உள்ளடக்கம்
  1. பருவமழை
  2. பருவமழை
  3. நிலா
  4. மறை நிலா
  5. நிலவு
  6. கதிரவன்
  7. சூரியக்கிரணங்கள்
  8. மூடுபனி
  9. வானவில்
  10. கோடைக்காலம்
  11. கோடை மழை
  12. டென்னசியில் உள்ள மரங்களுக்கு
  13. அவை விடும் வெளிமூச்சினை
  14. மலைகள் மாளா வலிதரும்
  15. மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல்
  16. யால்பாங்
  17. கரும்பு
  18. இராஜ நாகம்
  19. சந்தம்

இயற்கை கவிதைகள் (Tamil Kavithaigal about Nature)

பருவமழை

பருவமழை, Rain

ஓ! என்னே ஒரு வரம்!
வறண்ட நிலம் பெறுகிறது...
தொலைந்த காதலரைப் போல -
என்றும் மிகச்சரியான தருணத்தில்

அனைத்து உயிர்களும் 
அமைதியான கொண்டாட்டத்தில்

பலத்த மழை பாதிப்பானால்
பவ்யமாய் வணங்குவோம் - ஆனால் 
எப்போதும் எதிர்க்க மாட்டோம்

வெள்ளத்தில் மடிந்தோருக்கு
வருந்துவோர் யாருமில்லை
பஞ்சத்தின் அழிவிலிருந்து நாம் 
பிழைத்திருக்கும் காரணத்தால்

அருள் பெற்ற துளிகளாய்
அவை தரையிறங்கி வந்து
தன் கருவில் விதையை 
தன்னுள் முன்பே கொண்டிருக்கும் நம் 
தாயை கருத்தரிக்கச்செய்வது போல

எந்த ஹார்மோனோ ஊக்கியோ
இந்த வளர்ச்சியின் வீரியத்துக்கு 
காரணியாகவில்லை 

ஓ! பருவமழை!
என்றும் மிகச்சரியான தருணத்தில்

அன்பும் அருளும்,
சத்குரு

 

பருவமழை

பருவமழை, Rain in red sand

கொட்டும் மழையும் செம்மண்ணும் 
கூடி ஒன்றாக கலந்தன - 
தணியாத தாகத்தில் கிளர்ச்சியின் மூட்டத்தில் 
தானென்ற அனைத்தையும் அழித்து
ஒன்றிணைந்து மற்றவரை அறியும்
ஒரே முனைப்போடு இருக்கும்
காதலரைப் போல...

தன்னையே அழித்து 
தான் மற்றவராய் தரிக்க வேண்டுமென்ற
தீராத ஏக்கம்...

அழியா இறைமையின் கை இவரை பிரித்தது
அழியும் பொம்மைகளாய் பின்னர் சேர்க்கவே

செம்மண்ணும் கொட்டும் மழையும் 
சேறாவதற்காக சேரவில்லை -
சேர்ந்தன உயிருக்கு உயிரூட்ட...
இறந்தவை இறந்தவையாய் இருக்க...

மரமாய் மலராய் கனியாய் மாற
வானும் மண்ணும்
வாஞ்சையோடு முத்தமிட்டு இணையும் 
இப்பூமியில் உயிர்கள் பெருகும்
இவ்வுயிரில் தான் இறைமையும் ஆர்ப்பரிக்கும்

அன்பும் அருளும்,
சத்குரு

 

நிலா

நிலா, Moon

மாறும் உன் வடிவியல் தோற்றம்
மனக்கவலைக்கான காரணம்
ஏனெனில்,
பெருங்கடல்கள் பொங்கும்.
மாதவிடாய் காணும் மாந்தரை
பேரார்வமும் பித்தும் பீடிக்கும்.
அன்றைய நாளில் 
தவறிய உன் பாகத்தை தேடியடைந்து 
உன் முழுமைக்காக
ஏங்குவது போல..

தந்திரமாக ஒருநாள் ஏமாற்றிய பிறகு 
சந்திரனின் பித்து மறுபடி துவங்கும்
நம் பிறப்புக்காக...

அன்பும் அருளும்,
சத்குரு

மறை நிலா

நிலா, Moon

நம்புமாறு புனையப்பட்ட கதை - அது 
நீயொரு வெண்ணை உருளை என்று
பின்னர் நம்ப வைக்கப்பட்டது -
யாரோ உன் மேல் கால் தடம் பதித்தார் என்றும்
மாந்தரின் மாபெரும் பாய்ச்சல் அதுவென்றும்...

