வியர்க்க வைத்த சீனத்துறவி !
கடுமையான புத்த மத சாதனாவைப் பற்றிக் கூறி வியர்க்க வைக்கும் கட்டுரையாளர், ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அவர்களால் பரிமாறப்பட்ட இட்லி சாம்பாரின் மணத்தையும் கூற மறக்கவில்லை. கட்டுரையைப் படிக்கும்போது, உடனே ஈஷா சாம்பாரை ருசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுவது உண்மைதான்.
கடுமையான புத்த மத சாதனாவைப் பற்றிக் கூறி வியர்க்க வைக்கும் கட்டுரையாளர், ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அவர்களால் பரிமாறப்பட்ட இட்லி சாம்பாரின் மணத்தையும் கூற மறக்கவில்லை. கட்டுரையைப் படிக்கும்போது, உடனே ஈஷா சாம்பாரை ருசிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுவது உண்மைதான்.
காசி - உண்மையைத் தேடி... பகுதி 6
மஹேஷ்வரி:
நான்காம் நாள்
காலையில் மீண்டும் அந்த போதி மரத்திற்கடியில் எங்கள் தியானம் தொடர்ந்தது. சீன நாட்டை சேர்ந்த ஒரு துறவி போதி மரத்திற்கடியில் நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார். prostration (விழுந்து வணங்குதல்) என்று சொல்லப்படும் இந்த பயிற்சியில் எழுந்து நின்று பின்னர் மீண்டும் நமஸ்காரம் செய்ய வேண்டும். கிட்டதட்ட ஈஷாவில் செய்யும் சூர்ய நமஸ்காரம் போலவே இருந்தது. நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்த 5 நிமிடத்திற்குள் அவர் 50 முறை அது போல் செய்துவிட்டார். இன்னும் எத்தனை முறை இது போல் செய்வார்? 2000 அல்லது 3000 முறை என்று சாதாரணமாக சொல்கின்றனர். லட்சம் முறை செய்பவர்கள் கூட இருக்கின்றனராம்.
“குறைந்தபட்சம் 10000 முறை செய்தால்தான் புத்தமதத்திற்கே வர முடியும்!” என்று எங்கள் கைட் (guide) சொல்ல எனக்கு வியர்த்தே விட்டது.
12 சூர்ய நமஸ்காரம் செய்வதற்கே 12 முறை வேர்த்துவிடும் எனக்கு இந்த கடுமையான புத்தமதத்தின் சாதனா மலைப்பை ஏற்படுத்தியது. இது போன்ற கடுமையான பயிற்சியை இவர்கள் எவ்வளவு தீவிரமாக செய்கிறார்கள்!
Subscribe
சத்குரு நமக்கு மலரினும் மெல்லிய சாதனாவை அளித்திருக்கிறார். என் குருவின் கருணையை எண்ணி எண்ணி அழுதேன்! இப்படி ஒரு குரு கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன்! என் சாதனாவை இன்னும் தீவிரப்படுத்திக் கொள்வதற்கு இது பெரிய தூண்டுகோலாக இருந்தது. இப்போது அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு நளந்தா பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்.
ஹோட்டலுக்கு சென்றதும் எங்களுக்காக பொங்கலும் வடையும், தமிழ் மணம் மாறாத சாம்பாரும் காத்துக் கொண்டிருந்தது. அருமையாக சாப்பிட்டுவிட்டு நளந்தா புறப்பட்டோம்.
இந்தப் பயணம் முழுக்கவே எங்களுக்கு தென்னிந்திய சாப்பாடுதான். வட நாட்டு பயணம் என்றாலே சுக்கா ரொட்டியும் கடுகு எண்ணைக் குழம்பும்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆசிரமத்திலிருந்து எங்களுக்கு சமையல் செய்து தருவதற்காகவே ஒரு குழு காசி வந்திருந்தது.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் சமையலறையில் அனுமதி பெற்று அங்கு சமையல் நடந்தது. 5 நாட்களுமே நாள் முழுக்க அங்கு சமையல் நடந்து கொண்டிருந்தது. அருமையான பாரம்பரியம் மாறாத சுவையுள்ள மற்றும் ஈஷாவின் தன்மை மாறாத சாப்பாடு. சாப்பாடு விஷயத்தில் இவ்வளவு அக்கறை காட்ட தேவைதானா? ஒரு தாய் போன்று எங்கள் மீது அக்கறை கொண்ட குருவை எண்ணி எனக்கு கண்ணீர் பெருகியது.
“சிலர் நளந்தாவுக்கு ஏன் செல்ல வேண்டும்? புத்தகயாவிலேயே இன்னும் கொஞ்சம் நேரம் தியானம் செய்யலாம்” என்று சொன்னார்கள். மறுநாள் பந்த் என்பதால் இன்று எப்படியும் நளந்தாவை பார்த்துவிட வேண்டும் என்று ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சத்குரு நாங்கள் நளந்தாவை கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் என்றதும், சத்குரு சொல்லியிருந்தால் அதில் கண்டிப்பாக அர்த்தம் இருக்கும் என்று அனைவரும் அமைதியாகி விட்டனர்.
அப்படி என்ன இருக்கிறது நளந்தாவில்?
நளந்தா நோக்கி பஸ் புறப்பட்டது...
மதியம் 1 மணி இருக்கும். எங்களுக்கெல்லாம் சரியான பசி! பஸ் வழியில் நின்றது தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்றால் கூட ஒரு கடையும் இல்லை.
திடீரென நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் பஸ்ஸின் பின் புறத்திலிருந்து வாளி வாளியாக சாப்பாடு இறங்கியது. நடுக்காட்டில் 440 பேருக்கு எந்த குழப்பமும் இல்லாமல் அருமையான சாப்பாடு! அது மட்டுமல்ல! நாங்கள் சாப்பிட்ட அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் ஒரு குப்பை கூட போடாமல் கிளம்பினோம். எத்தனை முன்னேற்பாடு இருந்தால் இப்படி ஒரு நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும்!
இது போலவே ஒவ்வொரு முறையும் தன்னார்வத் தொண்டர்களின் முன்னேற்பாடுகள் எங்களை மலைக்க வைத்தது.
நாங்கள் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் அழகும் உயர்தர சாப்பாடும் எங்களுக்காக ஏற்பாடுகள் செய்ய நான்கு நாட்களுக்கு முன்பே காசியை அடைந்திருந்த தன்னார்வத் தொண்டர் குழுவையும் அவர்களின் பயணச் செலவையும் நினைத்துப் பார்த்தால் 'பணம் பெரிதில்லை, நாங்கள் உணர்ந்து செல்வதே பெரிது' என்ற நோக்கத்தில் ஈஷா தன்னார்வத் தொன்டர்கள் செயல்பட்டிருப்பதை உணர முடிந்தது.
(பயணிப்போம்...)
அடுத்த வாரம்...
நளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளையும் அந்நியப் படையெடுப்புகளால் நளந்தா சூரையாடப்பட்ட கொடுமையையும் எடுத்துரைப்பதாய் அமைகிறது!
காசி புனித பயணம்
ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஒவ்வொரு வருடமும் ஈஷாவிலிருந்து புனிதப் பயணம் மேற்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org