நீங்கள் உண்மையான விடுதலையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? வாழ்வின் முழுமையான வீச்சையும் பார்த்து, அனுபவித்துணர்ந்து, உண்மையான நிறைவை நாம் கண்டிருந்தால்தான், மோட்சம் அல்லது வாழ்வு மற்றும் மரணத்திலிருந்து விடுதலை சாத்தியப்படுகிறது என்பதை சத்குரு விளக்குகிறார். பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கான சரியான அணுகுமுறையும், உறுதியும் உச்சபட்ச விடுதலையை உணர்வதற்கு நமக்கு எப்படி உதவமுடியும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
கேள்வியாளர்: சத்குரு, நான் எப்படி மோட்சம் அடைவது?
சத்குரு: மோட்சம் என்றால் உச்சபட்ச விடுதலை – வாழ்வு மற்றும் மரணத்தின் செயல்முறையில் இருந்தே விடுதலை. இந்த செயல்முறையில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமா? உச்சபட்ச விடுதலைக்கான பேராவல் கொள்வதற்கு, நீங்கள் போதுமான அளவுக்கு, வாழ்க்கையை அதன் ஏற்றங்கள், இறக்கங்கள் என்று அனைத்தையும் பார்த்திருக்க வேண்டும். நீங்கள் வாழ்க்கையின் ஒட்டுமொத்த வரம்பையும் பார்த்து, உணர்ந்திருக்கிறீர்கள் என்றால், அப்போது, வாழ்வு, மரணம் மற்றும் வேறு எந்த செயல்முறையையும் கடந்து செல்வதற்கான பேராவல் எழுகிறது.
உச்சபட்ச விடுதலையை எப்படி அடைவது? என்னுடன் அமர்ந்திருக்கும் தவறை நீங்கள் செய்துவிட்டால், மோட்சத்தின் விதை ஊன்றப்படுகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது உங்களை இந்தத் திசையில் நகர்த்திக்கொண்டே இருக்கும். உங்களுக்கு ஆரோக்கியம், நல்வாழ்வு, மன அமைதி அல்லது வாழ்க்கையில் வெற்றியை வழங்குவது எனது நோக்கங்கள் அல்ல. உங்களது உடலும், மனமும் சிறப்பாக செயல்படுவதன் விளைவாக இந்த விஷயங்கள் நேரக்கூடும், ஆனால் இது எனது நோக்கமல்ல.
உங்களை உச்சபட்ச சாத்தியத்துக்கு எடுத்துச் செல்வதுதான் எனது நோக்கம். இது நிகழத் தொடங்கும்போது, மற்ற அனைத்தும் இயற்கையாகவே சிறப்பாக செயல்படும், ஆனால் இது என்னுடைய நோக்கம் அல்ல. சந்தைப்படுத்தும் காரணங்களுக்காக நாம் பயன்படுத்தும் உபரி பலன்களாக மட்டுமே இவை இருக்கின்றன, ஏனென்றால் தற்போது மக்கள் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பாக இருந்தாலும், அவர்கள் அப்போதும் திருப்தி இல்லாமல்தான் இருப்பார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்தப் புரிதலுக்கு அவர்கள் வருவதற்கு முன், அவர்கள் வாழ்க்கையில் பலவற்றையும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
பதஞ்சலி எழுதிய யோக சூத்திரங்கள், சுமார் இருநூறு சூத்திரங்களை உள்ளடக்கியுள்ளன. வாழ்க்கைக் குறித்து என்றைக்கும் சொல்லக்கூடிய அனைத்தும் யோக சூத்திரங்களில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. யோக சூத்திரங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை காரண அறிவுடைய ஒரு மனதால் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் அவை எழுதப்பட்டுள்ளன. பலரும் யோக சூத்திரங்களைப் பற்றி அவர்களது சொந்த புரிதலை உருவாக்கி வைத்துள்ளனர்.
