“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 4
காவிரி நதிக் கரையில் அமைந்த மாநகர் திருச்சியில் நிகழும் "நதிகளை மீட்போம்" பேரணி நிகழ்வுகள் உடனுக்குடன் இங்கே...
நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.
இன்று திருச்சியில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.
மழையின் ஆசியோடு திருச்சியில் விழா துவக்கம்
இரவெல்லாம் மழை கொட்டியது. விழா நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதையும் சமாளித்து, இன்று விழா இனிதே தொடங்குகிறது.
வரவேற்பு ஏற்பாடுகள்
ஈஷா விவசாய இயக்கம் மூலம் கடந்த சில ஆண்டுகளில் பல விவசாயிகள் ஒன்றிணைக்கப் பட்டிருக்கின்றனர். அவர்கள் இன்று சத்குருவை சந்தித்தனர்.
2000 அடி ஆழ்துளை கிணறுகள் உருவாக்கி நாம் "இன்று தணணீ்ர் குடித்துக்கொள்கிறோம்; ஆனால், மண்புழுக்களும் மரங்களின் வேர்களும் 2000 அடி வரை எப்படி செல்லமுடியும்?" என்ற கேள்வியை அவர் எழுப்பியதோடு, மண் உயிர்ப்புடன் இருப்பதற்கு மரங்கள் நடப்பட வேண்டியதன் அவசியத்தையும், நதிகள் மீட்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்கு மக்களின் வரவு
பேரணிக்கு ஆதரவு
பேரணிக்கு மக்கள் ஆதரவு
சாலைகளிலும் இப்பேரணியின் விளம்பர அட்டைகளைப் பிடித்தவாறு நம் அபிமானிகள்
மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
- மதிப்பிற்குரிய சுற்றுலா அமைச்சர் திரு. வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள்
- மதிப்பிற்குரிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி. வளர்மதி அவர்கள்
- மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. பா.குமார் அவர்கள்
- மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் திரு. ராஜாமணி ஐ.ஏ.எஸ் அவர்கள்
- செயிண்ட் ஜோசஃப் கல்லூரி இயக்குநர் மதிப்பிற்குரிய அருட்திரு லெனார்டு ஃபெர்னாண்டோ அவர்கள்
- மதிப்பிற்குரிய முன்னாள் சிபி.ஐ சிறப்பு இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கே.செல்லமுத்து அவர்கள்
- தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள்
- தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. தனபால் அவர்கள்
- "நமது நெல்லைக் காப்போம்" சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. நெல் ஜெயராமன் அவர்கள்
- பிரபல எழுத்தாளர் தூரன் நம்பி அவர்கள்
- நம்மாழ்வார் ஐயாவிற்குப் பின் வானகம் இயக்கத்தை நடத்திவரும் திரு.ஆங்கில்ஸ் ராஜா அவர்கள்
- பிரபல பூச்சியியல் வல்லுநர் திரு.பூச்சி நீ செல்வம் அவர்கள்
வானகம் இயக்கத்தின் திரு.ஆங்கில்ஸ் ராஜா அவர்கள் பேச்சு
"இங்கு சத்குரு நதிகளை மீட்பது பற்றி பேசுகிறார். இணைப்பது பற்றியல். இங்கு விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டம் தண்ணீர் பஞ்சம் மட்டுமல்ல. விதை நெல்லும் அவர் கையில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக ஹைப்ரிட் விதைகள் கொடுக்கப்படுகின்றன. விவசாயிகள் கடன்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். இதை மாற்றவும் சத்குரு எங்களுக்கு உதவவேண்டும். சத்குரு என்றும் விவசாயிகளின் நண்பன். நாங்கள் முழு முனைப்போடு சத்குருவுடன் இந்தப் பேரணியில் களம் இறங்குவோம்." என்றார்.
Subscribe
பூச்சியியல் வல்லுநர் திரு.பூச்சி நீ செல்வம் அவர்கள் பேச்சு
பூச்சிகள் விவசாயியின் எதிரி என்று நினைத்து, அதைக் கொல்வதற்கு பூச்சி கொல்லி பயன்படுத்தப் படுகிறது. இது உணவு, நிலம் அனைத்தையும் விஷமாக ஆக்குகிறது. நமக்கு உதவும் பூச்சிகளை வளர்த்தால், அவையே தேவையற்றதை வெளியேற்றி விடும். இயற்கை விவசாயம், இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு, இதுவே சத்குரு காட்டும் பாதை. நாங்கள் சத்குருவுடன் முழுமனதாய் இதில் பங்கேற்போம்.
