ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ வேண்டும்?
மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற அடிப்படையான கேள்வியை கேட்காமலே பலரும் வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். அப்படியொரு கேள்வி உங்களுக்கு எழுந்தால், சத்குருவின் இந்த பதிலை தாமதிக்காமல் படியுங்கள்!
சத்குரு:
Subscribe
எப்படி வாழ வேண்டும் என்பதற்கு பலவிதமான போதனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பலவிதமான முயற்சிகள் தொடர்ந்து நடந்திருக்கிறது. இருந்தாலும் எப்படி வாழ வேண்டும் என்பது இன்னும் மனிதனுக்கு புரியவில்லை. ஏனென்றால், ஒரு விலங்கிற்கு அதனுடைய தன்மையை இயற்கை நிர்ணயித்து வைத்திருக்கிறது. இப்படித்தான் வாழ முடியும் என விலங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதனுக்கு எப்படி வேண்டுமானாலும் இருப்பதற்கான வாய்ப்பினை, சுதந்திரத்தினை இயற்கை வழங்கியிருக்கிறது. இந்த சுதந்திரத்தை மனிதன் ஒரு பெரிய போராட்டமாக உருவாக்கி வைத்திருக்கிறான். நீங்கள் உங்கள் கட்டுப்பாடுகளினால் பாதிப்புக்கு உட்பட்டால் அதில் அர்த்தம் உள்ளது. ஆனால் உங்கள் சுதந்திரத்தினால் பாதிப்படைகிறீர்கள்.
சுதந்திரத்தை சாபமாக உணர்தல் என்பது முட்டாள்தனம்தானே? ஆனால் தற்போது சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. ஒரு புலியாக பிறந்தால் அந்தப் புலியின் மனதில், நான் நல்ல புலியாக வளர்வேனா? அல்லது பூனையாகிவிடுவேனா என்ற கவலை இருப்பதில்லை. தேவையான உணவு கிடைத்தால் எப்படியும் அது நல்ல புலியாகத்தான் வளரும். ஆனால் நீங்கள் மனிதனாகப் பிறந்தாலும், நல்ல மனிதனாக வளர எவ்வளவு போராட்டங்கள், பாருங்கள்.
எப்படி வாழவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, எதற்காக வாழ்கிறீர்கள் என்ற அடிப்படையை முதலில் பார்ப்போம். நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலும், அது பணத்திற்காக என்றாலும் சரி, அறிவிற்காக என்றாலும் சரி, எதற்காக இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? இன்னும் சிறிது பணம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்குமென்று ஒருவர் நினைக்கிறார்? இன்னொருவர் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது, சொர்க்கத்திற்குப் போனால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியுமென நினைக்கிறார். நீங்கள் எதன் பின்னால் சென்றிருந்தாலும், அது பணமாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் அடிப்படையான மகிழ்ச்சியைத் தேடித்தான் ஓடியிருக்கிறீர்கள். நீங்கள் தேடியிருப்பது மகிழ்ச்சியைத்தான் என்றால், அதற்கான மற்றவைகளின் பின்னால் சுற்றிக் கொண்டு செல்லாமல் நேரடியாகவே அதனை அணுகலாம்.
ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் உயிர்நிலையிலேயே இருக்கிறது. ஒருநாளின் 24 மணி நேரத்தில் ஒவ்வொரு ஷணமும் உங்களுடைய தன்மையை ஆனந்தமாக வைத்துக் கொள்வது எப்படியென நீங்கள் அறிந்து கொண்டால், அதற்குத் தேவையான கருவியினை உங்களுக்குள்ளேயே நீங்கள் உருவாக்கிக் கொண்டால், மற்றவையெல்லாம் உங்கள் திறமைக்கு ஏற்றவாறு தானாகவே நடக்கும்.