ஜனவரி 20, 2024 அன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற "Soak in Ecstasy of Enlightenment with Sadhguru" என்ற நிகழ்ச்சி, மற்றவர்களின் வாழ்க்கையை ஆழமாகத் தொடுவதற்கு போதுமான மக்கள் தங்களை அர்ப்பணிக்கும்போது கிடைக்கும் சாத்தியம் என்னவென்பதை உணர்த்தும் அற்புதமான ஒரு நினைவூட்டலாக அமைந்தது.
இந்நிகழ்ச்சிக்கான அறிவிப்பு எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில்தான் வாட்ஸப் மூலம் எங்களை வந்தடைந்தது. இந்த அறிவிப்பு உள்நிலை மாற்றத்திற்கான மகத்தான வாய்ப்பைக் கொண்டுவந்தது. “2024 ஜனவரி மாதம் சத்குரு சிட்னிக்கு வருகிறார் . மேலும் விவரங்கள் வருகிறது. தொடர்ந்து இணைந்திருங்கள்” என்று அறிவிக்கப்பட்டது. இனிவரும் மாதங்களில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேலும் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார் அறிவிப்பாளர்.
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் , சிட்னியில் உள்ள ஒரு சந்திப்பு அரங்கம் பெரும் ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தது. ஒரு ஈஷாங்கா தன்னார்வலர் அந்த செய்தியை தெரிவித்தபோது, அரங்கம் முழுவதும் மகிழ்ச்சியில் அதிர்ந்தது. “Soak in Ecstasy of Enlightenment” என்ற இந்த 1 நாள் உயர்நிலை அனுபவ நிகழ்ச்சி நடைபெறுவதற்கு, எங்களது நகரம் தேர்வுசெய்யப்பட்டதும், எங்களைப் பொறுத்தவரை ஒரு மைல்கல்லாக அமையுமென்பது மக்கள் வெளிப்படுத்திய உற்சாகத்தின் மூலம் தெளிவாக தெரிந்தது.
இந்த நிகழ்ச்சியின் தனித்துவமும், சத்குருவின் ஆழமிக்க தீவிரமும் இணைந்து, ஒரு தர்க்கரீதியான செயல்முறையாக இல்லாமல் உணர்வுப்பூர்வமான ஒன்றாக இந்நிகழ்வு மாறியது. நம்முடன் வாழும் குருவின் முன்னிலையில் ஆன்மிகத்தில் திளைப்பதற்கான அற்புத நாளாக இது அமைந்தது. சக்திவாய்ந்த தியானத்தின் மூலம் பரவசத்திற்குக் கொண்டுசென்று, உள்நிலையில் உன்னத நிலைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பாக இது அமைந்தது
தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில், இந்த அனுபவத்தை முடிந்தவரை பலருடன் பகிர்ந்துகொண்டு, பலருக்கும் இதனைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்குள் இருந்தது. 201ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் மெல்பொர்னில் நடைபெற்ற சத்குரு நிகழ்ச்சிக்கு 5000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர், இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க தற்போது இலக்கை நிர்ணித்தோம். இது சவாலாகத் தோன்றினாலும், எங்கள் உறுதி அசைக்கமுடியாததாக இருந்தது. அதிகமான செயல்கள் செய்ய வேண்டியிருந்தது, அதைச் செய்ய நாங்கள் தயாராகவே இருந்தோம்.
தன்னார்வலர்களின் இடைவிடாத முயற்சிகள் தொடர்ந்தன. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு தன்னார்வலர்களின் ஓய்வு நேரமும் சத்குருவின் ஆஸ்திரேலிய வருகைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. நகர் முழுவதும் எண்ணற்ற அலைபேசி அழைப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்தன. நகரின் மையப் பகுதிகள் நடனமாடும் flashmobsகளுடன் காட்சி அளித்தது , மேலும் நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டிகள் நாடு முழுவதும் காணப்பட்டன. சமூக நிகழ்வுகளில் பிரத்யேகமான ஸ்டால்களை அமைத்து, தன்னார்வலர்கள் தகவல்களை வழங்கினர். இந்த தனித்துவமான நிகழ்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வாய்ப்பும் பயன்படுத்தப்பட்டது.
