இந்த உள்ளுணர்வு மிக்க பதிவில், அழுத்தங்களைக் கையாள்வது, மற்றும் இணக்கத்தைப் பேணி வளர்ப்பது குறித்த அரிய வழிகாட்டலை அளிப்பதுடன், குடும்பங்களுக்கு உள்ளேயும், அன்பானவர்களுக்கு இடையிலான உறவுகளில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களையும் சத்குரு அலசுகிறார். வளர்ச்சியை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் என்ன, ஆனந்தத்தின் மூலத்தை உங்களுக்குள் காண்பது எப்படி, மற்றும் ஒரு நிறைவான வாழ்க்கைக்கான தன்னிறைவை வளர்த்துக்கொள்வது எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.
கேள்வி: ஒரு குடும்பத்துக்குள் வாழ்ந்துகொண்டு, அன்புக்குரியவர்களால் சூழப்பட்டு இருக்கும்பொழுது, அவர்களது கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இணங்கிச் செல்ல வேண்டிய அழுத்தத்தை நாம் அடிக்கடி உணர்கிறோம். இது சில நேரங்களில் நம்மை மிகவும் மகிழ்ச்சியிழக்கச் செய்கிறது. மேலான உறவுகளை எப்படிக் கட்டமைப்பது?
சத்குரு: இவர்கள் உங்களது அன்புக்குரியவர்கள் அல்ல; அவர்கள் உங்களுடைய கூடுதல் உறுப்புகள். இரண்டு கால்களால் உங்களுக்கு நிற்க இயலவில்லை, ஆகவே உங்களுக்கு நான்கு, எட்டு, பன்னிரண்டு, அல்லது எப்படியிருப்பினும் பல உறுப்புகள் தேவைப்படுகின்றன. இந்தக் கூடுதல் உறுப்புகள் நன்கு ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால், இவைகள் சிக்கலாகிவிடக்கூடும்.
சுமுகமான இயக்கம் உறுதிசெய்யப்படுவதற்கு, உணர்ச்சிரீதியான இணைப்பாக இருக்கக்கூடாத, ஒரு மேம்பட்ட தளத்தில் இணைப்பை உருவாக்குவது ஒரு வழியாக இருக்கிறது. உணர்ச்சிரீதியான இணைப்பு சார்ந்திருத்தலைக் கொண்டுவர முனைகிறது. உணர்ச்சி என்பது அனுபவிக்க வேண்டிய ஒரு விஷயம்;அது வாழ்வின் ரசமாக இருக்கிறது. உங்களது எண்ணங்களையும், உடலையும் நீங்கள் செயல்படுத்தலாம், ஆனால் உங்களது உணர்ச்சிகளை நீங்கள் செயல்படுத்த முயற்சிக்காதீர்கள்.
ஆரம்பத்தில், “நான் உன்னை நேசிக்கிறேன்” பலன் தருவதாக இருக்கலாம், ஆனால் காலப்போக்கில், உணர்ச்சிகளை உங்களுக்குச் சாதகமான செயலாக்கத்துக்கு முயற்சிப்பது என்பது வாழ்க்கையை மிகவும் கடினமானதாக்கிவிட முடியும். இது ஏனென்றால் உணர்ச்சிகள் செயலாற்றுவதற்கானவை அல்ல; அவைகள் வாழ்வை இனிமையாக்குவதற்கானவை. எண்ணங்களும், உடலும் செயல்படுத்துவதற்கு இருக்கவேண்டுமேயன்றி, உணர்ச்சிகள் வெறுமனே அங்கே இருக்கவேண்டும், ஒரு மலரைப் போல.
மலர்களை நீங்கள் செயல்படச் செய்வதில்லை; அவைகள் வெறுமனே மலர்ந்திருக்கின்றன, அவ்வளவுதான். உணர்ச்சிகள் அதைப் போன்றவைதான் – அவைகள் வெறுமனே அங்கே இருக்கின்றன, இனிமையாக மற்றும் அற்புதமாக. உங்கள் உணர்ச்சிகளைப் பயன்படுத்துவதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து உங்களுக்குச் சாதகமானதைப் பெறுவதற்கோ அல்லது அவைகளைச் செயல்படுத்தவோ முயற்சித்தால், அது அசிங்கமாக மாறிவிடும்.
