சத்குரு எக்ஸ்குளூசிவ்

பஞ்சமுண்ட சாதனா: இந்த அதிர்ச்சியூட்டும் தாந்திரீக பயிற்சியின் நோக்கம் என்ன?

ஐந்து மண்டையோடுகளின் பயன்பாட்டுடன் தொடர்புடைய பஞ்சமுண்ட சாதனா போன்ற அமானுஷ்யமான தாந்திரீக பயிற்சிகளில் ஆர்வமா? கட்டுக்கதைகளில் இருந்து யதார்த்தம் உரைக்கும் சத்குரு, மனிதநேய உணர்வுடனும், உங்களைச் சுற்றிலுமிருக்கும் உயிர்களுடன் ஈடுபாடும் கொண்டு உங்களது நாட்டத்தைப் பண்படுத்துவது ஏன் முக்கியமாக இருக்கிறது என்பதற்கும் விளக்கம் தருகிறார்.

கேள்வியாளர்: சத்குரு, தாந்திரீகம் செய்பவர்கள் பஞ்சமுண்ட சாதனா செய்வதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்; அது உண்மையா? அப்படி உண்மையாக இருந்தால் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? அவர்களது நோக்கம் என்ன?

ஐந்து மண்டையோடுகள், ஐந்து உயிரினங்கள்

சத்குரு: ஓ, பஞ்சமுண்டா. பஞ்சமுண்டா என்றால் ஐந்து மண்டையோடுகள். அவர்கள் வழக்கமாக, ஒரு பாம்பின் மண்டையோடு, தவளை, நரி, புலி அல்லது நாய் மற்றும் மனித மண்டையோட்டையும் பயன்படுத்துகின்றனர். பெண்கள், கவலைகொள்ள வேண்டாம் – அது எப்போதும் ஒரு ஆண் மண்டையோடுதான். நீங்கள் ஏன் பஞ்சமுண்டாவில் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள்? ஐந்து மண்டையோடுகள் மற்றும் ஒரு இறந்த உடல் மீது அமர்ந்து, சாதனா செய்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா? இந்தக் கேள்வி அறிந்துகொள்வதற்கானது, தனிப்பட்ட தேடுதலுக்கானதல்ல. உங்களை ஒரு சமநிலையான, அழகான மனிதராக உருவாக்குவதற்கு உதவும் ஒரு நல்ல பயிற்சியை நாங்கள் உங்களுக்கு கற்றுத்தருகிறோம்.

அதனால், இந்த பஞ்சமுண்டா எதற்காக? பாம்பிலிருந்து தவளைக்கு, தவளையிலிருந்து நரிக்கு, நரியிலிருந்து ஒரு பெரிய விலங்குக்கு, மற்றும் மனிதருக்கு, ஒரு ஏறுமுகமான தொடர்பு இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய வெவ்வேறு தேவிகளும்கூட இதற்குக் காரணமாக உள்ளனர். பாரம்பரியமாக, பல்வேறு தேவிகளும் குறிப்பிட்ட விலங்குகளால் குறிக்கப்பட்டுள்ளனர், அல்லது குறைந்தபட்சம் அந்த விலங்குகள் அவர்களுடைய வாகனங்களாக இருக்கின்றன.

சாமுண்டீஸ்வரி ஒரு புலி மீது அமர்ந்திருக்கிறாள், தாகினி ஒரு நரி மீது அமர்ந்து இருக்கிறாள், மற்றும் இன்றைக்கு அதிகம் அறியப்படாத மற்ற தேவிகளும் உள்ளனர். அத்தகைய திருவுருவங்கள், ஐந்து வித்தியாசமான நோக்கங்களுக்காகவும், மற்றும் வாழ்வின் அம்சங்களுக்காகவும் உருவாக்கப்பட்டன. அதேபோல, பஞ்சவாயுக்கள்[1] உள்ளன; யோகமுறைப்படி, ஒருவர் தமது நன்மைக்காக அவர்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். மேலும், அதே பஞ்சவாயுக்களை சில வினோதமான ஆய்வுக்காகப் பயன்படுத்த விரும்பும் மக்களும் இருக்கின்றனர்.

