சத்குரு எக்ஸ்குளூசிவ்

விஷுத்தி:
நீலத்தின் புதிரான ஆற்றல்

ஏழு முக்கியமான சக்கரங்களுள், அநேகமாக விஷுத்தி மிகப் புதிரான ஒன்றாக இருக்கிறது. இது ஆதியோகியின் உருவகத்தில் அதிகமாக கவனம் ஈர்க்கும் மையப்புள்ளியாக இருக்கும் நிலையில், நமது யோகப் பயிற்சிகளில் எதுவும் இந்த சக்தி மையத்தின் மீது கவனம் குவிக்கப்படாமல் இருப்பதாக தோன்றுவது எப்படி? அதனை அறிந்துகொள்வதற்கு மேலும் வாசியுங்கள்.

சத்குரு: முக்கியமாக விஷுத்தி என்றால், ஒரு வடிகட்டி என்பது பொருள். விஷுத்தியானது, வழக்கமாக நாம் தாண்டிச் செல்லும் ஒரு பரிமாணமாக இருப்பது ஏனென்றால், விஷுத்தியில் இருந்து செயல்படுவதன் ஒரு அம்சம் என்னவென்றால், அது மாந்திரீகத்தில் உங்களைத் திறனாளியாக்குகிறது. அடிப்படையில் மாந்திரீகம் என்பது, உங்களுடைய சக்திகள் விஷுத்தியில் மையம் கொண்டு, அதன்மீது போதிய அளவுக்கு நீங்கள் கைதேர்ந்திருந்தால், மற்றவர்கள் உங்களை ஒரு சூப்பர் மனிதராக பார்க்க வைக்கும் வகையில், வித்தியாசமான நிலையிலான ஒரு திறனுடன் நீங்கள் இயங்கத் தொடங்குகிறீர்கள். ஆனால் இங்கே நிகழ்ந்திருப்பது என்னவென்றால், இயங்குவதற்கான மற்ற வழிகள் உங்களுக்கு கிடைத்துள்ளது.

ஆதியோகியின் பல பெயர்கள், அவரது விஷுத்தியுடன் தொடர்புடையதாக இருக்குமளவுக்கு, பல வழிகளிலும் அவர் அதன் ஒரு பிரதிநிதியாக இருக்கிறார். விஷுத்தியின் ஒட்டுமொத்த உருவமாகவே பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் விஷகண்டன், நீலகண்டன் போன்ற மற்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். ஆதியோகி அவ்வாறு அழைக்கப்படுவதற்கு, அதுதான் அவரது ஒரே தன்மை என்பது காரணம் அல்ல, ஆனால் மக்கள் அவர்களது புரிதலைக் கடந்திருப்பது என்னவோ, அதைத்தான் அங்கீகரிக்கின்றனர்.

இது இப்படி உள்ளது: ஏசுநாதர் என்று கூறினால், அவர் என்னவெல்லாம் செய்தார் என்று நமக்குத் தெரியாது, அவர் என்ன கூறினார், என்ன செய்தார் என்பதை அவர்கள் பதிவு செய்யாமல் இருக்கலாம், ஆனால் ஏசு என்று கூறினாலே, முதல் விஷயமாக “அவர் நீரின் மீது நடந்தார்” என்றுதான் மக்கள் நினைப்பார்கள். அதேபோல், மக்கள் சாத்தியமில்லாததாக அல்லது வழக்கமான திறனைக் கடந்ததாகக் கருதிய விஷயங்களை, ஆதியோகி அல்லது சிவன் செய்ததால் பிரபலமாக இருக்கிறார். அவரது விஷுத்தி திறன்களுக்காக மக்கள் அவரை அங்கீகரிக்கத் தொடங்கினார்கள்; அவரது மற்ற திறன்கள் மக்களின் கவனத்தை எட்டாத அளவுக்கு மிகவும் சூட்சுமமாக இருந்தன.

மக்கள் அவர்களது புரிதலில் சாதாரணமானது என்று கருதியவற்றைக் கடந்த, வேறு ஏதோவொன்றை எதிர்பார்த்தனர் – வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், அவர்கள் “விசித்திரமான” ஏதோவொன்றை எதிர்பார்த்தனர். விஷுத்தி சாதனாவுக்கு மக்களை உட்படுத்தினால், “விசித்திரமானவர்கள்” என்று மற்றவர்களால் புரிந்துகொள்ளப்படும் பல தனிமனிதர்கள் இருப்பார்கள்.

ஒரு சமூகத்தில், குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களது மூக்கைத் துண்டிப்பதால் அது பிராணவாயுவின் கிரகிப்பை 22% அதிகப்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு “புனித பாரம்பரியம்” இருந்ததாக வைத்துக்கொள்வோம். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் ஒரு நபர் நன்கு பொருந்திய மூக்குடன் தோன்றினால், அவர் ஒரு விசித்திரமான நபராகத்தான் பார்க்கப்படுவார்.