"நமது நெல்லைக் காப்போம்" திரு. நெல் ஜெயராமன் அவர்கள் பேச்சு
தமிழ்நாடு காவிரி நீர்பாசன விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க செயலாளர் திரு.ரங்கநாதன் அவர்கள் பேச்சு
நடந்தாய் வாழி காவேரி, நாடெங்கும் செழிக்க, நன்மையெல்லாம் சிறக்க என்று ஒரு பாடல் உண்டு. இப்பூமியில் காவேரி என்றுமே நடக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க காவேரி இன்று இப்படி இருப்பது கடும் வேதனை அளிக்கிறது. ஆறு ஓடினால் அது வெள்ளம். நடந்தால்தான் ஆறு. ஊரெல்லாம் வெள்ளம் நிகழ்கிறது, குடிப்பதற்கோ தண்ணீர் இருப்பத்தில்லை. இந்நிலையை நாம் மாற்ற வேண்டும். இதற்கான வழிகாட்டியாய் சத்குரு இருக்கிறார். இதை நாம் நிச்சயம் நிகழ்த்தியே ஆகவேண்டும்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. தனபால் அவர்கள் பேச்சு
அரசாங்கத்திற்கு இருக்கவேண்டிய தொலைநோக்கோடு சத்குரு செயல்படுகிறார். இங்கு காவேரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மரங்கள் வெட்டி காய்கறிப் பண்ணைகள் உருவாகி வருகின்றன். இந்நிலை மாறவேண்டும். சத்குருவின் வழிகாட்டுதலில் நம் ஆறுகளை நாம் மீட்டே ஆகவேண்டும்.
எழுத்தாளர் தூரன் நம்பி அவர்கள் பேச்சு
3,00,000 விவசாயிகள் தற்கொலை என்று கணக்கெடுப்பு சொல்லலாம், ஆனால் கணக்கில் வரலாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். காரணம்... கடைபிடிக்கப்படும் செயற்கை விவசாய முறைகளில் செலவு மிக அதிகம். மண்ணும் கார்பன் வளத்தை இழக்கிறது. இயற்கை விவசாயத்தையும், இயற்கையையும் நாம் பாதுகாக்க வேண்டும். நம் நதிகளை மீட்கவேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. கே.செல்லமுத்து அவர்கள் பேச்சு
140 ஆண்டுகள் காணாத வறட்சியை இப்போது நாம் காண்கிறோமாம். இது தனிபட்ட நபரின் பிரச்சினை அல்ல. சத்குரு மிக அழகாகச் சொன்னார்கள், "தண்ணீர் குடிக்கும் ஒவ்வொருவரும் இப்பேரணியில் பங்கேற்க வேண்டும்" என்று. இது கோடியில் ஒரு வார்த்தை. விவசாயிகள் அனைவரும் உங்கள் பக்கம் சத்குரு. இப்பேரணி நிச்சயமாக வெற்றி பெறவேண்டும். வெற்றி பெறும்.
முன்னாள் சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் பேச்சு
விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க நாம் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பலரிடமும் பேசியிருக்கிறோம். ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை. இப்போது சத்குரு இம்முயற்சியில் இறங்கியிருக்கிறார். நாடு முழுவதும் முழு முனைப்போடு இப்பேரணிக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. இதை செயல்படுத்த நம் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் நிச்சயம் முடியும். இதுதான் நேரம். இதைத் தவறவிடாமல் நம் அனைவரின் ஆதரவையும் தெரிவித்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்வோம்.