அதன் விளைவாக, குடும்ப வாழ்க்கை அதீத சுமையானதாக மாறமுடியும். எப்போதும் மிக மோசமான விஷயங்கள், மக்களின் வீடுகளின் எல்லைக்குள்தான் நிகழ்கின்றன – வீதிகளிலோ அல்லது வேறு இடங்களிலோ அல்ல – ஆனால் மிகவும் நெருக்கமாக இருப்பவர்களிடையே நிகழ்கின்றன. இது ஏனென்றால் மக்கள் சில விஷயங்களைப் பெறுவதற்கு அவர்களது உணர்ச்சிகளைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.
நீங்கள் ஒன்றை அடைவதற்கு உங்களது உணர்ச்சிகளைப் பயன்படுத்த முயற்சி செய்தால், அது ஆரம்பத்தில் பலன் அளிக்கலாம். ஆனால் நீங்கள் அதை மேற்கொண்டு முன்னகர்த்தினால், பிறகு ஒருவருக்கொருவர் அக்கறை செலுத்தவேண்டிய மக்களிடையே, வாழ்க்கை நம்பமுடியாத அளவுக்கு மிக மோசமாக மாறிவிடமுடியும். மிக மோசமான சூழல்கள் எதிரிகளுக்கிடையே நிகழ்வதில்லை, அன்புக்குரியவர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களுக்கு இடையேதான் நிகழ்கிறது.
மக்களுக்கு அவர்களது அபிப்ராயங்கள் இருக்கின்றன. நீங்கள் யாரையாவது நேசித்தால், உங்களுக்கு அபிப்ராயங்கள் இருக்கக்கூடாது. அன்பு என்பது, அபிப்ராயங்களை உருவாக்காமல் மற்றொரு உயிரை பேணி வளர்க்கும் விருப்பத்துடன் இருப்பது. ஒரு அபிப்ராயம் என்றால், ஒரு நபரை கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வார்ப்புக்குள் திணிப்பதற்கான ஒரு வழி. அன்பு என்பது புதியதொரு சாத்தியத்துக்குள் ஒரு நபரை பேணிக் காப்பது. நேசமும், அபிப்ராயமும் இணைந்து செல்லமுடியாது.
அது உண்மையிலேயே ஒரு அன்பான உறவு என்றால், அங்கே அபிப்ராயங்கள் இருக்கக்கூடாது, பேணிப் பாதுகாப்பது மட்டுதான் இருக்கவேண்டும். அவர்களை மேலும் வளர்ப்பதற்கு, அந்தக் கணத்தில் நீங்கள் சில தீர்மானங்களைச் செய்கிறீர்கள். வீட்டில் உங்களுக்குக் குழந்தைகள் இருக்கும்பொழுது, அவர்களது அடுத்த சாத்தியத்தை நோக்கி அவர்கள் செல்வதற்கு உறுதுணை செய்வதற்காக, அவர்கள் தற்போது இருக்கும் நிலை குறித்து சில தீர்மானங்களை நீங்கள் செய்யவேண்டுமே தவிர, அவர்கள் குறித்த ஒரு கருத்தை உருவாக்குவது அல்ல. அவர்களைக் குறித்து ஒரு கருத்தை நீங்கள் உருவாக்கினால் அதன் பொருள், அவர்களது வாழ்க்கையை ஒரு புதிய சாத்தியத்துக்குள் கவனித்துப் பாதுகாப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை – உங்களுடைய கருத்து என்னும் வரையறைக்குள் அவர்களைப் பொருத்துவதற்கு மட்டுமே விரும்புகிறீர்கள், மற்றும் உங்கள் கருத்துப்படி அவர்கள் செல்லாமல் இருந்தால், நீங்கள் ஏமாற்றமடைகிறீர்கள். அது அப்படி வேலை செய்யாது.
நீங்கள் மற்றவர்களுடன் நெருங்கி வாழ்வதற்கு விரும்பினால், அந்த உறவானது பேணிப் பாதுகாக்கும் அடிப்படையில் இருக்கவேண்டும், கொள்கை அல்லது கருத்துப் பிடிவாதத்துடன் இருப்பதல்ல. அப்படிப்பட்ட உறவுகள் நிச்சயம் தோல்வியடைகிறது ஏனெனில் அடிப்படையான செயல்பாடுகள் தவறாக உள்ளது. சூழ் நிலையின் புதுமையினால் அல்லது ஆரம்பகால தேனிலவு காலகட்டத்தில் அது தற்காலிகமாக பலனளிக்கலாம், ஆனால் நீண்டகால அளவில் அது பலனளிக்காது.