ஒருவரது விஷுத்தி செயல்பாட்டுக்கு வந்தால், சாதாரணம் என்று மற்றவர்கள் கருதுவதைக் கடந்த சக்தியின் திறன்களை அது வெளிப்படுத்துகிறது. நம்மைச் சுற்றிலும் சூழ்நிலைகளில் பரிமாற்றம் செய்வதற்கும், மாற்றம் ஏற்படுத்துவதற்கும், விஷுத்தியின் ஒரு குறிப்பிட்ட திறமை அத்தியாவசியமானது. ஆனால், ஒருவர் விஷுத்தியில் ஒருமுனைப்பாக இருந்தால், சமூகக் கட்டமைப்புக்குள் பொருந்துவதற்கு சிறிது கடினமாக உள்ளது.

ஆதியோகியின் கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள்: சில நேரங்களில் அவர் மிகவும் பிரகாசமாக, பிரம்மாண்டமாக, ஆண்தன்மையின் ஒட்டுமொத்த உருவகமாக இருக்கிறார்; வேறு சில நேரங்களில் அவர் விசித்திரமாக, பித்தனாக, மற்றும் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறார். மக்கள் அவரை விஷுத்தியில் பார்த்தபோது, அவர் விசித்திரத்திலும் விசித்திரமாக, எரியூட்டும் மயானத்தில் இருந்தார். அவரைச் சுற்றிலும் கணங்களும், எல்லாவிதமான உயிர்களும் இருந்தன, ஏனென்றால் விஷுத்தி செயல்படத் துவங்கும் கணத்திலேயே, உடலற்ற உயிர்கள் இயல்பாகவே உங்களை நோக்கி நகரும்.

தியானலிங்கத்தை நாம் பிரதிஷ்டை செய்துகொண்டிருந்தபோது, நான் மக்களை வெவ்வேறு சக்கரங்களுக்காக தயாரித்துக்கொண்டிருந்தேன், ஆனால் விஷுத்தி, என்னால் ஒருவரையும் பயிற்றுவிக்கமுடியாத ஒரு அம்சமாக இருந்தது, ஏனென்றால் எங்களுக்கு இருந்த நேரக் கட்டுப்பாட்டினால் ஒரு விரைவான மாற்றத்துக்குத் தேவைப்பட்ட போதிய “விசித்திரமான” ஒருவரும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, விஷுத்தியில் ஒரு குறிப்பிட்ட நிலைக்கான வலிமையடைந்து, ஒருவிதமான உடலற்ற உயிராக இருந்த யோகியைப் பயன்படுத்திக்கொள்ள நான் தீர்மானித்தேன்.

அந்த இரவில் ஏறக்குறைய 400 பேர் கூடியிருந்தனர். நாங்கள் செயல்முறையை துவங்கிய கணமே, ஒரு குறிப்பிட்ட நாகப்பாம்பு இந்தக் கூட்டத்தில் யாரும் கவனிக்காதவாறு எப்படியோ ஊர்ந்துவந்து, ஏதோ ஒரு விஷயம் செய்வதற்காக நான் செய்திருந்த ஒரு சிறிய குழியில் அமர்ந்துகொள்ள வந்தது. அவன் என்னுடன் இலவசமாக பயணிப்பதற்கு முயற்சிப்பதாக எனக்குத் தோன்றியது. நான் அவனை எடுத்து, ஒரு பைக்குள் இட்டு, ஒருவரை அழைத்து, அவனை காட்டுக்கு எடுத்துச் சென்று அங்கேயே விட்டுவிடுமாறு கூறினேன். அவர்களும் நான் கூறியபடி செய்தனர். அடுத்த சில மணி நேரங்களில், மீண்டும் அவன் அதே குழியில் அமர்ந்திருந்தான். அவன் அங்கிருப்பதை விரும்பினான், ஏனென்றால் அங்கிருந்த சக்தி சூழலை அவன் தனக்கான வாய்ப்பாகப் பார்த்தான்.

உங்களுடைய விஷுத்தி செயலாக்கத்தில் இருந்தால், நீங்கள் உணர்ச்சியின் இனிமையில் நிலைத்திருக்கலாம், மனதின் பகுத்தறிதல் உச்சத்தில் இருக்கலாம், உலகத்தில் நீங்கள் விரும்பியவாறு செயல்படும் அதே நேரத்தில் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கலாம்.

