வாழ்வியல் கேள்விகள்

அழகும் முழுமையும்: மிகச் சரியான ஒரு வாழ்வை வாழ்வது சாத்தியமா?

அழகு என்பது என்ன? வாழ்வை முழுமையாக வாழும் முயற்சியில் நாம் மிகச் சரியாக இருக்க போராட வேண்டுமா? சங்கரன்பிள்ளையில் துவங்கி, ரபீந்திரநாத் தாகூர் வாழ்க்கை நிகழ்ச்சி வரை குறிப்பிட்டு நமக்கு பதிலளிக்கிறார் சத்குரு.

மிகச் சரியாக இருப்பது என்பது ஒரு கட்டுக்கதையா?

சத்குரு: சிறிது காலம் முன்பு, ஒரு இந்திய பிரபலம் என்னிடம் இப்படி கேட்டார்: "சத்குரு, நீங்கள் மிகச் சரியான குருவா?" நான் கேட்டேன், "நீங்கள் மிகச் சரியான ஆன்மீக சாதகரா?" அவர், "நான் அவ்வாறு நினைக்கவில்லை" என்றார். பின்னர் நான், "நீங்கள் ஒரு மோசமான சாதகரா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை சத்குரு, நான் இது குறித்து உண்மையாக இருக்கிறேன். உண்மையில் இதை நான் நாடுகிறேன்," என்று பதிலுரைத்தார். அதற்கு நான், "சரி, நீங்கள் சாதகராக இருக்கும் பட்சத்தில், வாருங்கள், நாம் என்ன செய்யமுடியும் என்று பார்க்கலாம். நீங்கள் மிகச் சரியான சாதகராக மாறும்போது நானும் உங்களுக்கு மிகச் சரியான சில விஷயங்களை நிகழ்த்துவேன்" என்றேன்.

"மிகச் சரியான குரு" என்பது போன்ற கருத்து சில குறிப்பிட்ட ஆன்மீக புத்தகங்களை வாசிப்பதால் மக்கள் மனதில் புகுந்துள்ளது. வாழ்வில் மிகச் சரியானதை தேடும் எவருக்கும் வாழ்க்கை என்பது என்னவென்று தெரியவில்லை. வாழ்க்கை ஏற்கனவே பூரணத்துவத்துடன் இருந்தால், அது அடுத்த கட்டத்திற்கு நகர முடியுமா? நீங்கள் ஏற்கனவே பூரணத்துவம் வாய்ந்தவராக இருந்தால், அதற்குப் பின்னரும் நீங்கள் அடுத்த பரிணாமத்திற்கு செல்லமுடியுமா? பூரணத்துவம் என்றால் நமக்குத் தெரியாமலே சவம் போல் ஆவது என்று பொருள். இறப்பு என்பது எப்போதும் முழுமையாக நடப்பது. யாரேனும் அரைகுறையாக இறப்பதை நீங்கள் எப்போதேனும் கண்டதுண்டா? ஆனால் அனைவரும் அரைகுறையாக வாழ்கிறார்கள். வாழ்வைப் பற்றி திறந்த மனதோடு இருக்கும் எவருக்கும் நிறைவு என்பது சாத்தியமே இல்லை என்பது தெரிந்திருக்கும். நீங்கள் செய்வது  என்னவாக இருந்தாலும், அதை இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய வழி ஒன்று இருக்கும்.

ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது. சங்கரன்பிள்ளை ஒரு பிரெஞ்சு அழகியை மணந்து கொண்டார். அவர்கள் ஐரோப்பாவிற்கு திரும்பிச்செல்ல முடிவெடுத்தனர். அவர் மனைவி ஏழு பெரிய பெட்டிகள், மூன்று அடுக்கு அழகுசாதன பெட்டிகள், அத்துடன் மேலும் பல்வேறு பொருட்களையும் பயணத்திற்கு தயாராக வைத்திருப்பதை அவர் கண்டார். அவை அனைத்தையும் ஒரு பெரிய எஸ்யூவி காரில் அடுக்கி விமானநிலையம் நோக்கி வண்டியை செலுத்தினார். அங்கே அவர் அனைத்தையும் கீழே இறக்கிவிட்டு விமான நிறுவனத்தின் கவுண்டரை நோக்கி சென்றார். பின்னர் அவர் திரும்பி இவ்வாறு சொன்னார், "நாம் பியானோவையும் கூட எடுத்து வந்திருக்க வேண்டும்." அதற்கு அவர் மனைவி, "நீங்கள் இப்படி கேலியாக பேசவேண்டிய அவசியமில்லை" என்றார். அதற்கு சங்கரன்பிள்ளை, "இல்லை, நான் விமான டிக்கெட்டை பியானோவின் மீது வைத்துவிட்டு வந்துவிட்டேன்" என்றார்!!

மரணம் மட்டும் மிகச் சரியாக நிகழ்வது ஏன்

நீங்கள் விவேகத்தோடும், திறந்த மனதோடும் இருந்தால், இப்போதைவிட இன்னும் கூடுதலாக ஒன்றை செய்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதும் நினைப்பீர்கள். ஆனால் உங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் எப்போதும் நினைத்துக்கொண்டு இருந்தால், நீங்கள் ஏற்கனவே மிகவும் சரியானவர் என்று எண்ணுகிறீர்கள். மிகவும் சரியானதை நீங்கள் தேடும்போது, வாழ்பவர்களை விட இறந்தவர்களை அதிகம் மதிப்பாக பார்க்கிறீர்கள். வாழ்பவர்களை விட இறந்தவர்களை தான் மிக அதிகமான பேர் பின்பற்றுகிறார்கள். ஏனெனில் அவர்களே மிகச் சரியானவர்களாக தெரிகிறார்கள்.

ஆதியோகி உயிரோடு இருந்தபோது அவருக்கு வெறும் ஏழு சீடர்கள் மட்டுமே இருந்தனர். கிருஷ்ணர் உயிரோடு இருந்தபோது அவருக்கு ஒரே ஒரு சீடர்தான் இருந்தார். இயேசு கிறிஸ்து உயிரோடு இருந்தபோது அவருக்கு வெறும் 12 சீடர்கள்தான் இருந்தார்கள், அவர்களில் ஒருவர் அவருக்கு துரோகம் செய்தார். ஆனால் அவர்கள் இறந்த பிறகு, அவர்களை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். அதற்கு காரணம் அவர்கள் இறந்த பிறகு அவர்கள் மிகச் சரியானவர்களாகத் தோன்றுகிறார்கள்.

கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களை போற்றுவது என்பது அருமையான ஒன்றுதான். ஆனால் அவர்களை நீங்கள் பின்தொடர முடியாது. ஏனெனில் அவர்களை பின்தொடர விரும்பினால் நீங்களும் இறக்கவேண்டும். நீங்கள் இறக்க விரும்பாத பட்சத்தில், அவர்கள் மறுபடி எவ்வாறு திரும்பி வருவார்கள் என்பதை பற்றி பேச தொடங்குகிறீர்கள். அதை இரண்டாம் வருகை என்று அழைக்கிறீர்கள். அமெரிக்கா முழுவதும், "இயேசு வருகிறார்!" எனும் விளம்பர பதாகைகளைக் காண்கிறேன் - இந்தியாவில், "கிருஷ்ணர் மீண்டும் பிறப்பு எடுப்பார்" என்று மக்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் நீங்கள் இறந்தவர்களை விரும்புகிறீர்கள் என்பதுதான். அவர்கள் எவ்வளவு அருமையான மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் உயிரோடு இருந்தபோது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவு மக்கள் மீது மட்டுமே அவர்களால் தாக்கம் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் அவர்கள் இறந்தபிறகு அவர்களின் திறனைப் பாருங்கள்! சில நேரங்களில், நான் இறப்பதற்கான காலம் வந்துவிட்டது என்று கூட தோன்றுகிறது. ஏனெனில் அது உண்மையில் சிறப்பாகவே வேலை செய்வதாக தெரிகிறது!