நேசத்தை ஒரு விதமான இனிமையான உணர்ச்சியாக உங்களுக்குள் நீங்கள் உணர்கிறீர்கள். இந்த உணர்வானது நீங்கள் யாரையோ பார்க்கும்போதோ, அல்லது அவர்களின் அருகாமையில் இருப்பதனாலோ தூண்டப்படமுடியும். உணர்ச்சியை யார் தூண்டுவது என்பது பொருட்டல்ல; முக்கியமானது என்னவென்றால், அனுபவம் உங்களுக்குள் நிகழ்கிறது.
அத்தகைய உணர்ச்சியின் இனிமையை நீங்கள் அனுபவிப்பது அற்புதமானது. ஆனால் உங்களுக்குள் ஒரு அனுபவத்தை உணர்வதற்கு அடுத்த நபரை நீங்கள் ஒரு திறவுகோலாகப் பயன்படுத்துகிறீர்கள். அங்கே ஒரு பூட்டு இல்லை, கதவு இல்லை, மற்றும் தடை இல்லாதபொழுது, நீங்கள் ஏன் ஒரு திறவுகோலை பயன்படுத்துகிறீர்கள்? அது ஏனென்றால், நீங்கள் ஒரு “தள்ளு வண்டி (புஷ்-ஸ்டார்ட்) இயந்திரமாக” இருக்கிறீர்கள். ஒரு புஷ் ஸ்டார்ட் இயந்திரம் என்பது, இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முந்தைய அம்பாசடர் போல், எஞ்ஜினை இயக்கத் தொடங்குவதற்கு முன், அதைத் தள்ளிவிடவேண்டிய ஒரு பழைய காரைப் போன்றது.
இப்போது, எல்லா கார்களுக்கும் செல்ஃப் ஸ்டார்ட் உள்ளது, அவற்றுள் பலவற்றுக்கும் தூர இயக்கி (remote start) கூட உள்ளது – இது ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம். நீங்கள் செல்ஃப் ஸ்டார்ட் ஆக இருப்பதற்காக, உங்களது தொழில் நுட்பத்தை உயர்த்திக்கொள்வதற்கு நீங்கள் விரும்புவீர்களா? நீங்கள் காலையில் கண் விழித்தால், நீங்களாகவே ஆனந்தம், அன்பு, மற்றும் உற்சாகத்துடன் ததும்புகிறீர்கள் – உங்களைத் தூண்டிவிட உங்களுக்கு யாரும் தேவைப்படுவதில்லை. நீங்கள் ஒரு செல்ஃப் ஸ்டார்ட் இயந்திரமாக ஆவதற்கு விருப்பம் கொண்டால், நீங்கள் எங்களிடம் வரவேண்டும்.
தற்போது நீங்கள் காதலில் இருந்தால், அது நல்லதுதான். ஆனால் நீங்கள் செல்ஃப் ஸ்டார்ட் ஆக இருப்பது முக்கியம். இல்லையென்றால், சிறிது காலத்துக்குப் பிறகு, மற்றொரு நபரிடமிருந்து நீங்கள் மகிழ்ச்சியை பிழிந்தெடுக்க முயற்சிக்கிறீர்கள். அப்போதுதான் காதல் உறவுகள் கடினமானதாகவும், மிக மோசமானதாகவும் ஆகிறது, ஏனெனில் நீங்கள் அடுத்த நபரிடமிருந்து மகிழ்ச்சியைப் பிழிந்தெடுக்க முயற்சி செய்கிறீர்கள். ஆனந்தம், அன்பு, மற்றும் உற்சாகம் என்று வரும்பொழுது, நீங்கள்தான் அதற்கான மூலமாக இருக்கவேண்டும். மற்ற விஷயங்கள் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
ஒரு உறவில் இணைவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒரு வழியில், யாரோ ஒருவரிடமிருந்து ஒன்றை வலுக்கட்டாயமாகப் பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். மற்றொரு வழியில், யாரோ ஒருவருடன் ஒன்றைப் பகிர்ந்துகொள்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் பகிர்ந்துகொள்வதற்கு இருந்தால், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் கட்டாயப்படுத்திப் பிழிந்தெடுக்க இருந்தால், மற்றொருவர் அதற்கான வழியை மூடிவிடும்பொழுது, உறவானது மிகக் கடுமையாகவும், மோசமாகவும் ஆகப்போகிறது.
