இயற்கையாகவே நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வீட்டில், அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள நமது கலாச்சாரத்தில் பல வழிகள் இருக்கிறது என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். வீட்டு வைத்தியத்தை வைத்து எப்படி அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என்பதை நீங்கள் எங்களுக்கு விரிவாக விளக்க முடியுமா?

நோயெதிர்ப்பு சக்தி ஒரே நாளில் வளர்த்து விடாது

சத்குரு: முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது, நோய் எதிர்ப்பு சக்தி என்பது நீங்கள் ஒரே நாளில் வளர்த்து விடக்கூடிய ஒன்று இல்லை. பொதுவாக, இதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம், மருத்துவரீதியாகவும் இதைப் பற்றி நீங்கள் ஆய்வும் செய்யலாம். என்னளவில், நான் இப்படித்தான் பார்க்கிறேன், நம்புகிறேன். பல்வேறு காரணங்களை, மக்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கும்போது, உணவு வழக்கங்களை பார்க்கும்போது, உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்தியர்கள் மற்ற யாரை விடவும் இன்னும் சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறார்கள்!

உலகத்தில் இருக்கும் பெரும்பாலான மக்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்தியர்கள் மற்ற யாரை விடவும் இன்னும் சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கிறார்கள்!

உணவு பழக்க வழக்கங்களாலும், பயிற்சிகளாலும், தட்பவெப்ப சூழ்நிலையாலும், வேறு பல அம்சங்களாலும், இயற்கையாகவே இப்படி இருக்கிறார்கள். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், இப்படிப்பட்ட ஒரு வெப்ப மண்டல பகுதியில், இந்த மண்ணில்தான் மற்ற எந்த இடங்களை விடவும் அதிகளவில் உயிர் வடிவங்கள் வாழ்கிறது. நுண்ணுயிர்கள் உட்பட, இங்கே வாழும் உயிர்களுடைய எண்ணிக்கையும் வகைகளும் மிகமிக அதிகம். அதனால், இந்த நிலத்தில் வாழ்வதாலேயே இந்த உடலமைப்பு இன்னும் உறுதியாகிறது. ஏனெனில், உயிர் வடிவங்கள் எல்லாவற்றிற்கும் நாம் எப்போதும் வெளிப்படுத்தப்படுகிறோம். இது ஒரு அம்சம். அடுத்தது உணவு, இன்னொரு விஷயம் வாழ்க்கை முறை. இந்த எல்லா அம்சங்களும் இங்கே சேர்ந்து இருக்கிறது.

விவசாய சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி

நாம் பெரும்பாலும் விவசாய சமுதாயங்களாக இருப்பதனால், இந்த தலைமுறையை அப்படி சொல்லிவிட முடியாது என்றாலும், முந்தைய தலைமுறை வரையிலும் நாம் அனைவருமே விவசாய சமுதாயங்களாகவே இருந்து வந்தோம். அதனால் மக்கள் நிலத்திலேயே வாழ்ந்தார்கள். அதுதான் அவர்களுக்கு அபாரமான உறுதியை கொடுத்தது. ஆனால் வெளியே, உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில், மக்கள்தொகையில் சுமார் 80 சதவிகிதத்தினர் தோராயமாக 100 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தில் இருந்து விலகியிருக்கலாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எல்லோருமே உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் தொடர்ந்து வாழத் துவங்கினால், நிலத்துடன் நேரடி தொடர்பில் இல்லாமல், ஆய்வுக்கூட எலிகளைப் போல எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு வாழ்ந்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் கீழே போகும்.

இந்தியாவை பொறுத்தவரையில், நாம் நிலத்தை விட்டு விலகியிருக்கத் துவங்கி 25, 30 ஆண்டுகள்தான் ஆகிறது. மண்ணோடு நேரடி தொடர்பில் நம் மக்கள் வாழ்ந்ததனுடைய பலன் இன்னும் நம்மிடம் தொடர்கிறது. இது இப்படியே தொடர்ந்து நமக்கு இருக்காது. எல்லோருமே உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் தொடர்ந்து வாழத் துவங்கினால், நிலத்துடன் நேரடி தொடர்பில் இல்லாமல், ஆய்வுக்கூட எலிகளைப் போல எல்லாவற்றில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு வாழ்ந்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தியும் கீழே போகும். ஆனால், நமக்கு இதுவரையிலும் எல்லாமே சாதகமாகவே இருந்துவருகிறது என்றே நான் நினைக்கிறேன்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

சத்குரு, இப்போது என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நான் என்ன செய்ய முடியும் என்பதுதானே உங்கள் இப்போதைய தவிப்பு? நம் மண்ணின் மகத்துவத்தை நாமே அறியாமல் இருந்தால், நம் வாழ்க்கை முறையாகவே கலந்துவிட்ட நம் கலாச்சாரத்தின் பெருமைகளை நாம் எப்படி மதிப்போம், கொண்டாடுவோம்?

