சத்குரு வழங்குவது போதனையா? விஞ்ஞானமா?
சத்குரு, நீங்கள் ஒரு தனி மதத்தை உருவாக்குகிறீர்களா? அல்லது நீங்கள் வழங்குவது ஒரு விஞ்ஞானமா?
Subscribe
சத்குரு:
நான் இங்கே எந்த போதனையும் கொடுக்க வரவில்லை. எல்லா போதனைகளையும் உதறி விட்டு மனிதம் தழைக்க வழி செய்யுங்கள் என்று தான் கேட்கிறேன்.
உங்கள் குழந்தை பயணம் செய்யும் பள்ளிக்கூட வண்டி கவிழ்ந்தால், அதில் முதலில் உங்கள் குழந்தையைத் தான் காப்பாற்ற முனைவீர்கள். மற்றக் குழந்தைகளை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டீர்கள். அதேபோல், தெருவில் அடிபட்டுக் கிடப்பவர் உங்கள் இனம் என்றால் தான் உதவுவீர்கள். வேறு இனத்தைச் சேர்ந்தவர் என்றால், அவரை அலட்சியப்படுத்துவீர்கள். இதுவா உண்மையான மதம்?
கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு மனிதத்தை அழிப்பதா ஆன்மீகம்? மதங்களை முன்வைத்து உங்கள் மனிதத்தைத் தாழ்த்திக் கொண்டு விட்டீர்கள். அடுத்தவர் வேதனைகள் உங்களுக்கு உறுத்துவதில்லை. உங்கள் மதம் உங்களை மட்டும் தான் வாழச் சொல்கிறது. உங்களை மட்டும் தான் காப்பாற்ற அமைக்கப்பட்டது என்று தந்திரமாக நினைத்துக் கொண்டு விட்டீர்கள். இது மதம் அல்ல. மேலும் ஒரு அரசியல் கட்சி.
உங்களுக்குள் மனித நேயம் பெருக்கெடுத்தால் தான் தெய்வீகம் என்பது சாத்தியமாகும். உள்நோக்கி உங்கள் பார்வையைத் திருப்புவதற்கு மதம் என்பது ஒரு கருவியாக இருக்க வேண்டும். இதை உணரும் வரை நீங்கள் மதமும் அறியாதவர், மனிதமும் அறியாதவர்.
நான் வழங்குவது மதம் அல்ல. அது ஒரு விஞ்ஞானம். உங்கள் மனிதம் மலர்வதற்கான விஞ்ஞானம்.