உரையாடல்

சத்குருவுடன் ஒரு உரையாடலில் டெமி லொவாடோ

மகிழ்ச்சி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் என பல்வேறு தலைப்புகளில் நிகழ்ந்த உற்சாகமான ஒரு உரையாடல்

டெமி லொவாடோ ஒரு அமெரிக்க பாடகி, பாடலாசிரியை மற்றும் நடிகை. இன்ஸ்டாகிராமில் 11 கோடிக்கும் மேலான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ள டெமி, சமூகவலைத்தளத்தில் மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவர். “4D with Demi Lovato” என்ற தனது வலையொலி நிகழ்ச்சியில் அவர் சத்குருவோடு நிகழ்த்திய உரையாடலின் சில பகுதிகளை நாம் இங்கே வாசிக்க இருக்கிறோம்.

மகிழ்ச்சியை எவ்வாறு கண்டடைவது?

டெமி லொவாடோ: ஒருவர் தனது வேலையில் மகிழ்ச்சியை கண்டடைவதற்கு அவரை நீங்கள் எவ்வாறு ஊக்கப்படுத்துவீர்கள் - குறிப்பாக அந்த வேலை கடினமானதாகவும் இருக்கிறது என்றால்?

சத்குரு: எந்த வேலையும் கடினமானது அல்ல, நீங்களாகவே அதை கடினமாக்கிக் கொண்டால்தான் உண்டு. நீங்கள் எதை மகிழ்ச்சியோடு செய்தாலும், அது உற்சாகமானதாக இருக்கும். அதையே நீங்கள் துயரத்தோடு செய்தால், அது கடினமானதாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், மேலும் கீழும் என 25 முறை வேண்டுமானாலும் உங்களால் நீச்சலடிக்க முடியும். அது உங்கள் தசைகளுக்கு கடினமானதாக இருந்தாலும், உங்களுக்கு அது கடினமான வேலை அல்ல. உங்களுக்கு விருப்பம் இல்லாத ஏதோ ஒன்றில் ஈடுபடும்போது மட்டுமே உங்கள் வேலை கடினமானதாக தோன்றும். அமெரிக்காவில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் வேலையை வெறுக்கிறார்கள் என்பதாக ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

நீங்கள் வெறுக்கும் ஒரு விஷயத்தை வாரத்தின் ஐந்து நாட்களும் நீங்கள் செய்துகொண்டிருந்தால், நிச்சயமாக வார இறுதியில் அதிகப்படியான அளவு ஏற்றிக்கொள்வீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. வாழ்க்கை என்பது முதலில் நீங்களே அதை கடினமானதாக செய்துகொண்டு, பின்னர் கடைசியில் கேளிக்கை கொள்வதல்ல.

டெமி லொவாடோ: ஒரு மாத சம்பளத்தில் இருந்து அடுத்த மாத சம்பளம் வரை நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்படி இருந்தால்தான் பின்னர் ஒரு நாள் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதைத்தானே நாம் வாழும் இந்த உலகம் நமக்கு கற்றுத்தருகிறது?

சத்குரு: ஒரு மாத சம்பளத்தில் இருந்து அடுத்த மாத சம்பளத்தை நோக்கி ஓடுவதைப் பற்றியது அல்ல இது. ஆரம்பப்பள்ளி காலம் முதலே, மற்ற அனைவரை விடவும் நீங்கள் கட்டாயம் முதன்மையானவராக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதையே வேறு வார்த்தைகளில் கூறினால், நீங்கள் மகிழ்ச்சியடையும் ஒரே விஷயம், மற்றவர்களின் தோல்விகளை குறித்ததாக இருக்கிறது. இதை நாம் மாற்றாவிட்டால், மனிதகுலம் எப்போதும் மகிழ்ச்சியைக் கண்டடையாது. அதற்கும் மேலாக, எவரும் தாங்கள் செய்யும் வேலையில் மகிழ்ச்சியை கண்டடைய முடியாது, ஏனெனில் அவ்வாறு ஒன்று இல்லை. மகிழ்ச்சியோ துயரமோ, இரண்டுமே உங்களுக்குள் மட்டும்தான் நிகழ முடியும்.