மதிப்பிற்குரிய அருட்திரு லெனார்டு ஃபெர்னாண்டோ அவர்கள் பேச்சு
நான் பல ஆண்டுகளாக புதுடில்லியிலேயே இருந்துவிட்டேன். அங்கு யமுனை நதி மழைக் காலத்தில் மட்டும்தான் ஓடுகிறது. மற்ற நேரங்களில் வறண்டு இருக்கிறது. இந்த ஆண்டு திருச்சிக்கு வந்தபோது, ஆசைஆசையாக காவிரி நதியைக் காண வந்தேன். அவ்வளவாக நீரில்லை, ஆனால் சிறிதேனும் ஓடுகிறதே என்று சந்தோஷப்பட்ட போதுதான் சொன்னார்கள் அது கழிவுநீர் என்று. ஆறுகள் இருந்தால்தான் வரலாறு பிறக்கும். ஆறு இல்லையெனில் தண்ணீர் மட்டுமல்ல, மனிதநேயம், மனித நாகரிகம் எல்லாமே அழிந்துவிடும். எங்கள் கல்லூரி மாணவர்கள் நதிகளை மீட்கும் பணியில் இறங்கவுள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள், விவசாயிகள் என எல்லோரும் கைகோர்த்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்யவேண்டும்.
மாவட்ட ஆட்சியர் திரு. ராஜாமணி ஐ.ஏ.எஸ் அவர்கள் பேச்சு
சத்குரு முன்மொழிந்திருக்கும் இம்முயற்சிக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, இந்தப் பேரணியை வெற்றிபெறச் செய்யவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. பா.குமார் அவர்கள் பேச்சு
மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் இணைந்து செயல்பட்டால்தான் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இந்த ஒத்துழைப்பைப் பெறுவதற்கே சத்குரு இப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இப்பேரணி நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.
அமைச்சர் திருமதி. வளர்மதி அவர்கள் பேச்சு
இம்முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பு தரவேண்டும். இது வெற்றிபெற நாங்கள் உங்களோடு சேர்ந்து செயல்படுவோம்.
அமைச்சர் திரு. வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள் பேச்சு
காவிரி நதியின் தற்போதைய நிலையைக் கண்டால் கண்ணீர் வருகிறது. இந்த நதியை மீட்க பலர் முயற்சித்தும் பலனில்லை. ஆனால் இப்போது இதைச் செய்ய சத்குரு முன்வந்திருக்கிறார். முன்பெல்லாம் ஆடிப்பெருக்கு சமயத்தில் பாலத்தின் உயரத்திற்கு காவிரியில் நீர் ஓடும். ஆனால் இன்று..? சகோதரத்தத்துவம் மேலோங்க வேண்டும். நம் நீர் ஆதாரங்களை பாதுகாத்து, அனைவருடனும் பகிரவேண்டும். இந்தப் பேரணிக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற நான் நிச்சயம் முயற்சி எடுப்பேன்.
சத்குரு அவர்களின் பேச்சு
- பிரச்சினை என்னவென்று எல்லாருக்கும் தெரியும். அதற்கான தீர்வும் பலருக்குத் தெரியும். ஆனால் அதை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை.
- பிரச்சினை என்று வந்தால் யார் காரணம் என்று பார்த்து, உணர்ச்சி மேலோங்க சண்டை போடுகிறோம். சண்டை போடுவதால் தீர்வு ஒன்றும் கிடைப்பதில்லை.
- பிரச்சினை தீர கோவம் அல்ல, முறையான செயல் தேவை.
- இந்தப் பிரச்சினையை சாதாரணமாக நினைக்காதீர்கள். இது நம் உயிருக்கே பிரச்சினையாகக் கூடும்.
- இப்போது இந்த நிலையை நாம் முறையாகக் கையாளவில்லை என்றால், நாம் அழிந்துவிடுவோம்.
- இதைப் பற்றி நம்மாழ்வார் அவர்கள் என்னிடம் 2 வருடங்கள் முன்பாகவே பேசினார்கள். இன்று அவர் இருந்திருந்தால், இதை அவரே செய்திருப்பார்.
- நிலம் வளமான பூமியாக இருக்க நிழல் தேவை, நீர் தேவை, மரத்தின் இலை தேவை, ஆடு/மாடு சாணம் தேவை.
- மரங்களை வெட்டிவிட்டோம், ஆடு-மாடுகளை வெளியேற்றி வருகிறோம். இவையெல்லாம் இல்லாவிட்டால் இது வளமான பூமியல்ல, மணலான பூமி.
- இப்பிரச்சினையைத் தீர்க்க முனைப்பு இருக்கிறது. ஆனால் முறையான செயலும், அதை வழிநடத்தும் சட்டமும் தேவை (அ) அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவை.
