சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
உங்களுடைய சக்திகள் ஒளிவீசும் அளவிற்கு சூரிய நமஸ்காரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகையில், உங்கள் இருப்பு மட்டுமே கூட, அழகாகவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.
சத்குரு:
அந்த ஒளியில், வெப்பத்தில் நாம் அனைவரும் பலன் பெறுகிறோம். பிரபஞ்சத்தின் இயல்பே அதுதான். மனிதனும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த வழியில் இருக்க அவன் விரும்பவில்லை. அப்படியிருக்க வேண்டுமென்று மனதில் நினைக்க மட்டுமே செய்கிறான். மற்றவர் முன்னிலையில் உயர்வாகத் தெரிவது எப்படி என்று தனக்குத்தானே சில எண்ணங்களை வகுத்துக் கொண்டு அதன்படி மட்டுமே வாழ்கிறான். இதனால் அவன் சிறிது மனநிறைவு அடைகிறான். இது ஒரு மிகச் சாதாரணமான வாழ்க்கை முறை.
உங்களுடைய சக்திகள் ஒளிவீசும் அளவிற்கு சூரிய நமஸ்காரம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்து வருகையில், உங்கள் இருப்பு மட்டுமே கூட, அழகாகவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். சூரியன் எப்படி மற்றவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவர்களுக்கு எப்போதும் பயனுள்ளவனாக இருக்கிறானோ அதேபோல் நீங்களும் மற்றவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எதிர்பார்த்தாலும் எதிர்பார்க்காவிட்டாலும், உங்கள் இருப்பு மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஆனால் எந்தளவிற்கு நீங்கள் பிரகாசிப்பீர்கள், ஒளிர்வீர்கள் என்பது நீங்கள் சூரியனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா அல்லது கட்டிடத்திற்குள் முடங்கிக்கிடக்க விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது.
Subscribe
ஒளிர்வது என்றால் என்ன? ஒளிர்வதென்பது நீங்கள் யார் என்னும் தன்மை சூட்சும நிலையில் வெளிப்படுவதாகும். நீங்கள் ஒரு குளிர்ந்த கறி பிண்டமாக இங்கே அமர்ந்திருந்தால், இங்கே மட்டும்தான் இருப்பீர்கள். சூட்சும நிலையில் ஒளிர்வதாக இருந்தால், எல்லா இடங்களிலும் இருப்பீர்கள். இப்போது, நான் ஒளிர்வதாக இருந்தால், என்னுடைய இருப்பு, பெரிய அளவில் ஒளிவீசும். அது ஒரு பெரிய குடையைப் போல இருக்கும்.
எனவே சூரியனைப் போல ஆகவேண்டும் என்பதற்காக நீங்கள் சூரியநமஸ்காரம் செய்கிறீர்கள். சூரியனைப் போல் ஆகிறீர்கள் என்றால், நாளைக் காலையில் எரிந்து விடுவீர்கள் என்பதல்ல. நீங்கள் ஆகாயத்தில் (ஆகாஷ்) இருப்பீர்கள் என்பதுதான் பொருள். தற்போது இந்த பூமியுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் சூரியனைப் போல் மாறினால், நீங்களும் ஆகாயத்தில் இருப்பீர்கள்; அதாவது படைப்பின் பரந்த எல்லையில் இருப்பீர்கள், குறுகிய எல்லைக்குள் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டீர்கள்.
ஆகாயத்தின் தன்மை உங்களுக்குத் தெரியுமா? சூரிய குடும்பம் எதனால் விழாமல் இருக்கிறது? முழுச் சூரியக் குடும்பத்தையும் பிடித்து வைத்திருப்பது எது? அது ஆகாயம் தான். எனவே நீங்களும் சூரியனின் தன்மையாக மாறும்போது, ஆகாயத்தின் பிடியில் இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது, உங்கள் வாழ்க்கை அனுபவம் முழுமையானதாக இருக்கும். அது இனிமேலும் பொருள்தன்மையைச் சார்ந்ததாக இருக்காது.
