லிங்க பைரவி

தெய்வீகப் பெண்தன்மையை வரவேற்கும் தமன்னா பாட்டியா

இந்தியத் திரைவானில் மின்னும் ஒரு தாரகையாகிய தமன்னா பாட்டியா, லிங்கபைரவி தேவியுடன் ஒரு புனிதப் பிணைப்பினை உருவாக்கும் தருணத்தில், அவர் உணர்ந்த இதயபூர்வமான கணங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார்.  திரைவெளிச்சத்திலிருந்து விலகி நின்று, அவரது தினசரி வாழ்க்கையின் லயத்துக்குள் புனிதத்தன்மையின் அம்சத்தை இணைக்கும் தேவி யந்திரத்துடன் அவர் உருவாக்கும் ஒரு ஆழமான தொடர்பு குறித்த ரம்மியமான அத்தியாயத்தை பகிர்ந்துகொள்கிறார். திரையில் அவரது உருமாறல்களுக்காகக் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை, திரைக்குப் பின் தனது இல்லம் மற்றும் வாழ்க்கைக்குள் தெய்வீகப் பெண்தன்மையை வரவேற்கிறார்.

தமன்னா பாட்டியா: நான் இளவயதாக இருந்தபோது, கணபதி சிலைகளை சேகரிப்பது வழக்கமாக இருந்தது, ஏனென்றால் எனக்கு அவைகள் மிகவும் விருப்பமானவை. எனக்கு நினைவு தெரிந்தது முதல், எனது தாய் எப்போதும் சடங்குகள் செய்துகொண்டு, தேவியின் பரம பக்தையாக இருந்துவருகிறார். ஆனால் நான் ஒருபோதும் பூஜை அறைக்குள் சென்றதில்லை; நான் எப்போதும் எனது வேலையில்தான் மூழ்கி இருந்தேன். வீட்டிற்கு வரும்போதுகூட, நான் ஒரு குழந்தைபோல், பெரும்பாலும் பிரசாதத்துக்காக, அதன் அற்புதமான சுவைக்காகக் காத்திருப்பேன்.

பின்னாளில், திரைப்படங்களில் நடிகைகளை மக்கள் மிகைபடப் போற்றுவதை நான் உணர்ந்தேன். பெண்தன்மையின் இந்த மிகையான வாழ்க்கைப் படிமங்களை நடிப்பதற்கு நாங்கள் எதிர்பார்க்கப்படுகிறோம். இந்த உணர்தல் எனக்குள் கேள்வி எழுப்பியது, அதாவது பெண்தன்மையின் படிமம் என்னவென்பதாவது எனக்குத் தெரிந்திருக்கிறதா?

ஈஷா யோக மையத்திற்கு நான் வந்து, தியானலிங்கத்தை உணர்ந்தபோது, அது என்னை அமைதிப்படுத்தியதாக உணர்ந்தேன். ஆனால் லிங்கபைரவிக்கு வரும்போது, அது அளவுகடந்த உற்சாகமாக உள்ளது. அது வழங்கும் இந்த விதமான சக்தி, மற்றும் இந்த அதிர்வானது மிகவும் பற்றிப்படருவதாக உள்ளது. அதில் இதம், அன்பு, மற்றும் உணர்ச்சித்துடிப்பு இருக்கும் காரணத்தால், நான் எப்போதும் அந்த விதமான உற்சாகத்தை நாடினேன்.  எனக்கு அதை உணர்வதற்கான வாய்ப்பு ஈஷாவில் கிடைத்தபோது, லிங்கபைரவி தேவியை வீட்டிற்கு அழைத்துவரவேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது. அப்போதுதான், ஒரு லிங்கபைரவி யந்த்ரா மூலம் பெண்தெய்வத்தையே வீட்டிற்கு வரவேற்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது.

இதில் உண்மையிலேயே அழகான விஷயம் என்னவென்றால், அது உங்கள் வீட்டிற்குள் பெண்தெய்வத்தை அழைத்துவருவதைக் குறித்தது மட்டுமல்ல; உங்களையும், உங்கள் வீட்டையும் ஒரு கோவிலாக உருவாக்குவதையும் குறித்தது. தீட்சையளிப்பது, மறைபொருளான ஒன்றுதான் என்றாலும், செயல்முறைகள் அனைத்தும் நமக்கு விளக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சடங்கும், அதற்குப் பிறகு ஒரு உணர்வானுபவமும்கூட நமக்கு வழங்கப்படுகிறது. நமது கலாச்சாரத்திலிருந்து பலன் பெறவும், அது வழங்குவதைக் குறித்த ஒரு ஆழமான புரிதலைப் பெறவும் விரும்புகின்ற, குறிப்பாக நமது தலைமுறைக்காக, சத்குருஜி எப்போதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்குவதுதான், அவரிடத்தில் நான் விரும்பும் விஷயம்.

