தைப்பூசம் - நிறைவளிக்கும் நாள்
வடக்கு நோக்கி சூரியனின் இந்த நகர்வு துவங்கியபின் வரும் முதல் பௌர்ணமியை தைப்பூசம் என்கிறோம். இது தன்ய பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. தன்ய பௌர்ணமி என்றால் நிறைவளிக்கும் பௌர்ணமி என்று அர்த்தம்.
சத்குரு:
டிசம்பர் 22, கதிர்திருப்ப தினத்தன்று பூமியுடனான சூரியனின் நிலைப்பாடு தெற்கில் இருந்து வடக்கு முகமாக மாறும். அதாவது தட்சிணாயணத்தில் இருந்து உத்தராயணத்துக்கு மாறும். பூமியில் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து இந்த பெயர்ச்சி கிட்டத்தட்ட 48 மணி நேரங்களுக்கு நிலைக்கும். சூரியன் தன் நிலையில் இருந்து இடம்பெயருவதில்லை. சூரியன் மகர ரேகையின் மேல் நிலை கொள்கிறான். இதுவே கதிர்திருப்பதன்று வானியல் அமைப்பில் நிகழும் மாற்றம்.
Subscribe
அந்நாளிலிருந்து சூரியோதயத்தையும் சூரியனின் இயக்கத்தையும் நீங்கள் கவனித்தால், இதனை புரிந்துகொள்வீர்கள். சூரியன் வடக்கை நோக்கி ஒவ்வொரு நாளும் மெல்ல நகர்கிறான். வடக்கு நோக்கி சூரியனின் இந்த நகர்வு துவங்கியபின் வரும் முதல் பௌர்ணமியை தைப்பூசம் என்கிறோம். இது தன்ய பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. தன்ய பௌர்ணமி என்றால் நிறைவளிக்கும் பௌர்ணமி என்று அர்த்தம்.
ஆன்மீக சாதனா (பயிற்சி) பார்த்தால் தட்சிணாயணம் சுத்திகரிப்புக்கான காலம். உத்தராயணம் ஞானத்திற்கான காலம். அறுவடைக்கான காலம் இதுவே. இதன் காரணமாகவே விவசாய அறுவடையும் இந்த காலத்தில் நிகழ்கிறது.
பொங்கல், சங்கராந்தி ஆகியவை அறுவடையை குறிக்கும் திருவிழாக்கள். இது தானியங்களை அறுவடை செய்யும் காலம் மட்டுமல்ல, மனித ஆற்றலை வளத்தை அறுவடை செய்யும் காலமும்தான். முக்கியமாக, தமிழ் கலாச்சாரத்தில் பல யோகிகள் தீர்க்கதரிசிகள் இந்நாளினை தங்களது சமாதி தினமாக ஆக்கிக்கொண்டனர். தங்கள் பூத உடலைவிட்டு முக்தியடைய இந்நாளை தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் நீங்கள் தற்செயலாக வெளியேற முடியாது. உங்கள் உடலிலிருந்து விழிப்புணர்வோடு வெளியேற வேண்டும்.
எனவே, நம்பிக்கை சார்ந்திருப்பதால் மட்டும் இந்நாள் மங்களமானதாக அறியப்படவில்லை. மனித அமைப்பில் கிரக நிலைகள் ஏற்படுத்தும் தாக்கத்தினாலும் இந்நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது. இந்த பூமியில் நிகழ்பவற்றிலிருந்து ஒரு மனிதன் தப்பிக்கவே முடியாது. சுற்றுச்சூழலைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. ஏனெனில், நீங்கள் சொல்லும் "நான்" என்பது இந்த பூமியின் ஒரு பகுதி. பூமி என்று சொல்லக் கூடியவற்றை காட்டிலும் மிகவும் உணர்வுடைய, பலமடங்கு கிரகிக்கும் தன்மையுடையது. இந்த பூமிக்கு நடப்பது எதுவாயினும் அது ஆயிரம் மடங்கு பெரிதாக மனித அமைப்பில் நிகழ்கிறது. இதை அனுபவிப்பதற்கும் உபயோகிப்பதற்கும் சற்றே கூருணர்வும் கிரகிக்கும் தன்மையும் தேவைப்படுகிறது.
மனித உடலை ஒருவித தீவிரத்திற்கும், கூருணர்வு நிலைக்கும் கொண்டு வந்தால் அதுவே ஒரு பிரபஞ்சமாக ஆகிறது. அண்டவெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் மிக நுட்பமான வகையில் மனித உடலிலும் நிகழும். இது அனைவருக்கும் நிகழ்கிறது. பெரும்பாலானவர்கள் இதைப் பற்றி அறிவதில்லை.
ஒருவர் பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகளை விழிப்புணர்வோடு அறிந்து தன் உடலமைப்பை அதனோடு ஒத்திருக்கும்படி செய்தால் இந்த மனித உடலமைப்பு இயங்கும் முறையை ஏதோ ஒரு நோக்கத்துடன் ஒழுங்கமைப்பு செய்ய முடியும். எலும்பும் சதையுமான இந்த மனித உடலில் பிரபஞ்சத்தின் தன்மையை கிரகித்துக்கொள்ள நீங்கள் விரும்பினால் உத்தராயணம், தட்சிணாயணம் பற்றிய புரிதலும் அதன் இயக்கத்தோடு ஒத்திருப்பதும் மிக அவசியமானதாக இருக்கும்.