உலகத்தைச் சுற்றி எந்த நிலப்பரப்பிலும் பயணம் செய்வதிலிருந்து, மிகச் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிகளுக்கு வருகை தருவது வரைக்கும், அவரது வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை சத்குரு அறிந்திருக்கிறார். வாகனங்களை அவரே ஓட்டுவதற்கு ஏன் விரும்புகிறார் என்பதையும், வாழ்க்கையை அதன் முழுமையான தன்மையில் வாழ்வதற்கு ஆட்டோபைலட்டைத் தவிர்ப்பது ஏன் அத்தியாவசியமாக இருக்கிறது என்பதையும், சத்குரு இங்கே வெளிப்படுத்துகிறார். ஒரு ஆன்மீக நபர் என்றால் அவர் சாந்தமாகவும் செயலற்றவராகவும் இருக்கவேண்டும் என்ற பொதுவான தவறான கருத்தையும் அகற்றுகிறார்.
கேள்வியாளர்: சத்குரு, உங்களை நான் எப்போதும் ஓட்டுனர் இருக்கையில் காண்கிறேன். நீங்கள் பல பணிகள் செய்யவேண்டியிருப்பதாலும், மற்றும் பாதுகாப்பாகச் சென்றடைவதற்கும், நீங்களே வாகனம் ஓட்டுவதைவிட, ஏன் ஒரு ஒட்டுனரை நீங்கள் நியமிக்கக்கூடாது?
சத்குரு: இதில் பிரச்சனை என்னவென்றால், என்னைக்காட்டிலும் மேலாக வண்டி ஓட்டும் ஒரு ஓட்டுனரை நான் அரிதாகவே காண்கிறேன். ஏறக்குறைய உலகத்தின் எல்லா இடங்களிலும் எனக்கு நானே வண்டி ஓட்டிக்கொள்கிறேன். இதனால் மக்கள் என்னிடம் இவ்வாறு கேட்பதுண்டு, “ ஒரு நாட்டில் இடதுபக்கம் ஓட்டுவதும், வேறொரு நாட்டில் வலதுபக்கம் ஓட்டுவதும் நடைமுறையாக இருக்கும்போது நீங்கள் எப்படிக் குழப்பமடையாமல் இருக்கிறீர்கள்?”. இதில் என்ன பிரச்சனை? வலதுபக்கம் எது, இடதுபக்கம் எது என்பது எனக்குத் தெரியாதா?. இந்த விதமான குழப்பம் மக்களுக்கு நிகழ்வது ஏனென்றால், அவர்கள், ஒரு குறிப்பிட்ட விதமான அமைப்புக்கு ஏற்றவாறு தங்களது வாழ்க்கையை நடத்த முயற்சிக்கின்றனர். நீங்கள் முறைகளை அமைத்துக்கொண்டால், சில விஷயங்கள் தானியங்கியாக, இயந்திரத்தனமாக நிகழும்.
ஆனால் நமது வாழ்க்கை குறுகியது; நாம் 100 வருடங்கள் இங்கே இருக்குமாறு வாழ்ந்தாலும், நமது மனித ஆற்றல் வெளிப்பாடு காண்பதற்கு அதுகூட மிகவும் குறுகிய ஒரு வாழ்க்கைதான். உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும், கூடுமானவரை, “அனிச்சையானவை” என்று அழைக்கப்படும் விஷயங்களைக்கூட நீங்களாக நடத்துவது மிகவும் முக்கியமானது. யோகா என்றால் பல விதங்களிலும் “அனிச்சையான” விஷயங்களை தன்னார்வத்துடன் நடத்துவது. அதுதான் ஒரு யோகியாக இருப்பதன் பெருமை. வாழ்க்கையை இயன்றவரை ஆழமான தன்மையில் வாழ்வதும், உணர்வதும்தான் இதன் நோக்கமாக இருக்கிறது, ஏனென்றால் வாழ்க்கை மிகமிகக் குறுகிய ஒரு நிகழ்வு.
நீங்கள் மிகவும் ஆனந்தமாக, பரவசத்தில் இருந்தால், 100 வருடங்கள் என்பது 10 நாட்களைப்போல் சென்றுவிடும். ஆனால் நீங்கள் துன்பமாக இருந்தால், ஒரே ஒரு நாளைக்கூட 100 வருடங்கள்போல உணரமுடியும். துன்பமயமான மக்கள்தான் மிக நீண்ட வாழ்க்கை வாழ்கின்றனர். நீங்கள் ஆனந்தமாக இருந்தால், வாழ்க்கையில் உங்களுக்கு என்ன கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பது நீங்கள் அறியும் முன்பே அது முடிந்துவிடும்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும், கூடுமானவரை, “அனிச்சையானவை” என்று அழைக்கப்படும் விஷயங்களைக்கூட நீங்களாக நடத்துவது மிகவும் முக்கியமானது. யோகா என்றால் பல விதங்களிலும் “அனிச்சையான” விஷயங்களை தன்னார்வத்துடன் நடத்துவது.
