சுயமுன்னேற்ற வழிகாட்டிகள் தோல்வியை இயல்பான ஒன்றாக்கும் போது, சத்குரு ஒரு வேறுபட்ட பார்வையை முன்வைக்கிறார்: நாம் பெரும்பாலும் நமது சொந்த மாயைகளில் மூழ்கியிருப்பதால், நமது தவறுகளைக்கூட கண்டறிய முடிவதில்லை, அவற்றைத் திருத்துவது என்பது வேறு விஷயம். இது கசக்கும் உண்மை - அதுவே இதன் முக்கிய நோக்கமும் கூட. இதன் மையக்கருத்தில் மனித ஆற்றலைப் பற்றிய அடிப்படை மறுசிந்தனை அமைந்துள்ளது.
கேள்வி: சத்குரு, உங்களது ஒட்டுமொத்த அறிவு மற்றும் ஞானத்துடன், நீங்கள் ஒரு தவறு செய்யும்போது அதை எப்படி கையாளுகிறீர்கள்?
சத்குரு: நான் அதைத் திருத்திக்கொள்வேன். ஒரு தவறைக் கையாள வேறு வழி ஏதேனும் உண்டா? நீங்கள் ஒரு தவறு செய்தால், அதைத் திருத்திக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை பார்ப்பதற்கு கூட மிகுந்த தெளிவு தேவைப்படுகிறது. அதுதான் ஒட்டுமொத்த பிரச்சனை. உங்களைப் பற்றி எந்த அனுமானங்களும் இல்லாவிட்டால், விஷயங்களை அவை இருப்பது போலவே பார்க்கிறீர்கள். ஆனால் உங்களைப் பற்றி பெரிய அனுமானங்கள் இருந்தால், விஷயங்களை அவை இருப்பது போலவே பார்க்கமாட்டீர்கள். தவறைப் பார்க்காதபோது, திருத்தும் கேள்வியே எழாது.
விஷயங்களை அவை இருப்பது போலவே பார்க்க முடிந்தால், எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்களிடம் எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள், கருத்துக்கள், சித்தாந்தங்கள், மற்றும் நம்பிக்கை அமைப்புகளின் தொகுப்பு மட்டுமே இருந்தால், யதார்த்தத்தை அது இருக்கின்ற விதமாக பார்க்கமாட்டீர்கள். பின்னர் நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை உணர்வதே மிகவும் கடினமாகிவிடும், அதைத் திருத்திக்கொள்வது பற்றிய கேள்வியே இல்லை.
ஒரு நாள், ஒரு இந்திய நாகப்பாம்பு துபாய்க்கு வந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு, பாலைவன வெப்பமும், ஒரே மாதிரியான பழுப்பு நிறமும் அதன் கண்களைப் பாதிக்கத் தொடங்கியது. அது உள்ளூர் கண் மருத்துவரிடம் சென்றது. மருத்துவர், "பிரச்சனை இல்லை, நான் நாகப்பாம்புகளுக்கு என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடியைத் தருகிறேன்" என்றார். உங்களுக்குத் தெரியுமா? நாகப்பாம்புகளின் தலையில் கண்ணாடி போன்ற குறி இருக்கும். அவர் சிறப்பு கண்ணாடியைத் தயாரித்து பாம்பிடம் கொடுத்தார், பாம்பும் அதை அணிந்துகொண்டு சென்றது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பாம்பு மிகவும் சோகமாக திரும்பி வந்தது.
"என்ன நடந்தது? கண்ணாடி வேலை செய்யவில்லையா?" என்று மருத்துவர் கேட்டார். அதற்கு நாகம், "கண்ணாடி மிக நன்றாக வேலை செய்தது. ஆனால் பிறகுதான் நான் கடந்த இரண்டு வருடங்களாக தோட்டத்தின் ஒரு குழாயுடன் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்!" என்று சொன்னது. உங்கள் வாழ்க்கையில் தெளிவைக் கொண்டுவரும்போது, நீங்கள் இறுதியாக எல்லாவற்றையும் அவை இருக்கிற விதமாகப் பார்ப்பீர்கள். உங்களைப் பற்றி எந்த அனுமானங்களும் இல்லாவிட்டால் இது ஒரு பெரிய வரம். ஆனால் அப்படி அனுமானங்கள் இருந்தால், நீங்கள் ஏமாற்றம் அடைந்தவராவீர்கள்.
சிறிது காலத்திற்கு முன்பு, ஒரு இளைஞன் என்னிடம் வந்து, "சத்குரு, நான் முன்பு உற்சாகத்துடன் இருந்தேன், ஆனால் இந்த பெண் என் வாழ்க்கையில் நுழைந்த பிறகு, ஆறு மாதங்களில் என் மாயையை உடைத்துவிட்டாள்" என்றார். நான், "அவளை இங்கே அழைத்து வாருங்கள் - நாம் அவளுக்கு விருது வழங்க வேண்டும்" என்றேன், இல்லையெனில், மாயையிலிருந்து வெளியே வர ஒரு பிறவி முழுவதும் ஆகலாம். நீங்கள் மாயையில் வாழப் போகிறீர்களா அல்லது யதார்த்தத்தில் வாழப் போகிறீர்களா என்பதை நீங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும்.
உங்களுக்கு யதார்த்தத்தின் அழகையும் மகத்துவத்தையும் காணக்கூடிய கண்கள் இல்லையெனில், நீங்கள் உங்கள் மனதில் உங்கள் சொந்த மாயையை உருவாக்குவீர்கள். உங்களுக்கு பார்க்கக்கூடிய கண்கள் இருந்தால், எல்லாமே மிக அற்புதமானது. நீங்கள் போதுமான கவனம் செலுத்தினால், ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு பூச்சியும், ஒவ்வொரு சிறிய பொருளும் நம்பமுடியாத அளவிற்கு நுட்பமானதாகவும் நுணுக்கமானதாகவும் இருக்கிறது. நீங்கள் எப்போதாவது உண்மையிலேயே ஒரு எறும்பைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் போதுமான கவனம் செலுத்தினால், அது இந்த பூமியில் உள்ள மிக அற்புதமான வடிவமைப்புகளில் ஒன்று என்பதை காண்பீர்கள்.
பெரும்பாலான மனிதர்களிடம் காணப்படும் மற்றொரு பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்களது வரம்புகளையும் பிரச்சனைகளையும் குறிப்பிட "மனிதன்" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். யாரும் "நான் மனிதன்!" என்று சொல்வதில்லை. மாறாக, "நான் வெறும் மனிதன்" என்கிறார்கள். இந்த பூமியில் பரிணாம வளர்ச்சி அடைந்த உயிரினமாகவும், மிகவும் சிறப்புமிக்க மூளையைக் கொண்டவராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். "நான் வெறும் மனிதன், அதனால் தான் நான் தவறுகள் செய்கிறேன்" என்று சொல்வதற்கு பதிலாக, "நான் மனிதன், அதனால் மிக அற்புதமான காரியங்களைச் செய்வேன்" என்று சொல்ல வேண்டாமா?
இது தான் செய்யும் வேலையைப் பற்றி அக்கறை இல்லாத ஒரு மோசமான ஊழியரின் மனப்பான்மை. நீங்கள் செய்வதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அதிக தவறுகளைச் செய்வீர்களா அல்லது மிகவும் சரியாகச் செய்வீர்களா? நீங்கள் செய்யும் வேலையைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், ஏன் தொடர்ந்து தவறுகளைச் செய்யப்போகிறீர்கள்?
நமது செயல்களின் சிக்கலான தன்மையால் சில விஷயங்கள் தவறாக போகலாம் - நாம் பல புதிய விஷயங்களை செய்வதால், நாம் சில தவறுகளை செய்யலாம். ஆனால் "தவறு செய்வது மனித இயல்பு" போன்ற சொற்றொடர்களை நாம் கைவிட வேண்டும். அதற்கு பதிலாக, "நான் மனிதன். அதனால் நான் மிக அற்புதமான விஷயங்களை செய்கிறேன்" என்று இருக்க வேண்டும்.
எறும்பு, அதன் சிறிய மூளையுடன், தன்னையோ அல்லது தன் சமூகத்தையோ பாதுகாப்பதற்கு என தேவையான போது மட்டுமே கடிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. ஒரு எறும்புக்கே இவ்வளவு அறிவு இருக்கும்போது, இந்த பூமியில் மிகச் சிறந்த விஷயங்களை செய்யக்கூடிய பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பது என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளும் அறிவு உங்களுக்கு இருக்க வேண்டாமா? மனிதனாக இருப்பது என்றால் என்ன என்பதை நாம் எப்படி பார்க்கிறோம் என்ற கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். மனிதன் என்பவன் இந்த பூமியில் பரிணாம வளர்ச்சி, அறிவு, திறமை, மற்றும் ஆற்றலின் உச்சம்.