யாரும் இங்கே அகதியோ அநாதையோ இல்லை!
மனிதர்கள் பலர் தங்கள் மனதில் பலவித தத்துவங்களையும் விசித்திர எண்ணங்களையும் உருவாக்கிக்கொண்டு தங்களை அறிவாளிகள் போல வெளியில் காண்பித்துக்கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சத்குருவின் இந்த பதில் உண்மையை உணர்த்துவதாய் அமைகிறது!
கேள்வியாளர்: தொப்புள் கொடி அறுபட்டதுமே நாம் ஒவ்வொருவரும் ஒருவகையில் அகதி என்றே தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?
சத்குரு:
Subscribe
உங்களுக்கும், எனக்கும் முன்பாக இந்த மண்ணில் பலகோடி பேர் பிறந்து வளர்ந்தார்கள். அவர்களுக்கும் தங்களைக் குறித்து இப்படி எத்தனையோ விசித்திரமான எண்ணங்கள் தோன்றின. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள். இந்த பூமியின் மேற்பரப்பில் புதைந்து கிடக்கிறார்கள். எல்லாமே அதேபோல் புதைந்து போகப் போகிறவர்கள்தான். ஒருவேளை எழுந்துவிடுவார்களோ என்று அஞ்சினால் ஆழப் புதைத்து வைப்பார்கள். இதில் உங்களைக் குறித்து விசித்திரமான எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றுகின்றன. எல்லாரிடம் இருந்தும் நீங்கள் தனித்திருப்பதாக எண்ணுகிறீர்கள். அதனாலேயே அகதியாகவும், அநாதையாகவும் உங்களைக் குறித்து உங்களுக்குத் தோன்றுகிறது. இப்படித் தோன்றுவதற்கு வாழ்வின் இயல்பு காரணமல்ல. எண்ணங்களின் இயல்புதான் காரணம். மனதை தெய்வீகத்தை சென்றடைவதற்கான ஏணியாகவும் பயன்படுத்தலாம் அல்லது உங்களை இந்த சிறிய உடலுக்குள் சிறைப்பிடித்து வைக்கவும் பயன்படுத்தலாம். அப்படி சிறைப்பிடித்து வைப்பதால்தான் உங்களை அகதி என்று எண்ணிக் கொள்கிறீர்கள்.
எனவே இப்படி தத்துவங்களையும் விசித்திரமான எண்ணங்களையும் சொல்வது அறிவாளிகள் போல் நடிப்பவர்கள் மத்தியில் போதை தரும் விஷயமாக இருக்கலாம். ஆனால் அதன் மூலம் நன்மை விளையாது. உங்களையும் மற்ற உயிர்களையும் மேம்படுத்தும் விதமாக உங்கள் எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.