இன்றைய உலகில் தங்கள் குடும்பத்துக்காக பராமரிப்பு, மற்றும் பொருள் ஈட்டும் பொறுப்பை பல தாய்மார்கள் சுமக்கின்றனர். அவர்கள் ஒரு அன்பான தாயாகவும், தேவைப்படும்போது ஒரு வீராங்கனையாகவும் இருக்கவேண்டியுள்ளது. அவர்களுக்காக, ஆண் தன்மையையும் பெண் தன்மையையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதைக் குறித்து, சத்குரு தம் ஆழ்ந்த ஞானத்தை வழங்குகிறார். மேலும், இணைத்துக்கொள்ளுதலில் எப்படி ஈடுபாடுகொள்வது என்பதையும், பிழைப்பு செயல்முறையில் சிக்கிப்போகாமல் தவிர்ப்பது எப்படி என்பதையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
நான் ஐந்து உடன்பிறப்புகளில் மூத்தவள் என்பதுடன் எனது நான்கு குழந்தைகளுக்கு நான் துணையில்லாத தாயாகவும் இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும், நான் என் இளைய சகோதரர்களையும், சகோதரிகளையும் கவனிக்க வேண்டியிருந்தது, இப்போது நான் என் நான்கு மகள்களையும் வளர்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு நான் கண்டிப்பு மிகுந்த ஒரு போர்வீரராகவும் ஒரு தலைவியாகவும் இருக்கவேண்டிய அழுத்தத்தை உணர்கிறேன், விரைவில் நான் உடைந்துபோகும் ஒரு நிலையை அடையக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன். என் சூழ்நிலையில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் என்ன அறிவுரை கூறுவீர்கள்?
சத்குரு: துரதிஷ்டவசமாக, படைகள் மற்றும் வீரர்கள் இல்லாமல் வாழக்கூடிய ஒரு உலகத்தை நாம் இன்னமும் உருவாக்கவில்லை. போர்வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களுக்கு நாம் தலைவணங்குகிறோம். நாடும் அதன் எல்லைகளும் பாதுகாப்பாகவும், தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்கின்றனர். ஆனால் ஒருவர் எப்பொழுதும் மற்றவரை ஏன் தாக்குவதற்கு விரும்புகிறார்? ஏனென்றால் அவர்களும் போர்வீரர்களாக இருக்கின்றனர். நீங்கள் ஒரு போர்வீரர் என்றாகிவிட்டால், பாதுகாப்பு மற்றும் தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் ஒரு போர்வீரர் என்றாகும்பொழுது, செய்ய வேண்டிய சில விஷயங்களின் காரணத்தால், ஏதோ ஒரு வகையில், ஒரு தாயாக இருப்பதன் அழகை நீங்கள் அழிக்கிறீர்கள். நான்கு குழந்தைகளைப் பராமரிப்பதும், அவர்களுக்குத் தேவையானவற்றை ஈட்டுதலும், ஒரு முழு நேரப் பணியை விட அதிகமானது. ஆனால், நீங்கள் இதை ஒரு போர் வீராங்கனையாக அணுகுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிகமான போர் வீரர்களையே உருவாக்குவீர்கள். அதிகமான போர்வீரர்கள் என்றால், அதிகமான போர்கள் என்பது பொருள். இதற்காகவா நாம் குழந்தைகளைப் பெறுகிறோம்? அவர்கள் போர் வீரர்கள் ஆவதற்கும், மற்ற போர்வீரர்களை கொல்வதற்கும், அல்லது அந்த செயல்முறையில் கொல்லப்படுவதற்குமா குழந்தைகளைப் பெறுகிறோம் ? இதைத்தான் நாம் விரும்புகிறோமா?
ஆனால், உலகெங்கும் நாம் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். மக்கள் ஏன் ஒரு விளையாட்டைக்கூட ஆனந்தமாக ஆட முடியாமல் இருக்கின்றனர்? அவர்கள் ஒரு விளையாட்டை ஆடும்போது, அதனை ஒரு யுத்தம் போல சண்டையிடுகிறார்கள். அவர்கள் ஒரு டென்னிஸ் மட்டையையோ, அல்லது வேறு ஏதோ ஒரு பொருளையோ உபயோகிக்கலாம், ஆனால், உண்மையில் அவர்கள் ஒரு வாளைத்தான் உபயோகிக்க விரும்புகின்றனர். அதனால், ஒரு தாயாக இருப்பது மிகவும் மதிப்பு மிகுந்தது என்பதால், அதை ஒரு போர்வீரனைப் போல அணுகாதீர்கள்.
