பசு, காகம், பாம்பு... ஏன் கொல்லக்கூடாது?
உலகில் எத்தனையோ விலங்குகள் கொல்லப்படுகின்றன; உணவாகின்றன! ஆனால், பசு வதை ஏன் கூடாது என நம் கலாச்சாரத்தில் சொல்லப்படுகிறது? பசு மீது மட்டும் நமக்கு பாசம் வந்துவிட்டதா என்ற கேள்விகூட எழுகிறது. உயிர்ப் பரிணாமத்தில் பசு, காகம், பாம்பு ஆகிய உயிரினங்கள் கொண்டுள்ள சிறப்புகள் குறித்து சத்குரு விளக்குகிறார்!

சத்குரு:
நமது கலாச்சாரத்தில் பசு, பாம்பு, காகம் ஆகிய மூன்று உயிரினங்களுக்கும் தனி இடம் உண்டு. உடலின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, நமக்கு மிக அருகில் இருக்கிற உயிரினம் குரங்கு. ஆனால், உயிரின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, முதலில் சொன்ன மூன்று உயிரினங்கள்தான் நமக்கு மிக அருகில் உள்ளன. அதனால்தான் அவற்றுக்கு அத்தனை முக்கியத்துவம்!
அவற்றைக் கொல்வது என்பது மனிதர்களைக் கொல்வது போல. அந்த அளவுக்கு அவை மனித உயிர்களுக்கு நெருக்கமாக உள்ளன. கிராமங்களில் இன்னமும் மனிதர்கள் பசுக்களுடன் மிக ஆழமான உறவு வைத்துள்ளனர். மிகச் சில உயிரினங்கள் மட்டுமே, அதிலும் பசு மிக அதிகமாக மனித உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறது. நீங்கள் துக்கமாக இருந்தால், பசு உங்களுக்காகக் கண்ணீர்விடும். உண்மையாகவே அதன் கண்களிலிருந்து கண்ணீர் வழியும். பசு ஏறக்குறைய மனித உயிரினம் போலத்தான். அதனால்தான், பசு வதை நமது கலாச்சாரத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.
இயற்கையில் உள்ள எந்த வன விலங்கைத் தொட்டாலும், அது எதிர்வினை செய்யும். ஆனால், ஒருப் பாம்பை... அது விஷப் பாம்பாக இருந்தாலும், அதை நளினமாகத் தூக்கினால் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது. இந்த ஓர் உயிரினம்தான் மனிதனிடம் இப்படி நடந்துகொள்கிறது. மேலும், ஆன்மீக சக்தி உள்ள இடங்களை நாடிப் பாம்புகள், தானாகவே வந்து சேரும். சில யோகிகள் பாம்புக்கோ, பசுவுக்கோ, காகத்துக்கோ பிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை அளித்த சம்பவங்களும் உண்டு. மற்ற உயிரினங்களை அப்படி விடுவிக்க முடியாது. இந்தக் காரணங்களால்தான் தெரிந்தோ, தெரியாமலோ பசு, பாம்பைக் கொல்ல நேர்ந்தால், மனிதர்களைப் புதைப்பது போல முறைப்படிப் புதைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது!
Subscribe