விழிப்புணர்வுடன் வாழ்தல்

செல்வம், ஆற்றல், அறிவு – இவற்றில் எதற்கு முன்னுரிமை வழங்குவது?

மூன்று பெண்தெய்வங்களாகிய லட்சுமி, துர்க்கை மற்றும் சரஸ்வதியின் வடிவங்களில் தெய்வீகப் பெண்தன்மையைக் கொண்டாடும் ஒரு தருணமாக நவராத்திரி திகழ்கிறது. ஒவ்வொரு பெண்தெய்வமும் குறிக்கும் வெவ்வேறு குணங்களை ஆராயும் சத்குரு, நீங்கள் ஒரு முழு வாழ்க்கை வாழ்வதற்கு உங்களது கவனம் எங்கே இருக்கவேண்டும் என்பதையும் விவரிக்கிறார்.

கேள்வியாளர்: சத்குரு, தேவி லட்சுமி நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறாள்?

சத்குரு: செல்வச்செழிப்பு மற்றும் வளம் சேர்ப்பதற்கான ஒரு வழியாக லட்சுமி உருக்கொண்டிருக்கிறாள். ஒரு மனிதர் நன்றாக இருந்தால், செல்வச்செழிப்புடன் இருப்பதும், அது இல்லாமல் இருப்பதும், அவருக்கான ஒரு விருப்பத்தேர்வாக இருக்கவேண்டும். ஆனால் தற்போது, நல்வாழ்வு மற்றும் செல்வச்செழிப்பை நாம் சற்றுக் கூடுதலாகவே தொடர்புபடுத்தியுள்ளோம். நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் இருந்தால்தான் நம்மால் நன்றாக இருக்கமுடியும் என்று, அந்தத் தொடர்புதான் நம்மை நம்பச்செய்கிறது. அது அப்படி அல்ல, ஏனென்றால் இந்தியாவில் எது செல்வவளமாக இருக்கிறதோ, அது உலகின் வேறு ஒரு பகுதியில் செல்வமாகக் கருதப்படாமல் இருக்கலாம். செல்வவளம் என்பது, நம்மைவிடக் குறைவாக வைத்திருக்கும் ஒருவருடன் ஒப்பீடு செய்வதுதான்.

நம்மிடம் என்ன இருக்கிறது அல்லது உலகிலிருந்து நாம் எதை எடுத்துள்ளோம் என்ற ரீதியில் நமது வாழ்க்கையை நாம் அளவீடு செய்ய வேண்டாம். நல்வாழ்வு என்பது, நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தால் மட்டுமல்லாமல், நமக்குள் இருக்கும் அமைதி, சந்தோசம் மற்றும் பேரானந்த உணர்வினால் தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நாம் வாழ்க்கையினையும், அதன் மதிப்பினையும் புரிந்துகொள்வோம்.

இந்த விஷயங்கள் அனைத்தும் இருந்துவிட்டால், நம்மிடம் எவ்வளவு இருக்கிறது, நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம், மற்றும் நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தால் தீர்மானிக்கப்படும். இன்று நம்மிடம் இருப்பதெல்லாம் நாம் மட்டுமே செய்ததல்ல – நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தின் ஒரு விளைவாகவே அது இருக்கிறது. ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நீங்கள் இங்கே இருந்திருந்தால், உங்களிடம் கார் இருக்குமா? நிச்சயமாக இருக்காது. ஆகவே, நாம் வைத்திருப்பது அனைத்தும் நமது செயல் என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிதளவுக்கு அது நமது செயல், ஆனால் பெருமளவுக்கு, அது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தின் ஒரு விளைவாக இருக்கிறது.

லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி மற்றும் அவர்களது குணங்கள்

கேள்வியாளர்: ஆனால் சத்குரு, செல்வம், அறிவு மற்றும் ஆற்றல் என பல விஷயங்களை அடைய நாம் விருப்பம் கொள்கிறோம். நமது வாழ்வில் லட்சுமி, துர்க்கை மற்றும் சரஸ்வதி இவர்களுக்கு இடையேயான முக்கியத்துவம் எந்த வரிசைப்படி இருக்கவேண்டும்?

சத்குரு: நிச்சயமாக முதலாவதாக சரஸ்வதி, பிறகு துர்க்கை, அதன் பிறகு லட்சுமி என்ற வரிசையில் இருக்கவேண்டும். முதலில் அறிவு, மென்மை, கவனித்துக்கொள்ளல் மற்றும் உங்களை சுற்றிலும் இருப்பவர்களிடம் அக்கறையும் கவனமும் இருக்கவேண்டும். பிறகு ஆற்றல். அதன் பிறகு செல்வம். இவற்றின் வரிசை அப்படித்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால், உங்களுக்கு செல்வச்செழுமை இருக்கும் நிலையில், ஆனால் அறிவும் இல்லாமல், யார்மீதும் கவனமும், அக்கறையும் இல்லையென்றால், அந்த செல்வத்தின் விளைவு மிகவும் கீழான செயல்முறையாக மாறிவிடக்கூடும். வளமான மக்கள் உலகின் மிக கீழ்மையான கலாச்சாரங்களை உருவாக்கியது பல நேரங்களில் நிகழ்ந்துள்ளது. சரஸ்வதி முதலிலும், பிறகு ஆற்றல், அதன் பிறகு செல்வம் வருவது மிகவும் முக்கியமானது.

