காஞ்ச இட்லி இரண்டு... ஆறிப்போன காபி ஒண்ணு!
ஒரு முறை, பல நாள் பயணமாக சங்கரன்பிள்ளை வெளியூர் சென்றிருந்தார்...
ஒரு முறை, பல நாள் பயணமாக சங்கரன்பிள்ளை வெளியூர் சென்றிருந்தார்...
Subscribe
ஒரு முறை, பல நாள் பயணமாக சங்கரன்பிள்ளை வெளியூர் சென்றிருந்தார். அப்போது காலை உணவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்குச் சென்றார். “சார், என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டார் சர்வர்.
அதற்கு சங்கரன்பிள்ளை, “ஆறிப் போய், காய்ந்த இரண்டு இட்லி, அப்புறம் உப்புச் சப்பு இல்லாத சட்னி” என்றார். சர்வருக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மீண்டும் பணிவுடன், “சார், இட்லி நல்ல சூடா, மென்மையாவே கொடுக்கிறோம், அதுவும் இப்போதே கொடுக்கிறோம், காத்திருக்கக்கூட வேண்டாம், எங்கள் ஹோட்டல் சட்னியும் டேஸ்ட்டா இருக்கும், உப்பும் அளவாத்தான் இருக்கும்,“ என்றார்.
சங்கரன் பிள்ளையும் உடனே, “தயவுசெய்து நான் கேட்டபடி கொடுங்கள், நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்,” என்றார். உடனே சர்வரும் எப்படியோ சமாளித்து காய்ந்த இட்லிகளையும் உப்பில்லாத சட்னியையும் கொண்டுவந்து பரிமாறி விட்டு “சார் வேறு ஏதாவது...” என்று மிகவும் தயக்கத்துடன் கேட்டார். “ஆறிப்போன காப்பி ஒண்ணு கொடு” என்றார் சங்கரன் பிள்ளை.
சர்வருக்கு மயக்கமே வந்துவிட்டது. அதையும் சமாளித்துப் பரிமாறிவிட்டு, பில் கொடுக்கும்போது, “சார், தப்பா நினைக்காதீங்க, ஏன் சார் இப்படிச் சாப்பிடுறீங்க?” என்று கேட்டார்.
உடனே சங்கரன் பிள்ளை சொன்னார்: “இன்று எங்கள் திருமண நாள்... என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது... அதான்..!”