கற்றறிந்தவர்களால் ஒருபோதும் யோக சூத்திரங்களை கிரகித்துக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவை வாசிப்பதற்கான விஷயங்கள் அல்ல. யோக சூத்திரங்கள் உங்களுக்குள் இருந்து மெல்ல வெளிக்கொண்டு வரவேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. நீங்கள் எல்லா சூத்திரங்களையும் படிக்கக்கூடாது; ஒன்றை மட்டும் படித்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் அதனை செயல்படுத்திப் பாருங்கள். அது ஒரு சூத்திரம். அதனை நிதர்சனமாக்குவதற்கு முழு ஆயுள்காலமும் தேவைப்படலாம்.
யோக சூத்திரங்களைப் போன்ற மகத்துவமான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புத்தகம், ஒரு பாதி வாக்கியத்துடன் தொடங்குகிறது: “மேலும் இப்போது, யோகா.” இதன் பொருள் என்ன? நீங்கள் அனைத்தையும் – வளம், பணம், பாலியல், போதைப்பொருட்கள், மற்றும் உங்களை நிறைவு செய்துகொள்வதற்கான மற்ற ஒவ்வொரு சாத்தியத்தையும் முயற்சித்தீர்கள். ஒவ்வொன்றும் உங்களுக்கு இன்பத்தை, மகிழ்ச்சியை மற்றும் திருப்தியை வழங்கியது, ஆனாலும், நிறைவு ஏற்படவில்லை, மற்றும் இது எதுவும் உண்மையில் செயல்படாது என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்கள். இந்த உணர்தல் உங்களுக்குள் எழுந்தது என்றால், “எனவே இப்போது, யோகா.”
ஒரு புதிய கார் வாங்குவதாலோ அல்லது ஒரு புதிய துணையைத் தேடுவதாலோ, எல்லாம் சரியாகிவிடும் என்று நீங்கள் இன்னமும் நம்பினால், யோகாவுக்கான நேரம் வந்திருக்கவில்லை. நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டிருந்தால், எதுவும் உண்மையில் பயனளிக்கவில்லை என்று இறுதியாக நீங்கள் அறிந்திருந்தால், “எனவே இப்போது, யோகா,” இந்த உணர்தலுக்கு வந்துவிட்டீர்களா? இல்லையென்றால், யோகா உங்கள் முதுகுவலி மற்றும் தலைவலியை நீக்கிவிடும் என்பதும், அது உங்கள் ஞாபகத்தையும், மனக்குவிப்பையும் முன்னேற்றும் என்பதும், அது உங்கள் செயல்திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை நீக்கிவிடும் என்பதும் வெறும் சந்தைப்படுத்தலாக இருக்கிறது.
கேள்வியாளர்: ஏதோ ஒரு காரணத்தினால், நான் இந்தப் பிறவியில் தன்னையுணரும் தகுதியை இழந்துவிட்டால் – அடுத்த பிறவியில் ஆன்மீகப்பாதையைத் தொடருவதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா?
சத்குரு: அடுத்த பிறவி குறித்து, நான் மிகத்தெளிவாக இருக்கிறேன் - நான் திரும்பி வரப்போவதில்லை. ஒரு உதாரணத்துக்கு, நீங்கள் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்து, ஏற்கனவே அடுத்த வருடத்துக்காகத் திட்டமிட்டு, “நான் மூன்றாம் வகுப்பில் மீண்டும் படிக்கவந்தால், நீங்களே என் ஆசிரியராக இருப்பீர்களா?” என்று கேட்கிறீர்கள். நல்லது, எந்த ஆசிரியராக இருந்தாலும், அது வீணாகத்தான் போகும். இந்த வாழ்க்கை மதிப்புமிக்கது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். சொர்க்கம் அல்லது வேறொரு வாழ்க்கை இருக்கிறது என்ற யூகங்களை ஒதுக்கிவிடுங்கள்.
