யோகா & ஞானம்

உங்கள் வாழ்க்கையை எல்லா நிலைகளிலும் வெற்றிகரமாக்கிட, ஹடயோகா எவ்வாறு உதவமுடியும்

ஹடயோகா பயிற்சி செய்வதற்கான உந்துதல் இல்லாமல் போராடுகிறீர்களா? வழக்கமான பயிற்சிகள் அல்லது உடலை வளைப்பதைக் கடந்து பாரம்பரிய யோகாசனங்கள் மிகப்பரந்த அளவில் பலன்களை வழங்குகிறது என்ற சத்குருவின் விளக்கங்கள், நீங்கள் யோகாசன நிலைகளில் ஆர்வமுடன் ஈடுபடுவதற்கு உதவி செய்யக்கூடும். ஹடயோகா எவ்வாறு உங்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி, உடலிலும், மனதிலும் பெருமளவு சமநிலையை உருவாக்கி, உச்சபட்ச நல்வாழ்வுக்கான உங்கள் பயணத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கமுடியும் என்பதைக் கண்டறியுங்கள்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. யோகாசனங்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் குறித்து எங்களுக்கு எடுத்துரைக்க முடியுமா?

தடைகளைப் படிக்கற்களாக மாற்றுதல்

சத்குரு: ஆசனம் என்ற வார்த்தைக்கு, “நிலை” என்பது பொருள். உடல் எடுக்கும் ஒவ்வொரு நிலையும் ஒரு ஆசனமாக இருக்கிறது. மனித உடலமைப்பை ஆழமாக, நுணுக்கமாக ஆராய்ந்தபிறகு, நாம் 84 ஆசனங்களைக் கண்டடைந்தோம். இதன் வாயிலாக, உங்களது உச்சபட்ச நல்வாழ்வுக்காக உங்கள் உடல் மற்றும் மனதை மகத்தான ஒரு சாத்தியமாக நீங்கள் மாற்றமடையச் செய்யமுடியும். இந்த ஆசன நிலைகளில், உங்களுடைய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உடலானது ஒரு தடையாக இல்லாமல், படிக்கல்லாக இருக்கிறது.

நீங்கள் ஹடயோகா செய்வதற்கு முயற்சிக்கும்பொழுது, உங்களது உடலின் வரையறைகள் மிகப்பெரும் தடையாக இருக்கின்றன. மனிதர்கள் செய்யவிரும்பும் எல்லாச் செயல்களுக்கும் இதுதான் உண்மை. உடலும், மனமும் படிக்கற்களாக இருப்பதற்கு பதில், மிகப்பெரும் தடைகளாக மாறியுள்ளது. ஏனென்றால் நீங்கள் அவற்றைப் போதிய அளவு ஆராயவில்லை.

நாம் 84 ஆசனங்களைக் கண்டடைந்தோம். இதன் வாயிலாக, உங்களது உச்சபட்ச நல்வாழ்வுக்காக உங்கள் உடல் மற்றும் மனதை மகத்தான ஒரு சாத்தியமாக நீங்கள் மாற்றமடையச் செய்யமுடியும்.

நான் காலையில் உங்கள் உடலை நீட்டிக்குமாறு கூறினால், நீங்கள் ஓய்வெடுக்க விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு ஆசன நிலையில் இருக்கும்போது, உங்களை மேலும் நீட்டிக்குமாறு கூறினால், அதை நீங்கள் செய்வதற்கு விரும்புவதில்லை. ஆனால் உங்களை அசையாமல் அமர்ந்திருக்குமாறு கூறினால், உங்களது உடல் நீட்டிக்க விரும்புகிறது. இதேபோல், உடலானது சாப்பிடவேண்டும், உறங்கவேண்டும், மற்றும் அதனையே தளர்வாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது – அதற்குப் பல விஷயங்கள் தேவைப்படுகிறது.

