கடந்த சில வாரங்களின் சத்குரு நிகழ்வுகள் பற்றிய ஒரு தொகுப்பு!
மார்ச் 21
சரியாக ஒரு வருடம் முன்னதாக, குடிமக்களின் ஆதரவைப் பெறுவதற்கும், அரசாங்கங்கள் சட்ட வரைவுகளை உருவாக்கிட ஊக்கப்படுத்துவதற்காகவும், 27 நாடுகள் வழியாக சத்குரு தனது 100 நாள், 30,000 கிமீ மண் காப்போம் பயணத்தைத் தொடங்கினார். ஒரு ட்வீட் மூலம் இயக்கத்தின் தாக்கத்தை எடுத்துரைத்த சத்குரு, "ஓராண்டுக்கு முன் இந்நாளில் லண்டனிலிருந்து #மண்காப்போம் இயக்கத்தை துவங்கினோம். பூமியிலேயே இதுவரை காணாத மிகப்பெரிய மக்கள் இயக்கமாக இதை மாற்ற தங்கள் இதயங்களையும் கரங்களையும் இவ்வியக்கத்தில் ஈடுபடுத்தியுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நன்றி. மண் கொள்கை வகுக்கத் துவங்கியுள்ள நாடுகள் அனைத்துக்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகள். உடனடியாக தேவைப்படுவது, அவசரமாக உலக விவசாய மண்ணைப் புதுப்பித்து நுண்ணுயிர்களுக்கு புத்துயிரூட்டி, அதன்மூலம் அனைத்துயிரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்வதே” என்று குறிப்பிட்டுள்ளார்.
வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள மேயர்கள், மார்ச் 21ம் தேதியை மண் காப்போம் நாள் என்று 40க்கும் மேலான அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம், இயக்கத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளனர். வாஷிங்டன் D.C., எட்மண்டன், கல்கரி, சார்லோட், சின்சினாட்டி, இண்டியானாபொலிஸ், ரெய்னர் மற்றும் சான் ரமோன் போன்ற முக்கிய நகரங்களில் இந்நாள் மண் காப்போம் நாளாக அனுசரிக்கப்பட்டது.
மார்ச் 21
பசுமைக்கரங்கள், நதிகளை மீட்போம் மற்றும் காவேரி கூக்குரல் போன்ற சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளில் சத்குருவின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, ஆற்றல் மற்றும் ஆதாரவள நிறுவனமான TERI, சத்குருவிற்கு நீர் சாம்பியன் விருதை வழங்கியது. இந்திய நதிகளையும் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும். TERIன் இந்த நீர் நிலைத்தன்மைக்கான விருதுகள், ஐக்கிய நாடுகளில் நீர் சார்ந்த நிலையான வளர்ச்சி இலக்கை அடையும் நோக்கத்தை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது.
மார்ச் 4
மும்பையில் நீத்தா முகேஷ் அம்பானி அவர்களின் கலாச்சார மையத் திறப்புவிழாவிற்கு சத்குரு அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வுக்கு வருகைதந்த சத்குருவை, நீத்தா மற்றும் முகேஷ் அம்பானி ஆகிய இருவரும் அன்புடன் வரவேற்றனர். புதிதாக திறக்கப்பட்ட இந்த மையத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி சத்குரு பேசுகையில், “இந்தியா கலை, இசை மற்றும் பல்வேறு கலாச்சார அம்சங்களில் மிகவும் வளமாக உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருளாதார பற்றாக்குறையால் நாம் சிக்கித் தவிக்கிறோம். இப்போது, பொருளாதாரநிலை ஏற்றம் அடைந்து வருவதால், கலையும் இசையும் வளர்ந்து வருகின்றன. எனவே மும்பையில் இதுபோன்ற ஒரு மையம், அதை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒரு வரம். நீத்தாஜி தனது இதயத்தையும் ஆன்மாவையும் இதைச் செய்வதற்கு முதலீடு செய்திருப்பது அருமையான விஷயம்" என்றார்.
