மூளை, உடலின் இரசாயனம், மற்றும் பேரானந்தத்துக்கு இடையிலான ஆர்வமூட்டும் தொடர்புகளை கண்டறியுங்கள். மதிப்புமிகுந்த நிறுவனங்களில் வெளியான முன்னணி ஆராய்ச்சிகளும் பரைசாற்றும் உண்மையை சத்குரு நம்முடன் பகிர்கிறார். உங்கள் வாழ்வை மாற்றுவதற்கு, உங்களது தனிப்பட்ட இரசாயனக் கூடத்துக்கு எப்படிப் பொறுப்பேற்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
கேள்வியாளர்: சிறந்த இரசாயனத்தை நமக்குள்ளேயே உருவாக்கிக்கொள்வது குறித்து நீங்கள் பேசினீர்கள். நமது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மேம்படுத்துவதற்கான அந்த மாயாஜால இரசாயனத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ள முடியும்?
சத்குரு: இது குறித்து, கௌரவமிக்க கல்வி நிறுவனங்களால் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், ரட்கெர்ஸ் பல்கலைக்கழகம், இண்டியானா பல்கலைக்கழகம், மற்றும் ஹார்வர்ட் மருத்துவப்பள்ளி போன்றவை குறிப்பிட்ட ஆராய்ச்சித் திட்டங்களில் கூட்டாக இணைந்துள்ளன. உதாரணமாக, ஒரு ஆராய்ச்சி ஷாம்பவி மஹாமுத்ரா குறித்து கவனம் செலுத்தியது. இது இன்னர் எஞ்ஜினியரிங் செயல்முறையில் கற்றுத்தரப்படும் ஒரு அடிப்படையான பயிற்சி. இதனைப் பயிற்சி செய்பவர்கள் குறைந்தபட்சம் 40 இலிருந்து 48 நாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்வது அவசியமாகிறது. ஒரு மண்டலம் என்று குறிப்பிடப்படும் இந்த காலவரம்பானது 40 இலிருந்து 48 நாட்களுக்குள் நிறைவுபெறும் சில உடலியல் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்டது.
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை ஒரு மண்டலம் செய்தபிறகு, பங்கேற்பாளர்களின் ப்ரெய்ன் டிரைவ்ட் நியூரோட்ரோபிக் ஃபாக்டர் (brain-derived neurotrophic factor (BDNF)) குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்ததால், ஆனந்தமைட்கள் (anandamides) மற்றும் எண்டோகான்னபினோய்ட்-களின் (endocannabinoids) அளவும் அதிகரித்ததாக ஆராய்ச்சி கண்டுபிடித்தது. பூமியில் நீங்கள் காணக்கூடியதிலேயே மிகச் சிக்கலான இரசாயனத்தை மனித உடல் கொண்டுள்ளது.
உங்கள் உடலமைப்பை எப்படி நன்றாக நிர்வகிப்பது என்பதை அறிந்துகொண்டால், நீங்கள் பேரானந்தத்தின் இரசாயனத்தைத்தான் உருவாக்குவீர்கள், பதற்றம் அல்லது துன்பத்தின் இரசாயனத்தை அல்ல. பேரானந்தம் இயற்கையான தேர்வாக இருக்கும்பொழுது, பிறகு அது உங்களுக்கு ஏன் நிகழ்வதில்லை? நீங்கள் இந்த அதிநவீன இரசாயனத் தொழிற்சாலையின் நல்லதொரு தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறீர்களா அல்லது ஒரு மோசமான தலைமைச் செயல் அதிகாரியாக நீங்கள் இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி. அதற்குத் தேவையான ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கு, அதனை ஒரு குறிப்பிட்ட வழியில் அணுகுவது மிக முக்கியமானது.
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியை ஒரு மண்டலம் செய்தபிறகு, பங்கேற்பாளர்களின் BDNF குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்தது.
உதாரணமாக, தமிழ் நாட்டில், இன்றைக்கும்கூட கிராமத்து வீடுகளில், மக்கள் தண்ணீரை செம்பு அல்லது பித்தளைப் பானைகளில் சேகரித்து வைக்கின்றனர். இந்தப் பாத்திரத்தை மிகுந்த கவனமுடன், புளி பயன்படுத்தி சுத்தம் செய்து, விபூதி மற்றும் குங்குமம் சாற்றி பெரும் மரியாதையுடன் கையாளுகின்றனர். நீருக்கு ஞாபகசக்தி இருப்பதாக ஒரு ஜப்பானிய அறிவியலாளர் நிரூபித்துள்ளார். நீரை நீங்கள் எப்படி பாவிக்கிறீர்கள் என்பது அதன் அணுக்கூறு கட்டமைப்பின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் நாட்டின் பல கோவில்களில், தெய்வத்திரு உருவத்தின் மீது பொழியப்படும் நீரின் ஒரு சில துளிகளையாவது பெறுவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். அது ஏனென்றால், அந்த நீரானது தெய்வீகத்தின் ஞாபகத்தைச் சுமந்திருக்கிறது. இந்தக் கலாச்சாரத்தில், நீரை எப்படிச் சேமித்துவைப்பது, எப்படி அணுகுவது, மற்றும் நீரை எப்படிப் பாவிப்பது என்பதற்கான ஒரு முழுமையான அறிவியலே இருக்கிறது. இது முக்கியமானது ஏனென்றால், நீங்கள் அருந்தும் நீர், நீங்கள் சுவாசிக்கும் காற்று, மற்றும் நீங்கள் சாப்பிடும் உணவு, இவை வெறும் வியாபாரப் பண்டங்கள் அல்ல – அவைகள் உயிர் உருவாக்கும் பொருட்கள்.