திரிபு கொள்ளும் உன் வடிவியலைக் கண்டு
தனிமையான அந்தி வேளையெல்லாம் கழித்தேன்
எதனால் செய்யப்பட்டாய் நீ?
என்னை உருவாக்க ஏது உன் பணி?
விந்தையோடு விசாரித்திருந்தேன்

என் உடலின், என் உணர்வின்
 சுற்றுப்பாதையின் உருவாக்கம் 
யாதென்றறிய எத்தனித்த போது 
போலி ஒளியால் குருடான என் கண்களுக்கு
பிடிபடாமல் உன் வடிவத்தை மாற்றினாய்

உள்ளொளியின் துணை கொண்டு
இருளை என் கண்கள் கண்ட போது  
மாறும் உன் வடிவத்தின்  
மர்மங்கள் பலவற்றின் 
முகத்திரையை விலக்கினேன்

பிரதிபிம்பமே நீ - 
மாதரின் திரவங்களைக் கையாண்டு
என் பிறவியை இயக்கும் திறன் கொண்டாய்
என் மரணத்திலும் பங்காவாய்

என்றும் என் உணர்தலின்
சுழல் கதவாய் நீ உள்ளாய்

அன்பும் அருளும்,
சத்குரு

நிலவு

நிலவு கவிதை, Moon poem

தகிக்கும் நிலவின் 
தணியாத பித்து - 
அதை உள்ளடக்கி...
நிலா தன்னுள் ஒளித்த
புதிரான மர்மங்களின் 
மூலமுமாகி...

நிலவின் குளிர்ச்சி - அதன் 
முடிவற்ற பொழிவானேன்

எனதன்பின் வேட்கை 
கொடிய நஞ்சை உண்டது
நிலவின் முழுமையில்

முழுநிலவின் அருளொளியில்
முழுவதுமாய் கரைந்துபோக
மற்றொரு அன்புத்துணையை கைவிட்டேன்

ஆண்டவன் அருள் என்மேலிருந்தால்
முழுநிலவின் மகோன்னதத்தில் இந்த
கூட்டை உதிர்த்துவிடுவேன் 

அன்பும் அருளும்,
சத்குரு

கதிரவன்

கதிரவன் கவிதை, Sun poem

செம்மையான பூமி
ஒரு பசுமையான இலை
ஒரு வண்ணமயமான பட்டாம்பூச்சி
ஒரு பறவையின் மென்மையான கீச்சொலி
மேகங்களற்ற நீல வானம்
இவையனைத்தும் தூய்மையான ஒளியின் மாயமே

அன்பும் அருளும்,
சத்குரு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சூரியக்கிரணங்கள்

சூரியக்கிரணங்கள் கவிதை, Sun beams poem

சூரியக்கிரணங்கள் உருண்டோடுகின்றன
செங்குத்தாயிருக்கும் பலகணியின் ஊடே...
சாய்ந்திருப்பதே அவற்றின் தேர்வு
இறக்கத்திற்கும் வடிவமைப்பிற்கும்....
சாத்தியமில்லாத அர்த்தமற்ற வடிவ அமைப்புகள்
அர்த்தங்களால் கறைபடாத ஒரு அதிசயம்
வெறுமையாய் அமைதியாய் என்னை ஆக்குகிறது

அன்பும் அருளும்,
சத்குரு

மூடுபனி

மூடுபனி கவிதை, Mist poem

காலைப்பனி ஒருவகை 
ஒருமையை கொணரும்.
விண்ணையும் மண்ணையும் 
ஒருசேர நடனமாட வைக்கும்
எது எது, யார் யார் என்ற
எல்லைகளை அழிக்கும்
அனைத்தையும் ஒன்றாகக் கலக்கும்
மென்பனியின் மாயம்

அன்பும் அருளும்,
சத்குரு

வானவில்

வானவில் கவிதை, Rainbow Poem

நீ கருப்பா, பழுப்பா, வெளுப்பா, சிவப்பா 
அல்லது, சரிவர இயங்கும் மூளை கொண்டாயா?
ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திலும் 
வகை வகையாய் தேடுகின்றாய்
தோலின் நிறங்களை மட்டும் நிராகரிக்கின்றாய் 
உன் செருக்கைப் பார்

சொர்க்கத்தின் கடவுள் பற்றி 
அறிவிக்கின்றாய் போற்றுகின்றாய் 
ஆனால் அவர் படைப்பை மட்டும் 
எதிர்க்கின்றாய் நிராகரிக்கின்றாய்

அறிவற்ற வெறுப்பால்
நம் சொந்தக் குருதியால்
நனைய வைக்கவில்லையா இப்பூமியை நீ?

