உடலெங்கும் புன்னகை... தியானம்!
உடலிலுள்ள எலும்பும் கூட சிரிக்கத் துவங்கினால், அது தியானம். உங்களுக்குள் விறைப்பாகாமல், உறைந்து போகாமல் இருப்பதே தியானம்.

சத்குரு:
தியானம் என்பது சீரியஸான ஒரு பிசினஸ். பல பேர் அதை சீரியஸாகக் கையாள்கின்றனர். நான் ஈஷா தியான அன்பர்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால், உலகம் முழுக்க உள்ள தியானியர்கள் தியானத்தை மிக சீரியஸாகப் பார்க்கின்றனர் என்கிறேன். விழிப்புணர்வாய் இருக்க வேண்டும் என்னும் தங்களுடைய முயற்சியால் சிரிப்பதைக்கூட மறந்துவிட்டனர். அனைத்தையும் மறந்துவிட்டனர்.
தியானம் என்றால், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் பல்லிளிக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் எலும்பிலிருந்து சிரித்திடுங்கள். உங்களது ஒவ்வொரு அம்சத்திலிருந்தும் சிரிக்கப் பழகுங்கள். உங்கள் பற்களைக் காண்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் உதட்டைப் பயன்படுத்தாமல், புன்னகைக்கப் பழகுங்களேன். உண்மையாகவே சொல்கிறேன்.
பல்லைக் காட்டாமல் சிரியுங்கள். உங்களால் சிரிக்க முடியுமா எனப் பாருங்கள்; சிரியுங்கள். உங்கள் கைகளால் சிரிக்க இயலுமா எனப் பாருங்கள். உடலிலுள்ள எலும்பும் கூட சிரிக்கத் துவங்கினால், அது தியானம். உங்களுக்குள் விறைப்பாகாமல், உறைந்து போகாமல் இருப்பதே தியானம். இறுதியில், நீங்கள் நித்தியமாய் இளைப்பாற இது சிறந்த பயிற்சி. மயானத்திற்கு நல்ல ஆயத்தப் பயிற்சி இது.
அதனால், வெறும் பல்லை மட்டும் காட்டி, உதடுகளிலிருந்து சிரிக்காதீர்கள், எலும்புகளிலிருந்து சிரித்திடுங்கள். தியானம் என்பது ஒரு மலர் மலர்வதைப் போல! மலர், பகுதி பகுதியாக மலராது. அது மலரும்போது, முழுவதுமாக மலரும். நீங்களும் அதுபோல் இருக்க, அது கண்கள் மூடிய நிலையோ திறந்த நிலையோ, உங்கள் முகத்தில் ஒரு புன்னகை இருக்கட்டும். புன்னகை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அனைத்துமே அதன் முழுச் சிறப்புடன் இருக்கட்டும். இது மலர்தல். இது தியானம்.
உங்கள் கண்முழி மேல்நோக்கிச் சுழன்றபடி அமர்வது, உதட்டில் இருக்கும் சிரிப்பை உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றுவதற்காகத்தான். புன்னகையினை உட்கொள்ள பிரயத்தனப்படுகிறீர்கள். புன்னகை என்பது ஒரு வெளிப்பாடு அல்ல. மற்றவர்கள் அதனை வெளிப்பாடாகப் பார்ப்பார்கள், ஆனால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட தளர்வு நிலையில் இருந்தால், சுகானுபவத்தில் இருந்தால், உங்களைச் சுற்றி யார் இல்லாமல் இருந்தாலும், உங்கள் முகத்தில் புன்னகை குடிகொண்டிருக்கும்.
Subscribe