நீரிழிவை கட்டுப்படுத்தும் 5 மரங்கள் !
நோய்கள் இயற்கையானதல்ல, ஆரோக்கியமே இயற்கையானது என சத்குரு கூறுவதுண்டு. நாமாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்களுக்கு இயற்கையிடத்தில் கண்டிப்பாகத் தீர்வு இருக்கும். சிறுவர்கள் ஐவர் கண்டறிந்து வளர்த்த மரங்கள் பற்றி நம்மாழ்வார் கூறுவதை, நீங்களும் தெரிந்து கொள்ளலாம்...
நம்மவரு நம்மாழ்வார்... பகுதி 11
நோய்கள் இயற்கையானதல்ல, ஆரோக்கியமே இயற்கையானது என சத்குரு கூறுவதுண்டு. நாமாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்களுக்கு இயற்கையிடத்தில் கண்டிப்பாகத் தீர்வு இருக்கும். சிறுவர்கள் ஐவர் கண்டறிந்து வளர்த்த மரங்கள் பற்றி நம்மாழ்வார் கூறுவதை, நீங்களும் தெரிந்து கொள்ளலாம்...
நம்மாழ்வார்:
சியாமும் அவரது நண்பர்களான அபினவ், சுகுமார், அரவிந்த், விவேக் ஆகிய ஐவரும் திருப்பூர் சுப்பையா மெட்ரிகுலேசன் பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயில்கிறார்கள். இவர்கள் இயற்கை மீது ஆர்வமும் சுற்றுச்சூழல் மீது அக்கறையும் உள்ளவர்கள்.
தேசிய அறிவியல் கழகம் இந்த ஆண்டு ஆராய்ச்சிக்காக ‘புவிக் கோளம்’ என்னும் தலைப்பை முன்வைத்தது. சியாமும் நண்பர்களும் அழிந்து வரும் தாவரங்களைப் பாதுகாப்பதை தங்களது ஆராய்ச்சிக்கான இலக்காகத் தேர்வு செய்தார்கள். அத்தாவரங்கள் மனித வாழ்வில் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள்.
Subscribe
இன்று தமிழ்நாட்டில் 40 சதவிகித மக்கள் நீரிழிவு நோயால் அவதிப்படுகிறார்கள். இந்நோயை சர்க்கரை நோய் என்றும் அழைக்கிறார்கள். குழந்தை பிறக்கும்போதே நீரிழிவு நோயுடன் பிறக்கிறது. எனவே, இந்த நோயைக் கட்டுப்படுத்தும் 5 தாவரங்களைத் தேர்வு செய்ய முடிவுசெய்தார்கள்.
நாவல், வில்வம், விளா(விளாம்பழம்), களா(புதர்), கொடுக்காய்புளி என இந்த 5 மரங்களும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தக்கூடியவை என்பது அவர்களின் ஆய்வில் தெரியவந்தது.
அறிந்த விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ள கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சென்று தம் அறிவை ஆழப்படுத்திக்கொண்டார்கள். பொருள்களின் மதிப்பைக் கூட்டுவது குறிந்து அறிந்தார்கள். பழக்கூழ் (ஜாம்), பழப்பிளி (ஜெல்லீ), பழரசம், மிட்டாய், ஊறுகாய் தயாரிக்கக் கற்றார்கள். இந்தக் கன்றுகளை உற்பத்தி செய்வது எப்படி, இனப்பெருக்கம் செய்வதுஎப்படி என்றும் கற்றார்கள்.
பள்ளிக்கு அருகே உள்ள சிறுப் பூளுவப்பட்டி, வேலம்பாளையம், காவிரிப்பாளையம் ஆகிய மூன்று ஊர்களைத் தேர்வு செய்தார்கள். கிராம அலுவலர் பாலசுப்பிரமணியம் மூலமாக உழவர்களை அணுகி விழிப்புணர்ச்சி அளித்தார்கள். 45 உழவர்களிடம் பழரசம், பழப்பிழிவு, பழக்கூழ், மிட்டாய், ஊறுகாய் ஆகியவற்றைக் கொடுத்தார்கள்.
இந்த மரங்களைத் தங்கள் நிலங்களில் நட்டு வளர்க்க உழவர்கள் சம்மதித்தனர்.
சந்திரகாவி நடுநிலைப் பள்ளி, சிறு பூளுவப்பள்ளிநடுநிலைப் பள்ளி, காவிரிப்பாளையம் நடுநிலைப் பள்ளி ஆகியபள்ளி மாணவர்களை அணுகி, அப்பள்ளிகளில் இம்மரங்கள் நடப்பட்டன. சுப்பையா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் இம்மரங்கள் நடப்பட்டன.
பள்ளி ஆண்டு விழாவின்போது கடை விரித்தார்கள். மாணவர், பெற்றோர், உழவர் அனைவரையும் பழரசம், பழப்பிழிவு, பழக்கூழ், மிட்டாய், ஊறுகாய் அனைத்தையும் சுவைத்துப் பார்க்கக்கொடுத்தார்கள்.
டான் போஸ்கோ நெட், கருணை இல்லம், செவித்திறன் அற்றோர் பள்ளி, முருகப்பாளையம் சேவை நிறுவனம் போன்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கும் தகவல்களையும் செடிகளையும் வழங்கினார்கள்.
சியாமும் நண்பர்களும் நீரிழிவு மையங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் போனார்கள். அங்கெல்லாம் நோயாளிகளுக்கு இப்பழங்களை உணவாக வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
பூமி காப்பதற்கான பசுமைப் படையில் இந்த மாணவர்களும் இணைந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இனி நம் பூமி காப்பாற்றப்படும்!
தொடர்ந்து விதைப்போம்...
தள்ளாத வயது என வர்ணிக்கப்படும் வயதில், வாலிபராய் நம்மிடையே வலம் வரும் நம்மாழ்வார் அவர்கள், இயற்கை உணவு, இயற்கையோடு இயைந்த வாழ்வு, மனிதனால் இயற்கைக்கு உண்டாகும் சீரழிவை எடுத்துரைப்பது எனப் பல தளங்களில் தனது சேவையை ஆற்றிவருகிறார்.