முழு பிரபஞ்சமும் நம்முடையதாக இருக்க முடியும் போது எதற்கு சிறிய அளவில் வாழ்க்கையை வாழவேண்டும் என்று சத்குரு கேட்கிறார். நவீன சௌகர்யங்களையும், பழைய மத பேதங்களையும் கலைத்து, உண்மையான ஆன்மீகம் என்பது இனி சிறிய அளவில் வாழ்வதை நிறுத்தி, நமது வரையறுக்கப்பட்ட தன்மைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிப்பதே என்று அவர் வலியுறுத்துகிறார்.
கேள்வி: வாழ்க்கையில் நாம் எதைப் பெற்றாலும், எப்போதுமே மேலும் ஏதோ ஒன்றை விரும்பும் உணர்வு ஏன் இருக்கிறது? இதை எல்லா இடங்களிலும் காண்கிறோம் - தொழில் முன்னேற்றத்தில், உறவுகளில், பொருள் தேடலில் - ஆனால் எதுவுமே நிரந்தர திருப்தியைத் தருவதில்லை. நம்மிடம் உள்ளதை 'போதும்' என்று ஏன் ஒருபோதும் உணர முடிவதில்லை?
சத்குரு: ஒவ்வொரு உயிரும் இன்னும் கொஞ்சம் மேம்பட விரும்புகிறது. சிலர் பெரிய அடியை எடுக்கிறார்கள், மற்றவர்கள் சிறிய அடிகளை எடுக்கிறார்கள் - இவையனைத்தும் அவர்களின் பயம் மற்றும் பாதுகாப்பின்மையை அடிப்படையாகக் கொண்டவை. உயிர் தனது உச்சபட்ச இயல்பைக் கண்டறிய விரும்புகிறது.
விரிவடைய வேண்டும் என்கிற இந்த ஏக்கமே உயிரின் இயல்பு. நாம் ஆன்மீகம் என்று அழைப்பது, நீங்கள் யாரோ அதன் ஆழமான பரிமாணம் விரிவடைய துடிப்பது தான். மக்கள் முடிவிலியை சிறு சிறு தவணைகளில் அடைய முயற்சிக்கிறார்கள் - இது நம்மை நிறைவின்றி விடக்கூடிய நம்பிக்கையற்ற முறை.
சோப்பு குமிழியின் காற்றானது அதன் மேற்பரப்பால் பிடித்து வைக்கப்பட்டு, இறுதியில் உள்ளே இருக்கும் அழுத்தத்தால் வெடித்துவிடுவதைப் போல, உங்களுக்குள் இருக்கும் வரம்பற்ற உயிரானது உங்கள் உடலின் எல்லைகளால் கட்டுப்படுத்தப்பட்டு, மெதுவாக அழுத்தத்தை உருவாக்குகிறது. இதுதான் உயிரின் இயல்பு.
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். எதுவும் நடக்காவிட்டால், அது தாங்க முடியாததாக இருக்கும், ஏனெனில் விரிவடைவதற்கான ஒரு இயற்கையான ஏக்கம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் விரிவடைந்தாலும், அது ஒருபோதும் போதுமானதாக இருக்காது, ஏனெனில் முடிவில்லா விரிவாக்கத்திற்கான ஏக்கம் இருக்கிறது. உடல்ரீதியான வழிமுறைகள் மூலம் நீங்கள் முடிவில்லா விரிவாக்கத்தை தேடுகிறீர்கள், இது ஒருபோதும் வேலை செய்யாது, ஏனெனில் உடல் ரீதியானது எப்போதும் வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்க முடியும்.
நமது உடலியல் இயல்பைப் பார்த்தால், நாம் அனைவரும் சிறு குழந்தைகளாக இருந்து இன்று யாராக இருக்கிறோமோ அவர்களாக வளர்ந்துள்ளோம். உங்கள் உடல் என்பது நீங்கள் காலப்போக்கில் சேகரித்த ஒன்று. நீங்கள் ஆரோக்கியமான அளவை சேகரிக்கிறீர்களா அல்லது அதிகப்படியான அளவை சேகரிக்கிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது, ஆனால் சேகரிப்பு நிச்சயமாக நடக்கிறது. நீங்கள் சேகரிப்பவை - அது ஆடைகளாக இருந்தாலும், உடைமைகளாக இருந்தாலும், அல்லது உங்கள் உடல் கூட - அது நீங்கள் ஆக முடியாது. அடிப்படை மனித அறிவு இந்த உண்மையை உணர போதுமானது, ஆனால் பெரும்பாலான மக்கள் இதை மறுத்தே வாழ்கிறார்கள்.
