வாழ்க்கை சிறக்க பத்து வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்களேன்?" என்ற கேள்வியை சத்குருவிடம் ஒருவர் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில் என்னவாக இருக்கும்... இது போன்ற மேலும் இரு சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் பதில் இங்கே...

Question: வாழ்க்கையைச் சிறப்பாக நடத்த பத்து எளிய வழிமுறைகள் இருந்தால் சொல்லித் தாருங்களேன்...

சத்குரு:

சில சூத்திரங்கள், சில கோட்பாடுகள், சில கோஷங்கள், சில விதிமுறைகள், இவற்றைச் சுற்றியே வாழ்க்கையைப் பின்னப் பார்க்கிறீர்கள். வாழ்க்கை அப்படி நடக்காது. உங்கள் வாழ்க்கையை அதன் அடிப்படைத் தன்மையை உணர்ந்து வாழத் தலைப்பட்டீர்கள் என்றால் தான் வாழ்க்கை அதன் உண்மையான முகத்தைத் தங்களுக்குக் காட்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலை ஆறு மணிக்கு எழுந்திரு. மனைவியிடம் பத்து முறை ‘ஐ லவ் யூ’ என்று சொல், குழந்தையுடன் பத்து நிமிடங்களாவது செலவு செய். பக்கத்து வீட்டுக்காரர்களைப் பார்க்கையில் புன்னகைத்துக் காலை வணக்கம் சொல். என்றெல்லாம் சில வழிமுறைகளைப் பின்பற்றப் பார்த்தீர்கள் என்றால், சில நாட்களுக்குள் அது உங்களைத் தின்றுத் துப்பிவிடும். நீங்கள் மனைவிக்காக ஒதுக்கிய நேரத்தில் அவள் உங்களுடன் செலவு செய்யத் தயாராக இல்லாமல் இருந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும்.

சூத்திரங்களைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் சில நேரம் நினைத்ததை சாதிக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வது உயிர்ப்புடன் கூடிய வாழ்க்கை அல்ல. உயிரற்ற இயந்திரத்தனமான வாழ்க்கை. இயந்திரத்தனமாக வாழ்பவர்கள் அதிலேயே மூழ்கடிக்கப்பட்டு சந்தோஷமற்ற முகங்களுடன் வளைய வருவதை நீங்கள் பார்க்கலாம்.
சூத்திரங்களை விட்டுத் தள்ளுங்கள். வாழ்க்கையை அந்தந்தத் தருணத்துக்கு ஏற்றபடி உணர்வுப்பூர்வமாக, முழுமையான விழிப்புணர்வுடன் வாழத் துவங்குங்கள்.

Question: சத்குரு, போட்டி, பொறாமை உணர்வுகளிலிருந்து எப்படி என்னை விடுவித்துக் கொள்வது?

சத்குரு:

உங்களிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருப்பதைக் கண்டால் பொறாமை வருகிறது. உங்களை விட அவர் அதிகம் வைத்திருப்பதாக நீங்கள் நினைப்பதால், இந்த உணர்வு வருகிறது. அதாவது இட்டு நிரப்ப உங்களிடம் இன்னும் பல காலியிடங்கள் இருப்பதாக நீங்கள் உணர்வதால் தான் மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வேதனை கொள்கிறீர்கள்.

ஒப்பிடுவதால் தான், போட்டி பொறாமை எல்லாம் உருவாகிறது. நீங்கள் எந்தப் பற்றாக்குறையும் கொண்டவராக உணராமல், முழுமையடைந்தவராக உணர்ந்து விட்டால், இந்த வேண்டாத எண்ணங்கள் ஏன் நெருங்கப் போகின்றன?

இதற்கு என்ன செய்வது? பொதுவாக நீங்கள் பூரண மகிழ்ச்சியாக இருக்கும்போது, மற்றவரைப் பார்த்துப் பொறாமை வருகிறதா என்று யோசியுங்கள். இல்லை. உங்கள் உயிர்ச்சக்தி ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக இருக்கவே விழைகிறது. அதை கவனித்து செயல்படுங்கள். பொறாமையை ஒழித்துக் கட்டுவதற்கு முனைவதை நிறுத்திவிட்டு, நீங்கள் எப்படி எப்போதும் ஆனந்தமாக இருப்பது என்று யோசியுங்கள். பொறாமை என்பதே இல்லாமல் போய்விடும்.

Question: எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?

சத்குரு:

இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஐந்து மதங்களில் எதையெல்லாம் பாவச் செயல்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். இந்தப் பூமியில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது கூட பாவமோ என்று அச்சம் வந்துவிடும்.

பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எந்தச் செயலைச் செய்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு உண்டு என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இன்றைக்கு ஒரு விஷயத்தை ஆனந்தமாகச் செய்தீர்கள். நாளைக்கு அதற்காக உங்களைத் தூக்கில் தொங்க விட்டால் கூட அதே ஆனந்தமாக இருப்பீர்கள் என்றால், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்.

செயல்புரிகையில் இருக்கும் அதே சந்தோஷம் அதன் பின்விளைவைச் சந்திக்கும் போதும் தொடரும் என்றால், எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். இல்லையில்லை, பின்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இல்லை என்று சொல்பவரா நீங்கள்? உங்களால் தாங்கக் கூடிய பின்விளைவுகளுக்கு ஏற்ற செயல்களில் மட்டும் கவனமாக இறங்குங்கள். மற்றபடி, எதுவும் பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை.