நாம் பூமியை நமது தாயாகக் குறிப்பிடும்போது, நாம் அவளைச் சுரண்டுவதை எப்படி சரிசெய்துகொள்ள முடியும். ஒரு தாயின் கண்ணோட்டத்தில் இருந்து, பிரபல பாடகி நீத்தி மோகன் இந்தக் கேள்வியை முன்வைக்கிறார். அன்பு குறித்த கருத்துகள், வாழ்வின் வசீகரமான சுழற்சி, மற்றும் பூமியின் மண்ணைக் காப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசரம் குறித்து ஒரு நகைச்சுவைக் கதை மற்றும் அறிவியல்பூர்வமான ஆழ்ந்த அறிவின் மூலம் சத்குரு நம்மைத் தெளிவுபடுத்துகிறார்.
நீத்தி மோகன்: சத்குரு, நான் ஒரு தாய் ஆனதிலிருந்து, தாய் மண்ணுடனும், வாழ்வின் பல விஷயங்களுடனும் அதிகமாக உள்ளுணர்வு அடைந்துள்ளதாக உணர்கிறேன். அதேநேரத்தில், ஒரு தாயாக, என்னிடமிருந்தே எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. பூமித்தாயிடம் இருந்தும்கூட, பல எதிர்பார்ப்புகள் உள்ளன. பூமித்தாயை நாம் பயன்படுத்தியவாறு இருக்கிறோம், ஆனாலும் அவள் நிபந்தனையற்ற அன்பை வழங்கிக்கொண்டே இருப்பாள் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் எங்கோ ஓரமாக, ஒரு தாயாக நான் ஆயாசமாக உணர்கிறேன், நம் பூமித்தாயும், இந்தத் தருணத்தில் நாம் மண் காப்போம் குறித்துப் பேசிக்கொண்டிருப்பதால், அவ்வாறு உணர்கிறாள் என்று நிச்சயமாக நினைக்கிறேன். இதைப் பற்றிய உங்கள் கருத்துகளை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
சத்குரு: நமக்கான நம் தாயின் அன்பாக இருந்தாலும், நமக்கான பூமியின் கருணையாக இருந்தாலும், அது நிபந்தனையற்றது. மற்ற உறவுகளில் இருப்பதைவிட, இங்கே மிகச் சில நிபந்தனைகளே இருக்கின்றன, ஆனாலும் நிபந்தனைகள் இருக்கத்தான் செய்கின்றன. எதுவும் நிபந்தனையற்றது கிடையாது. நாம் விரும்புவதையெல்லாம் செய்துவிட்டு, பூமியோ அல்லது நமது தாயோ நம்மைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. நமது தாய் மற்றும் பூமி இருவருக்கும் ஒரு எல்லை உள்ளது. நாம் வாழ்க்கையையும், அதன் சூட்சுமமான அம்சங்களையும் மதிக்கிறோம் என்றால், அந்த எல்லையை நாம் ஒருபோதும் கடக்கக்கூடாது.
இங்கு நாம் அமர்ந்திருக்கும் போது, நமக்கு நாமே முழுமையாகத்தான் இருக்கிறோம். நான் வளர்ந்து, வலிமை அடைந்தபிறகு, நமக்கு ஒருவரும் தேவையில்லை என்பதுபோல் தோன்றக்கூடும், ஆனால் நாம் வேறொருவரால் பிறந்தோம். அப்போது நாம் எவ்வளவு ஆதரவற்ற நிலையில் இருந்தோம் என்பதைக் கற்பனை செய்துபார்ப்பது மிகக் கடினமாக இருக்கலாம். நமது தாய் நம்மை வெளியில் வீசியிருந்தால், நமக்கு அன்றே முடிந்திருக்கும். இன்று, நாம் நம் கால்களில் நின்று, பல விஷயங்கள் செய்யும் திறனுடையவர்களாக இருக்கிறோம், ஆனால் அந்த அடித்தளம்தான் இப்போது நாம் இருக்கும் இடத்திற்கு நம்மை வழிநடத்திக் கொண்டுவந்திருக்கிறது. இது உங்களது தாய், மண் மற்றும் பூமிக்கும் பொருந்துகிறது. நீங்கள் விண்வெளிக்கு பறப்பதாக இருந்தாலும், விண்வெளிக்கலம் இந்த பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவே இருக்கிறது.
உங்களுக்கு நகைச்சுவையான ஒன்றைக் கூறவிரும்புகிறேன். 2060ல் ஒருநாள், சில விஞ்ஞானிகள் கடவுளைச் சந்திக்க அனுமதி கேட்டனர். அது கிடைத்ததும், அவர்கள் அங்கு சென்று, கடவுளிடம் கூறினர், “ஐயா, முதியவரே, நீங்கள் படைப்பை மிக நன்றாக செய்துள்ளீர்கள். ஆனால் உங்களால் செய்யக்கூடிய அனைத்தையும், இப்போது எங்களாலும் செய்யமுடியும், ஆகவே, நீங்கள் பணி ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டது.”