இத்தகைய மறுப்பில் வாழ்வது தவிர்க்க முடியாத வகையில் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. துன்பம் வாழ்க்கையின் சூழ்நிலைகளிலிருந்து அல்ல, அறியாமையிலிருந்தே உருவாகிறது. அறியாமையே பேரின்பம் என்று சிலர் கூறுகிறார்கள், ஆனால் இது மாடியிலிருந்து குதிப்பது போன்றது - தரையில் மோதும் வரை விழுதல் அற்புதமாகவே உணரப்படுகிறது. எந்த ஸ்கை டைவரையும் கேளுங்கள் - இந்த தடையில்லா விழுதலின் அற்புதமான உணர்வை அவர்கள் அறிவார்கள்.
மனிதர்கள் தங்கள் வயிற்றில் வண்ணத்துப்பூச்சிகள் பறப்பது போன்ற உணர்வை விரும்புகிறார்கள், ஏனெனில் வாழ்க்கை மனிதர்களுக்கு போதுமானதாக இல்லை - அவர்கள் மேலும் ஏதோ ஒன்றாக விரும்புகிறார்கள். பணம், வெற்றி, அல்லது ஷாப்பிங் மூலம் அதை அடைய முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள்; அறிவு அல்லது அன்பு மூலம் அதை அடையலாம் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். இவை அனைத்தும் மக்கள் தங்களை மேம்படுத்த முயற்சிக்கும் வெவ்வேறு வழிகள். மனித வாழ்க்கையில் விரிவடைவதற்கான தொடர் ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. நீங்கள் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், மேலும் வளர வேண்டும் என்ற ஏக்கம் தொடர்கிறது.
இந்த இணைத்துக்கொள்வதற்கான அல்லது விரிவடைதலுக்கான ஏக்கம் உடல் ரீதியாக வெளிப்படும்போது, நாம் அதை பாலியல் என்கிறோம். இது உணர்ச்சி ரீதியாக வெளிப்படும்போது, நாம் அதை அன்பு என்கிறோம். இது மனரீதியாக வெளிப்படும்போது, நாம் அதை வெற்றி, கனவு, பேராசை, அல்லது ஷாப்பிங் என்கிறோம். இது விழிப்புணர்வாக வெளிப்படும்போது, நாம் அதை ஆன்மீக செயல்முறை அல்லது யோகா என்கிறோம்.
"யோகா" என்ற சொல்லின் பொருள் ஒன்றிணைதல். ஒன்றிணைதல் என்றால் என்ன? உண்மையில், நீங்கள் ஒரு தனிநபர் அல்ல - நீங்கள் ஒரு பெரிய வாழ்க்கை வெள்ளத்தில் சோப்பு குமிழி போல மிதக்கிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் மனதளவிலான கட்டமைப்பினால் மட்டுமே நீங்கள் உங்களை ஒரு தனிநபராக உணர்கிறீர்கள். இந்த தனிநபர் நிறைவை அடைய வேண்டுமெனில், நீங்கள் பிரபஞ்சத்தின் அங்கமாக மாறவேண்டும்.
நீங்கள் எப்படி பிரபஞ்சத்தின் அங்கமாக மாறுகிறீர்கள்? நமது கலாச்சாரத்தில் இதைப் பற்றி அற்புதமான உவமைக் கதைகள் உள்ளன. ஒரு கதையில், கிருஷ்ணன் வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான், யசோதை அவன் மண்ணை சாப்பிடுகிறானோ என்று நினைத்து, கிருஷ்ணனை வாயைத் திறக்கச் சொல்கிறாள், அவள் உள்ளே பார்க்கும்போது, முழு பிரபஞ்சத்தையும் வாயினுள் காண்கிறாள்.
