நாட்டினம்

சத்குரு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து:

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல், அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பொதுப் பாதுகாப்பு குறித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.

பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல, ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவதே. மக்களிடையே பீதியை பரப்புவது, சமூகத்தை பிளவுபடுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை திசைதிருப்புவது, அனைத்து நிலைகளிலும் மோதல், வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை ஏற்படுத்துவது - வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாட்டை தோல்வியுற்ற நிலைக்கு தள்ளுவதே அவர்களின் நோக்கம்.

எல்லா வகையான வன்முறைகளிலும், மதரீதியாக தூண்டிவிடப்பட்ட பயங்கரவாதம்தான் மிகவும் ஆபத்தானது. வேறு எதற்காகவும் சண்டையிடும் மனிதனிடம் நீங்கள் காரண காரியங்களைப் பேசமுடியும், ஆனால் ஒரு மனிதன் தான் தனது கடவுளுக்காக சண்டையிடுவதாக நம்பும்போது, அவனுடன் எந்த காரண காரியமும் பேசமுடியாது. பணத்திற்காகவோ சொத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ சண்டையிடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும், ஏனெனில் அவர்கள் வாழ்க்கை சார்ந்த நோக்கம் கொண்டவர்கள்; ஆனால் தாங்கள் கடவுளுக்காகப் சண்டையிடுவதாகவோ அல்லது கடவுளின் வேலையைச் செய்வதாகவோ நினைப்பவர்கள் தான், இறப்பதற்கும், நம் அனைவரையும் அவர்களுடன் கொண்டு செல்வதற்கும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வெளிநாட்டு படையெடுப்புகள், அந்நிய ஆக்கிரமிப்புகள், மற்றும் கடும் வறுமைக்குப் பிறகு, இந்த தேசம் இப்போது பொருளாதார நல்வாழ்வின் வாசலில் இருக்கிறது. இந்த வாய்ப்பு இலவசமாக கிடைக்கவில்லை, முந்தைய தலைமுறையினரின் பெரும் வலி, துன்பம், மற்றும் தியாகங்களின் விளைவாகவே கிடைத்துள்ளது. எனவே, அவர்களின் முயற்சிகளை வெற்றிகரமாக்குவதும், அவர்களின் கனவுகளை நனவாக்குவதும் நமது கடமை. இந்த தேசம் வலுவடைவதை விரும்பாத சில சக்திகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த தேச விரோத சக்திகளின் தீய திட்டங்களை தோற்கடிக்க இதுவே சரியான நேரம்.

இரும்புக் கரமும் உறுதியான தீர்மானமும்

நாட்டின் சகோதரத்துவத்தில் அக்கறை இல்லாதவர்கள் இருக்கிறார்கள், அவர்களை மென்மையாக கையாள முடியாது. இந்த நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்றால், பாகுபாடின்றி கொல்லவும், அதற்காக இறக்கவும் தயாராக இருக்கும் இந்த நபர்கள், தேசம்-மாநிலத்தின் அடிப்படைகளுடன் ஒத்துப்போகாத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள், இரும்புக் கரத்துடனும் நீண்டகால உறுதியான தீர்மானத்தாலும் கையாளப்பட வேண்டும். அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என தெருவில் யாரையும் சுட்டுக் கொல்லும் நோக்கத்துடன் துப்பாக்கி அல்லது வெடிகுண்டை சுமந்து செல்பவர்களை தீர்க்கமாக கையாள வேண்டியது அவசியம்.

நாம் ஒரு நாடாக இங்கு நிலைத்திருக்க வேண்டுமெனில், நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பேணிக்காக்க வேண்டும் என்பதன் அடிப்படைகளை கற்றுக்கொள்ள வேண்டும். சமூகம் மற்றும் நாட்டின் இயல்பான செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது. நீண்டகால தீர்வுகள் வேறுவிதமாக இருக்கலாம், ஆனால் இந்த "கடவுளுக்காக சண்டையிடுகிறோம்" என்ற செயல்பாடு முற்றிலுமாக ஒடுக்கப்பட வேண்டும் - அது சமூகத்தின் எந்தப் பிரிவிலிருந்து வந்தாலும் சரி.

இந்த பயங்கரவாதிகள் எப்போதும் அரசியல் காய்களாகவோ அல்லது வேறு யாரோ ஒருவருடைய கைகளின் கருவிகளாக மட்டும் இருப்பதில்லை. அத்தகைய பிரிவினருக்கு ஆதரவளிக்கும் சக்திகள் எப்போதும் இருக்கின்றன, ஆனால் "நமது கடவுளுக்காக போய் சண்டையிட்டு மக்களை கொல்வோம்" என்று ஒருவர் சொல்லும்போது - நீங்கள் நேரடியாக அதில் பங்கேற்றாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி - உங்கள் வழி மட்டுமே சரியான வழி என்று நீங்கள் நம்பும் வரை, நீங்களும் அதன் ஒரு பகுதியாகவே இருக்கிறீர்கள். நாட்டிற்குள் நம்மிடையே இத்தகைய நம்பிக்கைகளும் நோக்கங்களும் கொண்ட மக்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் இன்னும் ஏற்க தயாராக இல்லை. எங்கோ, எல்லைக்கு வெளியே இருக்கும் சக்திகளே இவற்றை எல்லாம் கட்டுப்படுத்துகின்றன என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இங்குள்ள மக்களுக்கு இத்தகைய நோக்கங்கள் இருப்பதால் மட்டுமே வெளியிலிருந்து உதவி வருகிறது.

முழுமையான பார்வையில்

இந்த சூழ்நிலைகளுக்கு நீண்டகால, பெரிய தீர்வுகள் உள்ளன. நாம் நாட்டின் நேர்மையையும், வெவ்வேறு சமூக, இன, மத பின்னணிகளைக் கொண்ட மக்களிடையே வலுவான பிணைப்பையும் வளர்க்க வேண்டும். கல்வி, பொருளாதார வாய்ப்புகள், செல்வம், மற்றும் நலன்களின் சமமான வாய்ப்பை அனைத்து மட்டங்களிலும் கொண்டுவர வேண்டும். இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்லாமல் இருக்க, சமூக-பொருளாதார வளர்ச்சி அனைவரையும் சென்றடைய வேண்டும். இந்த அனைத்து அம்சங்களையும் காலப்போக்கில் கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் உடனடியாக, இந்த பயங்கரவாத நடவடிக்கைகள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும். இந்த சட்டவிரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

முழுமையான பார்வையில், நாட்டிற்கும் உலகிற்கும் தேவையானது தனிநபர்களிடமும், சமூக அமைப்புகளிடமும் இணைத்துக்கொள்ளும் தன்மையே. மேலும், இணைத்துக்கொள்ளும் தன்மை என்பது ஆன்மீக செயல்முறைகளின் அடிப்படை இயல்பு மட்டுமல்ல, வாழ்க்கையின் அடிப்படை மற்றும் வாழ்க்கையின் இலக்கு.

இத்தகைய நேரத்தில், நாட்டிற்குள் "நீயா நானா" என்ற நிலை இருக்க முடியாது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும். நமது மத நம்பிக்கைகள் என்னவாக இருந்தாலும், நமது அரசியல் சார்புகள் என்னவாக இருந்தாலும் - நாம் ஒரே பாரதம், ஒற்றுமையுடன் மட்டுமே நாம் முன்னேறவும் மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும். அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் சரியான செயல்களை செய்தால், மகத்தான பாரதம் உருவாகும் என்ற சாத்தியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். நாம் அதனை நிகழச் செய்வோம்.

—சத்குரு