சுண்ணாம்புக் காட்டை பசுமைக் காடாக மாற்றிய தம்பதிகள்!
காலமெல்லாம் சம்பளம் பெறுவதற்காக உழைத்துவிட்டு ஓய்வு காலத்திலாவது மனதிற்கு நிறைவுதரும் பணியை செய்யலாம் என நினைக்கும் பலர் நினைப்பதோடு நிறுத்திவிட, இங்கே செய்துகாட்டி சாதித்துள்ள ஒரு தம்பதியரின் கதை! வறண்டு போயிருந்த சுண்ணாம்புத் தரையை பசுமை மிகு மரங்களால் ஒரு காடுபோல் உருவாக்கியது எப்படி என்பதை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்!
காலமெல்லாம் சம்பளம் பெறுவதற்காக உழைத்துவிட்டு ஓய்வு காலத்திலாவது மனதிற்கு நிறைவுதரும் பணியை செய்யலாம் என நினைக்கும் பலர் நினைப்பதோடு நிறுத்திவிட, இங்கே செய்துகாட்டி சாதித்துள்ள ஒரு தம்பதியரின் கதை! வறண்டு போயிருந்த சுண்ணாம்புத் தரையை பசுமை மிகு மரங்களால் ஒரு காடுபோல் உருவாக்கியது எப்படி என்பதை நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்!
கடலூர் மாவட்டம் பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வரும் பாஸ்கரன் மற்றும் கஸ்தூரி தம்பதியர் தங்களது அரசு பணிகளில் இருந்து ஓயுவுபெற்று தங்களுக்கு போதுமான உதவித் தொகையை பெற்று பொருளாதார அளவில் சிரமமின்றி இருந்தாலும், தங்களுக்குள் ஏதோவொரு மனநிறைவில்லா தன்மையை உணர்ந்தனர். தங்களது பெற்றோர்கள் விவசாயிகளாக இருந்திருந்த காரணத்தால், அவர்களுக்குள் விவசாயத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஆசை துளிர்த்தது. அவர்களுக்கு இருந்த ஒரு வறண்ட நிலத்தை பக்குவம் செய்து மரங்களை நட தீர்மானித்தனர்.
ஆனால், நினைத்தவுடன் அங்கே உடனே மரம் நடும் அளவிற்கு அது பண்பட்ட நிலமாக அல்லாமல் வறண்ட பூமியாக இருந்தது. இதுகுறித்து பாஸ்கரன் அவர்கள் கூறும்போது...
“இங்க சுண்ணாம்பு காடா இருந்தது. கீழயெல்லாம் சுண்ணாம்பு கல்லுதான் இருக்கும். சுண்ணாம்பு மூடுன்னே பேரு இந்த இடத்துக்கு! அதுல ஒண்ணுமே வராதுனு சொன்னாங்க நிலம் வாங்குறப்போ! அப்புறம் ஈஷா பசுமைக் கரங்களோட தொடர்பு கிடைச்சது! அவங்க குடுத்த ஊக்கத்திலதான் எனக்கு நம்பிக்கையே வந்துச்சு!” என்று கூறிய திரு.பாஸ்கரனைத் தொடர்ந்து அவரது மனைவி கஸ்தூரி தங்கள் நிலத்தை எப்படி மாற்றினார்கள் என்பதை விரிவாக பேசினார்.
“முதல்ல நாங்க எல்லாரும் மரம் வைக்கிறது மாதிரி மரம் வச்சு வளர்த்துட்டு இருந்தோம். ஒரு 4, 5 வருஷம் அந்தமாதிரிதான் பண்ணினோம். அப்புறம் இந்த பசுமைக் கரங்கள் கூட ஒரு தொடர்பு வந்தது! ஈஷாவுல இருந்து தன்னார்வத் தொண்டர்கள் வந்து எங்களுக்கு நிறைய ஆலோசனைகள் குடுத்தாங்க. 6 மாசத்துக்கு ஒரு தடவை ஈஷா யோகாவுல இருந்து ஸ்வாமிஜி, தமிழ்மாறன் அண்ணா இன்னும் ரெண்டு மூனு பேர் வந்து அடிக்கடி பாத்தாங்க.