இந்த உவமை கிருஷ்ணரின் முழுமையான உள்ளடக்க நிலையை விளக்குகிறது. இதே நிலை குருக்ஷேத்திர போரின்போது விஸ்வரூப தரிசனத்தில் வேறொரு வடிவில் வெளிப்பட்டது. இந்த கதைகள் அவர் ஒரு தனிமனிதராக அல்லாமல் பிரபஞ்ச சக்தியாக வாழ்ந்தார் என்பதையும், ஒவ்வொரு மனிதனும் அந்த நிலையை அடைய முடியும் என்பதையும் காட்டுகின்றன.
அந்த நிலையை அடைவது, அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஞானோதயம் என்பது ஏதோ ஒரு சாதனை அல்ல, அது ஒரு உணர்தல் - ஏனெனில் அது ஏற்கனவே இருக்கிறது - நீங்கள் வெறுமனே யதார்த்தத்தை உணர வேண்டும். உணர்தல் என்பதே முக்கியமான விஷயம்; இது ஒரு சாதனை அல்ல; இது மலை உச்சியை அடைவது போன்றது அல்ல.
[1] கிருஷ்ணன் தனது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு காட்டும் தெய்வீக காட்சி, அதில் பிரபஞ்சம் முழுவதும் தன்னுள்ளே அடங்கியிருப்பதை வெளிப்படுத்துகிறார்.
சிலர் அமைதியான இடத்திற்குச் சென்று, வாழ்க்கையின் ஆழமான அனுபவத்தைத் தேடுகிறார்கள். உங்கள் நகரத்தில் நடக்கும் விஷயங்களால் நீங்கள் சலித்துப்போய், விடுமுறைக்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக, நீங்கள் அமைதியான இடத்தைத் தேர்வு செய்வீர்கள், ஒருவேளை அது அடர்ந்த காட்டின் விளிம்பில் உள்ள ஓர் ஓய்வு விடுதியாக இருக்கலாம், ஏனெனில் காட்டில் வாழ உங்களால் முடியாது.
நான் முன்பு வாரக்கணக்கில் தனியாக காட்டிலேயே வாழ்ந்திருக்கிறேன் - இதற்கு வித்தியாசமான உடல்நிலை, மனநிலை மற்றும் உள்வலிமை தேவைப்படுகிறது. உங்கள் உடல் இதற்கு தயாராக இல்லை, ஏனெனில் அது மூடப்பட்ட, வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் இயற்கைக்கு மாறான அளவிலான சௌகர்யங்களுக்கு பழகிவிட்டது.
நமது நவீன வாழ்க்கை முறையானது, பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியில் கடந்து வந்த விதையை பலவீனப்படுத்துகிறது. நாமே இதுவரை இருந்த தலைமுறைகளில் மிகவும் பலவீனமான தலைமுறையாக இருக்கிறோம், மேலும் இப்படியே தொடர்ந்து வாழ்ந்தால் அடுத்தடுத்த தலைமுறைகள் மேலும் பலவீனமாகிக்கொண்டே போகும். இதற்கு காரணம் உடல் இயல்பின் தன்மை பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்டது.
பஞ்சபூதங்களுடன் நீங்கள் அதிகமாக தொடர்பில் இருக்கும்போது, உங்கள் உடல் மிகவும் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கும். உறுதியான உடலை உருவாக்குவது ஆன்மீக செயல்முறையின் முக்கியமான பகுதி, ஏனெனில் உங்கள் உடல் ஒரு பிரச்சனையாக இருந்தால், நீங்கள் ஞானோதயத்தில் ஆர்வம் காட்டமாட்டீர்கள். உதாரணமாக, உங்கள் உடல் வலியுடன் இருக்கும்போது கடவுள் உங்கள் முன் தோன்றினால், முதலில் நீங்கள் கேட்பது உங்கள் முதுகு வலி போகவேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
இன்று, உலகில் 99 சதவீத பிரார்த்தனைகள் "எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு, என்னைக் காப்பாற்று, என்னைப் பாதுகாத்துக்கொள்" என்பதாகவே உள்ளன. அதற்கு மேல் எதுவும் இல்லை; உயர்ந்த பரிமாணம் எதுவும் தெரிந்துகொள்ளப்படவில்லை.
