எவ்வகையான உணவு வகைகளை உண்பது நல்லது? அது ஏன் அசைவ உணவு எப்போதும் சர்ச்சைக்கு உரியதாகிறது? மாமிசம் உண்பது குற்றமா, என்ன? உயிர்களை கொன்று உண்பது பாவம் என்றால், சைவ உணவான தாவரங்களும் கூட உயிர்தானே? அதை மட்டும் கொல்லலாமா? இப்படி நீள்கிறது கேள்விப் பட்டியல். இதற்கு சத்குருவின் பதில் இங்கே...

சத்குரு:

உணவுமுறையில் இப்படி பல கோட்பாடுகள் வைத்ததற்குக் காரணம், உயிர்வதை, வன்முறை கூடாது என்பதால் மட்டுமல்ல. வாழ்க்கையை உற்றுப் பார்த்தால், இங்கு உயிர்வாழ்வதும், ஏன் சுவாசிப்பதும் கூட வன்முறை தான். ஆனால் நீங்கள் தேவையான அளவிற்கு மட்டும் வன்முறை செய்கிறீர்களா, அல்லது எல்லை தாண்டிப் போகிறீர்களா என்பதுதான் கேள்வியே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எது வன்முறை?

ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது.

நீங்கள் காரட் வெட்டுகிறீர்களோ, ஆப்பிள் வெட்டுகிறீர்களோ அல்லது கோழி, ஆடு வெட்டுகிறீர்களோ அது எதுவாக இருந்தாலும், அது வன்முறைதான். ஒரு எறும்பாக இருந்தாலும், கரப்பான்பூச்சியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அதன் உயிர்தான் இந்த உலகிலேயே அதற்கு மிகவும் உயர்வானது. விலைமதிப்பற்றது. "இது ஓரு ஆட்டின் உயிர்தானே..." என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த ஆட்டிற்கு அப்படியல்ல. அது எத்தனை கர்வத்தோடு நடக்கிறது என்று பாருங்கள். அதைப் பொறுத்தவரை இவ்வுலகிலேயே அதுதான் மிக முக்கியமான உயிர். உங்கள் நினைப்பும் அதுதானே?!

மாமிசம் சாப்பிடுவது குற்றமா..?

இவ்வுலகில் வாழும் ஒவ்வோர் உயிரும் வெவ்வேறு அளவிலான பரிணாம வளர்ச்சி நிலையில் இருக்கிறது. வெவ்வேறு அளவிலான உணர்வுத்திறன் பெற்றுள்ளது. விஞ்ஞான ரீதியாக பார்த்தால், நாம் உண்ணும் உணவு, பரிணாம வளர்ச்சியில் நாம் இருக்கும் நிலையிலிருந்து வெகு தொலைவில் இருப்பது நல்லது. ஏனென்றால், ஒவ்வொரு ஜீவராசிக்கும், அது பதித்து வைத்துக்கொள்ளும் ஞாபக அளவைப் பொறுத்து, அதன் ஞாபகக் கட்டமைப்பு அமைந்திருக்கும். பரிணாம வளர்ச்சி நிகழ நிகழ, மிக நுண்ணிய விஷயங்களையும் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில், ஞாபகக் கட்டமைப்பு மேன்மேலும் நுட்பமானது. இந்த பரிணாம வளர்ச்சியின் உச்சநிலையில் மனிதன் இருப்பதால், அவனின் ஞாபகசக்தி மிகமிக நுட்பமாக இருக்கிறது. அவனது ஞாபகக் கட்டமைப்பும் மிக நேர்த்தியாக, மேம்பட்ட நிலையில் உள்ளது.

எந்த ஜீவராசிக்கு ஞாபகக் கட்டமைப்பு மிக எளிய நிலையில் இருக்கிறதோ, அதை உணவாக உண்டால், அதை நாம் எளிதாக ஜீரணிக்கலாம். அதாவது, அந்த உணவின் ஞாபகங்களை எளிதாக மாற்றி, அதை நம் உடலோடு எளிதாக இணைத்திடலாம்.

