புத்தர் சொன்ன காலம் இதுதான்!
புத்த பூர்ணிமா கொண்டாடப்படும் இவ்வேளையில், புத்தர் போதி மரத்தின் கீழ் அமர்வதற்கு முன் எடுத்துக்கொண்டு உறுதியைப் பற்றி கூறி, ஆன்மீகத்தில் ஒருவர் தேங்காமல் இலக்கை எட்டுவதற்கான வழிகாட்டுதலை சத்குரு வழங்குகிறார்!
மனிதர்கள், தங்கள் ஆற்றலை வெளிச்சூழலுக்கோ உள்நிலை வளர்ச்சிக்கோ பயன்படுத்தும்போது மிக முக்கியமான ஒரு வேறுபாட்டை விழிப்புணர்வோடு கண்டுணர வேண்டும்.நீங்கள் தேங்கியிருக்கிறீர்களா அல்லது நிலைத்த தன்மையை அடைந்திருக்கிறீர்களா? என்று. ஏனெனில், வளர்ச்சிப்பாதையில் சில பேர் தேங்கிப் போய் நின்றுவிட்டு, தாங்கள் ஒரு எல்லையைத் தொட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள்.
செயல்கள் செய்வதன் மூலம் இந்த நிலைத்த தன்மையை அடைய இயலும். உதாரணத்துக்கு, ஒரு படகு ஓட்டுகிறீர்கள். உங்கள் முழுசக்தியையும் பயன்படுத்தி துடுப்பு வலித்துக்கொண்டே போகிறீர்கள். ஓர் எல்லைக்குப் பிறகு, உங்கள் முயற்சியின் உச்சியில் துடுப்பு வலிப்பதை நிறுத்தும்போதும் படகு நகர்கிறது. ஆனால் ஒருவித நிலைத்த தன்மை ஏற்படுகிறது. மனிதன், தன் முயற்சியின் உச்சகட்ட எல்லைவரை போராடும்போது, அந்தப் போராட்டத்தின் உச்சியில் பூப்பூக்கிறது.
போதி மரத்துக்குக் கீழ் கௌதமர் போய் உட்கார்ந்தபோது, தனக்குள் ஓர் உறுதி மேற்கொள்கிறார். "இந்த இடத்தை விட்டு எழுந்து போகும்போது நான் ஞானமடைந்தவனாக எழுந்து போக வேண்டும். இல்லையெனில் இங்கேயே இறந்து போக வேண்டும். ஞானம் அடையாமல் இந்த இடத்தை விட்டு எழக்கூடாது". ஏறக்குறைய எட்டு வருடங்கள் அவர் மேற்கொண்ட இடையறாத முயற்சியின் உச்சம் அது. அந்த உறுதியுடன் அவர் அமர்ந்த சில கணங்களிலேயே ஞானம் சித்தித்தது.
ஆத்ம சாதகத்தில் கடுமையாக ஒருவர் ஈடுபட விரும்பினால், அவரைப் பன்னிரண்டு ஆண்டுகள் இமயமலையில் சென்று தவம் செய்யச் சொல்கிறார்கள். இது ஏன் என்று சிந்திக்க வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் இருந்தால் இமயமலையின் பனிப்பாறைகளில் இருந்து ஞானம் பெற்று வந்துவிட முடியும் என்று பொருளல்ல.
Subscribe
தேங்கி நிற்கிற அந்த நிலையை, நிலைத்த தன்மையை அடைந்துவிட்டதாய் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள். நிலைத்த தன்மை முழுமையான முயற்சியின் விளைவுதானே தவிர, குறுகிய எல்லைகளோடு ஒதுங்கி விடுவதால் ஏற்படுவதில்லை.
ஒரு மனிதன் தேங்கிவிடக்கூடாது என்றால், தன்னுடைய இலக்கை முதலில் அவன் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலக்கு தெளிவாக இருந்து, அதற்கான முயற்சியிலும் முழுமை இருந்தால், எந்த இலக்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்டதில்லை.
தன் இலட்சியத்துக்காக, வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் ஒருவன் வாழத் தலைப்படுவான் என்றால், மிக உயர்ந்த அங்கீகாரங்கள் அவனைத் தானாகவே தேடி வரும்.
ஆனால், மனித மனம் இயல்பாகவே குழப்பங்களுக்கு ஆட்படக் கூடியது. பெரும்பாலான நேரம், தனக்கு என்னென்ன வேண்டாம் என்று எண்ணி அஞ்சிக்கொண்டே இருப்பதால் தனது ஆற்றலின் மூலம் தனக்குத் தேவையானதைத் தருவித்துக்கொள்ள மனிதன் தவறுகிறான். இந்த குழப்பம் காரணமாய், மனிதன் தன்னை மட்டுமில்லாமல் தான் வாழுகிற உலகத்தையும் தவறாகப் புரிந்து கொள்கிறான்.