இந்த கலாச்சாரத்தில், வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளுக்கான ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு இருந்தது. பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷா (சிவன்) ஆகிய மூவரில், படைப்பாளரான பிரம்மாவுக்கு வெறும் இரண்டு கோவில்கள் மட்டுமே உள்ளன - இது நமது நன்றியுணர்வைப் பற்றி நிறைய சொல்கிறது. பழங்காலத்தில் விஷ்ணுவுக்கும் அதிக கோவில்கள் இல்லை; கடந்த 600-800 ஆண்டுகளில்தான் அவை தோன்றின.
இதற்கு முன்பு, சிவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்கள் இருந்தன. கிட்டத்தட்ட அனைத்து கோவில்களும் அழிப்பவருக்காகவே இருந்தன, மேலும் பிரார்த்தனைகள் எப்போதும், "ஓ மகாதேவா, நான் உங்களைப் போல ஆகும் படி, நான் இப்போது இருக்கும் நிலையில் என்னை அழித்திடுங்கள்" என்பதாகவே இருந்தன, ஏனெனில் கடவுளை அடைய வேண்டும் என்பதல்ல, மாறாக தெய்வீகமாக மாறவேண்டும் என்பதே இலக்கு.
தெய்வீகமாக மாறுவது என்பது உங்கள் உடல்ரீதியான கட்டாய இயல்பினால் அமைக்கப்பட்ட வரம்புகளை உடைப்பது. நீங்கள் அந்த வரம்புகளை உடைத்தால், நீங்கள் தெய்வீகமானவராக பார்க்கப்படுகிறீர்கள். இதுதான் மக்கள் விழிப்புணர்வு இல்லாமலேயே பின்பற்றும் மரபு.
ஒரு துறவி, ஞானி, அல்லது யோகி ஒரு பகுதிக்கு வரும்போது, அனைவரும் அவரது பாதங்களைத் தொட்டு வணங்க வருகிறார்கள். ஏனெனில் ஒருவர் தனது உடல்ரீதியான வரம்புகளைக் கடந்து செல்லும்போது, மக்கள் அவரை வணங்குதலுக்கு உரியவராகவே கருதுகிறார்கள், மேலும் முக்கியமாக, அவர்கள் ஒரு குறிப்பிட்ட சக்தியையும் அருளையும் பெறுகிறார்கள்.
முழு கலாச்சாரமும் ஆன்மீக நோக்கம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆன்மீக நோக்கம் கொண்டிருப்பது என்பது கட்டாயமாக காட்டிற்குச் சென்று தவம் இருப்பதை குறிக்கவில்லை - அது வெறுமனே முழுமையான வாழ்க்கையை வாழ்வதைக் குறிக்கிறது. உங்களது உடல்ரீதியான தன்மை அப்படியே இருக்கிறது, ஆனால் அதன் கட்டாயத் தேவைகள் மறைந்துவிடும், மேலும் நீங்கள் யார் என்பதன் மற்ற பரிமாணங்களை தெரிந்துகொள்கிறீர்கள்.
நாம் இங்கே இருக்கிறோம், நீண்ட ஆயுளோடு வாழ நான் உங்களை ஆசீர்வதிப்பேன், ஆனால் நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நீங்கள் இறப்பதற்கு முன், இந்த உயிர் என்கிற உங்களை முழுமையாக அறிந்துகொள்வது முக்கியமல்லவா? அதன் முழு பரப்பையும் அதன் முழுமையில் நீங்கள் அனுபவிக்க வேண்டும்.
உங்கள் வேலை, குடும்பம், பொழுதுபோக்கு, மற்றும் விடுமுறைகள் வாழ்க்கை அல்ல. உங்களுக்குள் துடிக்கும் அந்த ஒன்றே வாழ்க்கை. மற்ற அனைத்தும் இந்த உயிரின் நல்வாழ்விற்காக நாம் ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகளும், ஏற்பாடுகளும் மட்டுமே. இந்த உயிரின் முழு ஆழத்தையும், பரிமாணத்தையும் அனுபவிக்காமல் இந்த பூமியை விட்டு செல்கிறீர்கள் என்றால், நீங்கள் இதனை வீணடித்துவிட்டீர்கள். ஆன்மீகப் பயணம் என்பது இதுதான்: நீங்கள் முழு கேக்கையும் விரும்புகிறீர்கள்; ஒரு துண்டு மட்டும் போதும் என்று விரும்பவில்லை.