உங்கள் அனுபவத்தின் அடிப்படை உங்களுக்குள் தான் இருக்கிறது - வெளியே எங்கும் இல்லை. எனவே நீங்கள் தரையை துடைத்துக் கொண்டு இருந்தாலும், அல்லது ஒரு பெரிய ராக்ஸ்டாராக இருந்தாலும், அது ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அனைத்தையும் உங்களால் மகிழ்ச்சியோடு செய்ய முடியும். வேலையிலோ செயலிலோ மகிழ்ச்சி இல்லை. மகிழ்ச்சி என்பது எதிலும் இல்லை - நீங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் செய்யும் அனைத்தும் அவ்வாறு தான் இருக்கும்.

வேற்றுகிரகவாசியோடு உரையாடல்

டெமி லொவாடோ: உங்களை யோகி, மறைஞானி, தீர்க்கதரிசி என்றெல்லாம் விவரிக்கிறார்கள். மறைஞானி என்றால் என்ன என்பதைப் பற்றி அறியாதவர்களுக்கு அதை விளக்க முடியுமா?

சத்குரு: தங்களின் புலன்கள் வழியாக அறிந்தவையே அறுதியான உண்மை என்ற புரிதலில் இருப்பவர்கள் தவறிழைக்கிறார்கள். அதனால் தான் பெரும் துன்பங்கள் நிகழ்கின்றன. நீங்கள் அனைத்தையும் சரியாக, உள்ளது உள்ளபடி பார்த்தால் மக்கள் உங்களை மறைஞானி என்று அழைப்பார்கள்.

டெமி லொவாடோ: அற்புதம். அவ்வாறெனில் எவர் வேண்டுமானாலும் மறைஞானி ஆகலாம்?

சத்குரு: நிச்சயமாக.

டெமி லொவாடோ: அற்புதம். இந்த எண்ணத்தை நான் மிக விரும்புகிறேன்.

சத்குரு: இது அடையவே முடியாத ஒன்றாக இருந்தால், நான் ஏதோ ஒரு வேற்றுகிரகவாசியாக தான் இருக்க முடியும்.

டெமி லொவாடோ: வேற்றுகிரகவாசிகளைப் பற்றி குறிப்பிடும்போது, நீங்கள் அதை நம்புகிறீர்களா?

சத்குரு: உங்களோடுதான் நான் உரையாடிக் கொண்டிருக்கிறேனே! [இருவரும் சிரிக்கின்றனர்]

ஏன் மோட்டார் சைக்கிள்?

டெமி லொவாடோ: மோட்டார் சைக்கிளோடு உங்களுக்கு இருக்கும் உறவைப் பற்றி கேட்பது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் பறக்கும் ஒரு யோகியை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. எது உங்களை மோட்டார் சைக்கிளின் பால் ஈர்த்தது? மேலும் இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

சத்குரு: இது மோட்டார் சைக்கிளைப் பற்றியது அல்ல - எந்த வகையிலேனும் உலகத்தின் பெரும்பாலான மக்களை சென்றடைய வேண்டும் என்ற விருப்பத்தினால் விளைந்தது இது. அப்போது மோட்டார் சைக்கிள்தான் என் வசம் இருந்தது. இது சுதந்திரத்தைப் பற்றியது அல்ல; பிணைக்கும் கயிறுகளைப் பற்றியது. கால்கள் கயிறுகளாக பிணைத்திருந்த போது, ஒரு மிதிவண்டி சுதந்திரமாக தோன்றியது. மோட்டார் பூட்டப்பட்ட மிதிவண்டியை பார்த்ததும் இயல்பாகவே நான் அதை தேர்வு செய்தேன். ஒரு காலகட்டத்தில், இந்தியாவின் நீள அகலம் முழுவதையும் நான் மோட்டார் சைக்கிளில் வலம் வந்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பின்னர் சில விஷயங்கள் நிகழ்ந்தன. எனது 25 வயதில் என்னுடைய தனித்துவம் வெடித்தது, அப்போது நான் அனைத்தையும் முற்றிலுமாக இழந்துவிட்டேன்.

எதனால் மூன்று பரிமாணங்கள் போதுமானதாக இல்லை

டெமி லொவாடோ: என்னுடைய வலையொலி “4D with Demi Lovato” என்று அறியப்படுகிறது. 4D என்றால் என்ன என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டிய தேவையிருக்காது என்று நினைக்கிறேன்.

சத்குரு: "நான் அறியாத ஒன்று இருக்கவே முடியாது" என்று எவர் நினைக்கிறாரோ அவர் ஒரு வடிகட்டிய முட்டாள். நீங்கள் நான்காம் பரிணாமத்தை உணராமல் இருக்கக்கூடும். ஆனால் நீங்கள் அறிந்தவற்றுக்கும் அப்பால் ஏதோ ஒன்று உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் - அது மிக முக்கியமான ஒன்று.