ஓ, மனிதனே!
அன்பு இதயத்தின், இயங்கும் மூளையின் பாதையில் 
எழுந்து நின்று நீ நடைபோடுவாயா?

அன்பும் அருளும்,
சத்குரு

கோடைக்காலம்

கோடைக்காலம், Summer

பூக்களின் நறுமணம் 
பறவைகளையும் தேனீக்களையும்
பரபரப்பாய் களிப்போடு வைக்கும்

சிள்வண்டுகள் பகல் இரவாக 
ஜீ என சத்தமிடுவது ஏதோ ஒன்றை
பெற்றதை அல்லது தொலைத்ததைப்பற்றி
 
தவழ்ந்து வரும் தென்றலின் தயக்கம்
தாங்கி வந்த குளிர்ச்சியை பரப்புவதற்கா
தனக்குள்ளேயே அதை வைப்பதற்கா

நீ நறுமணமாய் இருக்கலாம் அல்லது
நாறும் கழிவாய் இருக்கலாம் 
தொலைக்கலாம் அல்லது அடையலாம் 
பகிரலாம் அல்லது உதிர்க்கலாம்

அன்பும் அருளும்,
சத்குரு

கோடை மழை

கோடை மழை, Summer Rain

கறுத்து வீங்கிய முகத்தோடு மேகம்
கண்ணீர் விடத் தயாராய் இருப்பதாக தெரிகிறது
அழத்தான் வேண்டும் கட்டாயமாக அவன் 

கண்ணீர் வடித்தான் தன் சுமை நீக்கி இலகுவாக மாற 
களிப்புற்று புவி உயிர்கள் பாடினர் ஆடினர்

அருள்பெற்ற ஒவ்வொரு துளியும் 
ஆதாரமாகும் உயிர்க்கு 

அன்பும் அருளும்,
சத்குரு

டென்னசியில் உள்ள மரங்களுக்கு...

டென்னசியில் உள்ள மரங்களுக்கு..., To Trees in Tennessee

ஓ! அருள்பெற்ற உயிர்களே!
உம் பச்சை மேலாடை
எம் மூச்சின் இருப்பின் ஆதாரமாய் ஆனது 
உம் துறவுக் கோலம் 
உயிரற்ற இருப்பென்ற தவறான புரிதலானது
உம் மகத்தான இருப்பு 
மாந்தரின் புலன்களிலிருந்து தப்பிடக்கூடும்

இப்புரிதல் இல்லாமல் போனால்
பேரழிவின் விளைவாக அது ஆகும் - ஆனால்
நீங்களும் நானும் இப்போதைக்கு
நெருக்கமான இந்த தழுவலில்...
ஒருவர் மூச்சை ஒருவர் பகிரும் இன்பம்
மூச்சிறைக்கும் காதலி தரும் இன்பத்திலும் பேரின்பம்

நன்றியால் பெருகிய கண்ணீர் கொண்டே
நான் உமக்கு ஊட்டம்தர முடியும்

பனிக்காலத்தில் நான் திரும்பி வருகையில்
போர்த்திய ஆடையற்று சாம்பல் நிறம் கொள்வீர்
நீவிர் குதூகலிக்காமல் போனால் உலகம்
இவ்வாறே இருக்குமெனக் காட்டுவீர்

நீவிர் ஒரு நிரந்தரவாசி 
நானோ அலைந்து திரியும் பரதேசி - ஆனால்
என் மூச்சின் உறவை என்றும் உடைக்கவும் இயலுமோ?
என் வேலைகளை நான் முடிக்கும் வரை காத்திருப்பீர்
உம் வேர்களில் நான் முடிவாய் கிடப்பேன்
என் உடலின் சாறால் உம்மை வளமாக்குவேன் - 
உம் நடுத்தண்டின் உயிர் சாறாய் மாறுவதற்காக
அவளுடையது அனைத்தையும் மறுபடி 
அவள் மடியில் கிடத்துவதற்காக

அதுவரை நீங்களும் நானும் 
இந்தக் காதல் விளையாட்டை
எவரும் பாராத வண்ணம்
எந்த ஆரவாரமுமின்றி தொடர்ந்திருப்போம்

