நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின்‌ ஒரு கண்ணோட்டம்

கைலாஷ் தரிசன யாத்திரை
நேபாளத்தில் சத்குரு

21 ஆகஸ்ட் –
6 செப்டம்பர்

கைலாஷ் யாத்திரை மேற்கொண்டிருந்த தன்னார்வலர்களும் யாத்திரீகர்களும் நேபாளத்தில் சத்குருவுடன் இணைந்தனர். அடுத்து அவர்கள் சிமிகோட்-ல் இருந்து லாப்சா வரை மலையேற்றம் மேற்கொண்டனர். மலைப்பாதையின் சவால்களும், ஆச்சரியங்களும் சாங்சா பகுதியில் பருவமழை ரூபத்தில் அவர்களுக்கு காத்திருந்தது. டக்சே பகுதியை அடைந்தவுடன், பாரம்பரிய நடனத்துடன் லிமி மக்கள் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். நிர்வாக காரணங்களால், அவர்களால் இந்த ஆண்டு திபெத் / சீன பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் நீண்ட, கடினமான ஒரு மலையேற்றத்துக்கு பிறகு, சத்குருவின் வழிகாட்டலில் கைலாய மலையை தரிசித்து, சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் இடத்தை அடைந்தனர்.

செப்டம்பர் 3, நேபாள தன்னார்வலர்கள் சத்குருவிற்கு ஒரு சிறப்பு பிறந்தநாள் ஆச்சரியத்தை வழங்கினார்கள்.

மத்திய காவலர் பயிற்சி மையத்துடன் இணைந்து தற்கொலை தடுப்பு பற்றி சத்குரு

10
செப்டம்பர்

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, மத்திய காவலர் பயிற்சி மையத்தினருடன் சத்குரு உரையாடினார். ஆன்லைனில் நிகழ்ந்த இந்த உரையாடலின் போது, தற்கொலைக்கான பல்வேறு காரணங்கள், காவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள அழுத்தம் மற்றும் சிறைவாசிகளின் நல்வாழ்வு பற்றி கலந்துரையாடினார்கள். தனது வழக்கமான கூர்மையை வெளிப்படுத்திய சத்குரு, "இன்னும் 'சிறப்பான இடம்' என்பது உங்களுக்குள் உள்ளது, வேறெங்கோ இல்லை. இதுவே ஆன்மீக செய்முறை" என்று தெளிவுபடுத்தினார்.

எதிர்பாராத சூழலை எதிர்த்து போரிடுதல் பற்றி தற்காப்பு நிர்வாக கல்லூரியில் சத்குரு உரையாடுகிறார்.

14
செப்டம்பர்

செகந்திராபாத்தில் உள்ள தற்காப்பு நிர்வாக கல்லூரியில், எதிர்பாராத சூழ்நிலைகளை கையாள இன்னர் இன்ஜினியரிங் எனும் தலைப்பில் ஆன்லைனில் உரை நிகழ்த்தினார் சத்குரு. அதற்கு முன்பு, தீரமிக்க வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தன் மரியாதையை வெளிப்படுத்தி, உரையை துவங்கினார் சத்குரு. மரணம், கர்மா, தலைமை பண்பு, தோல்வியை எதிர்கொள்வது, வெற்றிகரமாக இருப்பது என்றால் என்ன, மற்றும் கோல்ஃப் குறித்தும் சத்குருவிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஒரு தலைவருக்கு தேவையான அடிப்படை குணங்களான உத்வேகம், நேர்மை, நுண்ணறிவு குறித்து வலியுறுத்தி பேசினார் சத்குரு. "நேர்மை என்றால் உங்கள் நோக்கம் தனிப்பட்ட அளவில் இல்லாமல் பெரிதாக இருக்கிறது. உங்கள் நோக்கங்கள் உங்கள் தனிப்பட்ட நல்வாழ்வு பற்றியதாக இல்லை - அது எப்போதும் அனைவரது நல்வாழ்வு குறித்ததாகவே இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