கடவுள் அவர்களைப் பார்த்து, “ஓ, அப்படியா? உங்களால் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டார்.
அவர்கள் சிறிது மண்ணைத் தோண்டி எடுத்து, ஒரு மனிதக் குழந்தையின் உருவத்தைச் செய்து, மற்ற எல்லா விஷயங்களையும் செய்ததும், சில நிமிடங்களில், குழந்தை உயிர் பெற்றது.
இதைக் கண்டதும் கடவுள் கூறினார், “இது மிகவும் சுவாரஸ்யமானதுதான். ஆனால் முதலில், உங்களுடைய மண்ணை எடுத்து வாருங்கள்.”
பூமியின் மீது மட்டுமல்ல, பிரபஞ்சம் முழுவதிலும் மண் நிகரில்லா மந்திரப் பொருளாக இருக்கிறது. அதிலிருந்து, புழுக்கள், பூச்சிகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் வெளிவருகின்றனர். மண்ணுக்குள் நீங்கள் மரணத்தை ஊன்றினால், உயிர் வெடித்துக் கிளம்பும் ஒரே இடம், பிரபஞ்சத்திலேயே இது ஒன்றுதான். இறந்துவிட்ட ஏதோ ஒன்றை நீங்கள் புதைத்தால், அதைச் சுற்றி உயிர் முளைப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
நாம் நடந்து செல்லும் மண்தான் நாம் சுமக்கும் உடல். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் குறிப்பிடத்தக்கவாறு அல்லது சூழலியல் நட்புடன் எதையும் செய்யவில்லை என்றாலும், நீங்கள் இறக்கும்போது சூழலியல் நட்பான ஒரு விஷயத்தைச் செய்யமுடியும் – உடலை மீண்டும் நீங்கள் மண்ணுக்குத் திருப்பி அளிக்கவேண்டும். நீங்கள் அதை வளிமண்டலத்திலோ அல்லது ஒரு உலோகப் பெட்டியிலோ விடக்கூடாது. இந்த உடல் மண்ணிலிருந்து வந்துள்ளது, அது மண்ணுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.
இது ஏதோ தத்துவம் அல்ல – இந்த கிரகத்தின் மீது இருக்கும் உயிர், அடிப்படையில் ஒரு கார்பன் (கரிமம்) சுழற்சியாக இருக்கிறது. சில இணையதள பருவநிலை போர்வீரர்கள், கரிமத்தை விஷமாக எண்ணுகின்றனர். இருந்தாலும், நீங்களும், நானும், மரமும் – அனைத்தும் கரிமத்திலிருந்து உருவாக்கப்பட்டவர்கள். உயிர் நிகழ்வதற்கு கரிம சுழற்சி தேவைப்படுகிறது.
இந்த கிரகத்தின் மீது கார்பன் உயிரியின் முக்கிய ஆதாரம் என்ன? எது இந்தச் சுழற்சியைத் தூண்டவும், பராமரிக்கவும் செய்கிறது? முன்னூறு கோடிக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னர், ஒற்றை செல் நுண்ணுயிரி தோன்றியது, பிறகு மெல்லமெல்ல அது பாசி, பூஞ்சை என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அதன் பிறகு குறிப்பிட்ட பாக்டீரியாவானது, சூரியனின் நிரந்தர சக்தியைப் பயன்படுத்தி தனக்கான சக்தி, உணவு மற்றும் வாழ்வை உருவாக்கும் திறன் பெற்று இந்த பூமியின் முதல் உயிராக வெளிப்பட்டது.
அப்போதுதான் ஒளிச்சேர்க்கை தொடங்கியது. இந்த செயல்முறையானது, சுற்றியிருக்கும் கார்பனைக் கைப்பற்றி, அதை கார்பன் சர்க்கரைகளாக மாற்றுகிறது. இது நுண்ணுயிரியுடன், ஒரு நிரந்தரமான, நுட்பமான பரிமாற்றச் செயல்முறையை உருவாக்குகிறது. முதல் 15 – 20 அங்குல மண், பூமி மீது அமைக்கப்பட்டுள்ள எந்த ஒரு தொலைத்தொடர்பு அல்லது பங்குச்சந்தையைக் காட்டிலும், மிகமிக சிக்கலாகவும், அதிநுட்பமாகவும் உள்ளது.