டெமி லொவாடோ: ஆம், மிகச் சரியாக.

சத்குரு: எனவே அதுதான் 4D.

டெமி லொவாடோ: மிகச் சரியாக கூறினீர்கள்.

சத்குரு: தாங்கள் பார்த்தது, கேட்டது, நுகர்ந்தது, சுவைத்தது மற்றும் தொட்டது ஆகியவற்றுக்கு அப்பால் எந்த ஒரு அனுபவமும் அடைந்திடாமல் இருக்கக் கூடியவர்களுக்கு இதை நான் கூறுகிறேன் - உங்களுக்கு தெரியாத ஒன்று இருக்கவே முடியாது என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். அதுவே அறியாமையின் உச்சம். நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கும் வரை அறியாமை என்பது மோசமான ஒன்றல்ல. உங்களுக்கு தெரியவில்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தேடலில் இருக்கும். அதை உங்களால் தடுக்க முடியாது. "நான் அறிந்துகொள்ள முயற்சிக்கிறேன்" என்பது ஒரு தேர்வு அல்ல. எனக்கு தெரியவில்லை என்பதை நீங்கள் அறிந்திருந்தால், உங்களுக்குள் இருக்கும் அனைத்தும் தேடலில் இறங்கும்.

தாங்கள் பார்த்தது, கேட்டது, நுகர்ந்தது, சுவைத்தது மற்றும் தொட்டது ஆகியவற்றுக்கு அப்பால் எந்த ஒரு அனுபவமும் கிடைத்திடாமல் இருக்கக் கூடியவர்களுக்கு - உங்களுக்கு தெரியாத ஒன்று இருக்கவே முடியாது என்று ஒருபோதும் எண்ணாதீர்கள்.

எனவே நீங்கள் நான்காம் பரிமாணத்தில் இருப்பது நல்லதுதான். நீங்கள் மூன்று பரிமாணங்களில் மட்டும் இருந்தால், நான்காம் பரிமாணத்தைப் பற்றி நீங்கள் நிச்சயமாக பேசவேண்டும். நீங்கள் நான்காம் பரிமாணத்தில் இருந்தால், அப்போது ஐந்தாம் பரிமாணத்தைப் பற்றி நீங்கள் நிச்சயமாக பேசவேண்டும். குறைந்தபட்சம் நீங்கள் அறிந்திருப்பதை விட இன்னும் அறிந்துகொள்ள வேண்டியது ஏதோ உள்ளது என்பதை உணர்ந்து இருக்கிறீர்கள். அதுவே மிக முக்கியமான ஒன்று.

நீங்கள் அறிந்தவற்றின் வரையறைகளை ஒப்புக்கொள்வதைப் பற்றியது இது. இதனால் உங்களின் தேடலும் புத்திசாலித்தனமும் எப்போதும் உறங்காது. உங்களின் உடல் உறங்கக்கூடும், ஏனெனில் அதற்கு உறக்கம் தேவை. ஆனால் உங்கள் புத்திசாலித்தனம், விழிப்புணர்வு மற்றும் தேடல் உறங்க வேண்டியதில்லை. ஒரு நாளில் எட்டு மணி நேரம் மட்டும் தேடலில் இருந்தால் அது வேலை செய்யப்போவதில்லை; உங்களுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் தேவை. உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் தேடலில் இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் வாழ்க்கை மிக சிறியதாக மாறிவிடும். பெரும்பாலான மக்கள் மூன்று பரிமாணங்களில் கூட இல்லை. அவர்கள் வெறும் ஒற்றை பரிமாணத்தில் தான் இருக்கிறார்கள் - அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் மட்டுமே அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது.

பிரிவுரை

டெமி லொவாடோ: என்னுடைய நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு முடிவாக ஏதாவது ஞான வார்த்தைகள் கூற விரும்புகிறீர்களா?

சத்குரு: நான் இன்னும் சிறிது காலம் வாழப்போகிறேன். எதற்காக இப்போதே கடைசி வார்த்தைகளை கூறச் சொல்கிறீர்கள்?

டெமி லொவாடோ: நீங்கள் சொல்வது சரியே. உங்கள் கருத்து மிகச் சரியானது. நான் கூறியதை பொருட்படுத்தாதீர்கள், அடுத்த ஒரு நிகழ்வில் நாம் மீண்டும் சந்திப்போம்.