உலகின் முதல் நபராக நீங்கள் இருக்க விரும்பினால், நீங்கள் அனைவரின் தோல்வியையும் கொண்டாடுகிறீர்கள் என்பதுதான் அர்த்தம்.

மக்கள் எப்பொழுதும் தங்களை யாருடனாவது ஒப்பிட்டுக்கொண்டே, தங்களது அயலாரைவிட சற்று அதிகமாக இருப்பதை விரும்புகின்றனர். யாரிடமாவது 10 ரூபாய் இருந்தால், உங்களுக்கு 20 ரூபாய் வேண்டும். அவர்களிடம் 100 இருந்தால், உங்களுக்கு 200 வேண்டும். அவர்களிடம் 200 கோடி இருந்தால், நீங்கள் 400 கோடி வைத்திருக்க விரும்புகிறீர்கள். அது பணத்தின் அளவைக் குறித்து அல்ல – அது உங்களைச் சுற்றிலும் உள்ள மக்களுடன் ஒப்பிடுவதைக் குறித்தது. ஒரு நாளில் 100 ரூபாய் சம்பாதிக்கும் மக்கள் இருக்கும் ஒரு கிராமத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் 200 ரூபாய் சம்பாதித்தால் உங்களைப் பணக்காரராக எண்ணிக்கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் மும்பையில் இருந்தால், உங்களுக்கு வேறு தரநிலைகள் உண்டு.

துரதிருஷ்டவசமாக, எப்போதும் யாரோ ஒருவரைவிட அதிகமாக இருப்பதை விரும்பும்படி, உங்கள் மனதுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. உலகின் முதல் நபராக நீங்கள் இருக்க விரும்பினால், நீங்கள் அனைவரின் தோல்வியையும் கொண்டாடுகிறீர்கள் என்பதுதான் அர்த்தம். இது மாறவேண்டும். மற்றவர்களின் தோல்விகளை நாம் மகிழ்ந்து அனுபவிக்கும்போது, அதை நல்வாழ்வு என்று நீங்கள் அழைக்கமுடியாது; அது ஒருவிதமான நோய்த்தன்மை.

ஒப்பிடுதல் வளர்ச்சியைக் கொல்கிறது

மனிதர்களாகிய நாம் செய்யும் செயல் எதுவாக இருந்தாலும், இயன்றவரை அதைச் சிறந்தமுறையில் செய்யவேண்டியது முக்கியமானது. நமது அறிவுத்திறன், செயல்திறமை மற்றும் நிதி ஆதாரம் என்னவாக இருப்பினும், நம்மால் இயன்ற அளவுக்கு உயர்ந்த சாத்தியத்துக்கு நமது செயலை எடுத்துச் செல்லவேண்டும். நாம் இதில் முனைப்பாக இருந்தால், நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நாம் நல்வாழ்வை உருவாக்குவோம்.

ஒரு மாமரம் தேங்காய்களை உற்பத்தி செய்ய விரும்புவதில்லை – அது ஒரு முழு அளவிலான மாமரமாகத்தான் இருக்க விரும்புகிறது. உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு முழுமையான உயிராக இருக்கவே விரும்புகிறது. அதைப்போலவே, ஒவ்வொரு மனிதரும் முழு வளர்ச்சியடைந்த மனிதராக இருக்கவே விரும்புகிறார். ஆனால் தற்போது, பெரும்பாலான மனிதர்களும் அவர்களுக்குள் அந்த முழுமையை உணராத காரணத்தால், அவர்கள் எப்போதும் தங்களை யாருடனாவது ஒப்பிட்டுக்கொண்டு, யாரோ ஒருவரைவிட அதிகமாக இருப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

யாரோ ஒருவரைவிட அதிகமாக இருப்பதற்கு முயற்சி செய்வதென்றால், யாரோ ஒருவரின் மேலே இருப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். அதாவது, ஏதோ ஒரு வழியில் அனைவரும் உங்களைவிடக் குறைவாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள்; அது ஒரு நல்ல நோக்கம் அல்ல. நீங்கள் ஒரு உயிராக முழு வெளிப்பாடு காண்பது முக்கியமானது. உங்களது அறிவுத்திறன், செயல்திறமை மற்றும் புத்திசாலித்தனம் முழு வெளிப்பாடு அடையவேண்டும். அது யாரோ ஒருவருடன் ஒப்பீட்டளவில் இருக்கவேண்டிய அவசியமில்லை.