பொருளாதார வல்லுநர் தியரி மல்லரேட்டுடன் சத்குரு கலந்துரையாடல்

22
செப்டம்பர்

முதலீட்டாளர்களுக்கு பொருளாதார கணிப்புகளை வெளியிடும் 'மன்த்லி பாரோமீட்டர்' இதழின் இணை நிறுவனரும், பொருளாதார வல்லுநருமான தியரி மல்லரேட் “The Great Narrative” எனும் தலைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் புத்தகத்திற்காக சத்குருவுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார். இந்த புத்தகத்தில் 50 செல்வாக்கு மிக்க நபர்களின் பேட்டி இடம்பெற உள்ளது. பல்வேறு தலைப்புகளில் சுவாரஸ்யமாக உரையாடல் நிகழ்ந்தது. அப்போது, தியரி இந்த உலகம் செல்லும் திசை‌ பற்றி சத்குரு என்ன நினைக்கிறார் என்றும், யோக கருவிகள் எப்படி பயன்படும் என்றும் கேள்வி எழுப்பினார். பதிலளித்து பேசிய சத்குரு, வெற்றி மற்றும் நல்வாழ்வு குறித்த நமது எண்ணப்போக்கை நாம் திருத்தியமைத்து ஆனந்தமான மக்களை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சீர்கெட்டு வரும் சுற்றுச்சூழல், நமது மண்ணின் வளம் குன்றி வருவது, புவி வெப்பமயமாதல் ஆகிய பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்து, இவற்றிற்கு மரம் சார்ந்த விவசாயம்‌ எனும் தீர்வையும் வழங்கினார். பேட்டியை நிறைவு செய்கையில், சத்குரு, "நாம் அனைவரும் முயற்சி செய்தால், நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் நாம் கற்றுத்தர முடியும். அவர்களை நாம் அப்படியே சரியான திசையில் திருப்ப முடியும். அதை செய்வதற்கான மிகச்சிறந்த நேரம் இதுவே" என முத்தாய்ப்பாக முடித்தார்.

சத்குரு ஞானோதய தின கொண்டாட்டங்கள் - Eternal Echoes புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி

23
செப்டம்பர்

கடந்த 30 ஆண்டுகளில் கவிதையாக மலர்ந்த சத்குருவின் எண்ணங்களின் தொகுப்பு சத்குரு ஞானோதய தினத்தன்று Eternal Echoes எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு ஆங்கில புத்தகமாக வெளியிடப்பட்டது. நிகழ்வை கொண்டாடும் விதமாக சத்குருவுடன் எழுத்தாளரும் கவிஞருமான அருந்ததி சுப்ரமணியம் நேரலையில் கலந்துரையாடினார். சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இனிய இசையுடன் மாலை நிகழ்ச்சிகள் துவங்கியது. புத்தகத்திற்கான சித்திரங்களை வழங்கியுள்ள காருகோ யமசாகி தமது நுட்பமான, செறிவான கலைப்படைப்புகளை வெளியிட்டார். புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு படத்தினையும் கவனமாக தேர்வு செய்ததற்கான காரணம், அதன் பின்னுள்ள குறியீடு ஆகியவற்றையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, தனது கவிதைகளை சத்குரு வாசிக்க, வேடிக்கையுடனும் நுட்பமாகவும் கேள்விகளை எழுப்பிய அருந்ததி, கவிதைகளின் பின்னால் உள்ள கதையையும், கவிதைகள் பேசும் உள்ளார்ந்த மொழியையும் சத்குருவிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். சாதாரண நாட்களிலேயே விருந்தளிக்கும் சவுண்டஸ் ஆஃப் ஈஷா குழுவினர், இந்த கொண்டாட்டமான நாளில் சாதாரணமாக இருந்து விடுவார்களா என்ன? நிகழ்ச்சியின் நிறைவாக துள்ளல் இசை விருந்தளிக்க, அனைவர் இதயத்திலும் உற்சாகத்தின் துடிதுடிப்பு பற்றிக்கொண்டது.