சத்குரு: தை மாதத்தின் தலைவாசலில் இருந்து சிந்திக்கிறோம். சாதி சமயம் கலவாத தமிழர்களின் அறுவடைத் திருவிழா, பொங்கல் திருநாள். பொங்கல் திருநாளைக் கொண்டாட தமிழகம் தயாராவதே தனித் திருவிழாதான். ஆடி மாதத்திலும், புரட்டாசி மாதத்திலும் விதைத்த பயிர்கள் அறுவடையாகும். ஒரு வாரத்துக்கு முன்பே சந்தை களைகட்டும். தங்களிடம் உள்ள கரும்பு, வாழை போன்றவற்றை சந்தையில் குவித்து கையில் பணத்தோடும், பண்டங்களோடும் உழவர்கள் வீடு திரும்புவார்கள். கைவினைஞர்கள் மண்ணைக் குழைத்து அடுப்பு, பானை, சட்டி எல்லாம் செய்து சுட்டு விற்பார்கள். சொல்லப்போனால், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் புதியதொரு பருவகாலத்துக்கு தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

அனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரமாய் விளங்குவது கதிரவன். ஆதலால் அடுப்புகூட வீட்டுக்கு வெளியே வந்து விடுகிறது. மண்ணில் விளைவித்த அரிசி, கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவை வணக்கத்துக்கு உரியவை ஆகின்றன.
மொத்தத்தில் இயற்கைச் சக்திகளுக்கு மனிதர்கள் தலைவணங்கும் நாள், பொங்கல் திருநாள். அனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரமாய் விளங்குவது கதிரவன். ஆதலால் அடுப்புகூட வீட்டுக்கு வெளியே வந்து விடுகிறது. மண்ணில் விளைவித்த அரிசி, கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவை வணக்கத்துக்கு உரியவை ஆகின்றன. மாடு தந்த பால் பொங்கி பொங்கல் தயாராகிறது. தமிழ்நாடு முழுதும் தாம்பூலத்தில் கரும்பால் தட்டி “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என்ற முழங்குவது கேட்கிறது. பால் பொங்குவது போல வாழ்க்கையிலே இன்பம் பொங்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாக உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொற்கள் தமிழர்கள் வழக்கில் உள்ளது. குளிர் காலம் மறைந்து வெயில் காலம் தொடங்குகிற தை முதல் நாளை தமிழாண்டின் முதல் நாளாகவே கொண்டு விட்டார்கள்.

மனிதர்கள் தங்களுக்கு மட்டும் பொங்கல் கொண்டாடவில்லை. மாடாக உழைத்த இவர்கள் மாட்டுக்கும் பொங்கல் வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பசு தாயாகவே மதிக்கப்படுகிறது. அதனால், அதற்கு பூஜை செய்து சோறு ஊட்டுகிறார்கள். பொட்டு வைத்து மாலை அணிவிக்கிறார்கள். காளையும் அதற்கு ஈடான மரியாதையைப் பெறுகிறது. மாடு என்பது சக்தியாக, தாயாக, பயிர்த் தொழிலுக்கு ஆதாரமாகப் பயன்படுவதால், மாடுகளே ஒரு காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டது. இன்றும் நாளையும்கூட விளங்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று நாகரிக முன்னேற்றத்தால் பூமி வெப்பம் அதிகரிக்கிறது. சூழலில் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியை உலகில் பலரும் தேடுகிறார்கள். அப்படிப் புதுப்பிக்கக் கூடிய ஆதாரமாக காலங்காலமாக விளங்கி வருவது நமது மாடு. ஒரு புள்ளிவிவரம் நமக்குச் சில தெளிவைக் கொடுக்க முடியும்.

2003-ம் ஆண்டு கால்நடைக் கணக்கெடுப்பின்படி நாட்டில் 18 கோடியே 52 லட்சம் கால்நடைகள் உள்ளன. இன்னமும் நாட்டில் உள்ள பயிர் நிலத்தில் பாதியை மாடுகள் கொண்டுதான் உழவு செய்கிறோம். ஒரு கோடியே 20 லட்சம் மாடுகள் வண்டி இழுக்கின்றன. தமிழ்நாட்டில் மைசூர் மாடுகளும், மலை மாடுகளும் உம்பளாச்சேரி கொம்பில்லா மாடுகளும், காங்கேயத்தின் வலிமைமிக்க மாடுகளும் ஏரிலும், வண்டியிலும் செல்வதை ஆங்காங்கே காண முடியும். 40 ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றில் உள்ள தண்ணீரை மேலே கொண்டுவருவதற்குக்கூட காளைகளைத்தான் பயன்படுத்தினோம். இன்று எந்திரங்கள் மிகுந்து வருவதால், மாடுகள் மனிதருக்குச் சுமை என்று நினைக்கிற மனோபாவம் கூடி வருகிறது. இன்றும் மாடுகள் சக்தியாகப் பயன்படுத்தப்படுவதால் 60 லட்சம் டன் பெட்ரோலியப் பொருட்கள் மிச்சப்படுத்தப்படுகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள். பெட்ரோலியப் பொருட்கள் மிச்சப்படுத்தப்படுவதால், 20 கோடி ரூபாய்க்கு அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

நமது கிராமங்களில் உழவனுக்குத் துணையாக நின்று பாலாகவும், எருவாகவும் எரிசக்தியாகவும் பயன்படுகின்ற மாடுகள் இறைச்சிக் கடைக்கு அனுப்பப்படுவது அறிவுக்கு உகந்த செயல் அல்ல என்பதை இந்த பொங்கல் நாளில் நினைவுகூர்வது முக்கியம்.

நமது மாடுகள் கொடுக்கும் சாணத்தின் மூலம் கிடைக்கும் எரிசக்தி மூன்றரைக் கோடி டன் நிலக்கரி அல்லது ஏழு கோடி டன் விறகுக்குச் சமமானது. இது மட்டும் அல்லாது 34 கோடி டன் அளவுக்கான சாணம் நமது நிலங்களுக்கு எருவாகக் கிடைக்கிறது. ‘மாடு அல்ல மற்றவை’ அதாவது ‘கல்வியைத் தவிர மற்றவை செல்வம் அல்ல’ என்று சொல்லும்போது ‘மாடு அல்ல’ என்று ஏன் குறிப்பிட்டான் என்று இப்போது புரிகிறது.

நமது கிராமங்களில் உழவனுக்குத் துணையாக நின்று பாலாகவும், எருவாகவும் எரிசக்தியாகவும் பயன்படுகின்ற மாடுகள் இறைச்சிக் கடைக்கு அனுப்பப்படுவது அறிவுக்கு உகந்த செயல் அல்ல என்பதை இந்த பொங்கல் நாளில் நினைவுகூர்வது முக்கியம்.

வாழ்வில் இன்பம் பொங்குவது என்பது நாம் வாழ்வாதாரங்களை எப்படி நிர்வகிக்கிறோம் என்பதை அடிப்படையாகக் கொண்டது. மழை, காடு, நிலம், கடல், மலை, சூரியசக்தி, கால்நடை, விதைகள், பயிர்கள், மனிதர்கள், நாம் வளர்க்காத செடி கொடி, விலங்கினங்கள் இவையே இயற்கை ஆதாரங்கள். இவற்றைச் சீராகவும், சிறப்பாகவும் நிர்வகிக்கப் பழகுவது நிலைத்து நீடிக்கவல்ல வாழ்வுக்கு வழிகோலும்.

பொங்கலோ பொங்கல்!