கர்மவினை எப்படி கட்டாயங்களை வளர்க்கிறது

உடலானது எப்போதும் பல்வேறு நிலைகளில் கட்டாயங்களின் வெளிப்பாடாக இருக்கிறது. இது உங்களது உடலியல் அமைப்பின் மீது பதிக்கப்பட்டுள்ள தகவலின் விதத்தைச் சார்ந்திருக்கிறது. கர்ம உடல் என்று குறிக்கப்படும் இந்தத் தகவலானது, நீங்கள் கட்டாயங்களால் எந்த அளவு துன்பமடைகிறீர்கள், உங்களுக்குள் சுதந்திரத்தை நீங்கள் எந்த அளவு இயல்பாகவே அனுபவிக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.

நமது தந்தையர் மற்றும் முன்னோர்கள் யார், அவர்களிடமிருந்து எந்த விதமான மரபியல் மற்றும் கர்மவினையை நாம் பெற்றோம், மற்றும் வாழ்க்கைச் செயல்முறையில் இருந்து நாம் என்ன கிரகித்துள்ளோம் என்பதைப் பற்றி, ஹடயோகாவில் நாம் கவனம் செலுத்துவதில்லை. இந்தக் கணம் வரை என்ன நிகழ்ந்தது என்பது ஒரு பொருட்டில்லை – நமது வாழ்க்கைக்குப் பொறுப்பேற்பதற்கு நாம் முடிவு செய்துள்ளோம்.

இந்திய மரபில், நீங்கள் தீவிரமான யோகப் பயிற்சி செய்பவர் என்றால், உங்களுக்கு ஜாதகம் பார்த்து உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க எந்த ஜோதிடரும் விரும்பமாட்டார். ஏனென்றால் உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்பேற்றுள்ளீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கின்றனர். இதுதான் யோகாசனம் என்பது – உங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக்கொள்வது. உங்களது உடலையும், மனதையும் உங்கள் வாழ்க்கையில் ஒரு சாத்தியமாக நீங்கள் மாற்றம் கொள்ளச் செய்கிறீர்கள்.

ஆசன நிலை எப்படி உங்கள் அமைப்பில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது

ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு நீங்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு ஆசன நிலையும் உங்களது உடலமைப்பில் உடல்ரீதியான, மனரீதியான, உணர்ச்சிரீதியான, சக்திரீதியான, இரசாயனரீதியான மாற்றங்களை மிகத்தெளிவாகத் தூண்டுகிறது. மாறாக, ஒவ்வொரு உணர்ச்சிரீதியான மற்றும் மனரீதியான அனுபவத்துக்கும், நீங்கள் உணரும் வெவ்வேறு விழிப்புணர்வு நிலைகளுக்கும், உங்களது உடல் இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட ஆசன நிலையை மேற்கொள்ள முனைகிறது.

உங்களது உடலை விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட ஆசன நிலைக்கு எடுத்துச் செல்வதனால், உங்களது விழிப்புணர்வை நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும்.

நீங்கள் கோபமாக இருந்தால், ஒருவிதமாக அமர்கிறீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால், வேறொரு விதமாக அமர்கிறீர்கள். நீங்கள் குழப்பமாக இருக்கிறீர்கள் என்றால், மற்றொரு விதமாக அமர்கிறீர்கள். நீங்கள் சாந்தமே வடிவாக இருக்கிறீர்கள் என்றால், வேறொரு விதமாக அமர்கிறீர்கள். அதேவிதமாக, நீங்கள் உணரும் வெவ்வேறு விழிப்புணர்வு நிலைகளுக்கு, உங்களது உடல் குறிப்பிட்ட ஆசன நிலைகளை மேற்கொள்கிறது. ஆசனங்களின் விஞ்ஞானம் அதனையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது.