எனக்கு முதன்முதலில் யோகா கற்றுக்கொடுத்த மல்லாடிஹல்லி ஸ்வாமிகள், குழந்தைப் பருவத்தில் ஒரு ஆஸ்துமா நோயாளியாக இருந்தார். இரவும், பகலும் அவருக்கு மூச்சுத் திணறல் இருந்துகொண்டே இருக்கும். அந்தக் காலகட்டத்தில் அதற்குத் தேவையான மருத்துவமோ, சிகிச்சையோ கிடையாது.
அவருக்கு 12 வயதிருக்கும்போது, அவர் பெற்றோர்கள் அவரை ஒரு யோகியிடம் கொண்டு சென்று, அவருக்குக் குணமளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அந்த யோகி, “எப்படியானாலும் உங்களுக்கு இந்தப் பையனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. நீங்கள் அவனை வைத்திருந்தால், அவன் இறந்துவிடுவான். என்னிடம் கொடுத்துவிடுங்கள். நான் அவனை என்னோடு அழைத்துச் செல்கிறேன்” என்றார். தனக்கு சீடர் வேண்டு மென்பதற்காக அவர் அப்படிக் கூற வில்லை. ஆனால் இந்த பையன் மேல் அக்கறை கொண்டார். அவர் அந்தப் பையனை எடுத்துச் சென்று யோகப் பயிற்சி அளித்தார். அந்தப் பையன், அதாவது மல்லாடிஹல்லி ஸ்வாமிகள் தினமும் 4008 சூரிய நமஸ்காரம் செய்து வந்தார். யோகா மூலம் அவர் உடல் வேதனைகளைக் கடந்து சென்றது மட்டுமல்ல, மிகப் பலசாலியாகவும் மாறினார், திடகாத்திரகமாக 100 வயதிற்கு மேல் வாழ்ந்து இறந்தார்.
நான் தினமும் ஒரே ஒரு சூர்ய நமஸ்காரம் மட்டும்தான் செய்கிறேன் (சிரிக்கிறார்). நான் எங்கே இருந்தாலும் ஒன்று மட்டும்தான் செய்வேன் அல்லது அதுவும்கூட செய்யாமல் என்னால் இருக்க முடியும். அமர்ந்த நிலையிலேயே என்னால் மனதளவில் கூட இந்த சூரிய நமஸ்காரம் செய்ய முடியும். அப்போதும்கூட சூரிய நமஸ்காரம் எனக்கு வேலைசெய்யும். அதாவது, இந்த முழு பிரபஞ்சத்தையுமே தாங்கியுள்ள ஆகாயத்துடன் நீங்கள் தொடர்பு கொண்டிருந்தால், உங்களையும் அது தாங்கி உயர்த்தும்.
வாழ்க்கை உங்களுக்கு எல்லாவற்றையும் திறந்தே வைத்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் உங்களுக்கு எதையுமே தடைசெய்யவில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த முழு பிரபஞ்சத்தையுமே உங்களால் அணுகமுடியும். யாரோ சொன்னார்கள், “தட்டுங்கள் திறக்கப்படும்" என்று. நீங்கள் தட்டக்கூடத் தேவையில்லை ஏனென்றால் அங்கே கதவுகளே இல்லை. அது திறந்தே இருக்கிறது. நீங்கள் அதனுள்ளே நடந்து செல்லவேண்டும். அவ்வளவே. ஆனால் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்ற உள்ளுணர்வின் காரணமாக உங்களைச் சுற்றி நீங்களே ஒரு காங்கிரீட் சுவர் எழுப்பி அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். எனவேதான் இந்த யோகா அமைப்புகள் கடவுளைப் பற்றி பேசுவதில்லை, கர்மாவைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. எனவே கர்மா என்னும் அந்த சுவரை உடைப்பதற்கு உதவியாக இருப்பவைதான் நீங்கள் செய்யும் யோகப் பயிற்சிகள், சூரிய நமஸ்காரம் எல்லாமே!