இந்நிகழ்வில் பிரியங்கா சோப்ரா, ஷாருக்கான், ஆலியா பட், ரன்வீர் சிங், ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்திய பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும், ஜிகி ஹடிட், டாம் ஹாலண்ட், ஜெண்டயா, பெனிலோப் குரூஸ் போன்ற உலக நட்சத்திரங்களும், விளையாட்டு மற்றும் வணிகம் சார்ந்த ஆளுமைகளும் கலந்துகொண்டனர்.
ஏப்ரல் 3
தங்கள் பகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் செயல்பாடுகளிலும் உற்சாகமாக ஈடுபடும் பெங்களூரு பகுதியைச் சுற்றியுள்ள தன்னார்வலர்கள், பெங்களூரு சத்குரு சந்நிதியில் நடைபெறும் முதல் சத்குரு தரிசனத்திற்காக ஒன்றுகூடினர். தற்போதைய தலைமுறை தங்களை வெளிப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும், ஆனால் உணர்ந்துகொள்வதில் போதுமான முதலீடு செய்யாமல் இருப்பதையும் பற்றி சத்குரு பேசினார். மேலும், “நீங்கள் வெளிப்படுத்துவதைவிட உங்களின் உணர்திறன் அதிகமாக இருக்கும்போது, உங்கள் கர்ம சுமையைக் குறைக்கத் தொடங்குவீர்கள்” என்றும் கூறினார்.
ஏப்ரல் 6
புதுடில்லியில் தி எகனாமிக் டைம்ஸ் இந்தியா லீடர்ஷிப் கவுன்சிலில் உரையாற்றிய சத்குருவிடம், அனன்யா பிர்லா பேட்டிகண்டார். மரணம், மறுபிறப்பு, Gen-Z மற்றும் தலைமைப் பண்பு குறித்து நுட்பமான கேள்விகளை அவர் கேட்டார். தனக்கே உரிய தெளிவுடனும் நகைச்சுவை உணர்வுடனும் சத்குரு பதிலளித்தார்.
ஏப்ரல் 7
டெல்லி கோல்ஃப் கிளப்பில் G20 கோல்ஃப் போட்டியை சத்குரு தொடங்கி வைத்தார். இதில் G20-ன் மூத்த தூதர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தியாவை வளர்ந்துவரும் ஒரு கோல்ஃப் சுற்றுலா இடமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்வு, “ஒரு பூமி - ஒரு குடும்பம் - ஒரு எதிர்காலம்” என்ற கருப்பொருளில் 2022 டிசம்பர் 1ம் தேதி தொடங்கி, ஆண்டுமுழுக்க நடந்த இந்தியாவின் G20 மாநாட்டின்போது நிகழ்ந்தது.
ஏப்ரல் 7
இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனத்தின் (FICCI) பெண்கள் பிரிவான FLO உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய சத்குரு, உலகிலுள்ள ஒரே பிரச்சனை விழிப்புணர்வில்லா மனிதர்கள்தான் என்பதை பதிவுசெய்தார். மேலும், நாம் நன்றாக வாழவேண்டுமானால், உலகிற்கு உள்நிலை மாற்றத்திற்கான கருவிகளை வழங்க வேண்டிய அவசரத் தேவையுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 14
2023ம் ஆண்டின் ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்கு சத்குரு அழைக்கப்பட்டார். "கடந்த காலத்தை மதிப்பது மற்றும் உறுதியான எதிர்காலத்தை உருவாக்குவது" என்ற தலைப்பில் அவர் பேசினார். ஒவ்வொரு மனிதனின் விழிப்புணர்வையும் உயர்த்துவதே இதற்கான ஒரே வழி என்பதை அவர் இதில் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 14
லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஈஷாவின் புதிய மையத்தில் தன்னார்வலர்களிடம் சத்குரு உரையாற்றினார். பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களின் அவசியத்தை வலியுறுத்திய அவர், கட்டிடங்களைப் பிரதிஷ்டை செய்ய மட்டுமே முடியும், அதேநேரத்தில் மனிதர்கள் மட்டுமே விழிப்புணர்வாக மாறமுடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஓர் ஆன்மீக சமூகமாக இயங்கும் ஒரு சங்கம், தனிமனிதனின் வளர்ச்சிக்கான தாகத்தைத் தொடர்ந்து ஆதரித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் அங்கு எடுத்துரைத்தார்.