அழகைப் பார்க்கும் கண்கள்

இறந்தவர்களைப் பற்றிய ஈர்ப்பு எதனால் என்றால், இறந்தவர்கள் எப்போதும் தவறு செய்யமாட்டார்கள் என்ற உத்திரவாதம் இருப்பதினால் தான். வாழ்பவர்கள் தவறுகள் செய்யக்கூடும். "ஓ, சத்குரு! நீங்கள் தவறு செய்யப் போகிறீர்களா?" அது பொருள் அல்ல. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். ஆனால் நிச்சயமாக நான் நிறைவானவன் அல்ல. ஏனெனில் நான் எதை செய்தாலும், நாம் இதை இன்னும் சிறப்பாக செய்திருந்திருக்கலாம் என்று தான் எப்போதும் எண்ணுவேன். ஆன்மீக செயல்முறை முழுமையும், உங்களுக்குள் நீங்கள் ஒரு நிலைக்கு வர வேண்டியதைப் பற்றியதே. நீங்கள் அமர்ந்து இருந்தாலும், சுவாசித்தாலும், உண்டாலும், உண்ணாவிட்டாலும், கண்களைத் திறந்தபடி இருந்தாலும், கண்களை மூடி இருந்தாலும், அனைத்தும் அழகாக மாறும் ஒரு நிலை அது. அனைத்தும் அழகாக மாறுவது வெளியில் உள்ளவை மாற்றம் பெறும் காரணத்தினால் அல்ல. அதற்கு காரணம் வெறுமனே நீங்கள் "இப்படி அல்லது அப்படி" என்று இல்லாமல் இருக்கிறீர்கள், எனவே நீங்கள் "இது அது" என்று எதையும் பார்ப்பதில்லை. உயிர் அதன் அழகான பல வழிகளிலும் வெளிப்படுவதை நீங்கள்‌ பார்க்கிறீர்கள்.

அனைத்தும் சமமான அளவில் அழகானவை. "அப்படியென்றால் அழகின் பொருள் என்ன? இங்கு எதுவும் அழகற்றதாக இல்லாதபட்சத்தில் அழகு என்பது எவ்வாறு இருக்க முடியும்?" அது ஒரு நிலையிலான வாழ்க்கை. அந்த நிலையில் ஒரு வரையறையைப் பொறுத்து வாழ்க்கை நிகழ்கிறது. பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் மற்றும் தொடுதல் என்ற புலன்களின் கட்டுப்பாட்டிற்குள் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தால், பின்னர் அனைத்திற்கும் ஒரு வரையறை தேவைப்படுகிறது. ஏதோ ஒன்று சுவையானதாக இருக்க வேண்டுமெனில், மற்றொன்று சுவையற்றதாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில், வேறு ஏதோ ஒன்று மகிழ்ச்சியற்றதாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று அழகானதாக இருக்க வேண்டுமெனில், வேறொன்று அழகற்றதாக இருக்க வேண்டும்.

ஆனால் உங்கள் அனுபவத்தில் நீங்கள் இதுவாகவோ அல்லது அதுவாகவோ இல்லாதவராக ஆகும்போது, திடீரென அனைத்தும் அழகானதாக மாறிவிடும். ஏனெனில் அனைத்தும் அவ்வாறு தான் இருக்கிறது. இல்லையெனில், உங்கள் பாரபட்சத்தைப் பொறுத்து எது அழகானது, எது அழகற்றது என்று நீங்கள் ஒரு வரையறைக்குள் தான் வந்து சேர்கிறீர்கள். மனிதர்களுக்குள்ளேயே, வெவ்வேறு கலாச்சாரங்களில் வெவ்வேறு வகையான மனிதர்களை அழகானவர்களாக பார்க்கிறார்கள்.

