இசை-நடனம்-விழிப்புணர்வு... என்ன சம்பந்தம்?
இசையில் மிகமிக ஆழமாக ஈடுபடுபவர்கள் சிலரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் ஏறக்குறைய ஞானிகள்போல மாறியிருப்பதைக் கவனிக்கமுடியும். ஏனெனில், இசை, நடனம் எல்லாமே உங்கள் விழிப்பு உணர்வை உயர்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

சத்குரு:
இந்தியாவில் ஒவ்வோர் அம்சமும் அது எளிமையானதாக இருக்கட்டும் அல்லது உயர்ந்ததாக இருக்கட்டும், உங்களின் ஆன்மிக நலத்துக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் இந்த மண்ணில் பிறந்துவிட்டால், உங்கள் வாழ்க்கை, உங்கள் குடும்பம், உங்கள் உறவுகள், உங்கள் சொத்து, உங்கள் குழந்தைகள் இவை எதுவும் உங்களின் லட்சியங்கள் அல்ல. உங்கள் வாழ்க்கையின் ஒரே லட்சியம்... முக்தி மட்டுமே. மற்றவை அனைத்துமே அதற்குத் துணை செய்வதுதான்.
எனவே உங்களுடைய விழிப்பு உணர்வை அதிகப்படுத்தவே வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பண்டைய இந்தியப் பாரம்பரியத்தைப் பார்த்தால், இசை மற்றும் நடனம் போன்றவை அதிகம் இடம்பெற்றிருந்தன. அவை வெறும் சந்தோஷத்துக்காக உருவாக்கப்படவில்லை. அவை உங்களுக்கு சந்தோஷத்தைத் தரலாம். ஆனால், அவை வெறும் பொழுதுபோக்கு விஷயம் மட்டும் அன்று. ராகங்களில் ஆழமாக ஈடுபடும்போதோ அல்லது நடன அசைவுகளில் ஆழமாக ஈடுபடும்போதோ நீங்கள் இயல்பாகவே தியான நிலைக்குச் சென்றுவிடுகிறீர்கள். இசையில் மிகமிக ஆழமாக ஈடுபடுபவர்கள் சிலரை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் ஏறக்குறைய ஞானிகள்போல மாறியிருப்பதைக் கவனிக்கமுடியும். ஏனெனில், இசை, நடனம் எல்லாமே உங்கள் விழிப்பு உணர்வை உயர்த்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
நடனத்துக்கு உங்களுடைய முழு ஈடுபாடு வேண்டும். உடலில் உள்ள ஒவ்வோர் அணுவையும் ஈடுபடுத்த வேண்டும். இல்லையென்றால், உங்களால் நல்ல நடனத்தைத் தரமுடியாது. நடனத்தின்போது, மக்கள் தங்கள் முழு உடலையே வழிபாட்டுக்கான ஒரு முறையாகப் பயன்படுத்தக் கற்கிறார்கள். யோகாவில்கூட சூரிய நமஸ்காரத்தில் முழு உடலையும் வழிபாட்டுக்கான ஒரு முறையாகப் பயன்படுத்துகிறோம்.
பொதுவாக ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், எந்த மதமானாலும், எந்த ஆன்மிக முறையானாலும், அவர்கள் அன்பு, தியானம், தீவிரம், கருணை என்று பேசுவதெல்லாம் உங்களை ஒன்றில் தீவிரமாக ஈடுபடுத்துவதற்காகத்தான்.
நம் கலாசாரத்தைப் பொறுத்தவரையில் இசை, நடனம் ஆகியவற்றையும் அதற்கான வழிமுறைகளில் ஒன்றாக உருவாக்கிவைத்திருக்கிறோம்!
Subscribe