உண்மையிலேயே அழகான விஷயம் என்னவென்றால், அது உங்கள் வீட்டிற்குள் பெண்தெய்வத்தை அழைத்துவருவதைக் குறித்தது மட்டுமல்ல; உங்களையும், உங்கள் வீட்டையும் ஒரு கோவிலாக உருவாக்குவதையும் குறித்தது.

உதாரணத்துக்கு, சத்குரு அடிக்கடி குறிப்பிடுவதைப்போல், லிங்கபைரவி தேவியின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வது நமக்கு எளிதாக இருக்கும்படி, அது ஒரு விதமான தொழில் நுட்பமாக, ஒரு இயந்திரமாகக்கூட இருக்கிறது. தேவி யந்திரத்துடன் என்ன செய்வது, ஏன் செய்வது, மற்றும் எப்படிச் செய்வது என்பதெல்லாம் என்னை மிகவும் வளப்படுத்துவதாக இருந்தது. எதனையும் கட்டுப்படுத்த முயற்சிக்காமல், ஒரு குறிப்பிட்ட பலனைப் பெறுவதற்கு, வழிமுறையைப் புரிந்துகொண்டு, பின்பற்றுவது அதிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும்தான் என்பது இல்லாமல், லிங்கபைரவி தேவியின் அருளை நீங்கள் எப்படி வெற்றிகொள்ளமுடியும் என்ற செயல்முறையைப் புரிந்துகொள்வதனால், ஒவ்வொரு மனிதருக்கும் இது கிடைக்கிறது என்பதே ஒரு அழகான விஷயம்தான்.

லிங்கபைரவி யந்த்ரா குறித்து நான் நேசிப்பது என்னவென்றால், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றவுடன், லிங்கபைரவி தேவியின் அருளை ஒவ்வொருவருடனும் பகிர்ந்துகொள்ளமுடிகிறது. அதே நேரத்தில், அந்த சக்தி வடிவத்துடன் நாம் ஒரு தனிப்பட்ட தொடர்பும் வைத்திருக்கிறோம். இந்த பன்முகத்தைப் புரிந்துகொள்வதுதான் எனக்குள் அதிக ஆர்வமூட்டுவதாக நான் நினைக்கிறேன்.

இறுதியாக, என்னுடைய லிங்கபைரவி தேவிக்கு ஒரு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அபிஷேகம் செய்தபிறகு, எனக்கு ஏற்படும் சக்தி எழுச்சி இணையற்றது. எனக்குள் மேலும் உந்துதல் ஏற்படுவது ஏனென்றால் பெண்தெய்வத்தை வீட்டுக்கு அழைப்பது மட்டுமல்லாமல், அவளது தன்மைகளை முழுவதுமாக உள்வாங்கி, அவளாக மாறுவதற்கான நேரம் வந்திருப்பதாக நான் எண்ணுகிறேன், ஏனென்றால், நாம் எதனை உருவகப்படுத்துகிறோமோ, அதுவாகவே மாற விரும்புகிறோம். நான் அப்படிக்கூறலாம் என்றால், என்னால் தேவியின் தன்மைகளை உள்வாங்கி, அவளின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கமுடியும் என்று நம்புகிறேன்.

சடங்கு செய்யும் ஒரு நபராக நான் இருப்பேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அது சடங்குக்கான சடங்கு குறித்தது அல்ல. ஆரம்பத்தில் சடங்குசார்ந்த நபராக இல்லாத என்னைப் போன்ற மக்களுக்கு, சடங்கு என்பது ஒன்றைச் செய்வதற்கான ஒரு வழிமுறையைப் புரிந்துகொள்வதைக் குறித்தது. ஒரு சாதனத்தை நாம் பயன்படுத்தும்போது, எப்போதும் பின்பற்றவேண்டிய ஒரு செயல்முறை உள்ளது, அதைப் போன்றதுதான் இது, சில நேரங்களில், செயல்முறையைப் பின்பற்றுவது மட்டுமே போதுமானது, ஏனென்றால் அதுவே நீங்கள் விரும்பும் பலனை வழங்கிவிடுகிறது.

