சத்குரு எக்ஸ்குளூசிவ்

எண்களின் ஆற்றல்: யோகாவில் 21 மற்றும் 84 எண்களின் முக்கியத்துவத்தைக் கண்டறிதல்

மனித சக்தியமைப்பில் எண்கள் 21 மற்றும் 84-ன் வேர்களையும், ஒருவரது முழுமையான சாத்தியத்தினை தூண்டிவிடுவதற்கான யோகப்பயிற்சிகளில் அதன் அத்தியாவசியமான பங்கினையும் வெளிப்படுத்தும் சத்குரு, அந்த எண்களின் கணக்கியலையும், மறைபொருளையும் விளக்குகிறார்.

ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவில் எண் 21-ன் பங்கு

கேள்வி: ஷாம்பவி மஹாமுத்ரா கிரியாவில், ஆஉம் மந்திரத்தை நாம் 21 முறைகள் உச்சாடணம் செய்கிறோம். மேலும் கிரியா 21 நிமிடங்கள் நீடிக்கிறது. எண் 21-ன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு: மனித அமைப்பில் 7 சக்கரங்கள் மற்றும் 3 நாடிகள் இருக்கின்ற கருத்தியலின் அடிப்படையில் ஒரு எளிமையான வழியில் இதனைப் பார்க்கமுடியும். எண் 7-ன் மூன்று மடங்கு 21. ஆகவே, ஆண்தன்மை, பெண்தன்மை, மற்றும் அதைக் கடந்து இருக்கும் 3 நாடிகளும், 7 பரிமாணங்களில் தொடப்படுவதை நாம் உறுதிப்படுத்துகிறோம். மக்கள் உச்சாடணம் செய்யும்பொழுது, வழக்கமாக 108 முறைகள் உச்சாடணம் செய்கின்றனர். ஏனென்றால், மனித அமைப்பின் 112 சக்கரங்களுள், 108 உடலுக்கு உள்ளே இருக்கின்றன. எந்த சக்கரத்தையும் தவறவிடாமல் அவையனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதே இலக்கு.

நீங்கள் சமநிலையற்ற ஒரு நபராக இல்லாமல், ஒரு முழுமையான மனிதராக வெளிப்படுவது நோக்கமாக உள்ளது. நீங்கள் அதிகமான பெண்தன்மை கொண்டவராகிவிட்டால், நீங்கள் ஒரு பிரச்சனையாக இருப்பீர்கள். நீங்கள் அதிகமான ஆண்தன்மை கொண்டவராகிவிட்டால், நீங்கள் ஒரு பிரச்சனையாக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் இரண்டு தன்மைகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரித்து, இரண்டு தன்மைகளையும் நன்றாக செயல்படுத்தி விளையாடினால், நீங்கள் ஒரு அற்புதமான மனிதராக இருப்பீர்கள், அதனால்தான் 21.

84 ஆசனங்கள்: வாழ்வின் அடிப்படைகளைக் கடந்து

கேள்வி: பாரம்பரிய ஹடயோகாவில் 84 அடிப்படையான ஆசனங்கள் இருப்பது ஏன்?

சத்குரு: 84 ஆசனங்கள் இருப்பது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? யோகாவில், இது 84வது படைப்பின் சுழற்சி என்று நம்பப்படுகிறது. இதற்கு மற்ற அம்சங்களும் உண்டு, ஆனால் இங்கே நாம் அவற்றைப்பற்றி பேசமாட்டோம். மனித அமைப்பில் 84 ஞாபகத்தின் பரிமாணங்களும், 84 நிலைகளிலான சாத்தியங்கள் அல்லது தடைகளும் உள்ளன, அதை நீங்கள் இரண்டு வழிகளில் பார்க்கமுடியும். அவற்றை நீங்கள் தடைகளாகப் பார்த்தால், அவற்றை கரைப்பதற்கு விரும்புவீர்கள். அவற்றை நீங்கள் சாத்தியங்களாகப் பார்த்தால், உயரே ஏறிச்செல்வதற்கு அவற்றை படிக்கற்களாகப் பயன்படுத்த விரும்புவீர்கள். இரண்டுமே சரியானது; அவற்றை இரண்டு வெவ்வேறு வழிகளில் அணுகுவதுதான் இது

ஞாபகங்களின் 84 பரிமாணங்கள் இருக்கும் காரணத்தால், 84 ஆசனங்கள் உள்ளன. மற்றும் நாம் செய்வது அனைத்தும் 21 எண்ணிக்கையில் இருப்பது ஏனென்றால், அது 84-ன் கால் பங்காக உள்ளது. வழக்கமாக, ஒரு மனிதர் உடலளவிலும், சமூக நிலையிலும் ஒரு முழுமையான வாழ்க்கை வாழ்வதற்கு, உடலில் இருக்கும் 21 சக்கரங்கள் மட்டுமே செயல்படுவது தேவையாக இருக்கிறது. சக்தியின் மூன்று பரிமாணங்களைக் கருத்தில்கொண்டு 21 என்பது கூறப்பட்டது: பிங்களா, ஈடா மற்றும் சுஷூம்னா சக்தி நாடிகள்; இவை ஒவ்வொன்றும் 7 நிலைகள் உடையது; 3 நாடிகளை 7 நிலைகளால் பெருக்கினால் 21.