பெரும்பாலான தன்னார்வலர்களின் வீடுகள், மாலையிலும் வார இறுதி நாடுகளிலும் தன்னார்வத்தொண்டுக்கான மையங்களாகவே மாறி இருந்தன. குடும்ப நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் நேரடியான உரையாடல்கள் மூலமாகவும், தங்கள் உள்நிலை மாற்றத்தின் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதன் மூலமாகவும் செய்தி பரவியது. உற்சாகம் அதிகமாக அதிகமாக, பதிவு செய்யும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில், நிகழ்ச்சிக்கான ஆன்லைன் பதிவுகளில், புதிய தியான அன்பர்களின் பதிவுகள் அதிகரித்திருப்பதை எங்களால் பார்க்கமுடிந்தது.
பதிவு செய்வதற்கான காலக்கெடு நெருங்கி கொண்டிருந்தது. முதலில் எட்ட முடியாததாக தோன்றிய இலக்கை அடைந்திருந்தோம் தன்னார்வலர்கள் உட்பட 8,400 பேர் சத்குருவுடன் நிகழ்ச்சியை அனுபவிப்பதற்காக பதிவு செய்திருந்தனர். இதில் சீன மொழி பேசும் 500 எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களும் அடங்குவர். ஒரு தன்னார்வலரின் உதவியோடு சீன மொழியில் நேரடி மொழி பெயர்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"Soak in Ecstasy of Enlightenment" நிகழ்வுக்காக சிட்னியின் டார்லிங் துறைமுகத்தில் அமைந்துள்ள ICC அரங்கத்தில், நிகழ்வுக்கான முன்னேற்பாடுகள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக இது அமையவிருப்பதை உணர்த்தியது. டார்லிங் துறைமுகத்தில் நீர் அலைகளின் காட்சியுடன் அமைந்துள்ள இந்த அரங்கம், ஆன்மீக அலைகளில் நீந்துவதற்கு தயாராக இருக்கும் தியான அன்பர்களுக்கான பொருத்தமான இடமாக இருந்தது.
ICC அரங்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பே நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியிருந்தன.ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து வரும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆஸ்திரேலியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இருந்தும், அருகிலுள்ள நியூசிலாந்து, சீனா, ஹாங்காங், மலேசியா, நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல வெளிநாடுகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர்.
இதுபோன்ற பலமொழி பேசக்கூடியவர்கள் ஒன்றாக இணையும் இடத்தில் தகவல் பரிமாற்றம் சம்பந்தமான இடையூறுகள் தவிர்க்க முடியாததாகிறது. இருப்பினும் ஒரு தன்னார்வலர் மொழித் தடையைக் கடந்து அனைவருடனும் எவ்வாறு இணைந்தார் என்பதை விவரித்தார்- "பிரம்மானந்த ஸ்வரூப" என்று அனைவரும் ஒன்றாக இணைந்து உச்சரித்தபோது அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை காணமுடிந்தது.
அரங்கத்தினுள் ஏற்பாடுகளுக்கான ஒவ்வொரு அம்சமும் மிகவும் நுட்பமாக கையாளப்பட்டது. நிகழ்ச்சி நடைபெறும் மேடை, அழகான மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மதிய உணவு வழங்கப்படும் அறையில் இருந்த மேஜையில் விரிக்கப்பட்டிருந்த துணிகளின் மீது பூக்கள் நேர்த்தியுடன் தைக்கப்பட்டிருந்தன. சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை ஒத்திகை, அரங்குகளில் எதிரொலிக்க, அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் தங்கள் செயல்களை தொடர்ந்துகொண்டிருந்தனர்.
தரைவிரிப்புகளை விரிக்கும்போது தலைகள் இசைக்கேற்ப அசைவதையும், மெத்தைகளை துல்லியமாக இடைவெளிவிட்டு வைக்கும்போது கால்கள் தாளம் போடுவதையும், மென்மையான துணிகளை நேர்த்தியாக போர்த்தும்போது உடல்கள் இசைக்கேற்ப அசைவதையும் அங்கே காணமுடிந்தது. அந்த உற்சாகத்தால் ஆட்கொள்ளப்பட்ட, முன்பு காலியாக இருந்த உயிரற்ற அந்த அரங்குகள், துரிதமாக மாற்றப்பட்டு, தியான அன்பர்களைப் போலவே உயிரோட்டத்தால் நிரப்பப்பட்டன.
