"என் காதல் ப்ரேக்-அப் ஆயிடுச்சுடா" என அவன் கூற, "சரி... ப்ரேக்-அப் ஆனதுக்கு ட்ரீட் எப்போ?!" என இவன் கேட்கிறான். இப்படி என்னிடம் கூறி அலுத்துக் கொண்ட அந்தப் பெரியவர், "அந்தக் காலத்துலலாம் காதல் தோல்வின்னா..." என உணர்ச்சியில் பொங்கினார். அது சரி! உண்மையான காதல்னா என்ன? இங்கே சத்குரு சொல்வதென்ன?

சத்குரு:

இளமைக்காலத்தில் உங்கள் ஆசைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது எது?

காதல்.

கல்லூரிகளில் காதலர்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவருக்காகவே அடுத்தவர் பிறந்து வளர்ந்ததுபோல் தெரிவார்கள்.

உங்களுக்குச் சமூக ரீதியாக ஒரு துணை தேவைப்படுகிறது. அது உடலிச்சையினால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையினால் பிறப்பது உண்மையான காதல் ஆகாது.

கண்களிலும், முகத்திலும் சந்தோஷம் கொப்பளிக்கும். காதலின் அதிர்வுகள் அவர்கள் இருக்கும் சூழ்நிலையையே சந்தோஷமாக்கும்.

துடிப்பும், துள்ளலுமாக அவர்கள் திரிவதைப் பார்த்தால் மரணம் வரை இது தொடரும் என்றுதான் தோன்றும்.

பெற்றோர், சமூகம், கலாச்சாரம் எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.

ஐந்து அல்லது ஆறு வருடங்கள் கழித்து அவர்களைப் பார்த்தால், பகீரென்றிருக்கும். துடிப்பும், உயிரோட்டமுமாக இருந்தவர்கள், உலகத்தையே தொலைத்துவிட்டவர்கள் போல் உலர்ந்திருப்பார்கள்.

யாரைப் பற்றி நினைத்தாலேயே முகத்தில் ஆனந்தம் வந்ததோ, அவர்களின் அருகாமையே இப்போது வேதனையாக மாறிவிட்டிருக்கும்.

ஏன் இப்படி?

மிக ஆழமாகக் காதல் வயப்பட்டிருந்தபோது, பலமணி நேரம் முணுமுணுப்பின்றிக் காத்திருந்தார்கள். பசி, வெயில், மழை எதுவும் தெரியவில்லை. காலம் தெரியவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கனவுகள் நிறைவேறிய பின், அங்கே வியாபாரம் நுழைந்துவிட்டது.

காதலை ஒரு முதலீடாக நினைத்து வாழ்க்கையைத் தொடங்கினால், சீக்கிரமே சலிப்பும், வலியும், வேதனையும் வருவதைத் தவிர்க்க முடியாது.

சங்கரன்பிள்ளை, பூங்காவில் ஓர் அழகான பெண்ணைப் பார்த்தார். அவள் அருகில் போய் அமர்ந்தார்.

அவள் நகர்ந்து விலகப் பார்த்ததும் அவள் முன் மண்டியிட்டார்.

'உன்னை என் உயிருக்கும் மேலாகக் காதலிக்கிறேன். நீ இல்லையென்றால், இப்போதே செத்துவிடுவேன்' என்று உருக்கமாகச் சொன்னார்.

அந்தப் பெண் அவருடைய காதல் வசனங்களில் மயங்கினாள். அவர் மடியில் படுத்துக் கொண்டாள்.

அப்புறம் என்ன? சங்கரன்பிள்ளை அவளிடம் தன் விருப்பப்படியெல்லாம் நடந்து கொண்டார்.

மணி ஏழரை ஆனது. சங்கரன்பிள்ளை தன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பதறி எழுந்தார். "என்னை விட்டுப் போகாதீர்கள்" என்றாள் அந்தப் பெண், மயக்கம் விலகாமல்.

"ஐயோ, இன்றைக்கு நேரத்தோடு வருவதாக என் மனைவியிடம் சொல்லியிருக்கிறேனே!" என்றார் சங்கரன்பிள்ளை.

