர்’ சந்நிதியின் முன் வைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் ஒட்டுமொத்தமாக செய்யப்படுகின்றது. இதன் பிறகு, மக்கள் இறந்த உடலைத் தொடாமல், தங்கள் இறுதி மரியாதையை செலுத்துகிறார்கள். இறந்தவர்களை தகனம் செய்ய இங்கு வரும் மக்களின் மனநிலையில் அடிப்படையான ஒரு மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். முழுவதுமாக உணர்ச்சி கொந்தளிப்பான ஒரு நிலையில் அவர்கள் இங்கு வருகிறார்கள், ஆனால் அவர்கள் எப்போதுமே ஒருவித அமைதியடைந்த உணர்வுடன் திரும்பிச் செல்கிறார்கள்.

இவை மக்களைப் பற்றியது

ஸ்வாமி அபிபாதா: நமது நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலரும் நமக்கு உதவி செய்தாலும், இந்த அந்திம சடங்குகளை முன்னின்று நடத்துபவர் உறுதியான உடலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால்தான் தன் முன் வரும் தவிர்க்க இயலா சவால்களை அவரால் எதிர்கொள்ள முடியும். சில சமயங்களில், இறந்தவர்களின் உடல்களுடன் வரும் அவரது உறவினர்கள் உணர்ச்சி வசப்பட்டு, மனமுடைந்து விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில், மக்களின் உணர்வையும் கருத்தில் கொண்டு, இறுதி சடங்குகள் எந்தவொரு தடங்கலுமின்றி நடப்பது போன்ற ஒரு சூழலை நாம் மேற்கொள்கிறோம்.

மயானங்களில் பணி செய்வது குறித்து சமூகத்தில் ஒரு எதிர்மறை எண்ணம் நிலவி வருகிறது. பொதுவாக மிகச் சிலரே மயானங்களில் பணிபுரிய முன்வருவார்கள். ஆனால் இங்கே நமக்கு அப்படி  இல்லை. இங்கு பணிபுரிபவர்கள் அனைவரும், இந்த மயானங்கள் ஈஷா அறக்கட்டளையால் எடுத்து நடத்தப்படுகிறது என்பதை அறிந்த பிறகு, அவர்களே விருப்பப்பட்டு வருகிறார்கள். நாம், அவர்களது ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நலனுக்காக எல்லா விதத்திலும் உதவி செய்கிறோம். தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்தான உணவு முதலியவற்றை அவர்கள் பெற முடிகிறது. அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் மற்றும் உணர்ச்சி நிலையிலும் சமநிலையில் இருப்பதற்காக அனைவருக்கும் யோகாவும் கற்றுத் தரப்படுகிறது.

காலைப்பொழுதுகள் எப்போதும் ஏதாவது ஒரு யோகப் பயிற்சியிலிருந்து துவங்கும். இது மிகவும் முக்கியம், ஏனென்றால் மக்கள் மயானத்திற்கு வரும்போது மிகவும் மனவேதனையுடன் வருகிறார்கள்; அதுவும் அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும்போது, அவர்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்டு, அழுது, புலம்பி, கத்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த இறுதி சடங்குகளை செய்பவர் ஒரு சமநிலையில், அமைதியாக இல்லையென்றால், அது அந்த சூழ்நிலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. ஈமச் சடங்குகளுக்கு தேவையான செயல்களில் சமநிலையோடு, மனதளவில் எவ்வித பாதிப்பும் இன்றி ஈடுபட நமது மக்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுள்ளார்கள்.