இந்த மூலக்கூறுகளால்தான் நீங்கள் உருவாக்கப்படுகிறீர்கள். நீங்கள் அவைகளைத் தகுந்தபடி கையாளவில்லை என்றால், அவற்றின் கட்டமைப்பு மாறுபட்டு, அதற்கேற்றவாறு உங்கள் உடலமைப்புக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நவீன உலகத்தில் நாம் உருவாக்கியுள்ள பல விஷயங்களுள், மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்பமுடியாதவாறு பலவிதமான ஒலிகள், அதிர்வுகள், மற்றும் ஆற்றல்கள் உள்ளிட்டவைகளுக்கு நமது உடல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஆகவே குறைந்தபட்சம், நீங்கள் வீட்டில் என்ன செய்கிறீர்கள் என்பதும், நீங்கள் உங்களுக்குள் என்ன செய்கிறீர்கள் என்பதும் உங்கள் கைகளில் உள்ளது. உலகம் முழுவதையும் உங்களால் மாற்றமுடியாது, ஆனால் உங்களையே நீங்கள் எப்படி நடத்திகொள்கிறீர்கள் மற்றும், உங்கள் உடலமைப்புக்குள் என்ன செல்கிறது என்பதை நீங்கள் மாற்றமுடியும்.
மனித புத்திசாலித்தனத்தை விழிப்புணர்வாகப் பயன்படுத்தும்போது மட்டுமே, பிரபஞ்சத்தில் நாம் மகத்தான திறன் கொண்டவர்களாக இருக்கிறோம்.
உங்களது உடலின் இரசாயனத்தை மாற்றுவது என்பது உணவைக் குறித்தது மட்டுமல்ல; அது உங்களது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளையும் குறித்த விஷயமாகவும் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட விதமாக உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வைத்திருக்கக் கற்றுக்கொள்வது, உடலின் இரசாயனத்தை கணிசமாக மாற்றமுடியும். ஹார்வர்ட் மருத்துவப்பள்ளி காட்டுவதுபோல், இதற்கு உறுதுணையாக அறிவியல்பூர்வமான சான்று உள்ளது.
இந்த பூமி மீது மனிதர்களாக , நாம் பரிணாமத்தின் உச்சத்தில், புத்திசாலித்தனத்தின் உயர்ந்த நிலையில், மற்றும் தலைசிறந்த திறன் அமையப்பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் நமது திறன், புத்திசாலித்தனம், மற்றும் பரிணாமவளர்ச்சி ஏணியின் உயரமான இடம் தற்போது ஒரு பிரச்சனையாகிவிட்டது. இது ஏனென்றால், வாழ்வில் இந்த அளவுக்கான அதிநவீனத்தை நீங்கள் அடைந்துவிட்டால், நீங்கள் அனைத்தையும் விழிப்புணர்வாகச் செய்யவேண்டும். ஆனால் நீங்கள் இன்னமும் விழிப்புணர்வில்லாமல் செயல்படவே விரும்புகிறீர்கள்.
மற்ற உயிரினங்கள் நீங்கள் இருப்பதைப்போன்று விழிப்புணர்வின்றி இல்லை. பூமியின் மீதிருக்கும் ஒவ்வொரு விலங்கும் அவர்களின் தேவைக்கான சிறந்த உணவை அடையாளம் கண்டுள்ளன, ஆனால் பூமியின் மிகப் புத்திசாலித்தனமான உயிரினம் இன்னமும் தாங்கள் சாப்பிடுவதற்கான சிறந்த உணவு குறித்து விவாதம் நடத்திகொண்டுள்ளது.
மனித புத்திசாலித்தனத்தை விழிப்புணர்வாகப் பயன்படுத்தும்போது மட்டுமே, பிரபஞ்சத்தில் நாம் மகத்தான திறன் கொண்டவர்களாக இருக்கிறோம். அதனால்தான் நாம் 2024ல் கான்சியஸ் ப்ளானட் (Conscious Planet) எனும் உலகளாவிய இயக்கத்தை துவங்கவிருக்கிறோம்.