“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 8
“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணி நிகழ்வுகள் சென்னையிலிருந்து Live Blog செய்யப்படுகிறது. இணைந்திருங்கள்!
நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.
இன்று சென்னையில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.
இப்பேரணியை ஆரம்பித்து 1 வாரம் முடிந்துவிட்டது. செல்லும் இடத்தில் எல்லாம் மக்களின் ஆதரவும், ஈடுபாடும் நம்மை உருகச் செய்கிறது. சத்குரு “சூறாவளியை” சந்தித்து, அதனுடனேயே பயணிக்க சிங்காரச் சென்னை தயார்நிலையில்! நிகழ்ச்சி நேரம் மாலை 6-8. அதை நேரலை ஒளிபரப்பில் RallyForRivers.org/Tamil-Live ல் மாலை 6-8 காணலாம்.
சூடுபறக்க தயாராகிவரும் சென்னை!
விழா நடக்கும் இடம் – நேற்றுவரை நடந்த ஏற்பாடுகள்.
தயார் நிலையில் சென்னை
வரவேற்பு ஏற்பாடுகள்
- கயிலை வாத்தியம் வாசித்து, அர்ச்சகர்கள் சத்குருவை வரவேற்கிறார்கள்
- ஆதியோகியின் உருவச்சிலை வைத்து குழந்தைகள் சத்குருவிற்காகக் காத்திருக்கின்றனர்
- “நதிகளை மீட்போம்” பேரணி – சிறப்பு சிறுபக்கச் செய்தித்தாளை பல்லாயிரம் மக்களுக்கு இன்று விழா மைதானத்திலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் தினமலர் விநியோகித்தது. இப்பேரணி பற்றிய தகவல்களை மிக விரிவாக அந்தத் தொகுப்பில் வெளியிட்டிருந்தார்கள். அவர்களுக்கு நம் நன்றி!
- புதிய தலைமுறை மற்றும் news18 சானல்கள் இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன
பேரணிக்கு ஆதரவு திரட்ட வித்தியாசமான முயற்சிகள்
- நான் மிஸ்டு கால் கொடுத்துட்டேன்… அப்ப நீங்க? 80009 80009
- தண்ணி குடிச்சாச்சா? மிஸ்டு கால் குடுத்தாச்சா? 80009 80009
- ஸ்வீட் எடு கொண்டாடு… போன் எடு கால் போடு 80009 80009
- இவர் ஒரு பழையசாமான் வியாபாரி. சைக்கிளில் சாமான்கள் நிறைந்திருக்க, நாலாபக்கமும் நம் பேரணியின் விளம்பர அட்டை உள்ளது. ஆங்காங்கே சிற்சிறு அட்டைகளும் உள்ளது. டி-ஷர்ட்டும் பேரணியின் டி-ஷர்ட். இப்படி ஒரு பிரமாதமான ஏற்பாடு. யாரும் இவரை கவனிக்காமல் இருக்கமுடியாது
- ஆதரவாளர்கள் எல்லாம் பானருடன் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள ஒரு ஏற்பாடு
- பிஞ்சுக் குழந்தைகளும் நம் ஆதரவாளர்கள்… :)
சி.ஆர்.பி.எஃப் காவல் அதிகாரிகள் இப்பேரணிக்கு ஆதரவு
மத்திய அரசுக் காவலர் ஒதுக்கம் பிரிவில் இருந்து 180 ற்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தனர்.
என்.சி.சி, என்.சி.சி வான்வெளிப் பிரிவு , என்.சி.சி கடற்படை பிரிவு மாணவர்கள் ஆதரவு
500 க்கும் மேற்பட்ட என்.சி.சி, என்.சி.சி வான்வெளிப் பிரிவு, என்.சி.சி கடற்படை பிரிவு மாணவர்கள் இன்று விழாவில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். சைதாப்பேட்டையில் உள்ள நகராட்சி பள்ளியில் இருந்து, 6ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் இருந்து 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரை பல மாணவர்கள் இப்பேரணிக்கு ஆதரவு தெரிவிக்க நேரில் வந்திருந்தனர்.