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல ஒரே நாளில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு இயற்கையான தீர்வு கிடைத்துவிடாது. ஆனால், காலப்போக்கில் இதன் பலன்களை நீங்கள் அனுபவிக்க முடியும். பொதுவான, எளிதாக கிடைக்கும் விஷயங்களைப் பற்றி நாம் பார்ப்போம். இதை குறிப்பிட்டேயாக வேண்டும். ஒரு விஷயம் என்னவென்றால், நாம் புனிதமான சாம்பலை பயன்படுத்தும் மக்கள். நாம் எப்போதுமே ஏதோ ஒருவிதத்தில் சாம்பலை பூசியிருக்கிறோம். எப்படி பயன்படுத்துவது என்பது தெரிந்தால், பலவிதமான சாம்பல் இருக்கிறது, இணையத்தில் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்க முடியாது. ஆனால், சாம்பலை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டால், அது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

வேப்பிலை & மஞ்சளின் மகிமை

வேப்பிலை - இது கிட்டத்தட்ட நம் தேசம் முழுவதுமே மலைப்பகுதிகள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. தினசரி சிறிதளவு (5 அல்லது 6) வேப்பிலைகளை உட்கொள்ளலாம்.

neem-turmeric

மஞ்சள் - இது எப்படியும் எல்லா இடத்திலும் எளிதாக கிடைக்கும் ஒன்று‌. இப்போது நேனோ டர்மரிக் என்று ஒன்றை உற்பத்தி செய்கிறார்கள். இதை உடல் உள்ளே எடுத்துக்கொள்ளும் சதவிகிதமானது சாதாரண மஞ்சளை விட மிக அதிகம் என்கிறார்கள். தினமும் ஒரு கொண்டைக் கடலை அளவுக்கு மஞ்சளை உருண்டை செய்து வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக்கொள்ளலாம்‌. இதுவும் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை பெரிய விதத்தில் மேம்படுத்தும்.

மலை நெல்லிக்காய் - இதை சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் இடித்த குறுமிளகு அல்லது பச்சை மிளகுடன் சேர்த்து தேனில் ஊற வைக்க வேண்டும். மற்ற தேசங்களில் இருப்பவர்களுக்கு இதை நாம் தெளிவுபடுத்தி விடுகிறோம், க்ரீன் பெப்பர் என்பது மிளகாய் இல்லை, நாம் குறிப்பிடுவது பச்சையாக இருக்கும் மிளகை. இப்படி மிளகு பச்சையாக இருப்பதை உலகின் பல பகுதிகளில் நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஆனால் இது இங்கே மிக சாதாரணமாக எங்களுக்கு கிடைக்கும்‌ ஒன்று. இதை தேனில் ஊற வைத்து தினமும் மூன்று வேளையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு சாப்பிடலாம்.

இதுபோன்ற எல்லாமே உங்கள் உடலில் எப்போது சிறப்பாக வேலை செய்யும் என்றால், நீங்கள் வெறும் வயிராக இருந்து, முதல் உணவாக இவற்றை எடுத்துக் கொள்ளும்போதுதான்.

இவை எல்லாவற்றையும் நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நீங்களே பார்க்கலாம். 4ல் இருந்து 8 வாரத்தில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பார்க்க முடியும்.

துணைநிற்கும் யோகா

கற்றுத் தருவதற்கு கடினமான யோகப் பயிற்சிகள் இருக்கிறது. ஆனால் இப்போது எளிமையான ஒரு உச்சாடனம் செய்வதும், ஈஷா கிரியா பயிற்சி செய்வதும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

இதில் நீங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். இது கொரோனா வைரஸ்க்கான சிகிச்சை இல்லை. இது அதை தடுப்பதற்கான வழிமுறையும் இல்லை.

கொரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி… சில புரிதல்கள்

நான் உச்சாடனம் செய்துவிட்டேன், அதனால் நான் பொறுப்பில்லாமல் செயல்கள் செய்வேன் என்று நீங்கள் கிளம்பினால் - இது அந்தமாதிரி வேலை செய்யாது. இதை நீங்கள் தொடர்ந்து செய்துவர, காலப்போக்கில் உங்கள் உடலமைப்பை வலுப்படுத்துவதற்கானது இவையெல்லாம். அப்போதுதான் அடுத்த வைரஸ் வரும்போது அதை கையாள்வதற்கு நீங்கள் இன்னும் சிறப்பான நிலையில் இருக்க முடியும் - நீங்கள் அப்போதும் பிழைத்திருந்தீர்கள் என்றால். ஆம், இதை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதை சாதாரணமாகவும் நினைத்துவிடாதீர்கள். நம் ஒவ்வொருவருக்கும் இப்போது இதுதான் மிகப் பெரிய சவால். இந்தக் காலகட்டத்தைக் கடந்து நாம் உயிரோடு இருப்போமா என்பதுதான் இதற்கு அர்த்தம். இது வேறு யாரோ ஒருவருக்கு எங்கேயோ தொலை தூரத்தில், சீனாவிலோ, இத்தாலியிலோதானே நடக்கிறது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.

அடுத்த 6ல் இருந்து 8 மாதங்கள் கடந்தும் நீங்கள் உயிர் வாழ்ந்தால் நாம் இதை பொறுப்பாக கையாண்டிருக்கிறோம் என்று அர்த்தம். நாம் ஒவ்வொருவரும் உயிர் வாழ்ந்தால்தான் நாம் இதை நன்றாக நடத்தியிருக்கிறோம் என்று அர்த்தம். நாம் விழிப்புணர்வாக, பொறுப்பாக வாழ்ந்திருக்கிறோம் என்றும் அர்த்தம். ஆனால் இதைக்கூட துரதிருஷ்டவசமாக அரசுகள் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில், பலரும் இது இப்போது அவசியம் என்பதை உணராமல் இருக்கிறார்கள், இது எதோ கட்டுக்கதை என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது கட்டுக்கதை இல்லை, இது நம்முன் காத்துக்கொண்டு நிற்கும் ஒரு பேரிடர், இதை நாம் நிச்சயம் சரியாக கையாள வேண்டும்.