உங்களது உடலை விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட ஆசன நிலைக்கு எடுத்துச் செல்வதனால், உங்களது விழிப்புணர்வை மேலும் உயர்த்திக்கொள்ள முடியும். நீங்கள் சிந்திக்கும் விதம், உணரும் விதம், புரிந்துணரும் விதமும், மற்றும் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைக்கூட, நீங்கள் அமரும் விதத்தினால் மாற்றிவிட முடியும். உடலை கட்டாயமான தன்மையில் இருந்து, விழிப்புணர்வான தன்மைக்கு மாற்றமடையச் செய்வதற்கு, யோகாசனங்கள் வழிகளாக இருக்கின்றன. உங்களது உடல் ஒரு கட்டாயமான தன்மையில் இருக்கும்போது, நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஆசன நிலையில் இருப்பதை விரும்புவதில்லை. உடலானது ஒரு விழிப்புணர்வான தன்மையில் இருக்கும்போது மட்டும்தான், உங்களால் ஒரு ஆசன நிலையில் நீடித்திருந்து, அதிலிருந்து பலனடைய முடியும்.

உங்கள் உயிருக்காக உடலை மேம்படுத்துதல்

உடலை மாற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்முறைக்கும், உடலை சில கட்டாயமான வழிகளில் ஈடுபடச் செய்யும் அடிப்படையான தகவலை மாற்றுவதற்கும், உறுதிப்பாடு, வலிமை மற்றும் பிடிவாதம் தேவைப்படுகிறது. அதாவது நிர்ப்பந்தத்தின் சுழற்சிகளுக்கு இடம்கொடுப்பதற்கு நீங்கள் விரும்பவில்லை – நீங்கள் செல்ல விரும்பும் வழியில் செல்கிறீர்கள் என்பது அர்த்தம்.

ஹ மற்றும் ட, சூரியனையும், சந்திரனையும் விவரிக்கிறது. ஹட என்பது இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலையைக் கொண்டுவருவதைப் பற்றியது. உங்களுக்குள் இந்த இரண்டு பரிமாணங்களும் சமநிலையில் இருந்தால், இயற்கையாகவே, உங்களது உயிர் வாழ்ந்திருப்பதற்கு, உடலானது ஒரு உகந்த இடமாக இருக்கிறது. உங்களைச் சுற்றிலும் உள்ள இடத்தை நீங்கள் குளறுபடியாக்கினால், நீங்கள் வேறெங்காவது சென்றுவிட முடியும். ஆனால் உயிர் தங்கியிருக்கும் உடலை நீங்கள் குளறுபடியாக்கினால், நீங்கள் இறக்கும்வரை உங்களால் வேறெங்கும் செல்லமுடியாது. நீங்கள் வாழ்ந்திருக்கும் காலம்வரை, உடலானது உங்கள் உயிரின் இருப்பிடமாக இருக்கிறது.

உங்களது உடல் எந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்,

சூழல் நிர்ப்பந்தமாக இருப்பதற்கு மாறாக, உகந்ததாக இருப்பது முக்கியம். உங்கள் வீடு மிகுந்த நிர்ப்பந்தமான ஒரு இடமாக இருந்தால், நீங்கள் மூச்சடைப்பதாக உணர்வீர்கள். ஒவ்வொரு சூழ்நிலையும், சுற்றுப்புறமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அமைக்கப்படுகிறது. உங்களது வீடு ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்படலாம். ஆசிரமம் வேறொரு நோக்கத்துக்காக அமைக்கப்படலாம். ஒரு தொழிற்சாலையோ அல்லது ஒரு வியாபாரமோ, வித்தியாசமான ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்படலாம். ஒவ்வொரு சூழலையும், நாம் எந்த நோக்கத்துக்காக அமைக்கிறோமோ அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.