அதைப்போன்றே, இந்த சடங்குகள் பற்பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருந்த அறிவியல்பூர்வமான வழிமுறைகளாக நான் உணர்கிறேன். சத்குரு ஜி, மிகவும் எளிதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும், செய்யக்கூடியதாகவும், அனைவருக்கும் அவைகள் கிடைக்குமாறும் செய்கிறார். மேலும், தேவியின் அருள் அனைவருக்கும் கிடைக்கவேண்டிய ஒரு அற்புதம்.

பெரும்பாலும் நான் அறிந்திராமலேயே, தேவியின் சக்தி எப்போதும் என் வாழ்க்கையில் இருந்துவருவதாக நான் எண்ணுகிறேன். ஒவ்வொரு முறை நான் லிங்கபைரவி அல்லது வேறு எந்த தேவியின் சக்தி மையத்துக்குச் சென்றாலும், அங்கிருந்து திரும்பும்போது, நான் அதுவரை செய்வதற்கு அச்சம் கொண்டிருந்த விஷயங்களைச் செய்வதற்கான சக்தியுடனும், துணிவுடனும்தான் எப்போதும் திரும்பி வந்துள்ளேன். அவள் பயத்தை அகற்றுவதாக நான் உணர்கிறேன் – தோல்வியின் பயம், மரணத்தின் பயம், வாழ்க்கையின் பயம், மற்றும் எல்லாவற்றிலும் பயம். எத்தனையோ முறைகள் அது எனக்கு நிகழ்வதை நான் கண்டுள்ளேன். அந்த விதமான சக்தியின் இடவெளியில் இருப்பதால், திடீரென்று எனது பயத்திலிருந்து மீண்டுவரும் திறனை அது எனக்குள் உருவாக்குகிறது. உண்மையில் அது இதைச் செய்வதைத்தான்  நான் விரும்புகிறேன் : அது பயத்தை அகற்றுகிறது.

அளப்பரிய அன்பு மற்றும் அருளை அனுபவிப்பதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி – தேவி பிரவாகமாகப் பொழிகிறாள்.

உண்மையிலேயே சுவாரஸ்யமாக நான் கண்டது என்னவென்றால், தேவியானவள், தான் நன்கு கவனித்துக்கொள்ளப்படும் ஒரு இடத்தில் எப்போதும் இருப்பாள், இல்லையென்றால் இருக்கமாட்டாள். நாம் அனைவரும்கூட கவனித்துக்கொள்ளப்படும் ஒரு இடத்தில் இருப்பதைத்தான் விரும்புகிறோம். ஆகவே, தேவிக்கான அந்த சூழலை உருவாக்குவது என்பது மிகவும் அழகானது, ஏனென்றால் அதனை நீங்கள் செய்யும்போது, உங்களுக்கும்கூட நீங்கள் அந்த சூழலை உருவாக்கிக்கொள்கிறீர்கள்.

ஒரு பெண்ணாக இருப்பதென்பது பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டுவரத் தேவைப்படுவதாக நான் எண்ணுகிறேன். ஆனால் நான் வீட்டில் எப்போதும் குழந்தை போலத்தான் உணர்ந்திருந்தேன். இப்போது, ஒரு லிங்கபைரவி எனக்கு இருக்கும் நிலையில், நான் முழு பெண்தன்மையை உணர்வதுடன், அந்தப் பொறுப்பை நான் கையிலெடுக்கப்போகிறேன், மற்றும் அது என் வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கப்போகிறது. அது எப்படி செயல்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் தேவியுடன் தொடர்பில் இருப்பதாகவே உணர்கிறேன்.

அளவிடற்கரிய அன்பு மற்றும் அருளை அனுபவிப்பதற்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றிருக்கிறேன் – தேவி பிரவாகமாகப் பொழிகிறாள். எனது வாழ்க்கையில், எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்காத விஷயங்கள்கூட எனக்கு எப்போதும் கிடைத்துள்ளன, மற்றும் அது தேவியின் அருளால்தான் நிகழ்கிறது என்பதை நான் அறிகிறேன்.