கல்லூரி மாணவர்கள் ஆதரவு
திரண்டு வந்த சென்னை மக்கள்
ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து YMCA மைதானத்தை நிறைத்த சென்னை ஆதரவாளர்கள்
Subscribe
சத்குரு, சிறப்பு விருந்தினர்கள் வருகை
தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு இடப்பாடி கே.பழனிசுவாமி, தமிழகத்தின் துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி.வேலுமணி அவர்கள், வனத்துறை அமைச்சர் மாண்புமிகு திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள், அப்பலோ மருத்துவமனையின் தலைவர் திரு.பிதாப் ரெட்டி அவர்கள், இந்தியத் தொழிலக கூட்டமைப்பின் சென்னை பிரிவிற்கு துணைத் தலைவர் திரு. ரவிச்சந்திரன் புருஷோத்தமன், நடிகர்-இயக்குநர் திருமதி.சுஹாஸினி மணிரத்னம் அவர்கள், பத்மபூஷன் திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் மறு-உபயோகத்தில் முன்னோடியாக விளங்கும் சர்வதேச நிறுவனமான வி.ஏ.டெக்.வாபாக் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ராஜீவ் மிட்டல் இன்றைய சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ்நாடு பி.ஜே.பி தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மற்றும் பல அமைச்சர்கள் வந்திருந்து தம் ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர்.
சம்ஸ்கிருதி மாணவர்கள் கலைநிகழ்ச்சி
வந்தே மாதரம் பாடல் பின்னணியில் ஒலிக்க, பரதநாட்டியம், களரி, யோகா ஆகிய மூன்றையும் மிக நளினமாக, அற்புதமாக ஒரே நிகழ்ச்சியாகக் கோர்த்து வழங்கி, சம்ஸ்கிருதி குழந்தைகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
வளரும் பிள்ளைகளின் அக்கறை – சிறு நாடகம்
“அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா?…” என்ற மிகப் பிரபலமான பாட்டை எடுத்துக் கொண்டு, அதன் வரிகளை சிறிது மாற்றி,
“அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பாட்டிலா வாங்கிக்கறா… தண்ணி பாட்டிலா வாங்கிக்கறா” என்று பாடி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்திவிட்டுச் சொன்னார்கள் “இதுபோன்ற நிலைக்கு எங்களை ஆளாக்கிவிடுவீர்கள் என்று பயந்தோம். நல்லவேளை சத்குரு ‘நதிகளை மீட்போம்’ எனும் இப்பேரணியைத் துவக்க, நீங்களும் அதற்கு இவ்வளவு ஆதரவு தெரிவித்து முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறீர்கள். இப்போது எங்கள் பயம் நீங்கிவிட்டது” என்று சொல்லி நம்மை வெட்கத்தில் ஆழ்த்தும் அதே நேரம் சிந்திக்கவும் வைத்தனர்.
பத்மஸ்ரீ உஷா உதுப் அவர்கள் இசை நிகழ்ச்சி
பத்மஸ்ரீ உஷா உதுப் அவர்கள் பாட ஆரம்பித்ததும், மைதானமே ஆரவாரமாக சந்தோஷத்தில் ஆழ்ந்தது. பாடலின் நடுவே, நதிகளை மீட்போம் பேரணிக்கு உங்கள் ஆதரவை வெளிச்சமிட்டுக் காட்டுங்கள் எனவும், இருந்தவர்கள் அனைவரும் தங்கள் செல்ஃபோன் டார்ச் லைட்களை ஆன் செய்து ஆர்ப்பரித்தனர்.
பாடகர் கார்த்திக் மற்றும் அவரது குழுவின் இசை நிகழ்ச்சி
குழுவில் நவ்னீத் சுந்தர் அவர்களும் இருந்தார். கர்நாடக சங்கீதத்தை ஐ-பாட் இல் முதன்முதலாக வாசித்த பெருமை இவரைச் சேரும்.
நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் மற்றும் குழு
இப்பேரணிக்கு முழு ஆதரவு தெரிவித்திருக்கும் பத்மஸ்ரீ விவேக் அவர்கள், தன் நகைச்சுவையான பாணியில், “இந்தப் பேரணியின் பின்னணி என்ன? எதற்காக இது ஆரம்பிக்கப்பட்டது? இதன் நோக்கம் என்ன? என்பதைத் தெளிவாக மக்களுக்கு விளக்கினார். இது நதிகளை இணைக்கும் முயற்சி அல்லவே அல்ல. இது நதிகளை மீட்கும் முயற்சி என்று சொல்லி, இது எவ்வாறு வேலை செய்யும் என்பதையும் மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.
பேரணிக்கு ஆதரவு
முதல்வர் திரு. இடப்பாடி கே பழனிசுவாமி அவர்கள் பேச்சு
சத்குரு மிகப் பெரிய வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறார். காட்டுத்தீ போல் பரவி, இப்போது இது தேசிய இயக்கமாக, மக்கள் இயக்கமாக மாறிவிட்டது. புரட்சித்தலைவி அம்மாவின் நினைவாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நாங்கள் நிறைய மரங்கள் நடவிருக்கிறோம். ஆற்றோரமாக மரங்களை நடுவதற்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும்.
அப்பலோ மருத்துவமனையின் தலைவர் திரு.பிரதாப் ரெட்டி அவர்கள் பேச்சு
செப் 1 அன்று சென்னையில் மட்டும் 13,000 மக்கள் இப்பேரணிக்காக களமிறங்கி, காலை 8-11 வரை சாலைகளில் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டைகளை பிடித்து நின்றார்கள் என்று அறிந்தேன். நம் நாடு முன்னேறவும், மக்கள் நலமாக வாழவும் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவது மிக அவசியம். இதை நடைமுறைப் படுத்துவதில் மக்களின் பங்கு, அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். அந்தளவிற்கு இளைஞர்களின் மீது நீங்கள் தாக்கம் ஏற்படுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி சத்குரு… இதுபோன்ற ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இத்தனை பெரிய வேலையை கையில் எடுத்துக் கொண்டதற்கும்!
நடிகர்-இயக்குநர் திருமதி.சுஹாஸினி மணிரத்னம் அவர்கள் பேச்சு
கடந்த 10 வருடங்களாக அழகர் ஆற்றில் இறங்கவில்லை. காரணம், வைகையில் தண்ணீர் இல்லை. 130 வருடங்களாக நடக்காத “காவிரிப் புஷ்கரம்” இப்போது நடக்கப் போகிறது. ஆனால் காவிரியில்தான் நீர் இல்லை. இதைப் பார்க்கும்போது மனம் கனக்கிறது. ஆனால் சத்குருவைப் பார்க்கும்போது இந்த நதிகள் மீண்டும் பழையகாலம் போல் கரைதொட்டு ஓடும் என்ற நம்பிக்கை வருகிறது.உங்களின் இந்த முயற்சியில் சத்குரு, திரையுலகம் உங்களுக்கு உறுதுணையாய் நின்று செயல்படும்.