ஆய்வு கொடூரமானதாக மாறும்போது

இந்த ஆராய்ச்சியானது, விஞ்ஞானபூர்வமானதாக இருக்கும்போதே, சில நேரங்களில் மிகவும் கொடூரமானதாகவும் இருக்க முடியும். கடந்த தலைமுறைகளில், ஐரோப்பா மற்றும் ஆசியாவிலிருந்த விஞ்ஞானிகள், வாழும் மனிதர்கள் மீது மிகவும் கொடூரமான பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். பஞ்சமுண்டாவும், அதனுடன் தொடர்புடைய பயிற்சிகளும் எவருக்கும் எதிர்ப்பானதாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் அவர்களுக்கு ஒரு மண்டையோடு தேவைப்பட்டால், அவர்கள் எப்படியாவது அதைப் பெற்றாகவேண்டும். ஒரு தவளையோ அல்லது ஒரு பாம்போ அதனதன் மண்டையோட்டை பெரிதாக மதிக்கிறது, ஆனால் அவை இயற்கையாக மரணமடைவதற்கு யாரும் காத்திருக்க மாட்டார்கள். கடந்த காலங்களில், மனித உயிர்ப்பலிகள் - ஆன்மீக நாட்டத்தைத் திருப்தி செய்வதற்கு மட்டுமல்லாமல், விஞ்ஞானபூர்வமான காரணங்களுக்காகவும் - உலகெங்கும் நிகழ்ந்துள்ளன.

மனிதநேய உணர்வுடனும், உங்களைச் சுற்றிலுமிருக்கும் உயிர்களுடன் ஈடுபாடும் கொண்டு உங்களது நாட்டத்தைப் பண்படுத்துவது அதிமுக்கியமாக இருக்கிறது. இல்லையென்றால், அது பொறுப்பற்ற தன்மைக்கு வழிநடத்திச் செல்லும். பல விஷயங்களை அறிந்துகொள்ள விரும்பிய ஆராய்ச்சியாளர்கள் இருந்துள்ளனர், ஆகவே அவர்கள் உலகமெங்கும் பயணம் செய்து, அவர்களது பயணங்கள் குறித்து புத்தகங்களை எழுதினர். மேலும், பொறுப்பில்லாமல் மக்களைக் கொன்று குவித்துக்கொண்டு, உலகெங்கும் பயணம் செய்த ஆராய்ச்சியாளர்களும் இருந்தனர். ஆகவே, உங்களது தேடுதல் மனிதநேயமாக்கப்படுவது முக்கியமானது.

இரண்டாம் உலகப் போரின்போது, மனிதர்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பரிசோதனைகளின் வழிமுறைகளை, இன்றைக்கு அறிவியல் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதிலும், சோதனைகளிலிருந்து பெறப்பட்ட தகவலறிவு இன்னமும் மதிப்புமிக்கதாக இருப்பதை நான் கேள்விப்பட்டேன். இந்தப் பரிசோதனைகளில் இருந்து பெற்ற தகவலறிவினால் நாம் அனைவரும் பலனடைந்து கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் ஏற்படுத்தியுள்ள வலிக்காக பொறுப்பேற்பதை நாம் விரும்புவதில்லை. வாழ்க்கை இந்த விதமாக செயல்படுவதில்லை; அது இரண்டையும் வழங்குகிறது. அதைப்போல, பஞ்சமுண்டா செயல்முறை சிறிதளவு மதிப்புமிக்கதாக இருக்கலாம், ஆனால் அது நீங்கள் தேடவேண்டிய ஒன்றல்ல.

அடக்குமுறை மீது நாட்டமா, விடுதலையில் நாட்டமா?