உங்களது உடல் எந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும், அதற்குப் பொருத்தமான யோகாவை நாம் செய்வோம். மற்றவர்களுக்கு ஒரு அடி முன்னால் இருப்பதுதான் ஒரு நல்ல வாழ்க்கை குறித்த உங்கள் கருத்து என்றால், நாம் ஒருவிதமான யோகா செய்கிறோம். உங்களை மற்றவர்களுடன் நீங்கள் ஒப்பிடுவதில்லை, ஆனால் செயல்பாட்டின் தளத்தில் உங்களுடைய உச்சபட்ச ஆற்றலை நீங்கள் காண்பதற்கு விரும்பினால், நாம் வேறொரு விதமான யோகா செய்வோம். நீங்கள் விரும்புவதெல்லாம், உயிரின் உச்சநிலை இயல்புக்குள் கரைந்துவிடுவதுதான் என்றால், நாம் மேலும் வேறொரு விதமான யோகா செய்வோம். நாம் வெவ்வேறு விதங்களில் யோகாவை பயிற்சி செய்யமுடியும்.

ஒரே ஒரு ஆசனமே வழியாக இருக்கமுடியும்

அடிப்படையான 84 யோகாசனங்களும், உடலை ஒரு நுழைவாயிலாக மாற்றுவதற்கான 84 வழிகளாக இருக்கின்றன. உண்மையில் ஒவ்வொருவரும் 84 ஆசனங்களையும் செய்யவேண்டிய தேவையில்லை – ஒன்று போதுமானதாக இருக்கமுடியும். ஹடயோகாவை விடுதலைக்கான தங்களது பாதையாக எடுத்துக்கொள்பவர்கள் வழக்கமாக ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் பயிற்சி செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்வதற்கு முயற்சித்துக்கொண்டே ஒருவர் தனது ஒட்டுமொத்த வாழ்வையும் ஏன் கழிக்கவேண்டும் என்பதை, ஒரு சிந்தனைவயப்பட்ட மனதுக்குப் புரிந்துகொள்வது கடினமானது.

நீங்கள் நிமிர்ந்து உட்காருவதற்கு அல்லது உங்கள் உடலை சரியாக வைத்திருக்கக் கற்றுக்கொண்டால், இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் உள்நிலையில் உங்களால் அறிந்துகொள்ள முடியும். இது ஆசனசித்தி என்று அறியப்படுகிறது. ஒரு ஆசன நிலையில் உறுதியாகவும், சௌகரியமாகவும் 2½ மணி நேரங்களுக்கு உங்களால் நீடித்திருக்க முடிந்தால், நீங்கள் ஆசனசித்தி அடைந்துவிட்டதாக நாம் கூறுகிறோம்.

நீங்கள் நிமிர்ந்து உட்காருவதற்கு அல்லது உங்கள் உடலை சரியாக வைத்திருக்கக் கற்றுக்கொண்டால், இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் உள்நிலையில் உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

ஒரே ஆசனநிலையில் நீடித்திருப்பதால், அறிந்துகொள்ளக்கூடிய அனைத்தையும் அறிந்துகொள்வது எப்படி சாத்தியம்? அது வீட்டில் ஒரு தொலைக்காட்சி சாதனம் வைத்திருப்பதைப் போன்றது. தொலைக்காட்சி சாதனம் என்பது, அதற்குள் சில மின்னணு பாகங்களுடன் இருக்கும் ஒரு பெட்டிதான், ஆனால் அங்கே ஒரு ரிசீவர் இருக்கும் காரணத்தால், அது தன்னளவில் ஒரு உலகமாகவே மாறிவிடமுடிகிறது. நீங்கள் ரிசீவரை சரியாகப் பொருத்தினால், தொலைக்காட்சி என்று நாம் அழைக்கும் இந்தப் பெட்டிக்குள் ஒட்டுமொத்த உலகமும் பாய்ந்து வருகிறது. ரிசீவர் சரியாக அமைக்கப்படவில்லை என்றால், அதே சாதனம் எதையும் செய்யமுடியாமல் போகிறது. மனிதர்களுக்கும்கூட அது பொருந்துகிறது.