இந்தியத் தொழிலக கூட்டமைப்பின் திரு. ரவிச்சந்திரன் புருஷோத்தமன் அவர்கள் பேச்சு
நாம் இதுவரை உருவாக்கியது எல்லாமே, இந்த பூமியில் இருந்து எடுத்ததைக் கொண்டுதான். இந்த பூமிக்கு நாம் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தத் திட்டம் பற்றி நான் கேள்விப்பட்ட போது, இது ஏற்கெனவே லே-லடாக் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் கண்டிருந்தது. சத்குரு நிஜத்திலேயே ஒரு தொலை-நோக்குப் பார்வை கொண்டவர். இத்திட்டம் வெற்றியடைய வேண்டும்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் பேச்சு
தன் ஈடுபாட்டாலும், அர்ப்பணிப்பாலும், இத்திட்டத்திற்கு ஆதரவாக பலரையும் ஈர்த்துவிட்டார் சத்குரு. அமைச்சர்கள் பலரை சத்குரு ஏன் இந்நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார் என்று யோசித்தேன். இங்கு வந்ததும்தான் புரிந்தது, வனத்துறையின் ஒத்துழைப்பும், ஈடுபாடும் நதிகளை மீட்பதற்கு எவ்வளவு முக்கியம் என்று. இத்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு முதல்வர் ஏற்கெனவே எங்களிடம் கூறியிருக்கிறார். இம்முயற்சிக்கு நாங்கள் நிச்சயம் கைகொடுப்போம்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பேச்சு
கிராமப் புத்துணர்வு இயக்கம், கிராமக் குழந்தைகளுக்குப் பள்ளி என ஈஷா அறக்கட்டளை சமுதாய நலனுக்கு பல விதங்களில் செயல்பட்டு வருகிறது. எனது தொகுதியான கோவையில்தான் சத்குரு அவர்களின் பெரும்பான்மையான செயல்கள் நடக்கின்றன. அவர் எத்தனை மரம் நடவேண்டும் என்கிறாரோ, அதற்கு இந்த அரசாங்கம் முழுவதுமாக ஒத்துழைக்கும்.
கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் பேச்சு
இங்கு நாம் என்ன செய்கிறோம், ஏன் இந்த முயற்சி என்பதெல்லாம் நம் மாணவர்களுக்கு நன்றாகப் புரியவேண்டும். இது நீண்ட காலத்திட்டம் என்பதால் இப்போதிருந்தே அவர்கள் அதில் முழுமையான ஈடுபாட்டோடு வளர்ந்தால்தான், பிற்காலத்திலும் இதை வெற்றிகரமாக செய்துமுடிக்க முடியும். முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் பேசி, அதற்குத் தேவையானதை நான் செய்கிறேன். இத்திட்டம் வெற்றியடைய வேண்டும்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பேச்சு
நதிகள் நமக்கு வரம். அவற்றால்தான் நாம் இங்கு வாழ்ந்து வளர்ந்தோம். இன்று அந்த நதிகள் வறண்டு வருகின்றன. இந்த சமயத்தில் இப்படி ஒரு முயற்சியை எடுத்தமைக்கு சத்குரு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பேரணியில் இன்று நிறைய இளைஞர்களைக் காண்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சத்குருவின் இந்த மாபெரும் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.
“நதிகளை மீட்போம்” தலைப்பில் நடந்த போட்டிகளில் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள்
உடன் இருப்பது, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து “நதிகளை மீட்போம்” எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்திய கேம்லின் நிறுவனத்தின் தேசிய பிரமோஷனல் மேனேஜர் திரு.ராஜ்குமார் அவர்கள்.
சத்குரு அவர்கள் பேச்சு
- இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், மத்திய-மாநில அரசாங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும். இது பலன் தர குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும். இதற்கு நிறைய நிதி ஒதுக்கீடு தேவைப்படும். அதோடு இதைச் செயல்படுத்த மண்வளம், நீர்வளம், நிலஅமைவு, கலாச்சார வித்தியாசங்கள் என பல சிக்கல்களைத் தாண்ட வேண்டியிருக்கும். இத்தனைப் பிரச்சினைகளையும் அரசாங்கம் சந்திக்க வேண்டுமென்றால், அதற்கு மக்களின் ஆதரவு மிகமிக அவசியம். அதற்கு நீங்கள் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டும் – மிஸ்டு கால் மூலம்.
- நதிகள் தேசிய பொக்கிஷமாக மதிக்கப்பட வேண்டும். அது தனிநபரின் சொத்தல்ல. இதை நிலைநாட்ட வேண்டுமென்றால், முறையாக சட்டம் வகுக்கப்பட வேண்டும்.
