எங்கிருந்தாலும் தரிசனம்
இப்போது உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைக்கு தீர்வு எங்கு இருக்கிறது? இன்றைய தரிசன நேரத்தில் சத்குரு பேசியதன் முக்கிய அம்சமாக இதுவே இருந்தது. மேலும் பல விஷயங்கள் நிறைந்த சத்குருவுடைய உரையின் தொகுப்பு இங்கே உங்களுக்காக...
இப்போது உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் வன்முறைக்கு தீர்வு எங்கு இருக்கிறது? இன்றைய தரிசன நேரத்தில் சத்குரு பேசியதன் முக்கிய அம்சமாக இதுவே இருந்தது. மேலும் பல விஷயங்கள் நிறைந்த சத்குருவுடைய உரையின் தொகுப்பு இங்கே உங்களுக்காக.
"உங்கள் ஆன்மீக சாதனையின் பலன்களை அறுவடை செய்வதற்கான கடைசி மாதமிது. விவசாயத்தில் கூட அறுவடை தான் மிகவும் கொண்டாடப்படும் விஷயம். அதே நேரத்தில் அதைச் செய்ய அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கிறது. அதேபோல் நாமும் இந்த அறுவடைக் காலத்திற்கு நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.
Subscribe
'பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மை மீது பேரார்வத்துடன் வாழ்வது, தன்னைச் சுற்றியுள்ள அனைத்து உயிர்கள் மீதும் கருணையுடன் இருப்பது, தன் மீது பற்றுதல் இல்லாமல் இருப்பது' இதுவே அதற்கான சிறந்த வழி," என்று உத்தராயணத்தின் முதல் பகுதியின் முக்கியத்துவத்தை விளக்கினார் சத்குரு.
"சம்யமா வகுப்பு நடக்கும்போது சுற்றியிருக்கும் அனைவர் மீதும் அதன் தாக்கம் வெளிப்படும் என்று முன்பு கூறியிருக்கிறீர்கள். வகுப்பில் பங்கேற்காத நாங்கள் அதை எப்படிச் சிறந்த முறையில் பயன்படுத்துவது?" என்ற கேள்விக்கு, "அவர்கள் தியானம் செய்து மலர்ந்தால் அவர்கள்தான் மலர்ச்சியை உணர்வார்கள். நீங்கள் அந்த நறுமணத்தை வேண்டுமானால் ரசிக்கலாம். அது உங்களை மலர்வதற்கு ஊக்கப்படுத்தலாம். ஆனால் நீங்கள் சம்யமாவாக மாறும்போதுதான் நீங்கள் மலர்வீர்கள்," என்றார்.
"தற்போது வன்முறை உலகெங்கும் மிகுதியாக இருக்கிறதே?" என்று வன்முறையைப் பற்றி அடுத்த கேள்வி இருந்தது. அதற்கு சத்குரு, "ஐதராபாத் குண்டுவெடிப்பில் 20 பேர் இறந்ததைப் பற்றி படித்தால், இருபது பேர் தான் என்று உங்களை சமாதானப்படுத்திக் கொள்வீர்கள். அதுவே உங்கள் தலைமுடியில் ஒன்றை யாராவது பிடுங்கினால் கூட பெரிய வன்முறையாகக் கருதுவீர்கள்.
சென்ற நூற்றாண்டில் நாடுகளுக்கு இடையே குண்டுகள் வீசி வன்முறையை வெளிப்படுத்தினார்கள். இப்போது ஒருவருக்கொருவர் விவாதம் செய்து வன்முறையை வெளிப்படுத்துவதால் அது கொஞ்சம் குறைந்துள்ளது. எனவே அதிகம், குறைவு, என்பது ஒவ்வொருவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.
வாய்ப்பேச்சில் வன்முறையை வெளிப்படுத்தினால் உயிர்ச்சேதத்தைத் தடுத்து தாமதிக்கலாமே தவிர அதுவே நிரந்தர தீர்வாகிவிடாது. 'நான், எனது' என்ற எல்லைகளைக் கடந்த ஆன்மீகப் பரிமாணத்தை நமக்குள் உணரும்போது மட்டுமே வன்முறைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். ஏனென்றால் மோதல்களுக்கு அடிப்படையே இந்த எல்லைகள் தான்!" என்றார்.
சம்யமாவிற்காக வந்திருந்த சாதகர்கள், சம்யமாவிற்காக யோக மையத்தை தயார் செய்து கொண்டிருக்கும் சாதகர்கள் என இன்று நிரம்பி வழிந்தது இன்றைய தரிசன நேரம். ஒருவேளை அடுத்த 8 நாட்களுக்கு சம்யமா செய்வோரைத் தவிர பிறர் அவரைக் காண முடியாது என்ற எண்ணம் தான் காரணமோ!
மீண்டும் அவர் தரிசனம் அறிவிக்கும் வரை காத்திருங்கள், மற்றொரு தரிசன நேரத்தில் மீண்டும் இணைவோம்!