அன்பும் அருளும்,
சத்குரு

அவை விடும் வெளிமூச்சினை

மரங்கள் கவிதை, Trees Poem

அவை விடும் வெளிமூச்சினை
உள்மூச்சாய் கொள்கிறோம்
நட்பின்றி கூட நாம் வாழ்ந்திடலாம் 
ஆனால் நம் வாழ்வு இந்த உறவில் பின்னிப்பிணைந்தது

அன்பும் அருளும்,
சத்குரு

மலைகள் மாளா வலிதரும்

மலைகள் கவிதை, Mountains Poem

மலைகள் மாளா வலிதரும்
முழங்கால்களுக்கு, உங்களை சோர்ந்திடச்செய்யும்
ஆனால் அவை கொணரும் மகிழ்வும் ஆனந்தமும்
இவ்வனைத்தையும் ஆக்கும் 
கிறக்கமான பேரானந்தமாய்... 

அன்பும் அருளும்,
சத்குரு

மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல்

மலைகள் கவிதை, Mountains Poem

மலைகள் ஒரு மனிதனின் அளவுகோல் - 
எவ்வளவு சிறிய, மிகச்சிறிய, சிறப்பற்றவர் என்றோ
எவ்வளவு தெம்பு, திடம், தோல்வியற்றவர் என்றோ

மலைகள் உங்களை 
உருவாக்கவோ உடைக்கவோ முடியும்

அன்பும் அருளும்,
சத்குரு

யால்பாங்

யால்பாங் கவிதை, Yalbang Poem

முரட்டுத்தனமான மலை முகடு
ஏளனமாக என்னை நோக்கிடும்
காலத்தை வென்ற உறைந்த விவேகத்தின் முகத்தோடு

கல்லில் பொறிக்கப்பட்ட ஞானம் 
ஆனால் அது என்றும் மாறும் 
எந்த இறவா கை அல்லது கண் 
இந்த தலைசிறந்த வடிவியலற்ற படைப்புகளை 
அழகாக அச்சில் வார்க்க முடியும்

சமவெளியின் சுகத்தில் சரணடைந்தோருக்கு
மலையின் கடுமை வரவேற்பதாய் இருக்காது

மலையில் நடக்கக்கூடியவற்றின் அச்சுறுத்தல்கள் 
வாழ்வின் இன்பங்களைத் தள்ளி வைத்த 
துறவிகளுக்கு உரியது

ஆனால் மலையின் பித்தில் நீங்கள் 
அகப்பட்டுக் கொண்டால்
அதன் கவரும் ஈர்ப்பு
புதிய இடம் தேடுவோரையும் சாகசம் செய்வோரையும் மட்டுமல்ல
விவேகமிக்க துறவிகளையும் ஞானிகளையும் ஈர்க்கும்

மலைகள் பின்விளைந்த பள்ளத்தாக்குகள்
அவற்றின் புதிரான வலைக்குள் இருப்பது
உயிர் உருவாக்கும் மூலத்தின் கருவில்
மீண்டும் இருப்பதற்கு மிக நெருங்கியது

பித்து, மாயம், அதிசயம் 
அனைத்தும் சாத்தியம்
மலைகளில்....

அன்பும் அருளும்,
சத்குரு

கரும்பு

கரும்பு, Sugarcane

அன்பின் வலியில் உள்ள இனிமை
அதை உணர வெகுதூரம் செல்லும் 
உன் இதயம்

கடினமான கரும்பு
சீனியின் இனிமையை
எப்படியோ பெற்றது

ஆனால், 
இக்கடினம் இனிமையை தருவது
கொடுமையாய் பிழிவதால் மட்டுமே...

எனக்கன்பான உன்னை
கொடுமைப்படுத்தும் திண்ணம் 
எனக்கில்லை எனினும்

கடினமான உன் மேலுறை
உன் இனிமை ஊற்றெடுக்காமல் தடுக்கிறது
எனில், உனை சுருக்கில் பிடிப்பதற்கு
எந்த ஐயமும் இல்லை எனக்கு -
உன்னை இனிமையாய் மாற்றுவதற்கு
எப்போதும் இனிமை இருந்துள்ளது போல

அன்பும் அருளும்,
சத்குரு

இராஜ நாகம்

இராஜ நாகம் கவிதை, King Cobra Poem

அசைந்து நெளிந்து 
அவனுக்கேயான மாயத்தை 
அவன் நெய்கிறான்
மரணத்தைத் தரும் கொடியதானான்
எனினும் இறைமையின் தேர்வானான்