நான் நீண்ட நேரங்களுக்கு தியானம் செய்யும் வழக்கத்தில் இருந்தபோது, சில பொழுதுகளில் நான் சாமுண்டி மலை அல்லது மைசூருவுக்கு அருகில் இருந்த அலோகா என்றழைக்கப்பட்ட ஒரு சிறிய காட்டுக்குச் செல்வதுண்டு. மதிய நேரங்களில் தொடர்ந்து சில மணி நேரங்கள் நான் தியானம் செய்துவிட்டுக் கண்களைத் திறக்கும்போது, எனக்கு முன்பாக 12 ல் இருந்து 15 நாகப்பாம்புகள் அமர்ந்து, ஒரு இலவச சவாரிக்காகக் காத்திருக்கும். விஷுத்தி செயல்படும் கணமே, அவைகள் அங்கே இருக்கும். ஆதியோகியின் கழுத்தைச் சுற்றியிருக்கும் நாகப்பாம்பின் குறியீடு இதுதான்: அவரது கழுத்தை விட்டு நாகப்பாம்பு நீங்காத அளவுக்கு, அவருடைய விஷுத்தி வீரியமாக உள்ளது.

நாம் வழக்கமாக பெரும்பாலான மக்களுடன் விஷுத்தியைத் தொடாமல், தாண்டிச்செல்வது ஏனென்றால், உச்சபட்ச உணர்தலைத் தேடுபவர்கள் இதற்குள் செல்லத் தேவையில்லை. ஆனால் உயிரின் தொழில்நுட்பங்களை அறிந்துணர விருப்பம் கொள்பவர், அறிந்துணர்ந்ததை மற்றவர்களுக்கு பரிமாறுவதற்கு விரும்புபவர், எதிர்காலத்துக்காக ஏதோ ஒருவிதமான ஒரு கொள்கலனாக அல்லது களஞ்சியமாக மாற விரும்புபவர், அந்த ஒருவர் இது அனைத்துக்குள்ளும் செல்லவேண்டும். வெறுமனே உணர்தலை விரும்பும் ஒருவருக்கு, இந்த விஷயங்கள் எதுவும் தேவையில்லை. அது மிகவும் எளிது; உங்கள் தலையின் மீது ஒரு தட்டலில், அது நிகழவேண்டும்.

விஷுத்தி மீது கவனம் குவிக்கும் ஒருவர், ஒரு நீல ஒளியுடலை உருவாக்குவார். இதனால்தான், இந்தியாவில் கடந்தகாலத்தின் மிக செயலூக்கமான, திறன் மிகுந்த உயிர்கள் எப்போதும் நீலமேனியராக விவரிக்கப்பட்டுள்ளனர். அவர்களது தோலின் நிறம் நீலமாக இருந்தது என்பது இதற்கான காரணமல்ல, ஆனால் இந்த உயிர்கள் நீலவண்ண ஒளியுடலுடன் இருந்ததை விழிப்புணர்வு மிகுந்தவர்கள் கண்டனர். இந்தியாவில், நீலவண்ண உடல் கொண்டவர்களைப் பற்றி, பல கதைகள் உள்ளன. உணர்ச்சியின் இனிமை மற்றும் மனதின் பகுத்தறிவுடன் கூடிய செயல்பாடு அல்லது ஆற்றலை, நீல உடலானது குறியீடாகக் கொண்டுள்ளது.

உணர்ச்சியின் இனிமை மிக அதிகமாக இருந்தால், நீங்கள் உலகத்துடன் ஈடுபடுவதற்கு விரும்பாமல் போகலாம்; நீங்கள் இருக்கும் நிலையிலேயே அற்புதமாகத்தான் இருக்கிறீர்கள். மனதின் பகுத்தறிவு அல்லது காரண அறிவு, புரிந்துணர்வின் முழுமையான தெளிவின் புள்ளியை அடைந்துவிட்டால், பிறகு உலகத்தில் நீங்கள் ஈடுபடுவதற்கு விரும்புவதில்லை. நீங்கள் தனித்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எவருடனும், எதுவும் செய்வதற்கு இல்லை.

விஷுத்தியானது, அனாகதா மற்றும் ஆக்ஞாவுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. உங்களுடைய விஷுத்தி செயலாக்கத்தில் இருந்தால், நீங்கள் உணர்ச்சியின் இனிமையில் நிலைத்திருக்கலாம், மனதின் பகுத்தறிதல் உச்சத்தில் இருக்கலாம், உலகத்தில் நீங்கள் விரும்பியவாறு செயல்படும் அதேநேரத்தில் அதனால் பாதிக்கப்படாமல் அல்லது தொடப்படாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு இருப்பின் வழியில், நீங்கள் வித்தியாசமான ஒரு விதத்தில், குறிப்பாக யாருடனும் அல்லது எதனுடனும் இல்லாத ஒரு காதல் உறவில் இருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் விரும்பும்படி உருவாக்கிக்கொள்வதற்கு, அவைகள் முழுவதுமாக உங்களுடையதாகவே இருக்கிறது.