வெள்ளிக்கிழமையன்று அரங்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, சத்குரு சிறிது நேரம் நின்று, எங்கள் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தபோது, தன்னார்வலர்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். தன்னார்வலர் ஜேக்கப் அதை விவரித்தபோது, "அவர் எங்களை வாழ்த்த வந்தபோது, என் மனம் மிகவும் நுட்பமாகவும், அமைதியாகவும், சமநிலையாகவும் மாறியது. என் கண்களில் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவர் அங்கிருந்து வெளியேறியபோது, நான் உணர்ச்சி மேலெழும்ப முழங்காலிட்டு கீழே அமர்ந்தேன். நாங்கள் அங்கு விரித்த ஆயிரக்கணக்கான பாய்களைப் பார்த்தபோது, நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த மக்கள் அனைவரும் உள்நிலையில் மாற்றத்தைக் கண்டிருப்பார்கள் என்பதை உணர்ந்தேன்."
நிகழ்வு நாளில், எங்கள் அனைவருக்குள்ளும் பெரும் உற்சாகம் பொங்கிய அதேவேளையில், மைதானம் முழுவதும் ஒரு அமைதி உணர்வும் பரவியிருந்தது. தன்னார்வலர்கள் நமஸ்காரம் செய்து கைகூப்பியபடி, அரங்கத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களை அன்புடன் வரவேற்றனர். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசை குழு சத்குருவை வரவேற்கும் விதமாக இசையைப் பரப்பினர். அதைத் தொடர்ந்து கலந்துரையாடல்கள், உரைகள் தியானங்கள் மற்றும் உற்சாக நடனம் ஆகியவற்றின் உயிரோட்டமிக்க கலவையாக அமைந்த, முதல் “Soak in the Ecstasy of Enlightenment" நிகழ்ச்சியை சத்குரு வழிநடத்த தொடங்கினார் .
நிகழ்ச்சிக்குப் பிறகு பங்கேற்பாளர்களுக்கிடையே நடந்த கலந்துரையாடல்கள், அவர்களிடத்தில் சத்குருவின் இருப்பு ஏற்படுத்தியிருந்த ஆழமான தாக்கத்தை வெளிப்படுத்தின. பங்கேற்பாளர்களில் ஒருவரான ட்ரெவர் கூறும்போது, இது எனக்கு முற்றிலும் புதிதானது என்றாலும், நிகழ்ச்சியின்போது நன்றியுணர்வு மற்றும் ஆனந்தத்தின் கண்ணீரை என்னால் நிறுத்த முடியவில்லை" என்றார். தன்னுடைய அனுபவத்தின் மகத்துவத்தை விவரிக்க முயன்ற மற்றொருவர், "எளிமையாகச் சொல்வதானால், நான் மீண்டும் பிறந்ததைப் போன்ற உணர்வைப் பெற்றேன்" என்று கூறினார்
ஒரு தியானத்தின்போது, சத்குரு பங்கேற்பாளர்களை தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணத்தை நினைவுபடுத்தும்படி கேட்டுக்கொண்டார். அன்று மாலை இந்த செயல்முறையைப் பற்றி நாங்கள் பேசும்போது, ஆண்ட்ரியா என்ற தன்னார்வலர் சிரித்தார், "இதுதான் என் வாழ்க்கையின் சிறந்த தருணம், நான் உண்மையில் வேறு எதையாவது தேர்ந்தெடுக்க வேண்டுமா?" என்று அவர் கேட்டார்.
அவர் மட்டும் இப்படி உணரவில்லை. மற்றொரு பங்கேற்பாளரும் இப்படி வெளிப்படுத்தினார், “சத்குருவை நேரில் பார்க்க வேண்டும் என்ற என்னுடைய ஆவல், பரவசம் மற்றும் தன்னை அறிதலின் தேடலாக மாறியது. நிகழ்ச்சி நாள் எனக்கு ஒரு தெய்வீக அனுபவமாக வெளிப்பட்டது. அதை என் வாழ்க்கையின் சிறந்த நாளாகக் கருதுகிறேன். இதன் தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. விவரிக்க முடியாத உணர்ச்சிகள் என்னில் வெளிப்பட்டன. என் கடந்தகால சுமைகளை விடுவிப்பது போல் கண்ணீர் வெள்ளமாக வழிந்தன. நான் வார்த்தைகளற்றுப் போனேன்."