நேர்த்தியும் நஞ்சும் ஒருங்கேயென
இம்மந்திர வடிவம் கொண்டான்
எந்த கரத்தால் கண்ணால்
இதை செய்விக்க வல்லான்

அவன் காதல் மிகப்பிரபலம் 
அவன் நஞ்சோ
வாழ்விலிருந்து விடுவிக்கும் 
உடனடி நிவாரணம் 
ஆதாமுக்கு வசியம் - ஆனால் 
ஞானியின் வசீகரம்
மயக்கும் அவன் பார்வை 
மரணத்துக்கோ வாழ்வுக்கோ 
அழைப்பென கொள்ளலாம்

உன் நஞ்சு எனை 
வாழ்விலிருந்து குணமாக்கியது
உன் நஞ்சு எனை 
மரணத்திலிருந்து காத்தது
அனைத்திலும் மேலாய்,
உன் நஞ்சு என்
அறியாமையை கரைத்தது

என் வாழ்வுக்கும் அன்புக்கும் 
ஆபத்தானாய் நீ - ஆனால் 
என்றும் உனை போற்றாமல் 
என்னால் இருக்கத்தான் இயலுமா

அன்பும் அருளும்,
சத்குரு

சந்தம்

சந்தம், Lilt

வெக்கையான ஒரு வெயிற்கால மதியம் -
தரு தந்த நிழலில் படுத்திருக்க
பழ ஈக்கள் மந்தமாய் முரலொலிக்கும்.
பட்டாம்பூச்சியின் படபடப்பு
அச்சூழலுக்கேற்ப பதமாக மெதுவாகும்.
அயன மண்டல வெயிற்கால 
மந்தமான மதிய நேரம் ஒன்றில்.

கிளை கொப்பு இலைகளின்
நேர்த்தியான வடிவியல் -
நோக்கிய வண்ணமிருந்தேன்
அதன் மாயத்தை...
அனைத்துக்கும் மேலாய் இந்த 
அதிசயக் குழப்பத்தின் ஊடே 
ஆர்வத்தோடு உள் நுழைந்த
ஆதவனின் கதிர்கள் கண்டேன்

கிடந்திருந்த புற்தரையோடு
கலந்து ஒன்றிணையும் விருப்பத்தில் 
சுத்த உயிரின் பரவசத்தில் - என்
உள்ளம் சிலிர்க்கிறது

அன்பும் அருளும்,
சத்குரு

தொடர்புடைய பதிவுகள்:

சத்குருவின் பூமி கவிதைகள்

பூமி, மண், மண்வளம், மண்வாசனை - இவற்றின் ரகசியங்களை, நுட்பங்களைப் பேசும் சத்குருவின் கவிதைகள் இந்தப் பதிவில்...

சத்குருவின் கவிதைகள் தமிழில்

கவிதைகள் என்றாலே ஆழமான ஒரு கருத்தை சுவையோடு புரிய வைப்பவை. ஒரு ஞானி கவிஞராகவும் இருப்பது எவ்வளவு அற்புதம்! வாழ்வின் முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை அழகியலோடு வெளிப்படுத்தும் சத்குருவின் கவிதைகள் இங்கே உங்களுக்காக.

குறிப்பு: "மண் காப்போம்" என்பது சத்குரு அவர்களால் துவங்கப்பட்டுள்ள உலகளாவிய இயக்கம். இவ்வியக்கம், உலகெங்குமுள்ள மக்களை மண் ஆரோக்கியத்திற்காக ஒன்றுகூடி குரல்கொடுக்க ஊக்கப்படுத்துகிறது, விவசாய மண்ணில் கரிமச்சத்தை அதிகரிக்க தேசிய அளவிலான கொள்கைகள் உருவாக்கவும், செயல்படவும் அனைத்து தேசத் தலைவர்களுக்கும் துணைநிற்கிறது.

இதற்காக சத்குரு அவர்கள் தனியாக மோட்டார்சைக்கிளில் 25 நாடுகள் வழியாக 30,000 கிமீ தூரத்திற்கு 100 நாட்கள் பயணம் மேற்கொண்டார். லண்டனில் துவங்கி இந்தியாவில் நிறைவடைந்த இப்பயணத்தில் மக்களையும் தலைவர்களையும் நிபுணர்களையும் அவர் சந்தித்தார். இவ்வியக்கத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.