தற்போது, உங்களிடம் இந்த வாழ்க்கை உள்ளது. அதை எப்படி அதிகபட்ச உயரத்துக்கு எடுத்துச் செல்வது? ஏனென்றால், உங்களைத் தவிர, பிரபஞ்சத்தில் உங்களை தடுக்கக்கூடியது எதுவும் இல்லை. உங்களை தடுக்கக்கூடிய ஒரே விஷயம், உங்களது நோக்கமின்மை மட்டும்தான். இது தொடர்பாக, வரவிருக்கும் ஆண்டில் நாம் சமூக மட்டத்தில் சிறிதளவு வெப்பத்தை அதிகரிக்கப்போகிறோம்.
அதற்குத் தேவையான மென்பொருள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு போன்றவற்றை அமைக்கும் பணியில் நமது குழுக்கள் ஈடுபட்டுள்ளன, ஏனென்றால் உலகத்தில் ஈஷா யோகா செயல்முறையை பெரிய அளவில் நாம் அதிகப்படுத்த இருக்கிறோம். விழிப்புணர்வான உலகை உருவாக்கும் இயக்கத்தை நோக்கிய முதல் படி இது. இந்த பூமியை விழிப்புணர்வு அடையச் செய்வதற்கு நான் நினைத்துக்கொண்டு இருக்கும்போது, அடுத்த பிறவி என்பதே இல்லை என்பதை உங்களது மனதில் உறுதிப்படுத்த வேண்டும் – இது மட்டும்தான்.
கௌதம புத்தர், எட்டு வருடங்கள் கடுமையான சாதனாவில் ஈடுபட்டார். அவர் பல நாட்களாக அல்லது மாதங்களாக சாப்பிடாமல் இருந்ததால், அவரது உடல் மிகவும் பலவீனமடைந்தது. இப்போது புத்த பௌர்ணமி என்று அறியப்படுகின்ற, ஒரு பௌர்ணமி நாளன்று, அவர் ஒரு மரத்தின் கீழே அமர்ந்தார். அவர் பல விஷயங்களை அறிந்திருந்தார், ஆனால், தான் விடுதலை அடையவில்லை என்பதை அவர் உணர்ந்தார். ஒன்று உணரவேண்டும் அல்லது அந்த முயற்சியில் இறக்கவேண்டும் என்ற உறுதியுடன், அவர் அங்கே அமர்ந்தார். அதற்குப்பிறகு, அவர் உணர்வதற்கு எடுத்துக்கொண்டது ஒரு சில கணங்கள்தான். ஆகவே, உறுதியாக முடிவெடுக்காத காரணத்தினாலேயே அதற்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.
பெரும்பாலான நேரம், பொய்மையானது நல்ல நோக்கங்களுடன் வளர்ச்சி பெறுகிறது. உதாரணத்துக்கு, யாரோ ஒருவர் இறந்துகொண்டிருக்கும்போது, அவர்கள் இறப்புக்குப் பின் எங்கே செல்வார்கள் என்று அச்சம் கொண்டால், மக்கள் அவர்களிடம், “கவலை வேண்டாம், நீங்கள் சொர்க்கத்துக்குச் சென்று, கடவுளின் மடியில் அமர்ந்திருப்பீர்கள்”, என்று கூறுவார்கள். அதன் அடிப்படையில், மக்கள் பல கதைகளுடன், மேலும் தகவல்களை இணைத்துப் பெரிதாக்கிவிட்டனர். மண்ணில் சாய்ந்துவிட்ட யாரோ ஒருவரிடம் அல்லது ஒரு குழந்தையிடம் நீங்கள் கூறுவது, மற்ற அனைவருக்கும் உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.
ஒருவர் படுக்கையில் அல்லது வலியில் அல்லது துன்பத்தில் இருக்கும்போது, உண்மையல்லாத சில விஷயங்களை நீங்கள் கூறுகிறீர்கள். அப்போது அவர்களை சமாதானம் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில், அந்த நேரத்தில் அவர்களுக்கு அனுதாபம்தான் தேவையாக இருக்கிறதே தவிர, மெய்யறிவு அல்ல. நீங்கள் ஒரு குழந்தையிடம் அல்லது உடைந்துபோயிருக்கும் ஒருவரிடம் இனிமையான விஷயங்களைக் கூறுவது ஏனென்றால், அது அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. மற்ற அனைவருக்கும், அவர்களது கண்களைத் திறப்பது முக்கியமாக உள்ளது. அவர்களது தலையில் நீங்கள் தட்டவேண்டும் என்றால், அப்போது அதைத்தான் நீங்கள் செய்யவேண்டும்.