"மனைவியா? என்னை யுகம் யுகமாகக் காதலிப்பதாகச் சொன்னீர்களே? அதை சத்தியமென்று நம்பினேனே?" என்று அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்.

"அட, முட்டாளே! காதல் என்பது, 'திறந்திடு சிஸேம்' என்று அலிபாபா சொன்ன சொற்களைப்போல் காரியத்தை சாதித்துக் கொள்ளப் பயன்படும் ஒரு மந்திரச்சொல். அவ்வளவுதான்!" என்று சங்கரன்பிள்ளை அவளை உதறினார்.

சங்கரன்பிள்ளையைப் போல் நடந்து கொள்வதையெல்லாம் காதல் என்று முத்திரை குத்தலாமா?

ஓர் ஆணும், பெண்ணும் "நான் இதைத் தருகிறேன், நீ அதை தருவாயா?" என்று எழுதாமல் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தமா காதல்?

உங்களுக்குச் சமூக ரீதியாக ஒரு துணை தேவைப்படுகிறது. அது உடலிச்சையினால் இருக்கலாம். மனத் திருப்திக்காக இருக்கலாம். பொருளாதார வசதிக்காக இருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தேவையினால் பிறப்பது உண்மையான காதல் ஆகாது.

திருமணத்தை, சமூகப் பாதுகாப்பாக மட்டுமே நினைத்து காதலின் அடிப்படையை உணராதவர்களால் அதைப் படுகொலை செய்யத்தான் முடியும்.

இந்த ஏற்பாட்டில் வேறு என்னென்னவோ வசதிகள் கிடைக்கலாம். ஆனந்தம் மட்டும் கிடைக்கவே கிடைக்காது. தலைமுறை தலைமுறையாக இந்தத் துயரம் நடந்து கொண்டிருக்கிறது.

பர்மாவைச் சேர்ந்த ஒரு சிப்பாய், இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் ராணுவத்தை விட்டு விலகி, வேறு வேலைக்குப் போய்விட்டார்.

உண்மையில், அவர் போர்க்களத்தில் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு நடுவில் இருந்தது. பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான்.

'ஒரு பக்கம் அமெரிக்கா குண்டு வீசுகிறது. இன்னொரு பக்கம் ஜப்பான் குண்டு எறிகிறது. எங்கு திரும்பினாலும் துப்பாக்கிச் சத்தம். பீரங்கிகளின் முழக்கம். வானத்தில் தீப்பொறிகள். கரும்புகை' என்று புதிதாகச் சந்திக்கும் நபர்களிடம் அவர் தவறாமல் அந்தப் பதினைந்து நிமிடங்களைப் பற்றி மணிக்கணக்கில் விவரித்துக் கொண்டே இருப்பார்.

'போருக்கு அப்புறம் என்ன செய்தீர்கள்?' என்று கேட்டால், 'விற்பனை பிரதிநிதியாக இருக்கிறேன்' என்று அடுத்த இருபத்தைந்து வருடங்களைப் பற்றி, ஒற்றை வாக்கியத்தில் பதில் சொல்வார்.

வாழ்க்கையைத் தீவிரமாக அவர் வாழ்ந்தது அந்தப் பதினைந்து நிமிடங்கள்தான். அது போன்ற தீவிரத்தோடுதான் காதல் வயப்பட்டிருக்கும் காலங்களும் வாழப்படுகின்றன.

அதனால்தான் காதலித்த தினங்களைப் பற்றிப் பேசும்போது, கிழவர்கள் முகத்தில் கூட ஒரு பிரகாசத்தை நீங்கள் கவனிக்கலாம்.

அப்பேர்ப்பட்ட காதலை ஒரு பரஸ்பர உதவித் திட்டமாக, அதாவது மியூச்சுவல் பெனிஃபிட் ஸ்கீமாக நினைக்காதீர்கள்.

காதல் வியாபாரம் அல்ல. மாயையும் அல்ல.

அது உண்மையில் உன்னதமானதொரு உணர்வு!

mikebaird @ flickr