முதல்ல நாங்க இரசாயன உரமெல்லாம் போட்டு எல்லாரும் பண்ற மாதிரி மரம் நட்டோம்! அது சரியா வர்ல. அப்புறம் பசுமைக் கரங்களோட தன்னார்வத் தொண்டர்கள் எங்களுக்கு டைம்லி அட்வைஸ் குடுத்தாங்க! அவங்க இயற்கை வழி விவசாய முறைகள சொல்லி அத பின்பற்ற சொன்னாங்க!”
Subscribe
இயற்கை வழி விவசாயத்திற்கு மாறிய பின் மரங்கள் செழிப்பாக துளிர்க்கத் துவங்கியதை பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட தம்பதிகள், இயற்கை வழியில் மனிதன் பயணித்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்ந்தவர்களாய் இருந்தனர்.
சுற்றத்தாரின் உதவிக் கரங்கள்!
ஆழ்துளை கிணறுகள் செய்து தண்ணீரை ஓரளவிற்கு பெறும் இவர்கள், சிறந்த நீர் மேலாண்மையால் அந்த வறண்ட பகுதியிலுள்ள அக்கம் பக்கம் விவசாயிகளுக்கும் நீர் தருகின்றனர். இதுகுறித்து பாஸ்கரன் கூறும்போது...
“இப்ப பக்கத்துல 20 ஏக்கர்க்கு எங்க தண்ணிதான் பாயுது. பக்கத்துல உள்ளவங்க எல்லாம் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள். அவங்க பயிர் வைக்க முடியாம கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. எங்க தண்ணியினால அவங்களுக்கு இப்போ பயிர் விளையுது! எங்க மரம் காயாமல் இந்த அளவுக்கு இருக்குதுன்னா அது சுத்தி இருக்குற நாலு பேர் உதவி பண்றதாலதான்!” என்று உணர்வுப் பூர்வமாக சுற்றத்தார் நீட்டும் உதவிக்கரத்தைப் பற்றி கூறினார்.
மரக்கன்றுகளை நடுவதில் பசுமைக்கரங்களின் உதவி!
தங்கள் ஊருக்கு அருகிலிருந்த ஈஷா நர்சரியிலிருந்து தரமானதும், அதே சமயம் விலை மலிவான வகையில் கிடைக்கும் மரக்கன்றுகளைப் பெற்றதால் தங்கள் கன்றுகள் சிறப்பாக வளர்ந்ததாக கூறிய கஸ்தூரி அவர்கள், பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்களின் அறிவுரையின் பேரில், தேக்கு போன்ற ஒரே வகை கன்றுகளை மட்டுமே நட்டு வைக்காமல் பலவகை மரக்கன்றுகளை நட்டதால் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து பாஸ்கரன் கூறுகையில்,
“4 வருஷத்துக்கு முன்ன இருந்ததுக்கு இப்ப இந்த இடத்த பாத்தா அவ்ளோ வித்தியாசம் இருக்கும். அந்தளவுக்கு மரம் எல்லாம் பெருக்க ஆரம்பிச்சிடுச்சி. மரம் பெருக்க பெருக்க மதிப்பு ஜாஸ்தி ஆகுது. மர வியாபாரிகள் இங்க வந்து இந்த மரங்கள பாத்துட்டு, இதெல்லாம் உயர் ரக மரமாச்சே?! எப்படி உங்களுக்கு வருதுன்னு ஆச்சரியமா கேக்குறாங்க! இங்க எல்லா வகை மரக்கன்றுகளும் வச்சிருக்கேன்.
