ஆன்மீகம் பேசுவதால் நமக்குள் மாற்றம் நிகழுமா?
யோகா வகுப்பில் சொன்னவற்றை நீங்கள் முறையாக செய்து வாருங்கள். யோகா என்பது போதனையோ, நம்பிக்கையோ அல்ல. இது ஒரு கருவி. இந்தக் கருவியின் தன்மையை உணர வேண்டுமென்றால் அதை உபயோகப்படுத்த வேண்டும். இல்லையா? அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தாலே நீங்கள் இப்போது சொல்வதெல்லாம் உங்களுக்கு உணர்வு பூர்வமாக வந்துவிடும்.
Subscribe
சத்குரு:
‘சரணடைதல்’ போன்ற பெரிய வார்த்தைகள் நமக்கு வேண்டாம். மிகவும் எளிமையாக உங்கள் வாழ்க்கையோடு அதைக் கொண்டு வந்திருக்கிறோம். சரணடைவது, பக்தி எல்லாமே பெரிய பெரிய வார்த்தைகள். “சத்குரு, சரணம்!” என்று சொல்வீர்கள். சரி, இப்படிச் சொல்லிவிட்டாரே என்று உங்களை நம்பி, “பின்னால் வாருங்கள்” என்று அழைத்தால் திகைத்துப் போவீர்கள். நீங்கள் சொல்வதை நம்பி நான் வேலை செய்தால் ஆகாது.
நீங்கள் சத்குரு சரணம் என்றால், அந்தக் கணத்தில் அப்படி இருக்கிறது உங்கள் உணர்வு. அந்த உணர்வை நான் கேலி செய்யவில்லை. உங்கள் உணர்வு நல்லதுதான். ஆனால் ‘நான் சரணடைந்துவிடுவேன்’ என்பதெல்லாம் வேண்டாம். இயல்பாகவே அப்படி ஒரு உணர்வு உங்களுக்குள் ஏற்பட்டுவிட்டது என்றால் அப்போது பார்த்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் மனநிலை இப்போது அப்படியில்லை.
யோகா வகுப்பில் சொன்னவற்றை நீங்கள் முறையாக செய்து வாருங்கள். யோகா என்பது போதனையோ, நம்பிக்கையோ அல்ல. இது ஒரு கருவி. இந்தக் கருவியின் தன்மையை உணர வேண்டுமென்றால் அதை உபயோகப்படுத்த வேண்டும். இல்லையா? அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தாலே நீங்கள் இப்போது சொல்வதெல்லாம் உங்களுக்கு உணர்வு பூர்வமாக வந்துவிடும்.
நீங்கள் சரணாகதி அடையத் தேவையில்லை. நம்முடைய புரிதலுக்கும் தாண்டி அப்பாற்பட்ட நிலைக்குப் போய்விட்டால், எந்த காரணத்தால் நமக்கு அந்த நிலை வந்ததோ, அதைப் பார்த்தாலே சரணாகதி என்பது நமக்கு தானாகவே நிகழும். அதற்கு வார்த்தை, வடிவம் கொடுக்கத் தேவையில்லை. நமக்குள்ளே அன்பும், ஆனந்தமும் பெருகினால், அதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமா? அது உணர்வு நிலையில் நிகழ்வது. அத்தகைய உணர்வு நமக்குள் நிகழ்ந்துவிட்டால், பிரமாதமாக இருப்போம். அந்த பிரமாதம் உங்களுக்குள்ளே நடக்க வேண்டும். ஆன்மீகம் சம்பந்தமான தேவையற்ற வார்த்தைகள் வேண்டாம். அவற்றை அதிகம் பயன்படுத்தியதாலேயே வாழ்க்கையில் ஆன்மீகம் இல்லாமல் போய்விட்டது. எனவே அதைப் பற்றிப் பேசுவதை விட, அது நமது வாழ்க்கையில், நமது உள்ளுணர்வில் நிகழ வேண்டும்.