ஒரு தனிமனிதர், அவர் யாராக இருக்கிறாரோ அதற்கு, அவர் என்ன புரிந்துணர்கிறார் என்பது மட்டும்தான் காரணமாக உள்ளது. தற்போது நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதற்கு, இந்தக்கணம் வரைக்கும் நீங்கள் என்ன புரிந்து உணர்ந்துகொண்டுள்ளீர்கள் என்பது மட்டும்தான் காரணமாக உள்ளது. மேலும், நீங்கள் எதிர்காலத்தில் யாராக இருப்பீர்கள் என்பது, நீங்கள் என்ன புரிந்து உணர்வீர்களோ அது மட்டும்தான் காரணமாக இருக்கும். யோகா, இந்தப் புரிந்துணர்தலை மேம்படுத்துவதைக் குறித்தது.

அண்டவெளியுடன் ஒரு தொடர்பு உருவாக்குவது

நீங்கள் சரியான ஒருங்கமைப்புடன், ஒரு ஆசனநிலையில் மிகத் துல்லியமாக நீடித்திருந்தால், ஏதோவொரு வழியில் அது அண்டத்தின் அமைப்புடன் பொருந்துகிறது. 84 யோகாசனங்களும் 84 ஒருங்கமைப்புகளைக் குறிக்கிறது. ஏனென்றால் இப்போது நாம் அறிந்தபடியான இருப்பு 84வது படைப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்த 84 படைப்புகளின் ஞாபகமும் நமது உடலில் பிரதிபலிக்கிறது. இந்த ஞாபகத்தை விடுவித்து, செயல்படுத்துவதற்கு நாம் முயன்றுகொண்டிருக்கிறோம்.

யோகாசனங்கள் தொடர்புகொள்வதற்கான ஆற்றல் மிகுந்த வழிகள்.

ஒருவர் இந்த 84 ஆசனநிலைகளும் கைவரப்பெற்றால், அல்லது ஒரே ஒரு ஆசனநிலையில் தேர்ச்சி பெற்று, அதன் வாயிலாக மற்ற 83 ஆசனநிலைகளையும் அணுகினால், இப்போது வரைக்கும் படைப்பில் நிகழ்ந்துள்ள அனைத்தையும் அவர் அறிந்துகொள்ள முடியும், ஏனென்றால் அதன் ஞாபகம் ஒருவரது மனித அமைப்புக்குள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஞாபகமானது, தனக்கு வெளியில் இருக்கும் மற்றொரு பரிமாணத்தைத் தொட்டால், அது செயல்படுத்தப்பட்டு, தூண்டப்படமுடியும்.

யோகாசனங்கள் தொடர்புகொள்வதற்கான ஆற்றல் மிகுந்த வழிகள். யோகா என்றால் ஒருமை. ஒருமை என்றால் இரண்டு ஒன்றாகியுள்ளது. அடிப்படையில், பிரபஞ்சத்தில் இரண்டு மட்டுமே உள்ளது – நீங்களும், மீதமுள்ள பிரபஞ்சமும். மீதமுள்ள பிரபஞ்சத்துக்குள் தனிப்பட்டவர்களை நீங்கள் அடையாளம் காணக்கூடும், ஆனால் அடிப்படையில் இரண்டு மட்டும்தான் உள்ளன – நீங்கள் மற்றும் மீதமுள்ள பிரபஞ்சம். ஏனென்றால் உணர்தலின் பரிமாணங்கள் இரண்டு மட்டும்தான் – உள்நிலையின் உணர்தல்கள் மற்றும் வெளிச்சூழலின் உணர்தல்கள்.