"இந்நிகழ்ச்சி விவரிக்க இயலாத உள்நிலை மாற்றத்திற்கு என்னை கொண்டுசேர்த்தது. சத்குருவின் இருப்பு அந்த சூழலில் ஒரு தனித்துவமான, தீவிரமான சக்திசூழலை உருவாக்கியது. இந்த சக்தியை உணருவது ஒரு ஆசீர்வாதமாக இருந்தது. அது என்னுள் பல ஆண்டுகளாக வெளிப்படாமல் இருந்த உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் கட்டவிழ்த்து, என்னுள்ளே ஆழமாக ஊடுருவிய ஒரு சக்தியாக இருந்தது. என்னுள் நடந்த ஆழமான மாற்றத்தைக் கண்டு நான் வியந்தேன், இத்தகைய ஒரு மாற்றத்தை என்னும் நிகழ்த்தியதற்காக நான் எனது பணிவான நன்றியை வெளிப்படுத்துகிறேன்."
நிகழ்ச்சியின் முடிவில், சத்குரு கேள்விகளுக்கான வாய்ப்பைக் கொடுத்தார். தனது கையை உயர்த்திய ஒரு பங்கேற்பாளர் பலரின் மனதின் இருந்த, ஆனால் பலரும் கேட்கத் துணியாத ஒரு கேள்வியை முன்வைத்தார்: "நீங்கள் எப்போது ஆஸ்திரேலியாவில் ஆசிரமம் தொடங்கப் போகிறீர்கள்?" சிலர் உற்சாகம் கொண்டனர், மற்றவர்கள் “ஆம்!” என்று கூச்சலிட்டனர், மேலும் பலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
சத்குருவின் பதில் நேர்மறையாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருந்தது. நிதி முதலீடுகள் மட்டுமின்றி, பொருத்தமான நிலம், வடிவமைப்பு, அரசாங்க ஒப்புதல்கள், பொருட்கள் போன்ற உலகளவில் மையங்களை நிறுவுவதற்குத் தேவையான வளங்களை அவர் எடுத்துரைத்தார். "வெறும் கட்டிடங்கள் அதைச் செய்யாது - அது செய்வது மக்கள் தான்" என்று குறிப்பிட்ட சத்குரு, மிக முக்கியமாக, விருப்பமும் தன்னார்வலர்களின் பெரும் ஈடுபாடும் தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பவர்களை, தாங்கள் எந்தெந்த வழிகளில் பங்களிக்க முடியும் என்பதை விவரமாக ஈமெயில் செய்யும்படி சத்குரு ஊக்குவித்தார்.
பலருக்கு, ஆஸ்திரேலியாவில் ஈஷா யோக மையத்தை நிறுவுவது என்பது ஒரு உன்னதக் கனவாகத் தோன்றலாம் - அது அடைய முடியாத ஒன்றாக, சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், அது நிஜமானால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இருப்பினும், தங்கள் உள்நிலையில் மாற்றத்தை அடைந்த ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களால் நிரம்பியிருந்த அந்த அரங்கத்தை நான் சுற்றிப் பார்த்தபோது, இந்நிகழ்வை ஏற்பாடு செய்வதுகூட சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் முதன்முதலில் வேலை செய்யத் தொடங்கியபோது, அது சாத்தியமற்ற விஷயமாகத் தோன்றியது என்பதை உணர்ந்தேன்.
சத்குரு தனது கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய நிகழ்ச்சியை நிறைவு செய்தார். "பிரம்மானந்த ஸ்வரூப" என்ற ஆழமிக்க உச்சாடனத்தை செய்தார். அது ஒருமித்த குரலில் ஹால் முழுவது பரவியது, ICC தாழ்வாரங்கள் வழியாகப் பயணித்து நகரத்தை அடைந்தது, அது டார்லிங் துறைமுகத்தின் நீரலைகளையும் சென்றடைந்தது.
உலகின் இந்த பகுதியில் இன்னும் பல உயிர்களை ஆழமான வழிகளில் தொடுவதற்கு ஆஸ்திரேலியாவில் ஈஷா யோக மையம் அவசியம். சத்குரு சொல்வது போல், "அதை நாம் நிகழச்செய்வோம்."