தாங்கள் முழுமையான காதலர்கள் என்று நினைத்த மக்கள் பலருக்கும், எவ்வளவோ மோசமானது நிகழ்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவர்களிடம் ஏதோ ஒன்று தவறாகிவிட்டது என்பது காரணமல்ல, அதற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் தவறாக நினைத்துக்கொண்டு உறவைத் தொடங்கினர், “இந்த நபர் என் ஆனந்தத்தின் மூலமாக இருக்கிறார்”, என்று. இல்லை – ஆனந்தமோ துன்பமோ, அதன் மூலம் உங்களுக்குள் இருக்கிறது.
அதை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். நீங்கள் ஒரு ஆனந்தம் நிரம்பிய மனிதராக இருந்தால், அவர்களும்கூட உங்களுடன் இருப்பதற்கு விரும்புவார்கள். நீங்கள் ஒரு துன்பமயமான மனிதராக இருந்தால், அவர்கள் உங்களைச் சிறிது காலத்துக்கு சகித்துக்கொள்வார்கள்.
உங்களுக்கு ஒரு நகைச்சுவை கூறட்டுமா. ஒரு நாள் மாலை நேரம், சங்கரன்பிள்ளை பூங்கா ஒன்றில் நடைபழகச் சென்றார். ஒரு பென்ச் மீது அழகான, இளம்பெண்ணொருத்தி அமர்ந்திருப்பதைக் கண்டார். அவரும் அதே பென்ச் மீது சென்றமர்ந்தார். சிறிது நேரம் கழித்து, அவர் சற்று நெருக்கமாக நகர்ந்தார். அவள் சற்றே விலகி நகர்ந்தாள். சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் சற்று நெருங்கி நகர்ந்தார். அவள் சிறிதளவு விலகி நகர்ந்தாள். மீண்டும், அவர் நெருக்கமாக நகர்ந்தார். இதற்குள், அவள் பென்ச்சின் மறுமுனைக்குச் சென்றுவிட்டதுடன், அவள் அவரை தூரமாகத் தள்ளிவிட்டாள்.
சூரியன் சரியான கோணத்தை அடைவதற்காக இரண்டு நிமிடங்கள் சங்கரன்பிள்ளை காத்திருந்தார். பிறகு, அவர் முழந்தாளிட்டு, “ நான் உன்னைக் காதலிக்கிறேன். என் வாழ்க்கையிலேயே நான் யாரையுமே நேசித்திராத அளவுக்கு உன்னை நான் காதலிக்கிறேன்”, என்றார். காதலின்பொருட்டு பெண்கள் முட்டாளாகிவிடமுடியும். ஒருவேளை அது மதியப்பொழுதின் இடைப்பட்டதாக இருந்திருந்தால், அவள் துளியும் நம்பியிருந்திருக்கமாட்டாள். ஆனால் சூரியன் மறைந்துகொண்டிருந்தது, சூழல் சரியாக இருந்தது, ஆகவே இயற்கை அதன் போக்கில் அனுமதித்தது. பிறகு, அவர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், நேரம் இரவு எட்டு மணியாகி இருந்தது. அவர் எழுந்துகொண்டவராக, “நான் போகவேண்டும்”, என்றார். அவள் கேட்டாள், “நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? என்னைக் காதலிப்பதாகக் கூறினீர்கள்!”. “என் மனைவி காத்துக்கொண்டிருக்கிறாள்; நான் போகவேண்டும்”, என்றார் அவர்.
“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்பது எப்போதும் மக்கள் தங்களுக்கு வேண்டியதைப் பெறுவதற்கான “திறந்திடு சீசேம்” மந்திரச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. அவர்களது தேவைகள் உடலளவில், மனதளவில், உணர்ச்சியளவில், பொருளாதார அளவில், அல்லது சமூக அளவில் இருக்கலாம். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு இந்த மந்திரம் பயன்படுத்தப்படுகிறது என்பதுடன், அது பாதி நேரங்களில் பலனளிக்கவும் செய்கிறது. ஆனால், காதலுடன் இருக்கும் ஆனந்தத்தை அனுபவிப்பது மிக முக்கியமானது. வாழ்க்கையில் உண்மையிலேயே பெரிய படிகளை எடுப்பதற்கு உணர்ச்சியின் இனிமை உங்களுக்குத் தேவையாக இருக்கிறது. உங்கள் இதயத்தில் அன்பின் இனிமை இல்லையென்றால், உலகத்தில் பெரிய படிகளை எடுக்க முயற்சிப்பது, விரக்திக்கு வழிவகுக்கக்கூடும்.