தாயாய் இருப்பது என்பது, ஒரு பெண் இன்னொரு உயிரை தன்னில் ஒரு பாகமாய் உணர அவளுக்கு இயற்கை வழங்கியுள்ள வாய்ப்பு. ஆண்கள் அல்லது பெண்கள் இருபாலாரும் இணைத்துக்கொள்ளுதலை உணரமுடியும், ஆனால் ஒரு ஆண் அவ்வாறு உணர்வதற்கு, அவரது எல்லைகளைத் தாண்டுவதற்காக பெருமுயற்சி செய்யவேண்டியுள்ளது. ஒரு பெண்ணுக்கோ, ஒரு எளிமையான செயல்கூட சட்டென்று இன்னொரு உயிரைத் தனக்குள் ஒரு பாகமாக உணரக்கூடிய ஒரு இடத்திற்கு அவளைக் கொண்டுவந்துவிடும். ஒரு உயிர் உங்களுக்குள் ஒரு பாகமாக இருக்க முடியும்போது, இன்னொரு உயிரும் உங்களுக்குள் ஒரு பாகமாக இருக்க முடியும். உங்களால் நான்கு பேருக்குத் தாயாக இருக்க முடியும் என்றால், உண்மையிலேயே நீங்கள் உலகத்திற்கே ஒரு தாயாக இருக்க முடியும்.
உலகிற்கு தாயாக இருப்பதற்குப்பதில், அதற்கு மாறாக நீங்கள் ஒரு போர் வீரராக இருப்பீர்களா? இது ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சி. உலகிற்கு ஒரு தாயாக இருப்பது என்றால் இணைத்துக்கொள்ளுதல், ஒரு அரவணைப்பு என்று பொருள். ஒரு போர்வீரராக இருப்பது என்றால் கைப்பற்றுதல் என்பது பொருள். நீங்கள் கைப்பற்றப்பட வேண்டுமா அல்லது இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு உயிரினமும், ஒவ்வொரு உயிரும் இணைத்துக்கொள்ளப்படுவதையே விரும்புகிறது, கைப்பற்றப்படுவதை அல்ல. ஆனால் நாம், இந்த விதமான கைப்பற்றும் தன்மைக்கு வந்துவிட்டோம்.
வரலாற்றுக் காலத்திலிருந்தே, மிக அதிகமான போர்வீரர்கள் இருந்துள்ளனர். உங்களது இனத்தைச் சார்ந்திராத எவரையும் கொல்ல முடியும். நாம் நீண்ட நெடுங்காலமாக பிழைப்பு செயல்முறையிலேயே இருந்ததால், இதுதான் உலகத்தின் வழியாக இருந்துள்ளது. ஆகவே, ஆண்தன்மையானது, பிழைப்பிற்கு பொறுப்பேற்கிறது, ஆனால் பண்பாட்டு நாகரீகம் பெண் தன்மையின் காரணத்தினால் மட்டும்தான் நிகழும். நான் ஆண்தன்மை, பெண் தன்மை என்று கூறும்பொழுது, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்பதைக் குறிப்பிடவில்லை. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இணைந்திருந்த காரணத்தினால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள்.
ஒரு பெண்ணாக இருப்பதால், உங்கள் தந்தை உங்களுக்குள் இல்லை என்று அர்த்தமா? அவர் இருக்கிறார். ஒரு ஆணாக இருப்பதால், உங்கள் தாய், உங்களுக்குள் இல்லை என்று அர்த்தமா? அவர் இருக்கிறார். ஆண்தன்மையும் பெண்தன்மையும் உங்களுக்குள் நல்ல சமநிலையில் இருக்கும்போது மட்டும்தான், நீங்கள் பிழைப்பையும் கவனிக்க முடியும், பண்பாட்டு நாகரீகத்தின் உந்துசக்தியாகவும் இருக்க முடியும். அடுத்த தலைமுறையினருக்கு பிழைப்பிற்கான கருவிகள் மட்டுமல்லாமல், பண்பாட்டு நாகரீகமும் தேவைப்படுகிறது.
பூமியில் இன்னமும், பிழைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும், அடுத்த தலைமுறையினருக்கு பண்பாட்டுநாகரீகம் தேவைப்படுகிறது, ஏனென்றால் மனிதகுல வரலாற்றிலேயே. முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பிழைப்புச் செயல்முறை சீரமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் வருடங்களுக்கு முன், கடல்கடந்த வெளி நாடுகளில் இருந்து, இந்தியாவிலிருக்கும் ஈஷா யோக மையத்துக்கு பயணிப்பது சாத்தியமாகி இருந்திருக்குமா?
ஒரு ஆணுக்கு, பயணம் மேற்கொள்வது சாத்தியமாக இருந்திருக்கலாம், ஆனால் ஒரு பெண்ணுக்கு பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாக இருந்திருக்காது. ஆனால் இன்றைக்கு, அது சாத்தியமாகிறது. இந்த முன்னேற்றம் ஒரு பிரம்மாண்டமான பாய்ச்சல். தொழில்நுட்பமானது செயல்பாட்டின் தளத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரையும் சமன் செய்துள்ளது. ஒவ்வொரு மனிதரும் தனக்குள் ஆண் தன்மையையும், பெண் தன்மையையும், சமமான விகிதத்தில் போற்றிப் பாதுகாப்பதற்கான நேரம் இது. அதனால் நீங்கள் ஒரு அன்பான தாயாகவும், தேவைப்படும்பொழுது ஒரு போர்வீரராகவும்கூட இருக்கமுடியும். போர்வீரர் என்ற உங்களது போர்க்குணத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். ஏனென்றால் நீங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ எப்போதும் சண்டையிடும் சூழலையே உருவாக்கிவிடுவீர்கள்.