இரண்டு உயிரணுக்களுடன் தொடங்கிய உங்கள் உடல், இத்தனை மடங்கு வளர்ந்தும் தன் தனித்தன்மையை இழக்காததற்குக் காரணம், அந்த அணுக்களின் ஞாபகத்திறன். அதைக் கொண்டு தான், அது தன்னைப் போன்றே அச்சுகளை உருவாக்குகிறது. பரிணாம வளர்ச்சியில், கீழ்நிலையில் உள்ள தாவரங்களை உட்கொண்டால், அதை கிட்டத்தட்ட 100% ஜீரணம் செய்திடலாம். அதன் ஞாபகங்களை முழுமையாக நீக்கிவிட்டு, உங்கள் ஞாபகத்தை அதன் மீது பதித்திடலாம். ஆனால், உங்களை ஒத்த ஜீவராசிகளை நீங்கள் உண்ணும்போது, அவற்றின் ஆழமான, சிக்கலான ஞாபகங்களை உங்களால் முழுவதுமாய் அழிக்க முடியாது. இப்படிப்பட்ட உணவினை நீங்கள் தொடர்ந்து உண்ணும் போது, உங்கள் ஞாபகத்தை அதன் மீது முழுமையாய் பதிக்கமுடியாமல் போவதால், நாள் ஆகஆக, உங்கள் தனித்தன்மையை நீங்கள் இழக்க ஆரம்பித்துவிடுவீர்கள். 25000 ஆண்டுகளாக உங்கள் மரபணுக்கள் மூலம் நீங்கள் சுமந்து வந்திருக்கும் கலாச்சாரம், நாகரீகம் எல்லாம் தொலைந்து விடும்.

உண்டாகும் உருச்சிதைவு!

இதைத்தான் 2600 ஆண்டுகளுக்கு முன்பே மஹாவீரர் சொன்னார். விலங்குகளை உண்டால், நீங்கள் அவை போலவே ஆகிவிடுவீர்கள் என்று. அதற்காக இன்று நீங்கள் ஆட்டை சாப்பிட்டால், நாளையே ஆடு போல் தோற்றம் கொள்வீர்கள் என்று பொருளல்ல. இதுபோன்ற உணவுகளை உண்டால், சிறிது சிறிதாக ஞாபக 'உருச்சிதைவு' உண்டாகும். உங்கள் ஞாபகத்தை தன்மீது முழுமையாய் ஏற்காத, தன் ஞாபகங்களை இன்னும் பிடித்து வைத்துக்கொள்ளும் உணவுகளை (விலங்குகளை) உண்பதால், உங்கள் உடலின் 'ஞாபகப் பதிவு'களில் குழப்பங்கள் உண்டாகிறது. இந்த ஞாபகக் குழப்பத்தோடு நீங்கள் பிள்ளைகள் பெற்றால், அவர்கள் சற்றே தடுமாற்றத்துடன் தான் இருப்பர்.

அசைவத்தில் என்ன தான் சாப்பிடுவது?

உண்பதற்கு தாவரங்கள் தான் சிறந்தது. ஆனால், கட்டாயம் அசைவம் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், பரிணாம வளர்ச்சியில் தாவரங்களுக்கு அடுத்த நிலையில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை உண்ணலாம். அதாவது மீன்களை உண்ணலாம். காரணம், கடல்வாழ் உயிரினங்கள் தான் விலங்கினத்தில் முதல்முதல் தோன்றியவை. 'நகரும் உயிரினத்தின்' பரிணாம வளர்ச்சியில், மனிதனைவிட வெகு தொலைவில் இருப்பவை அவை.

உயிரின் ஞாபகத்தன்மை

பாலூட்டி வகை விலங்குகள் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு மிக அருகே இருப்பதால், அவற்றை நாம் உண்பதில்லை. ஓர் ஆட்டை சாப்பிட்டால் ஆரோக்கியம் வரும் என்றால், அதைவிட மேம்பட்ட உயிரினமான மனிதனை உண்டால், இன்னும் அதிகமாக ஆரோக்கியம் வரவேண்டும் அல்லவா? மனிதனை உண்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? பிரச்சினை, அவர் உங்களைப் போன்றே இருக்கிறார் என்பதால்தான்.

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் எண்ணங்களும் கொண்ட விலங்குகளை உண்பது ஏறக்குறைய நரமாமிசம் உண்பது போல. இதை வேண்டாம் என்று சொன்னது, மதம் சார்ந்த கருத்தோ, நல்லொழுக்க சான்றோ அல்ல. இது நம் வாழ்வின் அஸ்திவாரத்தை தடுமாறச் செய்யும் விஞ்ஞானப் பூர்வமான பிரச்சனை. தொடர்ந்து மாமிசமோ, நுட்பமாக ஞாபகப் பதிவை வைத்துக் கொள்ளும் உணவு வகைகளையோ உண்டு வந்தால், 'மனிதனின்' தனித்தன்மைகளையே நீங்கள் இழக்க நேரிடும்.