இன்றைக்கு, மிகப்பரவலாக அறியப்படுவது என்னவென்றால், குடல் நுண்ணுயிரிகளின் உதவி இல்லாமல் நீங்கள் சாப்பிடும் உணவை உங்களால் செரிக்கமுடியாது. உங்கள் உடலின் 40%க்கும் சற்று அதிகமாக மட்டும்தான் உங்களது பெற்றோரின் மரபியல் செல்கள்; எஞ்சியுள்ள ஏறக்குறைய 60% நுண்ணுயிரி செல்களாக உள்ளன. நமது உயிர் என்பது, இந்த மண்ணில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ அதன் விளைவாகவே இருக்கிறது. இந்த கார்பன் சங்கிலியில், நாம் ஒரு இணைப்பாகத்தான் இருக்கிறோம், மற்றும் மண் என்பது ஒரு மிகப்பெரிய இணைப்பு. நீங்கள் ஒரு இணைப்பை உடைத்தால், சங்கிலி அறுந்து விழுந்துவிடுகிறது. இதுதான் இப்போது மண்ணுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நாம் மண்ணைப்பற்றி பேசத் தொடங்குவதற்கு முன்னால், பெரும்பாலான மக்களும் இதைப்பற்றி அறியாமல் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். பல வழிகளிலும், அது பசுமைக்கரங்கள் திட்டமாக இருந்தாலும், நதிகளை மீட்போம் அல்லது காவேரி கூக்குரல் என்றாலும், அவையனைத்தும் மண் குறித்த இயக்கங்கள்தான். நாம் நீர் குறித்து முதலில் பேசிக்கொண்டிருந்தோம், ஏனென்றால் அதனுடன் உங்களால் மிக எளிதாகத் தொடர்புகொள்ள முடியும்.
ஒரு உதாரணம் தரவேண்டும் என்றால் – தற்போது யோக மையத்தைச் சுற்றிலும் இருக்கும் ஓடைகள், இரண்டரை மாதங்கள் மழை இல்லாததற்குப் பிறகும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இது எப்படி சாத்தியம்? மெல்ல உருகும் பனிப்பாறைகள் எதுவும் இந்த மலை மீது இல்லை. பிறகு ஓடை நீர் எங்கிருந்து வருகிறது? இது ஏனென்றால், மலையிலிருக்கும் மண் 60 - 70% கரிம வளத்தைக் கொண்டுள்ளது. இதனால் மண் நீரைப் பிடித்து வைத்திருந்து, பிறகு வருடம் முழுவதும் அதை மெல்லக் கசியவிடுகிறது.
நமது நாட்டில் இருக்கும் விவசாய மண்ணில் 0.5%க்கும் குறைவான கரிமவளம் இருப்பதுதான் தற்போதைய நிலை. அதாவது நமது விவசாய நிலம் பாலைவனமாவதன் விளிம்பில் இருக்கிறது. தெற்கு ஐரோப்பாவில்கூட மண்ணின் கரிமவளம் 1.2%க்கு சற்று அதிகமாகவும், வடக்கு ஐரோப்பாவில், ஏறக்குறைய 2% வளமும் உள்ளது. அமெரிக்காவில், சுமார் 50% மேல்மண் போய்விட்டதாகக் கணக்கிடப்படுகிறது.
1920ல் இருந்து நாம் உண்ணும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பீடு 70-90% குறைந்துள்ளது. மண்ணின் நிலை சிறிய விஷயமல்ல, மற்றும் அது இறுதித்தீர்ப்பு நாளும் அல்ல. தற்போது, அடுத்த 10-15 வருடங்களில் சரியான விஷயங்களைச் செய்தால், நாம் குறிப்பிடத்தக்கவாறு அதை சீராக்கமுடியும்.
நம்மால் அதை உண்மையில் சீர்செய்யமுடியும் என்பது இந்தத் தலைமுறைக்கான சவாலாகவும், பொறுப்பாகவும் மற்றும் சிறப்புரிமையாகவும் உள்ளது. தற்போது, ஒவ்வொரு வருடமும் சராசரியாக 27,000 நுண்ணுயிர் உயிரினங்கள் பூமியில் அழிந்துகொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால், 30–40 வருடங்களில், நாம் எப்படிப்பட்ட ஒரு கட்டத்தை அடைந்திருப்போம் என்றால், அப்போது மண்ணுக்குப் புத்துயிரூட்ட நாம் முயற்சித்தாலும், அது பலன் தருவதற்கு மற்றொரு 150–200 வருடங்கள் தேவைப்படும். தற்போது, நாம் காலத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம், அதாவது இப்போது நாம் செயல்பட்டால், அடுத்த 15–20 வருடங்களில், நம்மால் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையை சாதிக்கமுடியும். இதற்கு மேலும் நாம் இதனைத் தாமதிக்கமுடியாது. இப்போது இது நிகழ்ந்தாக வேண்டும்.