ஆகவே, “அவர்களது நோக்கங்கள் என்ன?” என்ற கேள்வி எழுகிறது. அதிகாரத்துக்கான மனித ஆர்வம் வரம்பில்லாதது. மக்கள் பணம் சம்பாதிக்கலாம், அறிவியல் ஆராய்ச்சி செய்யலாம், தங்களைக் கல்வியில் மேம்படுத்திக்கொள்ளலாம், தேர்தலில் போட்டியிடலாம், அல்லது ஒரு துப்பாக்கியைக் கையிலெடுக்கலாம் – அதிகாரத்தின் தேடுதலில் அனைத்தையும் செய்யலாம். பஞ்சமுண்டா மற்றும் அதைப்போன்ற பயிற்சிகளும்கூட அதற்காகத்தான் இருக்கின்றன. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள உயிர்களின் மீது ஆளுமை கொள்வதனால் அதிகாரத்தைப் பெறுவதற்கு விரும்புகின்றனர். ஆனால் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் மீது அடக்குமுறை செலுத்துவதால் நீங்கள் என்ன சாதிப்பீர்கள்?

வாழ்வின் இலக்கு முக்திதானே தவிர, அடக்குமுறை அல்லது அதிகாரம் அல்ல; தன்னிலிருந்தே விடுபடுவது, தான் சேர்த்துவைத்த பயனற்ற பொருட்களிலிருந்து, உடல் மற்றும் மனதின் வழிகளிலிருந்து, விலங்கு இயல்பிலிருந்து, மற்றும் வாழ்வின் இருமைகளிலிருந்து விடுபடுவது. ஆகவே, அத்தகைய பயிற்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்தவை என்பதால், நாம் அவற்றை விட்டுவிடுவோம்.

ஆவிகள் மற்றும் ஆவி பீடித்த வீடுகள்

அத்தகைய விஷயங்களில் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை, ஆனால் அவற்றில் ஈடுபட்ட மனிதர்களைச் சந்தித்துள்ளேன். மக்கள் ஆவிகளைப்பற்றி பேசும்போது நான் ஆர்வம் கொண்டு நானே அதைப் பார்க்க விரும்பியுள்ளேன். ஆகவே மயானங்களுக்குச் சென்று, நீண்ட நேரத்துக்கு நான் அமர்ந்திருக்கிறேன், ஆனால் ஆவிகள் ஒருபோதும் வரவில்லை – இறந்த உடல்கள் மட்டுமே வந்தன.

வாழ்வின் இலக்கு முக்திதானே தவிர, அடக்குமுறை அல்லது அதிகாரம் அல்ல; தன்னிலிருந்தே விடுபடுவது, தான் சேர்த்துவைத்த பயனற்ற பொருட்களிலிருந்து, உடல் மற்றும் மனதின் வழிகளிலிருந்து, விலங்கு இயல்பிலிருந்து, வாழ்வின் இருமைகளிலிருந்து விடுபடுவதே
வாழ்வின் இலக்கு.

என்னைத் தவிர அனைவரும் பார்த்திருப்பதாகத் தோன்றிய ஆவிகளைக் காண்பதற்காக நான் பல இடங்களுக்கு சென்றேன். சில இடங்களை ஆவிகள் பீடித்திருப்பதாக மக்கள் கூறினர். ஆகவே, இந்த எல்லா இடங்களுக்கும் நான் சென்று, ஆவிகளை சந்திக்கும் எதிர்பார்ப்பில் அங்கேயே உறங்குவதற்கு அனுமதி பெற்றேன். ஆனால் அங்கு நான் சென்றபோது, எந்தக் கதவும் தானாகவே திறக்கவுமில்லை, மூடவுமில்லை. நான் காத்திருந்தேன், ஆனால் ஆவிகள் வரவில்லை.

அங்கு இருந்த மற்றொரு நபர், ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஆவிகளுக்கு அவரது இரத்தத்தை உணவாக அளிப்பதாகக் கூறிக்கொண்டிருப்பார். அதற்கான உயிருள்ள சாட்சியாக அவரது கட்டைவிரல் பாதி உண்ணப்பட்டிருந்தது. இரண்டு அமாவாசைகளுக்கு அவருடன் நான் சென்றேன், ஆனால் ஆவிகள் வரவில்லை.