அரிய வகைகளான மஞ்ச கடம்பு, வெண் கடம்பு, தேன்றிக்கா, காயா... இன்னும் சில வகை நீங்க கேள்விப்பட்டிருக்கவே மாட்டீங்க! எல்லாம் ஈஷா நர்சரியில வாங்குனதுதான். முதல்ல ஆள் போட்டு மரங்களுக்கு காவல் இருந்தோம். ஸ்வாமி வந்து பாத்துட்டு, வேலி இல்லாம நீங்க மரம் வைக்கக்கூடாது, முதல்ல வேலி போடணும்னு சொன்னாரு. இல்லேன்னா மாடு, கன்னு மேய்ஞ்சிட்டு போயிடும்னு புரிய வைத்தார். வேலி போட்டதால இப்போ காவல் ஆள் செலவு மிச்சமாயிடுச்சு” என்கிறார்.
மரங்கள் எனும் இயற்கை காப்பீட்டுத் திட்டம்!
என்னைப் பொறுத்தவரை மரங்கள் என்பது அதிக தொகைக்கு போடப்பட்ட ஒரு இயற்கை காப்பீட்டுத் திட்டம் என்பதை பாஸ்கரன் கூறியதோடு தங்களால் இன்னும் 70 குடும்பங்கள் வாழ்வு பெற்று வருவதையும் தெரிவித்தார். ஆம்... அவர்களுக்கிருக்கும் அந்த 75 ஏக்கரை தனியாக இவர்களால் கவனிக்க முடியாது என்பதால், சில ஏக்கர்களை சுற்றத்தார்களுக்கு விவசாயம் பார்ப்பதற்கு வழங்கியுள்ளனர். அவர்களை நாம் சந்தித்தபோது...
“என் பேரு ராமமூர்த்தி; ஊரு பண்ருட்டி! பாஸ்கரன் ஐயா எனக்கு ஒரு 15 ஏக்கர் நிலம் விட்டுருக்காரு. அதுல வர்ற ஊடுபயிர் எல்லாம் நாங்க எடுத்துக்குவோம். அவருக்கு அந்த மரங்களை பாதுகாத்து வளர்த்து குடுக்கறது எங்க வேலை!! ஊடுபயிர் வருமானம் எல்லாம் நாங்க எடுத்துக்குவோம். நாங்க ஆடு, மாடு வராத அளவுக்கு பாதுகாத்து ஐய்யாக்கிட்ட ஒப்படைச்சிருக்கோம்.” என்றார் திரு. ராமமூர்த்தி.
தொடர்ந்து திரு.சேகர் சொல்லும்போது, “என் கிட்ட 5 ஏக்கர் குடுத்திருக்காங்க. இங்க ஊடுபயிரா உளுந்து, பச்சைப்பயிறு, எள்ளு இதுதான் போட முடியும், வேற எதும் போட முடியாது. கத்தரி மிளகாய் போடுவோம். பாஸ்கரன் ஐயா மரக்கன்று கொண்டுவந்து குடுத்தாருன்னா நாங்க நல்லபடியா பாதுகாத்து, கவாத்து பண்ணி வளர்த்துக்குடுப்போம்!” என்றார்.
பசுமைக் கரங்கள் உருவாக்கும் வேளாண் காடுகள்!
வேளாண் காடுகள் உருவாக்கும் திட்டத்தின்படி ஈஷா பசுமைக் கரங்கள் இதுவரை 306 விவசாயிகளின் விவசாய நிலங்களில் வேளாண் காடுகளை உருவாக்கி அவர்களுக்கு வாழ்வாதரத்திற்கு தேவையான துணைநிலை வருமானத்தை ஈட்டித் தந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 1,24,404 மரக்கன்றுகளை இதன்மூலம் நடுவதில் தன்னார்வத் தொண்டர்கள் துணைநின்றுள்ளனர்.
குறிப்பு:
ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம், விவசாயிகளை மரம்நட ஊக்குவிக்கிறது. உங்களுடைய மரம் எவ்விடத்தில் வளர்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். ஒரு மரத்திற்கு ரூ.100 வழங்குவதன் மூலம், அதன் பராமரிப்பு, தேவைப்பட்டால் மறுநடவு செய்தல் ஆகியவற்றோடு மரம் செழிப்புடன் வளர்வதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்! இதற்கான இணையப் பக்கம்: http://isha.co/2seVnIG