நவராத்திரி 2014! - ஒரு பார்வை
இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா, ஈஷா யோகா மையத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அத்துடன் சேர்ந்து கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை, வித்யாரம்பம் போன்றவற்றைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இங்கே...
இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா, ஈஷா யோகா மையத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அத்துடன் சேர்ந்து கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை, வித்யாரம்பம் போன்றவற்றைப் பற்றி ஒரு கண்ணோட்டம் இங்கே...
ஈஷாவில் நவராத்திரி
கோவை ஈஷா யோக மையத்தில், நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 3) வரை விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், மஹா ஆரத்தி போன்ற வைபவங்களோடு, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற இசை, நடனம் என கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.
நாள் 1 - சஞ்ஜுக்தா வாக் - கதக் நடனம்
நாள் 2 - பிராச்சி சாதி - பரதநாட்டியம்
நாள் 3 - சுஜாதா நாயர் - மோகினியாட்டம்
நாள் 4 - சுக்ரா நடனக் குழுவினரின் காவடியாட்டம்
நாள் 5 - ஜோஸ்னா சிவகுமார் - கர்நாடக வாய்ப்பாட்டு
நாள் 6 - பேராசிரியர் தியாகராஜன் மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் - தேவி நவவர்ணம்
Subscribe
நாள் 7 - கிராமியப் பாடல் - சுக்ரா குழுவினர்
நாள் 8 - வி.வி ரவி மற்றும் திருமதி ஜெயஸ்ரீ - வயலின், வீணை
நாள் 9 - தோல்பாவை கூத்து
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளித்தாள். மேலும், நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விஜயதசமியன்று நடந்த சிறப்பு வித்யாரம்பம்
"வெற்றியின் திருநாள்" என்று கொண்டாடப்படும் நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியன்று (அக்டோபர் 3), குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியைத் துவக்கி வைக்கும்/கல்வியை மேம்படுத்தும் வித்யாரம்பம் நிகழ்ச்சி லிங்கபைரவியில் நடைபெற்றது. 2 முதல் 12 வயதிற்கு உட்பட்ட 180 பேருக்கு இந்த வைபவம் நடைபெற்றது.
ஆயுத பூஜை
லிங்கபைரவியில் அக்டோபர் 3 அன்று வித்யாரம்பம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் ஈஷாவில் வசிக்கும் அனைவரும் மைதானத்தில் ஒன்றுகூட, அங்கே அயுதபூஜை நடந்தது.
ஆயுத பூஜையில், மையத்தின் நாற்பதிற்கும் மேற்பட்ட செயல் பிரிவுகளில் இருந்தும் அவரவர் பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டு வந்து சமர்ப்பித்து தேவியின் அருளை நாடினர். ஈஷாவின் அன்பர்களும், ஈஷாவின் அங்கங்களான சேவாதார்கள் நூற்றுக்கணக்கானோரும் இதில் கலந்து கொண்டனர்.
ஈஷா இமாலய தியான யாத்திரை
செப்டம்பர் 13 முதல் 27ம் தேதி வரை நடந்த ஈஷா இமாலய தியான யாத்திரையில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். வருடந்தோறும் ஈஷாவில் ஏற்பாடு செய்யப்படும் தியான யாத்திரையானது, கேதாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஆண்டு நடைபெறாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து இவ்வருடம் 200 பேர் கொண்ட ஈஷா குழு இமாலய பயணம் மேற்கொண்டு கேதார்நாத், குப்தகாசி, பத்ரிநாத், கங்கோத்ரி போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு முதன்முறையாக கேதார்நாத்திற்கு அதிகம் பேர் அழைத்துச் சென்ற குழு ஈஷா குழு என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷா ஹோம் ஸ்கூலில் "ஸ்வச் பாரத்" பணி
இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய, தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில், காந்தி ஜெயந்தியன்று நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டது நாம் அறிந்ததே. இந்த திட்டத்தில் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி குழந்தைகளும் பங்குபெற்றனர். பள்ளியின் வகுப்பறைகள், தங்குமிடம், ஸ்டோர், போன்று இதுவரை மையத்தின் சேவாதார்கள் மட்டுமே இறங்கி தூய்மைபடுத்திய இடங்களை அக்டோபர் 2ம் தேதியன்று பள்ளிக் குழந்தைகள் அனைவரும் இணைந்து தூய்மைபடுத்தினர்.
சென்னை ஈஷா ஆரோக்யாவில் நவராத்திரி
சென்னை ஆதம்பாக்கம் ஈஷா ஆரோக்யா மருத்துவமனையில் நவராத்திரி விழா கொலு வைத்து வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொலு பொம்மைகள் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்களால் வழங்கப்பட்டன.
நவராத்திரியின் முதல் நாள் 108 சித்தர்கள் போற்றி மற்றும் தேவி பக்தி பாடல்களுடன் தொடங்கியது.
தினமும் காலை மாலை தன்னார்வத்தொண்டர்களால் கலாச்சார முறைப்படி பூஜை செய்து, பஜனைகள் பாடி பிரசாதம் வழங்கப்பட்டது.
இறுதி நாளான அக்டோபர் 3, வெள்ளி அன்று லிங்கபைரவிக்கு 11 அர்ப்பணங்கள் செய்யப்பட்டு, தேவி பூஜை செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. எல்லா நாட்களும் தன்னார்வத்தொண்டர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்கள் கலந்து கொண்டு தேவியின் அருளைப் பெற்றனர்.