- ‘ஆறுகளை என் தாயாக வணங்குகிறேன்’ என்று கும்பிட்டுவிட்டு, அடுத்த கணமே அதில் எச்சிலும் துப்புகிறார்கள். பெரும்பாலான ஆற்றுப்பாதைகளில், கழிவுகளே “ஆறாக” ஓடுகிறது. மக்கள் உணர்ச்சிவசப் படலாம், ஆனால் அதை நம்பி இனியும் ஆறுகளை விட்டுவைக்க முடியாது. அவற்றைப் பாதுகாக்கவும், மீண்டும் அதில் அதிகளவு நீர் ஓடவும் முறையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
- இங்கு வாழும் எந்த உயிரினமும் இயற்கைக்கு எதிராக இல்லை – மனிதனைத் தவிர்த்து. மனிதர்கள் 25 ஆண்டுகள் தூங்கிவிட்டால், இங்கு எல்லாம் அற்புதமாக மாறிவிடும். நம் விழிப்புணர்வான செயலால் இப்பூமி செழிப்பாக, பசுமையாக இருக்கவேண்டுமே தவிர்த்து, நாம் செயல்படாமல் ஒதுங்கியிருப்பதாலோ நம் சோம்பேரித்தனத்தாலோ அல்ல.
- தமிழ்நாட்டின் முதல்வர் இத்திட்டத்தை செயல்படுத்த அவரது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் 1 ஏக்கர் நிலமும், சின்ன கிராமத்தில் 1/2 ஏக்கர் நிலமும் எனக்குத் தாருங்கள். அதில் 5 வகையான பழங்கள் வருமாறு தோட்டம் அமைப்போம். அத்தோட்டத்தில் 15 வயதிற்கு உட்பட்டவர்கள் இலவசமாக பழங்களை பறித்துத் தின்ன அனுமதி இருக்கும். மற்ற மாநிலங்களில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. நம் குழந்தைகள் பலர் மரத்தில் இருந்து பழம் பறித்து உண்ண வாய்ப்பின்றி வளர்கிறார்கள். இது மாபெரும் குற்றம். அவர்களுக்கு வேண்டுமளவிற்கு பழங்கள் கிடைக்க வேண்டும்.
சத்குருவின் வேண்டுகோள்
அடுத்த 25 நாட்கள்
- இத்திட்டம் நமக்கு மிகமிக முக்கியம் என்பதை நீங்கள் இந்த தேசத்திற்குக் காண்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்தே 6 கோடி மிஸ்டு கால் வரவேண்டும். செய்வீர்களா?
- கட்சி, சாதி, அரசியல் என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்கள் எல்லோரும் சேர்ந்து நின்று இந்த சூழ்நிலையை மாற்றவேண்டும். செய்வீர்களா?
- நான் நாளை தமிழ்நாட்டை விட்டுக் கிளம்பி மற்ற மாநிலங்களில் இப்பேரணிக்காக பயணிப்பேன். நான் கிளம்பிவிட்டாலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இப்பேரணி நடக்கவேண்டும். 1,2,5,10 என உங்கள் குழுக்களை நீங்களே அமைத்து, சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பயணித்து, அவர்களும் இதுபற்றி அறிந்து மிஸ்டு-கால் கொடுக்கச் செய்யவேண்டும். செய்வீர்களா?
தினசரி வாழ்வில்
- காலை, மதியம் விட்டுவிடுங்கள். இரவு உங்கள் தட்டில் உணவு இருக்கும்போது, உண்பதற்கு முன் 20 நொடிகள், முடியாவிட்டால் 10 நொடிகளேனும் கண்மூடி, உங்கள் தட்டில் இந்த உணவை வைத்த விவசாயி உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்து கொள்கிறான் என்பதை நினைத்துப் பாருங்கள். இது உங்களுக்குள் குற்றவுணர்ச்சியைக் கொண்டு வருவதற்கல்ல. உங்களுக்குள் மனிதநேயம் தலைதூக்குவதற்கு. மனிதநேயம் இல்லாமல் வாழ்ந்தால், விலங்குகளைவிட மோசமாக நடந்துகொள்வோம்.