நீங்களும், பிரபஞ்சமும் ஒருமைப்படுவது

யோகா என்பது உள்நிலையும் வெளிச்சூழலும், நீங்களும் மீதியுள்ளவையும், நீங்களும் மற்றதும், இவ்விரண்டு பரிமாணங்களுக்கு இடையில் ஒருமை உருவாக்குவதைப் பற்றியது. “நீங்கள்” என்பதும் “மற்றது” என்பதும் இல்லாதபோது, அதுதான் யோகா. ஆசனங்கள், இந்த உச்சபட்ச ஒருமையை அணுகும் உடல்ரீதியான வழிகளாக உள்ளன. ஏனென்றால் பௌதிக உடல்தான் இணைந்து செயல்படுவதற்கான மிக எளிதான விஷயமாக இருக்கிறது.

யோகா என்பது உள்நிலையும் வெளிச்சூழலும், நீங்களும் மீதியுள்ளவையும், நீங்களும் மற்றதும், இவ்விரண்டு பரிமாணங்களுக்கு இடையில் ஒருமை உருவாக்குவதைப் பற்றியது.

உங்கள் மனதுடன் இந்த ஒருமையை அடைவதற்கு நீங்கள் முயற்சித்தால், அது மிக அதிகமான தந்திரங்களை மேற்கொள்ளும். உடலைக்கொண்டு முயற்சிக்கும்போது, உடலானது அதனைச் சரியாக செய்கிறதா, இல்லையா என்பதையும், அது ஒத்துழைக்கிறதா, இல்லையா என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் மனதைக் கட்டாயப்படுத்தினால், அது எல்லாவிதமான விஷயங்களையும் உங்களை நம்பச்செய்து, அடுத்த நாள் உங்களைக் கைவிட்டுவிடும். உடல் அதிக நம்பகமானது. அதனுடன் புத்திசாலித்தனமாக நீங்கள் செயல்பட்டால், யோகாசனங்கள் நிச்சயமாக உச்சபட்ச ஒருமைக்கு வழிநடத்திச் செல்லமுடியும்.

வெற்றிக்காக உங்களையே தகவமைத்துக்கொள்வது

உச்சபட்சத்துடன் இந்த ஒருங்கமைப்பு நிகழும்வரை, யோகாசனங்களில் ஈடுபடுவது உள்நிலை ஒருங்கமைப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஆரோக்கியம், ஆனந்தம், பரவசம், மற்றும் அனைத்துக்கும் மேல், சமநிலைக்கான ஒரு இரசாயனம் உருவாகும். சமநிலை என்ற விஷயத்தை நவீன சமூகங்கள் புறக்கணித்துள்ளன, மற்றும் அதற்கான பெரும் விலையை அவர்கள் அளித்துக்கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கு புத்திசாலித்தனம், திறமை, கல்வி மற்றும் தகுதிகள் இருந்தாலும் – தேவையான சமநிலை உங்களுக்கு இல்லையென்றால், நீங்கள் வெற்றியடைய மாட்டீர்கள். வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் இலக்கைச் சென்று சேரமாட்டீர்கள்.

யோகாசனங்களில் ஈடுபடுவது உள்நிலை ஒருங்கமைப்புக்கு வழிவகுக்கும். இதனால் ஆரோக்கியம், ஆனந்தம், பரவசம் மற்றும் அனைத்துக்கும் மேல், சமநிலைக்கான ஒரு இரசாயனம் உருவாகும்.

எந்த ஒரு துறையிலும் வெற்றியைத் தேடுபவர்களுக்கு, சமநிலை என்பது மிகவும் முக்கியம். வெளிச்சூழ்நிலைகளால் குழப்பமடையாத ஒரு சமநிலை உங்களுக்கு இருந்தால்தான், உங்களுக்குள் இருக்கும் திறமை மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தும் திறன் பெறுகிறீர்கள். இல்லையென்றால், சமநிலை இல்லாத காரணத்தினாலேயே, ஒருவரிடம் இருக்கக்கூடிய மிக அற்புதமான குணங்கள்கூட வீணாகப் போய்விடும். ஹடயோகா இந்த சமநிலையைக் கொண்டுவருகிறது.