உடலில் 7 சக்கரங்கள் மட்டும்தான் இருப்பதாக மக்கள் தவறுதலாக நம்புகின்றனர், ஆனால் உண்மையில், 3 சக்தி பரிமாணங்களில், 3 சக்கரங்கள் ஒவ்வொன்றும் 7 வெவ்வேறு நிலைகளில் ஒன்றுபோல் செயல்படுகிறது – 3ஐ 7ஆல் பெருக்கினால் 21 சக்கரங்கள். ஆனால் இது மிகவும் அடிப்படையான முறையில் வாழ்ந்திருப்பது. நீங்கள் உடலளவில், மனதளவில் மற்றும் உணர்ச்சியளவில் முழுமையானவராக இருக்கலாம் என்றாலும், சக்தியளவில் நீங்கள் ஊனமடைந்தவராக இருக்கிறீர்கள்.

ஒருவேளை உங்களது கை மற்றும் கால் விரல்கள் 20 உடன் கூடுதலாக உங்களுக்கு ஒரு விரல் இருக்கும் நிலையில், மொத்தம் 21 விரல்களில், 5 மட்டும் செயல்பட்டால், உங்களை ஊனமுற்றவராகவே நாம் கருதுவோம். அதைப்போலவே, நான்கு உறுப்புகளில், ஒன்று மட்டும்தான் செயல்படுகிறது என்றால், உங்களை ஊனமுற்றவராகத்தான் நாம் கருதுவோம். அல்லது உங்களது மூளையின் 25% மட்டும் செயல்படுகிறது என்றால், உங்களையும் ஊனமுற்றவராகவே நாம் கருதுவோம்.

சக்திநிலையில், தற்போது அப்படித்தான் உலகம் இருந்துகொண்டுள்ளது. 21 சக்கரங்கள் செயல்பட்டால், நீங்கள் உடலளவில், மனதளவில் மற்றும் உணர்ச்சியளவில் நல்ல முழுமையான நிலையில் இருப்பீர்கள். அது என்னவென்றால், எளிமையான பிழைப்பு செயல்முறைகளைக் கடந்த எதையும் கண்டறியும் திறனற்றவராக நீங்கள் இருப்பீர்கள். தற்போது ஒட்டுமொத்த உலகமும் பிழைப்பிலேயே முனைப்பாக உள்ளது.

வாழ்வின் ஆழமானவை அனைத்தையும் நவீன சமூகம் கைவிட்டிருப்பதுடன், கேடுதரும் விஷயங்களைப் போற்றிப் பாதுகாத்து வருகிறது. உங்களது உணவு, உடை, கார் மற்றும் வீடு இவற்றைத் தவிர உங்களுக்கு வேறு எந்தத் தேடுதலும் இருக்கக்கூடாது. இவற்றைக் கடந்து நீங்கள் எதையாவது சிந்தித்தால், அல்லது நீங்கள் மேலே பார்த்தால், நீங்கள் பழமையானவராகக் கருதப்படுவீர்கள். அதேபோல், நீங்கள் கீழே பார்த்தால், நீங்கள் முற்காலத்தவராகப் பார்க்கப்படுவீர்கள். நவீனமாக இருப்பது என்றால், கடைகளின் ஜன்னல் வழியாக காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை நாவூறப் பார்த்திருப்பது. கண்கள் மூடிய நிலையில் ஆசனங்கள் செய்வது முற்காலமாகக் கருதப்படுகிறது.

ஹடயோகா – ஆரோக்கியத்துக்கானதை விடவும் மேலானது

21 சக்கரங்களுடன் ஒருவர் முழுமையானதொரு பொருள்தன்மையிலான வாழ்க்கையை வாழமுடியும், ஆனால் வாழ்வின் மற்ற பரிமாணங்கள் உயிரோட்டமான நிதர்சனமாவதற்கு, மற்ற சக்கரங்களும் தூண்டப்பட வேண்டும். புத்திசாலித்தனம், ஆற்றலினால் வல்லமைப்படுத்தப்படுவது அவசியம், இல்லையென்றால், செயல்படாத புத்திசாலித்தனம் ஏறக்குறைய இல்லாமல் இருப்பதற்கு சமம். செயல்படாத புத்திசாலித்தனம், ஆன் செய்யப்பட முடியாத ஒரு கணினி போன்றது; அது பயனற்றது. தற்போது, மனித அமைப்பானது பிழைத்தலுக்கான தளங்களில் மட்டும் இயங்கும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் போன்று இருக்கிறது. அதனுடைய திறன்கள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்குத் தூண்டுதல் தேவைப்படுகிறது.

ஹடயோகா, ஒட்டுமொத்த மனித அமைப்பையும் தூண்டிவிடும் ஒரு வழிமுறை. மக்கள் அடிக்கடி, “எனக்கு வயிற்றுப்புண் இருக்கிறது; எந்த ஆசனத்தை நான் செய்யவேண்டும்?” என்பதைப் போன்ற கேள்விகள் கேட்கின்றனர். மிகக் குறைந்தபட்சமாக, தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் ஒரு செயல்முறைக்கு வழி நடத்தக்கூடிய ஒன்றைத் தூண்டிவிடும் எளிமையான ஒரு ஹடயோகா முறையை ஒருவர் பயிற்சி செய்யவேண்டும். ஆனால் யோகா குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை; அதனுடைய முதன்மை இலக்கு என்னவென்றால், உடலமைப்பை முழுமையாக செயல்படுமாறு செய்வது.

உங்களது உடலமைப்பு அதன் உயரிய ஆற்றலுக்கு செயல்படுகிறது என்றால், அனைத்தும் சரியாக இருக்கும். உடல் தன்னைத்தானே உள்ளிருந்து உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றிருக்கும்பொழுது, நாட்பட்ட நோய்கள் என்று வரும்பொழுது, அது பொதுவாக தன்னைத்தானே சரியாக்கிக்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. வெளியிலிருந்து ஏதோ ஒன்று வந்தால், நாம் அதற்குத் தகுந்தாற்போல் அணுகவேண்டும்.