அச்சமூட்டும் முட்டை மர்மம்

அதற்குப் பிறகு, நான் மற்றொரு நபரிடம் சென்றேன். அவர் பழுப்பு மற்றும் செந்தூர வண்ணத்தில் கண்ணாடி பாட்டில்கள் வைத்திருந்தார். அவர் சில ஆவிகளைப் பிடித்து, பாட்டில்களில் அடைத்து வைத்திருப்பதாகக் கூறினார். அவர் மைசூர் நகர மாநகராட்சியில் ஒரு அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார், ஆனால் மாலை வேளைகளில், அவர் ஒரு கருப்பு உடை அணிந்துகொண்டு மந்திரவாதியாக இருந்தார். அவரை நான் நட்பாக்கிக்கொண்டு, அவருடன் அமர்ந்திருந்தேன். அவரது 15-18 பாட்டில்களில் ஒரு பாட்டிலைப் பெறுவதற்காகக் காத்திருந்த தருணங்களில், அவர் எல்லாவித விசித்திரமான விஷயங்களையும் கூறினார். ஆனால் அந்த பாட்டில்களுக்கு அருகில் என்னை ஒருபோதும் நெருங்கவிடாமல் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்.

அவர் ஒரு கோலம் வரைந்து, அதன் ஒவ்வொரு ஐந்து மூலையிலும் முட்டைகளை வைத்தார். அந்த ஐந்து முட்டைகளும் ஒரு சப்தத்துடன் தெறித்து உடைந்தன. அது, ஆவிகள் வந்துவிட்டதற்கான நிரூபணம் என்று அவர் கூறினார். இதனை நேரடியாக என் கண்முன்னே நான் பார்த்ததால், இது உண்மையாகவே எனக்கு ஆர்வமூட்டியது. ஒவ்வொரு முட்டையும் மற்றதிலிருந்து 8 – 9 சதுர அடி தொலைவில் இருந்த நிலையில், எப்படி முட்டைகள் வெடித்தன? முட்டைகளுக்குள் சிறு வெடிகளை அவர் வைத்திருப்பதற்கான வழியே இல்லை. அவை சாதாரணமான கோழி முட்டைகள்தான். “இது என்ன?” என்று நான் பார்த்துக்கொண்டும், சிந்தித்துக்கொண்டும் இருந்தேன்.

நான் கொல்லைப்புறம் சென்று, மேலும் கீழுமாக நடந்துகொண்டும், ஒவ்வொன்றையும் பார்த்தபடியும் சிந்தனையில் இருந்தேன். அப்போது மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு கொய்யாப்பழத்தை நான் பார்த்தேன், கைதட்டினேன், அது விழுந்துவிட்டது. ஒரு கைதட்டலில் கொய்யாக்களை என்னால் விழவைக்கமுடிந்ததை நான் உணர்ந்தேன். எனது நண்பன் ஒருவனை அழைத்துவந்து, “இதைக் கவனி”, என்று கூறினேன். எனக்கு அப்போது 17 – 18 வயதுதான் ஆகியிருந்தது. நான் ஒரு பழத்தைச் சுட்டிக்காட்டினேன், மேலும் ஒரு கைதட்டலுக்குப் பிறகு, அது மண்ணில் விழுந்தது.

பிறகு என் ஒட்டுமொத்த உடலமைப்பிலும், மனரீதியாகவோ அல்லது உணர்ச்சிரீதியாகவோ இல்லாத, ஆனால் இரசாயனரீதியாக ஆழமான ஒரு நிலையில் கடுமையான விலகல் அல்லது வெறுப்புணர்வு ஊடுருவியது. இந்த விஷயங்களை மீண்டும் அந்த மாதிரி நான் ஒருபோதும் பயன்படுத்தமாட்டேன் என்பதை அறிந்துகொண்டேன். மறுபடியும் அந்த நபரிடம் ஒருக்காலும் செல்லவோ, பாட்டில்களில் இருந்த அவரது ஆவிகளில் விருப்பம் கொள்ளவோ இல்லை.