இந்த உறுதியுடன் கௌதமர் மரத்தின் கீழ் அமர்ந்ததும், அவரது உணர்தலுக்கு ஒரு சில கணங்கள்தான் தேவைப்பட்டது. அவர் எட்டு வருடங்களை வீணாக்கியிருந்தார். ஏனென்றால் அது ஒரு பாதை என்று அவர் நினைத்திருந்தார். ஒரு பாதை என்றால் அங்கு ஒரு தொலைவு இருக்கிறது என்பதுடன், அது எவ்வளவு நீண்டது என்பதும் உங்களுக்குத் தெரியாது. ஒன்றுமற்றதற்குள் ஒரு பாதை என்பது ஒரு முடிவில்லாத பயணம். அது ஒரு உள்முகமான பாதை. உங்களுக்கும், உங்கள் சுயத்துக்கும், எவ்வளவு தூரம் இருக்கிறது?
தூரம் என்பது இருந்தால், அதனுடன் காலம், முயற்சி மற்றும் எரிபொருள் தொடர்புடையதாகிறது. தூரம் இல்லையென்றால், நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அப்படியே திரும்புவது மட்டும்தான். வாழ்வு என்பது எங்கோ வெளியில் இருப்பதாக நினைக்கிறீர்கள். வாழ்க்கை இங்கே, உங்களுக்குள் இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உணர்தல் முடிந்துவிட்டது. ஆனால், இந்த உணர்தல் ஏன் நிகழ்வதில்லை? ஏனென்றால் அது உயர்ந்தபட்ச முன்னுரிமை பெறவில்லை. “நானும் ஞானமடைவதை விரும்புவேன், சத்குரு, ஆனால் இன்று என் பிறந்த நாள். நாளைக்கு, நான் ஞானமடைவேன்”, என்பதுதான் இது.
உங்களது வாழ்வை நீங்கள் அணுகும் விதம், காலத்தின் தேவைகளைப் பொறுத்து இருக்கவேண்டும், ஆனால் அந்தத் தேவைகள் உங்கள் முன்னுரிமைகளைத் தீர்மானிக்கக்கூடாது. உங்களது அடிப்படையான முன்னுரிமைகளை நீங்கள் அமைத்துவிட்டால், அதன் பிறகு தேவைக்கேற்ப நீங்கள் மற்ற விஷயங்களைச் செய்யமுடியும். இந்தக் கலாச்சாரத்தில், மகத்தான ஆசிரியர்கள் ஒரு மலைக் குகையில் அல்லது தனிமையான ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கவில்லை; அவர்கள் யுத்த களங்களில் இருந்தனர்.
ஆன்மீகத்தன்மை கொண்ட ஒரு நபர் ஏன் யுத்தத்தில் சண்டையிட்டார்? ஏனென்றால் அது தேவையாக இருந்தது. அப்போது ஒரு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருந்திருந்தால், அவர்கள் அதனைச் செய்திருக்கமாட்டார்கள்; ஆனால் அங்கே தேர்ந்தெடுத்தல் இல்லை என்னும்போது, அவர்கள் அதைச் செய்வார்கள், மேலும் அது எப்படி செய்யப்பட வேண்டுமோ அந்த விதமாக, அவர்கள் அதை முழுமையாக செய்வார்கள். அது உங்களது செயலில் இல்லை - அது தன்னிச்சையான தன்மையில் அல்லது நோக்கத்தில் உள்ளது. நோக்கம் வலிமையாக இருந்தால், அடுத்த பிறவியைப் பற்றி நீங்கள் ஏன் யோசனை செய்துகொண்டிருக்க வேண்டும்?