நமது கட்டுப்பாட்டில் இல்லாத பல விஷயங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சூழலை நான் சென்னையில் ஒரு மாநாட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபொழுது சந்தித்தேன். அது வேறொருவருடைய கார் என்பதுடன், அவர்கள் தங்களுக்கென்று ஒரு ஓட்டுனர் வைத்திருந்தனர். நான் கார் ஓட்டுவேன் என்று கூற விரும்பாமையால், பின் இருக்கைக்குச் சென்று அமர்ந்தேன். ஆனால், விலைமதிப்புள்ள காரில் கீறல் ஏற்பட்டுவிடும் பயத்தினாலோ என்னவோ, அந்த ஓட்டுனர் குறைந்த வேகத்தில் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார்.
இந்த 40 வருடங்களில், ஒரு நிகழ்ச்சிக்குக்கூட நான் தாமதமாகச் சென்றதில்லை. ஆனால் இந்த சூழலில், நிமிடங்கள் கரைந்துகொண்டிருந்தன, மற்றும் இந்த ஓட்டுனர் அவருக்கு உரிய வேகத்திலேயே சென்றுகொண்டு இருந்தார். ஒரு இடத்தில் போக்குவரத்து சிக்னல் வந்தபோது, நான் காரிலிருந்து உடனடியாக இறங்கி, ஓட்டுனரின் கதவைத் திறந்துவிட்டு, அவரைப் பின்னால் அமருமாறு கூறினேன். அதன்பிறகு, நானே ஓட்டினேன்.
மும்பை குண்டுவெடிப்பு நடந்த நாள் முதற்கொண்டு, ஒவ்வொரு ஹோட்டலிலும் பாதுகாவலர்கள் இருக்கின்றனர். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் எதைத் தேடுகின்றனர் என்பது தெரியாது. அவர்கள் சுற்றி பார்த்துவிட்டு, ஒரு கண்ணாடியைக் காண்பிக்கின்றனர், பிறகு சென்றுவிடுகின்றனர். அன்று, எனக்கு முன்பாக, ஒரு கார் உள்ளே சென்றது, கேட் கீழிறங்குவதற்கு முன், நான் பாய்ந்து முன்னேறிச் சென்றேன். இதனை எதிர்பார்க்காத பாதுகாவலர் விசிலை வேகமாக ஊதுவதும், காருக்குப் பின்னால் ஓடிவருவதுமான விஷயங்களைப் பதட்டமாகச் செய்துகொண்டிருந்தார். நான் நேராக ஹோட்டலின் போர்ட்டிகோவில் காரை நிறுத்திவிட்டு, மாநாட்டுக்குக்கு ஓடினேன், சரியான நேரத்தில் அங்கு சென்று, ஒன்றரை மணி நேரம் உரையாற்றினேன்.
நான் ஹோட்டலுக்குள் ஓடிக்கொண்டிருக்கையில், சில பத்திரிக்கையாளர்கள் அங்கு இருப்பதை கவனித்தேன். நான் திரும்பி வந்தபோது, அவர்கள் அங்கேயே காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கூறினார்கள், “பண்டைய காலங்களில், யோகிகள் நடப்பது வழக்கமாக இருந்தது. இப்போது நீங்கள் கார் ஓட்டுகிறீர்கள்!” நான் பதிலளித்தேன், “ பண்டைய காலங்களில், அனைவரும் நடந்தனர். யோகிகள் மற்றவர்களைவிடச் சற்று சிறப்பாக நடந்தனர். இப்போது அனைவரும் கார் ஓட்டுகின்றனர், ஒரு யோகி அவர்களைவிடச் சற்று சிறப்பாக ஓட்டுகிறார்.”
இப்படிப்பட்ட கேள்விகள் எழுவது ஏனென்றால் ஆன்மீகம் என்பது ஒரு வகையான இயலாமை என்ற இந்த பிம்பத்தை, கடந்த 200 அல்லது 300 ஆண்டுகளில் நாம் உருவாக்கியுள்ளோம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்ந்தால்தான், ஆன்மீகத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறீர்கள். ஆனால் இந்த நாட்டின் வரலாற்றினை நீங்கள் திரும்பிப் பார்த்தால், நீங்கள் வணங்குபவர்கள்- அது ராமனாக, கிருஷ்ணனாக, சிவனாக, முனிவர்களாக அல்லது துறவிகளாக இருக்கலாம் – அவர்கள் அனைவரும் எப்போதும் யுத்தத்துக்கு ஆயத்த நிலையில் இருந்ததை நீங்கள் பார்ப்பீர்கள். இது ஏனென்றால், அந்த நாட்களில், அவர்கள் வாழ்ந்திருந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாக அது இருந்தது. ஆன்மீகம் ஒரு இயலாமை அல்ல – அது ஒரு மனிதருக்கு இருக்கக்கூடிய மிக உயர்ந்த நிலையிலான வல்லமை.