தாகூர் எவ்வாறு அழகைக் கண்டார்

நோபல் பரிசு வென்ற கவிஞர் ரபீந்திரநாத் தாகூருக்கு இவ்வாறு நிகழ்ந்தது. உலகில் வெகு சிலரே கவிதையை புரிந்துகொண்டு, அதை ரசிக்கத் தெரிந்தவர்கள். கற்பனை நிறைந்த வார்த்தை விளையாட்டுகளிலும் கருத்து்களிலும் வெளிப்பாடுகளிலும் உள்ள அழகைக் காண்பதற்கு வெகு சிலரால் மட்டுமே முடியும். ஒரு கவிஞருக்கு நோபல் பரிசு கிடைப்பது என்பது மிக அரிதான ஒன்று. ஆனால் ரவீந்திரநாத் தாகூர் தன் கவிதைகளுக்காக நோபல் பரிசு பெற்றார். இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவர், அது நீங்கள் கற்பனை செய்யக் கூடியவைகளிலேயே மிக அழகான ஒரு பாடல்.

ஒரு கவிஞராக இருக்கும் காரணத்தினால், அவர் தன் மனதிலும் தன் வார்த்தைகளிலும் அழகை பிடித்து வைக்கவேண்டும் என்று விரும்பினார். அவர் அழகை மிக விரிவான வகையில் படித்தார். அழகின் தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களில் அவர் ஈடுபட்டார். 1000 வருடங்களுக்கு முன்பு ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்ய லஹரியில் இருந்து ஒரு கிரந்தம் ஒருநாள் அவர் கையில் கிடைத்தது. சௌந்தர்ய லஹரி என்பதற்கான உண்மையான அர்த்தம் "அழகின் அலைகள்." ஒரு நதிக்கரையோரம் உள்ள ஒரு சிறு குடிலில் அவர் தங்கியிருந்தார்.

அது ஒரு பௌர்ணமி இரவு. ஒரு சிறிய மெழுகுவர்த்தியின் உதவியோடு அவர் சௌந்தர்ய லஹரியை வாசித்துக் கொண்டிருந்தார். அழகு என்ற கருத்தைப் புரிந்துகொள்ள அவர் முயற்சி செய்துகொண்டிருந்தார். அவரால் எந்த நிலைக்கும் செல்ல இயலவில்லை. எனவே அவர் எரிச்சலடைந்து மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தார். மெழுகுவர்த்தியை அணைத்த அந்த தருணத்தில், நிலவின் ஒளி திறந்திருந்த கதவு மற்றும் சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்தது. அழகு அங்கேயே, அவர் கண் முன்னே இருந்தது. வேகமாக அந்த அறையை விட்டு வெளியே சென்று பார்த்தார். அந்த வனப்பகுதி, நதியில் தெரிந்த பிரதிபலிப்பு என அனைத்தும் அதிசயத்தக்க வகையில் அழகானதாக இருந்தன. அந்த நாள் முதல் அழகை தேடுவதை அவர் விட்டுவிட்டார். ஏனெனில் சட்டென அவரது கண்கள் திறந்து கொண்டன. அவர் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே பார்க்கத் தொடங்கினார்.

எல்லா இருமை பண்புகளும், ஒன்றை அழகுடையதாகவும் - அழகற்றதாகவும், நன்மையாகவும் - தீமையாகவும், உயர்வாகவும் - தாழ்வாகவும் பார்ப்பதினால் தான் உருவாகிறது. நீங்கள் அனைத்தையும் உள்ளது உள்ளபடி பார்த்தால் அனைத்தும் நுணுக்கத்தோடும் அழகோடும் இருப்பது புலப்படும்.