- அதற்காகத்தான் மிஸ்டு கால். 30 கோடி மக்கள் ஒரு விஷயத்திற்கு குரல் கொடுத்தால், ஜனநாயகத்தில் அதை யாரும் மறுக்கமுடியாது. அது நடந்தே தீரும்.
- இதை செயல்படுத்த மத்திய அரசாங்கங்கள் முன்வந்தால், விவசாயிகளின் பங்களிப்போடு இதைச் செயல்முறைப் படுத்த 1-2 வருடங்கள் ஆகும். இது பலன் கொடுக்க குறைந்தது 10-15 ஆண்டுகள் ஆகும். இருந்தாலும் விடாது இதை நாம் செய்தே ஆகவேண்டும்.
- இல்லாவிட்டால் நாம் இருக்கமாட்டோம். எனினும் பயத்துடன் இல்லாமல், பொறுப்புடன் செயலாற்றி நம் ஆறுகளை தளைக்கச் செய்வோம்.
இனி வெயில் என்றாலும், மழை என்றாலும்... இதுதான்
அடுத்த 30 நாட்களுக்கு வெயிலுக்குக் குடை என்றாலும், மழைக்கு குடை என்றாலும் "நதிகளை மீட்போம்" பேரணியின் விளம்பர அட்டையைத் தான் பிடித்துக் கொள்ள வேண்டும். குடை தேவையில்லையா, கையில் சும்மா எப்போதும் இந்த அட்டை இருக்கவேண்டும். பார்ப்பவர்கள் எல்லோரும் 80009 80009 எனும் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவேண்டும். தண்ணீர் வேண்டும் என்று நாளை யார் காலிலும் விழவேண்டாம் என்றால், இன்றே அனைவரும் இந்த எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கச் செய்யுங்கள். அதற்காக அவர்கள் காலில் விழுவதும் தவறில்லை. நாளை எல்லோருக்கும் தண்ணீர் தேவைதானே?
"நதிகளை மீட்போம்" பேரணிக்கு ஆதரவு
திரு. ஃப்ரான்ஸிஸ் தம்புராஜ் அவர்கள் இப்பேரணிக்கு ஆதரவு
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் திரு. ஃப்ரான்ஸிஸ் தம்புராஜ் அவர்கள் திருச்சியில் இப்பேரணியில் கலந்துகொண்டு, இதற்குத் தம் ஆதரவைத் தெரிவிக்கிறார்.
திருச்சியின் மலைக்கோட்டை மற்றும் வற்றிய காவிரி
வற்றிப்போன காவிரி… கனமாகும் நெஞ்சம்!
அகண்ட காவிரி அகலமா காஞ்சு கிடக்கு… மண்ண பொன்னாக்கி கொடுத்த நதி இன்னிக்கி கேப்பாரில்லாம வத்தி போயி கிடக்கு… நிலை மாறுமா… நிலம் மாறுமா… நதி ஓடுமா…!
கரைதொட்டு ஓடும் காவேரி இன்று சிற்றோடை போல் நீரின்றி வறண்டிருக்கிறது.
திருச்சி ஜம்புகேஸ்வரர் கோவிலில் சத்குரு
பஞ்சபூத ஸ்தலங்களில் தண்ணீருக்கான ஸ்தலம் திருவாணைக்காவல். இங்கு குடிகொண்டிருப்பவர் ஜம்புகேஸ்வரர். திருச்சியை விட்டுக் கிளம்பும் முன் இந்த ஸ்தலத்தில் சத்குரு.
நெடுஞ்சாலையில் காத்திருந்து பேரணிக்கு ஆதரவு!
சத்குருவின் வரவிற்காக பாண்டிச்சேரி நெடுஞ்சாலை ஓரமாக பந்தல் போட்டுக் காத்திருக்கும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிர்வாகி மற்றும் சக பணியாளர்கள். நதிகளை மீட்போம் பேரணிக்கு தங்கள் ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
NLC – “நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு
உளுந்தூர்பேட்டை அருகே திரண்ட ஆதரவாளர்கள்!
விழுப்புரம் அருகே பேரணிக்கு ஆதரவு
விழுப்புரம் அருகே பொதுமக்கள் மற்றும் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் சத்குருவிற்காகக் காத்திருந்து அவருடன் உரையாடினர். நதிகளை மீட்போம் பேரணிக்காக முழு உத்வேகத்துடன் செயல்பட அவர்களை சத்குரு ஊக்குவித்தார்.