உங்களது ஆய்வின் நோக்கம் ஏன் முக்கியமாகிறது

பலவிதமான ஆய்ந்தறிதல்கள் உள்ளன. ஒருவரது முக்திக்கு வழிநடத்தும் ஆராய்ச்சிகள் ஒரு விஷயம். எல்லா உயிர்களுக்கும் பலனளிக்கும் ஆராய்ச்சிகள் மற்றொரு விஷயம். மற்றும் யாருக்கும் பலனளிக்கும் அவசியமில்லாமல், வெறுமனே குறிப்பிட்ட விஷயங்களை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிகள் உள்ளன.

பல்வேறு வழிகளில் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட சக்திகளைப் பெறுவதற்காக, இந்த விதமான சாதனா செய்யப்படுகிறது. நான் இன்றைக்கும் எனது கைகளைத் தட்டிக்கொண்டிருக்கிறேன் – உங்களை வீழ்த்துவதற்கு அல்ல, ஆனால் முற்றிலும் வித்தியாசமான ஒரு நோக்கத்துக்காக செயல்படுகிறேன். இந்தக் கைதட்டல்கள் சக்தி பெறுவது குறித்தது அல்ல, ஆனால் அது ஒருவர் தனது உயிரை பலி கொடுப்பது குறித்தது.

நீங்கள் ஆற்றல் வாய்ந்த எதையும் அடைவதற்கு முன்பு, அதனை உங்கள் சொந்த இலாபத்திற்காக இல்லாமல், மற்றவர்களின் நன்மைக்காக அதனைப் பயன்படுத்துவதற்கு அது உங்களுக்கு உதவும் காரணத்தால், உங்களை மனித நேயத்தில் ஆழமாக முதலீடு செய்வது முக்கியமானது. நீங்கள் செய்வது புத்தக ஆராய்ச்சிதான் என்றால், அதை விட்டுவிடுங்கள்.

மறைஞானத்தை ஆய்ந்தறிய முற்படும்போது, அதனால் மூழ்கடிக்கப்படாமல் இருப்பது முக்கியமானது. இந்த விதமான சாதனாக்களில் தங்களையே முதலீடு செய்துள்ள பலர் இருக்கின்றனர், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த அல்லது அதிகாரம் செலுத்த முயற்சிக்கும் அதே தேவிகள் அல்லது உயிர்களால் சித்ரவதை செய்யப்பட்டு உணவாகியுள்ளனர். நீங்கள் ஒன்றை அடிபணியச் செய்வதற்கு அல்லது ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிக்கும்பொழுது, எப்போதுமே நீங்கள் வெல்வதில்லை. அந்த மற்றொன்றும் உங்களை அடிபணியச் செய்யலாம் அல்லது ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் நான் பேசிக்கொண்டிருக்கும் மறைஞானத்தின் இயல்பு அது அல்ல.

நீங்கள் ஆற்றல் வாய்ந்த எதையும் அடைவதற்கு முன்பு, அதனை உங்கள் சொந்த இலாபத்திற்காக இல்லாமல், மற்றவர்களின் நன்மைக்காக அதனைப் பயன்படுத்துவதற்கு அது உங்களுக்கு உதவும் காரணத்தால், உங்களை மனித நேயத்தில் ஆழமாக முதலீடு செய்வது முக்கியமானது. நீங்கள் செய்வது புத்தக ஆராய்ச்சிதான் என்றால், அதை விட்டுவிடுங்கள். அப்படிப்பட்ட இடங்களுக்குக்கூட செல்லாதீர்கள். ஏனென்றால் அதிலிருந்து எப்படி நீங்கள் வெளிவருவது என்பதை அறிந்திராத சில சூழ்நிலைகள் இருக்கக்கூடும்.