சரியான சூழ்நிலையின் முக்கியத்துவம்

ஸ்வாமி அபிபாதா: இப்பொழுது நிலவும் கூடுதலான இறப்பு விகிதத்தால், நமக்கு இருக்கும் நேரம் போதுமானதாக இல்லை. காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் தொடர்ந்து நாம் பணி செய்து கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் எங்களுக்கு இரவு 8 மணிக்குப் பிறகும் அழைப்பு வரும். இறந்தவர்களின் உறவினர்கள், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட உடலை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று மறுநாள் திரும்ப எடுத்து வர முடியாததால், இறுதி சடங்குகளை உடனே செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எங்களுக்கு சுமார் இரவு 8 மணியளவில் அழைப்பு வந்தால், இறுதி சடங்குகள் எல்லாம் முடிய இன்னொரு 2 முதல் 2½ மணி நேரம் தேவைப்படும். அன்பானவர்களின் இறப்பு ஒருவரது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக பதிந்து விடுவதால், நாங்கள் இதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்கிறோம். சத்குரு சொல்வது போல, இது அவர்கள் ஆன்மீகம் நோக்கி எடுத்து வைக்கக்கூடிய முதல் படியாகக் கூட இருக்க முடியும். நாம் இறுதி சடங்குகளை அக்கறையுடன், திறன்பட செய்வதைப் பார்த்து, மக்களின் மனதில் உண்மையான ஓர் நேர்மறைத் தாக்கம் ஏற்படுவதை நாங்கள் நேரில் காண்கிறோம்.

இந்த அந்திம சடங்குகள் சத்குருவால் வடிவமைக்கப்பட்ட காலபைரவர் சந்நிதியில் நடைபெறுவதால், மக்களின் மனதிலிருந்து பயமும், வேதனைகளும் பறந்து செல்வதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. இங்கு பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஊழியர்களும் கூட தேவைப்படும் சூழ்நிலை அமைய பெரிதும் உதவுகிறார்கள்.

இடைவிடாத அர்ப்பணிப்பும், பொறுப்புணர்வும்

ஸ்வாமி அபிபாதா: நமது தன்னார்வலர்கள் அனைவரும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்புரிவதால், கோவிட்-19ன் இரண்டாவது அலை இந்தியாவை தாக்கியபோது, அவர்கள் எந்த இடைவெளியுமின்றி தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தனர். அவர்களது உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று நாம் கருதியதால், அவர்களை சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் ஊக்குவிக்க வேண்டியிருந்தது.

நமது பொறுப்புணர்வு என்பது உயிருடன் இருப்பவர்களோடு முடிந்து விடுவதில்லை, இறந்தவர்களுடனும் தொடர்கிறது என்று சத்குரு எப்போதுமே கூறுவார். நாம் இப்படி தொடர்ந்து தகனங்கள் செய்து செயலாற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம், நமது தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஊழியர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பும், பொறுப்புணர்வும் தான்.

கருணையினால் ஏற்பட்ட மாற்றம்

ஸ்வாமி அபிபாதா: தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரை காயந்த ஸ்தானத்தில் தகனம் செய்த ஒருவர் என்னுடன் இப்படி பகிர்ந்து கொண்டார்: “தகனம் எப்படி நடக்கும் என்பது பற்றி நாங்கள் எதுவுமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு, காலபைரவர் சந்நிதியின் புனிதமான சூழலில் முழுமையான பக்தி உணர்வுடன் நடக்கும் இந்த இறுதி சடங்குகளைப் பார்த்ததும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. இது எல்லாமே எங்கள் எதிர்பார்ப்பிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது.”

இந்த உணர்வு நமது வாசலைக் கடந்து வெளியேறுவோர் மனதிலெல்லாம் தவறாமல் பிரதிபலிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில், மக்களுக்கு இதை வழங்குவதில், எங்களுக்கும் ஒரு ஆழ்ந்த மனநிறைவு ஏற்படுகிறது. சத்குருவின் அருளால்தான் இது சாத்தியமாகிறது என்றே நான் நினைக்கிறேன். அது மட்டுமல்லாமல், அர்ப்பணிப்புணர்வுடன் இந்த வழியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்வது எங்களது தனிப்பட்ட ஆன்மீகப் பாதையிலும் எங்களுக்கு பெருமளவு உதவி செய்யும்.