இலட்சியங்களை நோக்கி நகராமல் மனிதன் தேங்கிப் போவதற்கு இன்னொரு காரணம் உண்டு. தனது நிகழ்கால நிலைமையை மனதில் கொண்டு, எதிர்காலமும் இப்படித்தான் இருக்கும் என்று கற்பனையானதொரு முடிவுக்கு வந்துவிடுகிறான்.
தற்போதைய நிலை தாழ்ந்ததாக இருக்குமென்றால், அடுத்து வரும் நாட்களிலும் இதிலிருந்து அங்குலம் கூட நகர முடியாதென்ற நினைவு பலருக்கும் இருக்கிறது. ஆனால், ஒருவிதமான தேக்கம் பிறக்கிறது. உங்கள் கனவுகளை, நீங்கள் தற்போதைய நிலைக்கு சேவகம் செய்ய அனுமதிப்பீர்கள் என்றால் உயர்வு குறித்த எந்தச் சிந்தனையும் ஏற்படாது.
என்ன நடக்கும், ஏது நடக்கும் என்று கவலைப்படாமல், தான் மேற்கொண்டிருக்கும் இலட்சியத்திற்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பதுதானே கர்மயோகம்!
சாக்ரடீஸ் ஒரு மாபெரும் தத்துவ அறிஞர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரது வாழ்க்கை பற்றிய வெளிப்பாடுகள் எல்லாமே இதுவரையில் தத்துவங்கள் வழியாகத்தான் நடந்தேறி இருக்கின்றன. ஆனாலும், மரணம் தன்னை நெருங்குவது பற்றிக் கவலைப்படாமல், மிகுந்த ஆர்வத்துடன் இசை பயின்றார்.
குறுகிய காலத்திலேயே மிகவும் தேர்ந்த இசைக் கலைஞராகி, மற்றவர்கள் வியக்கும் அளவு இசையை வெளிப்படுத்தத் தொடங்கினார். வாழ்க்கையின் முற்றிலும் புதிய பரிமாணம் ஒன்றை இசை வழியே கண்டார். ஒருவேளை அவர் நீண்ட காலம் வாழ வாய்ப்பு தரப்பட்டிருந்தால் பெரும் தத்துவ அறிஞர் என்பதைப் போலவே, பெரும் இசைக்கலைஞர் என்கிற நிலையிலும் அவர் அறியப்பட்டிருப்பார்.
தன்னில் இருக்கிற ஆற்றலில் அவர் நிலைத்திருந்ததால், அந்தக் குறுகிய கால அவகாசத்தில் கூட, இசைக் கலைஞர் ஆவது என்கிற இலட்சியத்தை அவரால் எட்ட முடிந்தது.
அது, வெறும் நம்பிக்கையல்ல. மனிதனின் ஆற்றலால் கடவுளையே மண்ணுக்கு வரவழைக்க முடியும் என்கிற நம்பிக்கை. இன்று அறிவியலும், தொழில்நுட்பமும் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் குழப்பமும், கூச்சலும்தான். இது ஏன்? இந்தக் கேள்வியை மனிதன் கேட்கத் தொடங்கிவிட்டான். அத்தனை குழப்பமும் மற்றவர்களிடமிருந்து வருகிறது என்று எண்ணுகிற மனிதன், மற்றவர்கள் மீதான காழ்ப்புணர்வில் தேங்கிப் போய்விடுகிறான். ஆனால், தன்னை, தன்னில் இருக்கும் ஆற்றலை உணரத் தலைப்படும் மனிதன், நகர்ந்து, நகர்ந்து, நிலைத்த தன்மையை எய்துகிறான்.
இன்றைய அறிவியல் யுகத்தில், தான் எண்ணுகிற கிரகங்களுக்கெல்லாம் போய்வரும் சக்தியைப் பெற்றிருக்கும் மனிதன், தனக்குள் போய்ப் பார்க்க என்ன வழி என்று சிந்தித்தான்.
அப்போதுதான், ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இந்த மண்ணில் நிலை பெற்றிருக்கும் தியான மார்க்கம் எத்தனை மகிமை மிக்கது என்பதை உணர்ந்தான். இன்று சராசரி மனிதர்கள் கூட தியான நெறியில் ஆர்வம் காட்டுகிறார்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் சொன்னார், "எனது காலத்திற்குப் பிறகு 2,500 ஆண்டுகள் முடிந்து, இந்த தர்மச் சக்கரம் ஒரு முழு சுழற்சியைக் கண்டிருக்கும். அப்போது ஒரு புதிய சுழற்சியை மனிதகுலம் மறுபடி தொடங்கும்" என்று.
ஏறக்குறைய புத்தருக்குப்பின் 2,500 ஆண்டுகளின் நிறைவுக் காலம் இது. தனக்குள் இருக்கும் ஆற்றலைத் தேங்கவிடாமல், உயிர்ப்புடன் நகர்த்தி, நிலைத்த தன்மைக்குக் கொண்டு செல்லும் ஆர்வம் பல திசைகளிலும் பெருகியுள்ளது.